வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

உமையாக்கள் - 5

உஹதுப் போர்க்களம்
குருதிக் களமாக காட்சியளித்தது !
நபிகள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி
மதினா நகரில் காட்டுத் தீயாக பரவியது.
வீடுகளில் இருந்த பெண்களெல்லாம் உஹது களத்தை நோக்கி ஓடோடி வந்தார்கள்.
அருமை மகள் ஃபாத்திமா
அன்னை ஆயிஷா
நபிகளாரின் மனைவிமார்கள்
அன்சாரிகளின் வீட்டுப் பெண்கள் என
அத்தனை பேரும் கண்களில் கண்ணீர் சிந்த நெஞ்சினில் செந்நீர் சிந்த விரைந்து வந்தார்கள்.
தாயொருத்தி ஓடி வரும்போது
ஒருவர் சொன்னார் ...
" உன் கணவர் இறந்து விட்டார் "
" இன்னா லில்லாஹி ... நபிகள் எப்படி இருக்கிறார்கள் ? "
" உன் மகனும் இறந்து விட்டார் "
" அல்லாஹ் போதுமானவன். நபிகள் எப்படி இருக்கிறார்கள் ?"
" ஹயாத்தோடு இருக்கிறார்கள் "
" அல்ஹம்துலில்லாஹ். அதுபோதும் "
என்றார் அந்தத் தாய்.
உஹது களத்தில் ...
அபு சுப்யானும் அவர் மனைவி ஹிந்தாவும்
ஹாஷிம் குடும்பத்தின் வீரப் புதல்வன்
ஹம்சாவைக் கொல்வதற்கென்றே
தங்களோடு ஒருவனை கூட்டி வந்திருந்தார்கள்.
அபு சுப்யானின் கறுப்பு அடிமை.
குறி தவறாமல் ஈட்டி எறிவதில் அபாரன் .
ஹம்சாவுக்கு
அஸதுல்லாஹ் ...
#அல்லாஹ்வின்_சிங்கம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.
போர்களத்தில் எதிரிகளின் தலைகளை
முழு வீச்சில் அவர் அறுவடை செய்து கொண்டிருந்தார்.
அவர் முன்னால் வந்த எதிரி எவனுக்கும்
இன்னொரு முறை மூச்சு விடும் வாய்ப்பை
ஹம்சா வழங்கவேயில்லை.
திடீரென்று ஏற்பட்ட குழப்பத்தில்
உஹதுக் களம் நிலை தடுமாறி
கவிழ்ந்ததில் மின்னல் வேகத்தில்
காட்சிகள் மாறிப் போயின .
******
அல்லாஹ்வின் சிங்கம்
தரையில் சாய்ந்து கிடந்தது !
சிங்கத்தின் அடிவயிற்றை
கிழித்துச் சென்ற ஈட்டி
அதன் முதுகையும் துளைத்து
மண்ணுக்குள் முளையடித்து நின்றது !
அதன் வயிற்றிலிருந்து
வழிந்து ஓடிய
ரத்தத்தை எடுத்து
பழுப்பேறிப்போன தனது
வறண்ட உடலுக்கு
சிவப்பு கம்பளம் விரித்து
சிங்கத்தின் வரவுக்கு
வரவேற்பு கவிதை ஒன்றை
எழுதி வைத்தது
உஹது மலையடிவாரம் !
" சிங்கத்தைக் கொல்
விடுதலை பெற்றுச் செல் "
உமையா வம்சத்தின் எஜமானன்
அபு சுப்யான் வீசி எறிந்த
வசீகர வார்த்தைக்கு வசியப்பட்ட
அடிமை வஹ்ஷி
வஞ்சகமாய் வீசி எறிந்த ஈட்டி
அரபுலகத்தின் அரிமாவை
சடலமாய் சரிய வைத்து விட்டது !
அல்லாஹ்வுக்காக நடந்த போரில்
அஸதுல்லா
அல்லாஹ்விடமே
போய் சேர்ந்து விட்டது !
சிங்கத்தின் கர்ஜனைக்கே
சீவனை விட்டு விடக் கூடிய
சிறு எலி வஹ்ஷி
இப்போது
அச்சமே இல்லாமல்
சிங்கத்தின் பக்கத்தில் வந்தான் !
அதன் உடலில்
ஊடுருவி இருந்த ஈட்டியை
உருவ முடியாமல் உருவி எடுத்தான் !
காதலியை அணைப்பது போல்
மார்போடு அதை கட்டி அணைத்து
தன் தடித்த உதடுகளால்
அதற்கொரு முத்தமும் கொடுத்தான் !
சிங்கத்தின் உடலை
தலைவனின் காலடியில் போட்டுவிட்டு விடுதலையின் சுவாசத்தை
விலையாகப் பெற்றுச் சென்றான் !
குறைஷிக் கிழவன் அபு சுப்யானின்
அடங்காத மனைவி ஹிந்தா
ஒரு பேயை போலப் பாய்ந்து வந்தாள் !
சீற்றமிகு சிங்கத்தின்
கம்பீர முகத்தை
தன் வெஞ்சின விழிகளால்
வெறித்தாள் !
குறுவாளை கையில் எடுத்து
உரம் ஏறிய சிங்கத்தின்
நெஞ்சுக் கூட்டை
