சனி, 28 செப்டம்பர், 2013

உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா?

நன்றி : திரு. சமஸ் 

வனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை. 

* உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா.

* இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன.

* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது.

* இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவிகிதம்.

* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படுபவர்களில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகம்.

* இந்தியாவில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.

      டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மாணவி ஐந்து பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் ஆகட்டும், குவாஹாத்தியில் சாலையில் பலர் முன்னிலையில் ஓட ஓட ஓர் இளம்பெண் மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவம் ஆகட்டும். முக்கியமான ஒரு செய்தியை நமக்குத் திரும்பத் திரும்ப உணர்த்துகின்றன... இனியும் இந்த நாட்டில் அரசாங்க அமைப்புகளை நம்பிப் பயன் இல்லை. நம் குழந்தைகளைக் காத்துக்கொள்ள இனி நாம்தான் களம் இறங்கியாக வேண்டும்; குழந்தைகளுக்கான பாலியல் கல்வியை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதே அந்தச் செய்தி!
  சரி, எந்த இடத்தில் இருந்து தொடங்குவது?
      
முக்கியமான 5 கட்டளைகள்:
 

      *மார்பகம், பிறப்புறுப்பு, மாதவிடாய், நாப்கின், ஆணுறை, சுய இன்பம்,  உடலுறவு, கற்பு, பலாத்காரம், காதல், குழந்தைப் பிறப்பு... இப்படி எது தொடர்பாக உங்கள் குழந்தை கேட்டாலும் மறைக்காமல் அறிவியல்ரீதியிலான உண்மையைச் சொல்லுங்கள். அதேசமயம், தேவைக்கு அதிகமாக, பெரிய பெரிய விளக்கங்களோடு பதில் அளிக்க வேண்டியது இல்லை. அவர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்லப் பழகுங்கள். இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசும்போதோ, குழந்தைகளை விசாரிக்கும்போதோ ஒரு குற்றவாளியை அணுகுவதுபோல அவர்களின் நேருக்கு நேர் அமர்ந்து, கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து, பக்கவாட்டில் அமர்ந்து விளையாட்டாகப் பேசுங்கள். ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளைப் பற்றியும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் இருக்கும். இயல்பாகவே ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும். எனவே, ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் சொல்லிக்கொடுங்கள். 

      * வீட்டில் அரைகுறை ஆடையோடு உலவாதீர்கள். கணவன் - மனைவி நெருக்கத்தைக் குழந்தையின் முன் காட்டாதீர்கள். குழந்தையின் முன் உடை மாற்றாதீர்கள். ஆபாசம் வரும் எனத் தெரிந்தால், டிவியோ, பத்திரிகையோ குழந்தை முன் பார்க்காதீர்கள்.  
      
 * பாலியல் கல்வியின் அடிப்படையே வீட்டிலிருந்து, பாலியல் சமத்துவத்தில் இருந்துதான் தொடங்குகிறது. எனவே, ஆண் - பெண் பாகுபாடு எந்த விதத்திலும் வீட்டில் நிலவாத சூழலை உருவாக்குங்கள். சமையலில் தொடங்கி முக்கியமான முடிவுகளை எடுப்பது வரை எல்லா விஷயங்களிலும் கணவன் - மனைவி  இருவருக்கும் சமமான பங்கு இருப்பதை உறுதிசெய்யுங்கள். ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் எல்லா வேலைகளையும் கற்றுக்கொடுங்கள்; பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் எல்லா வாய்ப்புகளையும் அளியுங்கள்.

      * சக நண்பராக குழந்தைகளோடு நெருக்கமாக உரையாடுங்கள். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமேனும் அவர்களோடு செலவிடுங்கள். அவர்களுடைய நண்பர்கள், விருப்பங்கள், செயல்பாடுகள்பற்றிப் பேசித் தெரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளிடம் பிறப்புறுப்புபற்றி சகஜமாகப் பேசுங்கள். கை, கால்களைப் போல அதுவும் ஓர் உறுப்புதான் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள். அதைப் பற்றிப் பேசவோ, சந்தேகம் கேட்கவோ அவர்கள் தயங்காத சூழலை உருவாக்குங்கள். புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குங்கள். நீங்கள் சொல்ல நினைக்கும் - ஆனால், சொல்ல முடியாதது என்று நினைக்கும் - விஷயங்களைப் புத்தகங்களாக வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்.

