புதன், 20 ஆகஸ்ட், 2014

மனதைப் பிழிந்த கவிதை....!



பிரபல பலஸ்தீனக் கவிஞர் சமீஹ் அல் காசிம் அவர்கள் காலமாகிவிட்டதாக இலங்கைக் கவிஞர் அண்ணன் அஷ்ரப் ஷிகாபுத்தீன் அவர்கள் ஒரு இடுகை இட்டிருந்தார். 

அதில் 75 வயதான கவிஞர் சமீஹ்

"மரணமே உன் மீது எனக்குக் காதலோ பயமோ கிடையாது. உடல் கொண்டு ஒரு படுக்கையையும் ஆத்மாவைக் கொண்டு ஒரு போர்வையையும் நீ உருவாக்கியிருக்கிறாய் "

என்று ஒரு குறிப்பை இரண்டு வாரங்களுக்கு முன்ன அவர் எழுதி வைத்திருந்ததையும் குறிப்பிட்டு பின் அவர் எழுதிய ஒரு கவிதையின் தமிழாக்கத்தை பதித்திருந்தார் அதை படித்துவிட்டு மிகுந்த உணர்ச்சி மேலிட வியந்து போனேன். அந்த கவிதையை படித்தால் பலஸ்தீனத்தின் கொடுஞ்சோகம் பட்டென விளங்கும்.. செத்தவனுக்கும் உணர்வு பிறக்கும்... அமைதியாக இருக்கும் நரம்புகளும் ஆர்த்தெழும்....!!!!!!!!!!

அவர்களின் போராட்டத்தை அப்படியே படமெடுத்துக்காட்டும் அந்த கவிதை இதோ.....

என் பாண்துண்டை நான் இழக்க நேரினும்
என் சட்டையையும் கட்டிலையும் விலை கூற நேர்ந்தாலும்
கல்வெட்டியோ சுமைகாவியோ
தெருக்கூட்டியோ நான் பிழைக்க நேரினும்
உன் பண்டசாலையைத்
துடைத்து மினுக்க நேரிட்டாலும்
குப்பையைக் கிளறி உணவெடுக்கும்படி வந்தாலும்
பட்டினி கிடந்து அழுந்த நேரினும்
மனிதனின் எதிரியே
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன் ...

என் காணியின் கடைசித் துண்டையும் பறித்தெடு
என் இளமையைச் சிறைக் கூண்டினுள்ளே புதைத்திடு
என் முதுசொத்தைக் கொள்ளையடி
என் நூல்களை எரித்திடு
என் கோப்பைகளில் உன் நாய்களுக்கு இரைபோடு
போ .. என் ஊரிலுள்ள கூரைகள் மீது
உன் பயங்கர வலைகளை விரித்திடு
மனிதனின் எதிரியே
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன்

என் கண்ணெதிரே
நீ எல்லா விளக்குகளையும் ஊதி அணைத்தாலும்
உதடுகளின் முத்தங்கள் அனைத்தையும்
உறைவித்தாலும்
என் நாட்டின் காற்றினை
சாபங்களால் நிறைத்தாலும்
என் ஓலமிடும் குரல்வளையை
அமுக்கி ஒடுக்கினாலும்
என் காசுகள் போற் பொய்க்காசுகள் தயாரித்தாலும்
என் பிள்ளைகளின் முகத்து முறுவலைப்
பிடுங்கி எடுத்தாலும்
இகழ்ச்சி ஆணி கொண்டு
என் விழிகளில் அறைந்தாலும்
மனிதனின் எதிரியே
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன்

மனிதனின் எதிரியே
துறைமுகங்களில் சைகைகள் உயர்த்தப்பட்டு விட்டன
காற்றெங்கும் அழைப்புகள் நிரம்பி விட்டன
எங்கெங்கும் அவை தெரிகின்றன
அடிவானத்திலே கப்பற்பாய்களைக் காண்கின்றேன்
முயன்று, இடர் மீறி, இழப்புக் கடல்களினின்றும்
யூலிசசின் கப்பல்கள் மீண்டு வருகின்றன
பொழுது புலர்கிறது ... மனிதன் முன்னேறுகிறான் ..
அவன் பொருட்டாக நான் சத்தியம் பண்ணுவேன் -
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன்
போராடுவேன்!