இரு கூறாகத் தரித்தாள் !
ஈமானின் ஈரமும்
இணையற்ற வீரமும்
பூத்துக் கிடந்த சிங்கத்தின்
ஈரக்குலையை
தன் பேய் கரங்களால்
பிடுங்கிப் பறித்தாள் !
வெறி தலைக்கேறிய
தெரு நாயைப் போல
தன் கோரப் பற்களால்
அதைக் குதறிக் கடித்தாள் !
குருதியை குடித்தாள்
மென்று விழுங்க முடியாத
கோபத்தோடு
மீதி ஈரலை காறி உமிழ்ந்தாள் !
அடங்கவே அடங்காத
ஆவேசத்தின் உச்சத்தில்
சிங்கத்தின்
காதுகளை
மூக்கை
ஆண்மையை
அவையங்களை
துண்டு துண்டாக அறுத்து
மாலையாகத் தொடுத்து
கழுத்திலே அணிந்து
அகோரமாய் ஆட்டம் போட்டாள் !
ஊழிக்காற்றைப்போல்
மூளியவள்
ஊளையிட்ட சத்தம் கேட்டு
போர்க்களம்
பேய்க்களமானது !
எழுபது முஸ்லிம் உயிர்களை
சுவனத்திற்கு
வழி அனுப்பி வைத்துவிட்டு
உடல்களை மட்டும்
தன் கருவறைக்குள்
வித்தாக விதைத்துக் கொண்டு
வீரத்தின் விளைநிலமானது உஹது !
ஆழிப் பெருங்கடல்
சுனாமி பெருங்கடலாகி
பொங்கி ஓய்ந்தது போல்
உஹதுக் களம்
உயிரழிந்து கிடந்தது !
சிங்கத்தின் உடல்
சிதைந்து கிடந்தது !
குறைஷிக் கிழவன் அபு சுப்யான்
நீண்ட ஈட்டியை எடுத்து
சிங்கத்தின் தொண்டையில் சொருகி
சந்தோஷப்பட்டான்.
அருள் வெள்ளம் மட்டுமே
ஆனந்த அலையாடுகின்ற
அண்ணலாரின் அழகிய நயனங்களில் அணை கட்ட முடியாத
ஆற்று வெள்ளமாய்
துயரக் கண்ணீர்
பெருக்கெடுத்து ஓடியது !
மக்கத்து எதிரிகள் தந்த
மரண அடிகளையும்
தாயிப் வாசிகளின்
கொலை வெறி கல்லெறிகளையும் பொறுமையோடு தாங்கிக் கொண்ட
தயாள நபிகளின் தாயுள்ளம்
சிங்கத்தின் சேதத்தைக் கண்டு
சினந்து பொங்கியது !
அகிலத்தின் அருட்கொடையே
அழுது சிணந்தால்
அகிலமே அழிந்து போகாதா ?
அருளாளன் ஆற்றுப்படுத்தினான்
தன் வேத வரிகளால்
ஆறுதல் படுத்தினான் !
ஆனாலும் ...
அண்ணலாரின் இரக்க இதயம்
ஆயுள் உள்ளவரை
அசதுல்லாஹ்வை எண்ணி
ஜம்ஜம் கிணறைப் போல்
சுரந்து கொண்டே தான் இருந்தது !
கண்மணி ரஸூலுல்லாஹிவின்
கருணை கண்களை
கண்ணீர் பொழியும்
கார் முகிலாக்கிய
அந்த சிங்கம்
ஹம்சா
ஈரம் தொலைந்து போன
அரபு மண்ணில்
வீரம் தொலைந்து போகாத
வரலாற்றுச் சுனை !
சீமான் நபியுல்லாஹ்வைச்
சீண்டிப் பார்த்த
சிறு நரிகளின் தலைவன்
அபு ஜஹல்
நெற்றியைத் தோண்டிப் பார்த்து
செந்நீர் சிந்த வைத்த
வாளின் முனை !
புண்ணிய நபிகளை
புண்ணாக்க வந்த
பாவிகள் பலபேரை
பரலோக வாசிகளாகிய
வீரத்தின் திணை !
எம்பெருமான் கட்டியெழுப்பிய
ஏகத்துவ மாளிகையின்
ஏற்றமிகு
வாசல் துணை !
ஹம்சா
ஹாஷிம் குடும்பத்து
அகன்ற வானத்தின்
அழகான நட்சத்திரம் !
அல்லாஹ்வுக்காக வாளெடுத்து
அண்ணல் நபி எதிரிகளின்
தலையெடுத்து
இஸ்லாத்தின் வெற்றிக்காக
தன்னையே கொடுத்து
உமையாக்களின் வஞ்சகத்தால்
இன்னுயிரையும் இழந்து
தமக்குவமையிலா தியாகத்தால்
சாதனையாகி
நிலைந்து வாழும் சரித்திரம் !
அனைத்துக்கும் மேலாக
அஹமது நபியின்
அகமதில் நிறைந்து
முகமதில் மலர்ந்து
சிந்தையில் இனிக்கும் விந்தை பெருமானாரின்
போற்றுதலுக்குரிய
சிறிய தந்தை !
உமையாவின் வாரிசான
அபு சுப்யானின் பகை உணர்வுக்கு
முதல் பலியான ஹாஷிம் குடும்பத்தின்
முதல் மனிதர் ஹம்சா !
உஹதுப் போர் முடிவுக்கு வந்து
குறைஷிகள் மக்காவுக்குத் திரும்பும் போது
அபு சுப்யான் சொன்னான் ....
" அடுத்த போரில் சந்திப்போம் "
* இன்ஷா அல்லாஹ்
நாளை தொடரும்