      * குழந்தைகள் எந்த ஒரு சங்கடமான விஷயத்தை உங்கள் முன் கொண்டுவந்தாலும் ‘‘பயப்பட வேண்டாம், இது ஒரு பிரச்னையே இல்லை, நான் இருக்கிறேன்’’ என்கிற பக்கபல வார்த்தைகளோடு அவர்களை அணுகுங்கள்.

அதிகம் கேட்கப்படும் 5 கேள்விகளும் சொல்ல வேண்டிய பதில்களும்!

‘‘அம்மா, என்கூட படிக்குற ஒரு பையன் என்கிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொல்றாம்மா...”
‘‘ஆஹா... அவனுக்கு உன்னைப் பிடிச்சுருக்குபோல இருக்குடா. உன்கூட ஃப்ரெண்டா இருக்க ஆசைப்பட்டு இருக்கான். அதை அவனுக்குச் சொல்லத் தெரியலை. டி.வி., சினிமாவைப் பார்த்து காதல்னு சொல்லி இருக்கான். தப்பில்லே. அவன்கிட்டே சொல்லு. நம்ம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்து படிப்போம்னு. ஞாயிற்றுக் கிழமைல வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வா. விளையாடு!’’

‘‘ஏம்மா, பெண்களுக்கு மட்டும் மார்பு வளருது... ஆண்களுக்கு வளரலை?”
‘‘பிற்காலத்துல குழந்தைங்க பிறக்கும்போது, அந்தக் குழந்தைங்களுக்குப் பால் கொடுக்கணும் இல்லையா? அதுக்காகத்தான் பெண்களுக்கு மார்பு பெரிசா வளருது.’’

‘‘பலாத்காரம்னா என்னப்பா?”
‘‘கண்ணா, நம்ம உடம்புல சில இடங்களை எல்லோரும் தொடலாம், சில இடங்களைத் தொடக் கூடாது. அப்படித் தொடக் கூடாத இடங்களை நம்மளை மீறித் தொட்டுடறதைத்தான் பலாத்காரம்னு சொல்றாங்க.’’

‘‘மாதவிடாய்னா என்னம்மா? அக்காவுக்கு நாப்கின் எதுக்கு  வாங்குறீங்க?”
‘‘உடம்புக்குத் தேவை இல்லாத தண்ணீர் எப்படி உச்சாவா வருதோ, அதேபோல, பெண்களுக்கு மட்டும் அவங்க பெரிய பிள்ளையா வளர ஆரம்பிச்ச உடனே தேவையில்லாத ரத்தம் வெளியே வரும். அதைத்தான் மாதவிடாய்னு சொல்வாங்க. அப்படி வரும்போது, அந்த ரத்தம் டிரஸ்ல பட்டுடாம இருக்கத்தான் நாப்கின்.’’

‘‘குழந்தை எப்படிப்பா பிறக்குது?”
‘‘அப்பாக்கிட்ட ஒரு கெமிக்கல் இருக்கும். அது அம்மா வயித்துக்குள்ள இருக்குற கெமிக்கல்கிட்டே போய் சேர்ந்து, பாப்பாவாப் பிறக்கும். ஏரோப்ளேன் எப்படிப் பறக்குது? அதை முழுசாச் சொன்னா உனக்கு இப்போ புரியாதுல்ல... அதுபோல, நீ பெரியவனாகும்போது இதெல்லாம் படிப்புல வரும். அப்போ உனக்கு எல்லாம் புரியும்.’’

அணுகச் சங்கடமான 3 விஷயங்கள்! 