உமையாக்கள் - 4

 #உமையாக்கள்

#அத்தியாயம்_நான்கு
அபு ஹாஷிமா




பத்ருப் போரில் குறைஷிகளின் தானைத் தலைவன் அபு ஜஹல் உட்பட எழுபது பேர்
இறந்து போனார்கள்.
மக்காவே சோகத்தில் ஆழ்ந்தது.

பத்ருப் போர் தோல்வி உமையாக்களுக்கு
பெருத்த அவமானத்தையும் கோபத்தையும்
ஏற்படுத்தியது.
அபு சுப்யானின் மனைவி ஹிந்தாவின்
தந்தையும் சகோதரனும் கொல்லப்பட்டது
அவர்களை தாங்க முடியாத ஆத்திரத்தில்
தள்ளியது.

முஹம்மதையும் அவர் கூட்டத்தையும்
அழித்தே தீருவேன் என்ற உறுதிமொழியை
மக்கத்து குறைஷிகளுக்கு வழங்கி
அவர்களின் புதுத் தலைவரானார்
அபு சுப்யான்.

பத்ருப் போர் நடந்து ஓராண்டு முடிந்து போயிருந்தது. அந்த ஒரு வருடத்திற்குள் மதினாவின் மீது போர் தொடுப்பதற்கான திட்டங்களை வகுத்து அதற்கான படைகளையும் தளபதிகளையும் தளவாடங்களையும்
தயார் செய்தார் அபு சுப்யான்.

மூவாயிரம் பேர்கொண்ட மூர்க்கத்தனமான
படையொன்று மதீனாவை நோக்கி
ஆரவார கூச்சலோடு கிளம்பி வந்தது.

பெண்களின் போரணியொன்று
ஹிந்தாவின் தலைமையில்
போர்ப்பரணி பாடி வந்தது.

மதினாவின் எல்லையிலிருந்த உஹது மலைச்சரிவில் குறைஷியரின் பெரும்படை
கொலைவெறியோடு காத்திருக்க ...
மதீனத்து மக்களுக்கு அவசர அழைப்பு விடுத்தார்கள் அண்ணல் நபிகள்.

நயவஞ்சகர்களின் தலைவனான
அப்துல்லா பின் உபை போரைப் புறக்கணித்து நபிகளுக்கு துரோகம் செய்தான்.

ஆனால் ...
மதீனத்து இளைஞர்களும்
மக்கத்து முஹாஜிர்களும்
நபிகளின் பின்னால் அணி திரண்டார்கள்.

எழுநூறு பேர் கொண்ட சிறுபடை
குறைஷிகளின் மூவாயிரம் பேர் கொண்ட
பெரும்படையை எதிர் கொண்டது.

முஸ்லிம்களின் கொடியை முஸ்அஃப் தாங்கிப் பிடித்தார்.
அண்ணலின் சகோதரர் ஜாஃபர் குதிரைப்படையின் தலைவராக வந்தார்.
வில் வீரர் குழுவொன்றை அப்துல்லா பின் ஜுபைர் தலைமை தாங்கி நடத்தி வந்தார்.
கவசமணியாத காலாட்படைக்கு
அல்லாஹ்வின் சிங்கம் ஹம்சா அவர்களே
கவசமானார்.
உஹது ஐனைன் குன்றின் கணவாயில்
ஐம்பதுபேர் கொண்ட படையணி ஒன்றை
நிறுத்தி ...
" வெற்றியோ தோல்வியோ
எது வந்தாலும் இந்த இடத்தை விட்டு விலகக் கூடாது " என்றார்கள் நபிகள்.

குறைஷிகளின் பெரும்படையில்
மாபெரும் வீரர் காலித் பின் வலீதும்
சப்வான் பின் வலீதும் நெஞ்சு நிமிர்த்தி
வாட்களை சுழற்ற தயாரானார்கள்.

அபு சுப்யான் போராடை தரித்து
வசீகரப் புரவியொன்றில் ஆரோகணித்து வந்தார்.

" அப்துத் தாரின் மக்களே..
வீரப்போர் புரியுங்கள்.
எதிரிகளைக் கொல்லுங்கள் .
குருதியைப் பூசுங்கள்.
உயிர்களைப் போக்கி
உடல்களை வீசுங்கள் .
விடிவெள்ளிக்குப் பிறந்த
பெண்கள் நாங்கள்.
வெற்றியை அணைத்து வரும்
உங்களை
சுகந்தம் வீசும் கூந்தலோடு
பவள மணிக் கழுத்தோடு
குறுகுறுக்கும் எங்கள்
குருத்து மார்போடு
அள்ளி அணைத்துக் கொள்வோம் .
வென்று வாருங்கள் "

ஹிந்தாவின் மகளிரணிப் பெண்கள்
தம்பூரி கொண்டும்
வட்டப்பறை கொண்டும்
வட்டமடித்தனர்.
வீரர்களுக்கு ரத்த வெறியூட்டினர்.

குறைஷிக் கொடியைத் தாங்கிப் பிடித்த
தல்ஹா ...
தானே முதல் பலி ஆவதற்கு ஓடி வந்தான் .
முஸ்லிம்களை நரகிற்கு அனுப்புவேன் என்று ஆர்ப்பரித்தான்.

புயலைப்போல் எதிரே வந்தார் அலீ.
" பொடியன் " என்றான் தல்ஹா.
" உன்னை நரகத்திற்கு அனுப்ப வந்த
மரணம் நான் " என்றார் வீரர் அலீ .
மின்னலாய் இறங்கி வந்த அலீயின் வாளுக்கு இரு கூறாகி இறந்து போனான் தல்ஹா.

தல்ஹாவின் மகன் ஓடோடி வந்து
தந்தையின் கொடியைத் தாங்கிப் பிடித்தான்.
வீரத்தின் வாளுக்கு சரியான விருந்தென்று
ஹம்சா அவனை விருந்தாக்கினார்.

மக்காவின் புகழ்பெற்ற மல்யுத்த மாமலை
அபு தஜனா.
விரி மார்பும் மாளாத வீரமும் பெற்றவர்.
நபிகள் , தங்களின் வாளெடுத்து
" வெற்றிவாள் இதனை பெறுபவர் யார் ?" என்றார். பலத்த போட்டியில் நபிகளின் வாள் அபு தஜனா கரங்களில் சேர்ந்தது.