குட் டச் / பேட் டச் 
      
     குழந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, அதன் உடலில் பிறர் எங்கெல்லாம் தொடலாம், எங்கெல்லாம் தொடக் கூடாது என்று புரியவையுங்கள். கை குலுக்கலாம் - குட் டச். தலை மேல் கை வைக்கலாம், கன்னத்தில் கையால் கிள்ளி முத்தம் கொடுக்கலாம், தோளில் கை போடலாம் - குட் டச். தடவக் கூடாது - பேட் டச். மார்பில், வயிற்றில், இடுப்பில், பிறப்புறுப்பில், தொடையில் கை வைக்கக் கூடாது; தடவக் கூடாது. வாய் மீது வாய் வைத்து முத்தம் கொடுக்கக் கூடாது. கட்டிப்பிடிக்கச் சொல்லக் கூடாது. மடியில் அமர்த்திக்கொண்டு அணைக்கக் கூடாது - பேட் டச். அப்படி யார் செய்தாலும் சம்பந்தபட்டவர்களிடம் இருந்து சமர்த்தாய் நழுவி, தனியாக இருக்கும்போது அம்மாவிடம்/அப்பாவிடம் உடனே சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் . வீட்டின் அருகிலோ, பள்ளிக்கூடத்தின் அருகிலோ தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள் யாரேனும் தங்களைத் தொடர்ந்து கவனிக்கிறார்களா, சைகை மூலம் அழைக்கிறார்களா, சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்களா என்று குழந்தைகள் கவனிக்கக் கற்றுக்கொடுங்கள். அப்படிக் குழந்தை தெரிவிக்கும் நபர்களைக் கண்காணியுங்கள். 


காதல் 

      குழந்தை ஐந்து வயதில் காதல் வயப்படலாம். இயல்புதான். பதின்பருவத்தில் காதல் வருவதும் இயல்புதான். சூசகமாகச் சொல்லுங்கள்... ‘‘வெறும் நட்புதான்பா. ஆனா, இந்த வயசுல அப்படித்தான் தோணும், தப்பில்லை. இப்படித்தான் அப்பாவுக்கும் சின்னப் புள்ளையா இருக்கும்போது நடந்துச்சு. அப்புறம் பெரியவனானதும் இதெல்லாம் சும்மான்னு புரிஞ்சுச்சு. படிப்பைக் கவனிப்பா. எதுவா இருந்தாலும் அது முக்கியம்’’ என்பதுபோலப் பேசுங்கள்.

சுய இன்பம் 

      ஆணோ, பெண்ணோ... ஒரு குழந்தை தன் வாழ்வில் இரு முறை சுயஇன்பம் பழக்கத்துக்கு ஆட்படுகிறது. முதல் முறை 3-5 வயதில். இரண்டாவது முறை 10-13 வயதில். இது எல்லாக் குழந்தைகளுக்கும் சகஜமானது. பிறப்புறுப்பைத் தேய்த்துக்கொண்டே இருப்பதால் கிடைக்கும் சுகம் காரணமாக ஏற்படும் இந்தப் பழக்கத்தை விவரம் தெரியாத வயதில், குழந்தையின் கவனத்தைத் திசை மாற்றி நம்மால் தடுக்க முடியும். ஆனால், விவரம் தெரிந்த பின் பதின்பருவத்தில் ஏற்படும் பழக்கம் அப்படி அல்ல. அனுமதியுங்கள். அதேசமயம், டி.வி., ஆபாசப் புத்தகங்கள், இணையம் போன்ற திசை திருப்பும் விஷயங்களை வீட்டில் இருந்து அகற்றுங்கள். விளையாட்டு உள்ளிட்ட பிற விஷயங்களில் ஊக்குவியுங்கள். கவனம் சிதறும் அளவுக்குப் பழக்கம் அதிகமானால், அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூசகமாகத் தெரியப்படுத்துங்கள்.

ஆப்த வாக்கியம் 


      ஒரு விஷயத்தைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே சொல்லி வளருங்கள். ‘‘நீ மட்டுமே உலகம் இல்லை. நாம் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ எவ்வளவோ பேருடைய உழைப்பு தேவைப்படுகிறது. ஆகையால், உன்னைப் போல் எல்லோரையும் நினை’’ என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வளருங்கள். எல்லோருடைய எண்ணங்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தி வளருங்கள். வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் நீங்கள் அவர்களுக்குத் துணையாக இருப்பீர்கள்; எதையும் மறைக்க வேண்டியது இல்லை என்று சொல்லி வளருங்கள். அதேசமயம், எப்போதும் குழந்தைகளைக் கவனத்திலேயே வைத்திருங்கள்! 
டாக்டர் விகடன் ஜன.2013

(சமூக நலன் கருதி ஒரு வேண்டுகோள்: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து இதை உங்கள் நண்பர்களுக்குப் பகிர்ந்துகொள்ளுங்கள்...)

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

எங்கே ஒற்றுமை? எங்கே சகோதரத்துவம்?

சனி, 21 செப்டம்பர், 2013

ஆன்லைன் மூலம் சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை பெறலாம்.




சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்.தமிழ்நாடு இப்பொழுது "e-District" ஆகி விட்டது.இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதல், இருப்பிடச் சான்றிதல்,வருமானச் சான்றிதல், No Graduate போன்றச் சான்றிதல்களை பெற முடியும்.

இணைய முகவரி: http://edistrict.tn.gov.in/

வியாழன், 19 செப்டம்பர், 2013

மகத்தான நற்பாக்கியங்கள்!

1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்

2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.
3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.
4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.
5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்
6) எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்
7) எவர் மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.
8.) அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களை எவர் மனனமிடுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.
9) எவர் கடமையான தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸியை ஓதி வருவாரோ அவருக்கு சுவர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர வேறெதுவும் தடையாக இருக்காது.
10) எவர் அழகான முறையில் ஒழுச் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து மொளனமாக செவி தாழ்த்தி உரையை செவிமடுப்பாரோ அவரது ஜும்ஆவுக்கு இடைபட்ட பாவங்களும், மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.
11) எவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்றாரோ அல்லாஹ் அவரது ரிஸ்கை விஸ்தீர்ணப்படுத்துவதோடு, அவரது ஆயுளையும் நீட்டுகிறான்.
12) எவர் தனது சகோதர முஸ்லிமுக்கு மறைவில் பிரார்த்திக்கின்றாரோ அவருக்காக ஒரு வானவர் மறைவில் சாட்டப்பட்டு ஆமீன் கூறுவார். உமக்கும் அதே போன்று என கூறுவார்.
13) எவர் பாங்கின் பின் ‘அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித்ஃவதித்தாம்மா வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதல் வஸீலத வல்பழீலத வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதல்லதி வஅத்தஹு’ என்று ஓதுவாரோ அவருக்கு மறுமையில் நபிகளார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும்.
14) எவர் அவையில் அமர்ந்து அதன் இறுதியில் அந்த அவையை விட்டு எழுந்து செல்வதற்கு முன் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’ என்று ஓதவாரோ, அவர் அவையில் இருக்கும் போது நிகழ்ந்த அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.
15) எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.
16) எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.
17) அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றால் அல்லாஹ் எழு நூறு வருட தொலைவுக்கு அவரது முகத்தை நரகை விட்டு தூரப்படுத்துவான்.
18) எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).
19) ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.
20) ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்கச் சென்றால் அவர் திரும்பும் வரை சுவர்க்கத்தின் ஒரு இறக்கையில் இருக்கின்றார்.
21) எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.
22) யார் கல்வியை கற்பதற்காக வெளியேறிச் செல்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை அழகு படுத்துகின்றான்.
23) ஒரு முஸ்லிமுக்கு துன்பம் ஏற்படும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்ஃஜுர்னீ பீஃ முஸீபதி வஹ்லுஃப் லீ ஹயிரம் மின்ஹா’ அல்லாஹ் அவரது துன்பத்திற்கு நற்கூலி வழங்குவதோடு, அவரது துன்பத்தையும் மாற்றி அதை விட சிறந்ததை வழங்குவான்.
24) எவர் ஒருவர் அழகான முறையில் ஒழுச் செய்வாரோ, அவரது பாவங்கள் அவரது உடலை விட்டு வெளியேறும், நகத்தின் கீழிருந்து நிகழ்ந்த பாவங்கள் உட்பட.
25) ஒரு முஸ்லிமின் சோதனையை எவர் இந்த உலகில் போக்குவாரோ, அவரது துன்பத்தை அல்லாஹ் மறுமையில் நீக்குவான்.
26) எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை நாளை மறுமையில் மறைப்பான்.
27) எவர் ஒருவரின் கடனை இழகு படுத்துகின்றாரோ, அல்லது அதை தல்லுபடி செய்கின்றாரோ நிழலே இல்லாத நாளை மறுமையில் அல்லாஹ் அர்ஷின் கீழ் அவருக்கு நிழல் வழங்குவான்.
28) எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.
29) எவர் நேர் வழியின் பால் அழைப்பு விடுப்பாரோ அவரை பின் பற்றியவர்களின் கூலி இவருக்கு உண்டு, அவர்களது கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது.
30) நன்மையை எதிர்ப்பார்த்து தனது குடும்பத்துக்கு எவர் செலவளிப்பாரோ அவருக்கு தர்மத்தின் நன்மை உண்டு.
 நன்றி சுவனத்தென்றல் & Engr.Sulthan