அலீ ஒருபுறம்
ஹம்ஸா மறுபுறம் .
அபு தஜனாவோ உட்புறம் .
எப்புறமும் தப்ப முடியாத எலிப்படையாய் ஆனது குறைஷியர் பெரும் படை.

உஹதுப் போர்க்களம் குருதியில் குளித்தது.
முஸ்லிம்களின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் குறைஷிகள் ஓட ஆரம்பித்தார்கள்.

எதிரிகள் விட்டுப்போன
ஏராளமான கொள்ளைப் பொருட்கள் முஸ்லிம்களின் கண்ணை உறுத்த கணவாயில் காவலுக்கு நின்றவர்கள் நபிகளின் கட்டளையை மறந்து இறங்கி வந்தார்கள்.

காலிதின் கழுகுக் கண்கள் காவலில்லாத கணவாயை கண்டு கொள்ள
போர்களத்தின் காட்சிகள் வேகமாய் மாற ஆரம்பித்தன.

கொள்ளைப் பொருட்களின் மேல் பிரியம் கொண்ட முஸ்லிம்கள் கடும் தாக்குதலுக்கு ஆளானார்கள்.
ஆயிரம் முதலைகள் அலைமோதும் அகழிக்குள் விழுந்துவிட்ட யானையைப்போல முஸ்லிம்கள்
குதறப்பட்டார்கள்.
காலித் பின் வலீதின் வியூகத்திற்குள்
உஹது சுருண்டு கொண்டது.

நபிகளை நோக்கி ஈட்டிகளும்
அம்புகளும் பாய்ந்து வந்தன.
அபு சுப்யானின் ஆணையை ஏற்று
குறைஷியரின் கொலைக் கூட்டம்
நபிகளின் உயிரைப் பறிக்க முன்னேறியது.
நபிகளைச் சுற்றி ஐந்துபேர் அணியொன்று
காவல் காக்க அவர்களெல்லாம் எதிரிகளால்
கொல்லப்பட்டார்கள்.

நபிகளின் கவசம் உடைந்தது.
பல்லொன்று ஷஹீதானது.
குருதி வழிந்தது.
நபிகள் கொல்லப்பட்டார் என
கூக்குரல் எழுந்தது .
முஸ்லிம்களை குழப்பம் மூடியது .
உஹதுப் போர்க்களம் முஸ்லிம்களின்
ரத்தத்தால் புதுப்பாடம் எழுத ஆரம்பித்தது.

*இன்ஷா அல்லாஹ்
நாளை தொடரும் 

உமையாக்கள் - 3

 அத்தியாயம்_மூன்று

அபு ஹாஷிமா



காலம் வேகமாக கரைந்து கொண்டிருந்தது....
ஹாஷிம் குடும்பத்து வாரிசுகளும்
உமையா குடும்பத்து வாரிசுகளும்
புதிய தலைமுறை மனிதர்களாக தலையெடுக்க ஆரம்பித்தார்கள்.
உமையா குடும்பத்தின் வாரிசான
அபு சுப்யான் மக்கத்து குறைஷிகளின்
முக்கியத் தலைவர்களில் ஒருவரானார்.
மிகப் பெரிய செல்வந்தராகவும்
வணிகராகவும் இருந்த அபு சுப்யானின்
பேச்சுக்கு அரபுலகம் எதிர் பேச்சு பேசாமல் கட்டுப்பட்டது.
ஹாஷிம் நபியை பின்பற்றி முஸ்லிம்களாக மாறிவிட்ட பலரை சித்திரவதை செய்து
கொன்றவர்களில் அபுசுப்யானும் ஒருவராக இருந்தார்.
நபிகளையும் முஸ்லிம்களையும்
தீர்த்து கட்டுவதற்கு பல வியூகங்களை அமைத்தார். இவருடைய நெருக்கமான கூட்டாளி
அப்துஷ் ஷம்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த செல்வந்தரான உத்பா இப்னு ராபிஆவின் மகள். இவள் ஒரு மன்னரை பெற்றெடுப்பாள் என்று ஆரூடம் சொல்லக்கூடிய ஒருத்தி குறி சொன்னாள் .
அதன் பிறகு அபு சுப்யானை இவள் திருமணம் செய்து கொண்டு முஆவியாவை பெற்றெடுத்தாள்.
பிறப்பதற்கு முன்னால் தந்தை அப்துல்லாஹ்வையும்
பிறந்து ஆறு வயதானபோது
தாயார் ஆமீனா உம்மா அவர்களையும்
மரணத்திற்கு பறிகொடுத்து விட்டு
நபிகள் அநாதையானார்கள்.
அன்புப் பாட்டனார்
குழந்தை முஹம்மதை உயிரைவிட
மேலாக பாதுகாத்து வளர்த்தார்.
தான் மரணிக்கும் தருணத்தில்
தன் பிள்ளைகளில் ஒருவரான
#அபுதாலிப் அவர்களிடம் முஹம்மதை ஒப்படைத்து எந்தத் தீங்கும் வராமல்
பிள்ளையை பாதுகாக்க வேண்டும்
என்று கேட்டுக் கொண்டார்.
அபுதாலிப் அவர்களும் தங்கள் உயிருள்ளவரை எந்தக் குறையும் இல்லாமல் முஹம்மதை வளர்த்தார்.
#கதீஜா நாயகியாரை திருமணம் செய்து வைத்தார். அண்ணலாருக்கு நபித்துவம் கிடைத்த பிறகு எதிரிகளிடமிருந்து நபிகளைக் காக்கும் கேடயமாகத் திகழ்ந்தார்.
#தாருல்_நத்வா என்றொரு மன்றம் மக்காவில் இருந்தது. மக்கத்துத் தலைவர்களும் அவர்களின் அடிபொடிகளும் ஊர்கதை பேசி தங்களைப் பிடிக்காதவர்களை அழித்தொழிக்க
கூடிப்பேசும் மன்றமது.
நபிகளின் ஏக இறைக் கொள்கையைப் பற்றி அங்கே காரசாரமாக விவாதித்தார்கள்.
" குறைஷியர் நாமெல்லாம்
கொள்கை மாறிப் போய் விட்டால்
கஃபாவை சூழ்ந்திருக்கும்
கோல எழிலுடைய குலதேவதைகள்
நம்மை கோபிக்காதா ?
அவைகளின் கோலம் அழிந்து போகாதா ?
இந்தக் குவலையம் நம்மை பழிக்காதா ?"
என்று குமுறினார்கள் குறைஷிகள் .
அதனால் நபிகளின் குரல்வளையை
முறித்தேத் தீருவது என முடிவெடுத்தார்கள்.
நபிகளின் பெரிய தந்தை அபுதாலிபை சந்தித்து ....
கசடருக்கும் கல்லாத மடையருக்கும்
கருணை காட்ட வந்த நபிமணியின்
இறைக் கொள்கையை முடிக்கச் சொன்னார்கள்.
முழுமதி போகும் பாதையை
மூடிவிடச் சொன்னார்கள்.
இதனை ஏற்றால் ...
அள்ளி கொள்ளவும்
பள்ளி கொள்ளவும்
ஆரணங்குகள்
ஆபரணங்கள்
அடிமைகள்
அரண்மனை என அத்தனையும் தருவோம் .
மறுத்தால்
முஹம்மதின் மூச்சை முடிப்போம் என்றார்கள்.
நபிகளோ ...
" ஒரு கையில் சந்திரனும்
மறு கையில் சூரியனும்
தந்து என்னை அழைத்தாலும்
சத்தியக் கொள்கை இஸ்லாத்தை கைவிட மாட்டேன்.ஈமானை இழக்கவும் மாட்டேன் " என்றார்கள்.
குறைஷிகள் கழுத்தறுபட்ட
கோழிகளைப்போல துடிக்க ஆரம்பித்தார்கள்.
பெரிய தந்தை அபுதாலிபும்
அருமைத் துணைவியார் கதீஜா உம்மாவும்
காலமான பிறகு நபிகளின் மீது குறைஷியரின் வன்முறை அதிகமாக
கட்டவிழ்த்து விடப்பட்டது.
தங்களை தட்டிக் கேட்கவோ தடுத்து நிறுத்தவோ முஹம்மதின் உறவினர்கள் யாரும் அவரோடு இல்லை என்ற துணிச்சலில் கொடுமைகளை அரங்கேற்றினார்கள்.
முஹம்மது ரஸூலுல்லாஹ்
இஸ்லாத்தை மக்களுக்கு சொன்னபோது
அவர்களின் உறவினர்களில் பலரும்கூட இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
பெரிய தந்தை அபு லஹப் எதிரிகளின் தலைவனாகவே மாறி விட்டான்.
சிறிய தந்தைகளான
இஸ்லாத்தை ஏற்கவில்லை.
அதற்காக நபிகளை பகைக்கவுமில்லை.
ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாத
ஹம்ஸா வேட்டைப் பிரியராக இருந்தார். ஹம்ஸா போன்றவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஆதரிக்காத காரணத்தால்
அபு ஜஹலும் அபு சுபியானும் நபிகளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்தார்கள்.
ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது குட்டி ஈன்ற ஒட்டகையின் கழிவுகளை கொண்டு வந்து நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோள் மீது சுமத்தினான் அபு ஜஹல்.
இதை கேள்விப்பட்ட ஹம்ஸா அவர்கள் விரைந்து வந்து தாருல் நத்வாவில் வீற்றிருந்த அபூ ஜஹலின் நெற்றியில் தன்னுடைய வாளால் ஒரு கோடு கிழித்தார். அபு ஜஹல் தலையில் இருந்த ரத்தம் கொட்ட ஆரம்பித்தது .
இனி இது போன்ற சம்பவம் நடந்தால் யாரும் உயிரோடு இருக்க மாட்டீர்கள் என்று கர்ஜித்து விட்டு நபிகளிடம் சென்று
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் ஹம்ஸா.
நபிகளார் மக்காவைத் துறந்து மதினாவுக்கு சென்ற பிறகு ஹம்ஸாவும் மதினா சென்றார்.
முஸ்லிம்களை வளர விட்டால் தங்கள் குலப் பெருமைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டு விடும் என்று குறைஷிகள் பயந்தார்கள்.
மதினா சென்ற முஸ்லிம்கள் மீது போர் தொடுத்து அவர்களை அழிப்பதற்காக
அபுசுப்யான் கூட்டம் பெரும் சதி திட்டங்களைத் தீட்டியது. அதற்காக ...
பெரும் செல்வம் ஈட்டும் நோக்கில் வெளிநாட்டுக்கு சென்று வணிகம் செய்து ஐம்பதாயிரம் பொற்காசுகளோடும் ஆயிரம்
ஒட்டகங்களோடும் தாராளமான செல்வத்தோடும் அபு சுபியான் மக்காவுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார் .
அவருடைய செல்வம் முஸ்லிம்களை அழிக்கவே பயன்படும் என்பதால் அதை தடுத்து நிறுத்த நபிகள் விரும்பினார்கள் .
313 தோழர்களோடு நபிகளின் படை புறப்பட்டது. பத்ரு என்ற இடத்தில்
முஸ்லிம்களும் குறைஷிகளும்
போர் செய்தார்கள்.
எழுபது குறைஷிகள் கொல்லப்பட்டார்கள் .
எழுபது பேர் கைதிகளானார்கள்.
இந்தப் போரில் ஹம்ஸா அவர்களும் அலீ அவர்களும் வீர தீரத்தோடு போராடினார்கள்.
இதில் அபு சுபியானுடைய மனைவி ஹிந்தாவில் தந்தை உத்பாவும் தனயன் ஷைபாவும் ஹம்ஸா அவர்களின் வாளுக்கு
இரையானார்கள்.
உத்பாவின் தம்பி வலீதை அலீ ஒரே வெட்டில் வீழ்த்தினார்.
இது அபு சுப்யானுக்கும் அவருடைய மனைவி ஹிந்தாவுக்கும் பயங்கர கோபத்தை உண்டாக்கியது .
ஹம்ஸாவை பழிவாங்கியே தீருவேன் என சூளுரைத்தாள் ஹிந்தா .
அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்து இருந்தார்கள்
அவர்களின் ரத்த வெறிக்கு
தன்னை தயார் செய்ய ஆரம்பித்தது
மதினாவின் எல்லையிலிருந்த
* இன்ஷா அல்லாஹ் ...
நாளை தொடரும்.