(நன்றி - பலஸ்தீனக் கவிதைகள்)

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

மனைவியிடம் பேசுங்கள்...!!! - திருச்சி சிவா

- திருச்சி சிவா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்

பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதியோடு விட்டுவிட்டு, பதினேழு வயதில் என்னை மணமுடித்து, 32 ஆண்டுகள் வாழ்ந்து, 49 வயது முடியும் நேரத்தில் என்னை தனிமனிதனாக தத்தளிக்க விட்டு என் மனைவி போய் விட்டாள்.அவளுடைய முழு ஒத்துழைப்பு, வாழ விரும்பி நடத்திய போராட்டம், மருத்துவர்களின் முயற்சி, இத்தனையும் மீறி இன்னும் வளர்ந்து நிற்கும் மருத்துவத்திற்கு கட்டுபடாத நோய் ஒன்று, எல்லோரையும் தோற்கடித்து விட்டு அவளை கொண்டு போய்விட்டது.

இதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த, அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை. காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான். ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது.

வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள். பொன் நகைகளை கழட்டிக் கொடுத்து விட்டு, புன்னகையோடு மட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு.

அரசியல் வெப்பம் தகித்தபோதும், தனிமனித வாழ்வின் துன்பங்கள் சூழ்ந்தபோதும், என் அருகே ஆறுதலாய், ஆதரவாய் இருந்தவள். எந்த நிலையிலும் தலை தாழ்ந்து வாழ்ந்திட கூடாது என்கின்ற என் குணத்திற்கு இயைந்து, இணைந்து நடந்தவள். சுயமரியாதையை காப்பதில் என்னையும் தாண்டி நின்றவள். மூன்று குழந்தைகளும் பிறக்கும் நேரத்தில், இடைதேர்தல் பணி, பிரச்சாரப்பணி, போராட்டங்கள் என்று அவள் அருகே இருக்காமல் சுற்றிகொண்டு இருந்தபொது சிறிதும் முகம் சுழிக்காதவள்.

1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன ' என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை பெரியகுளம் இடைத்தேர்தலுக்கு அனுப்பிவிட்டு செப்17 குழந்தை பிறந்து, இரண்டு நாட்கள் கடந்து 19 ந்தேதி நான் பார்க்க வந்தபோது ஒரு சிறிதும் முகம் சுழிக்காமல் ஒருமணி நேரத்திலயே என்னை மீண்டும் தேர்தல் களம் அனுப்பி வைத்த கற்பனை செய்ய முடியாத குணம் கொண்ட குலமகள். இரண்டாவது குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து நேராக அப்போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ் நிலையத்தில் காவலில் இருந்த இடத்தி பிள்ளையை காட்டிவிட்டு பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போன இலட்சியவாதியின் சரியான துணை.

விருந்தோம்பல் , உபசரிப்பு, இன்முகம், என்னைக்கான வருவோர் அத்தனை பேருக்கும் அன்னபூரணி. இரவு இரண்டு மணிக்கு எழுந்து சுடச்சுட தோசையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய துவையலை ஒதுக்கி புதிதாக அரைத்து பசியாற்றி பின்னர் சுருண்டு உறங்கும் அன்பு தெய்வம், தாய் போன துயரம் தெரியாமல், தாயின் இடத்தையும் நிரப்பி, ஒருபொழுதும், எதன் பொருட்டும் முகம் வாடுவது பொறுக்காமல் துடிக்கும் உள்ளம் கொண்ட உத்தமி; பொது வாழ்க்கையில் நான் நெறி பிறழாமல் நடப்பதற்குப் பெரிதும் துணையாய், ஊக்கமாய், பக்கபலமாய், இருந்தவள்.

பண்டிகைகளும், திருநாள்களும், கோலாகலமாய், கூட்டம் கூட்டமாய் கொண்டாடுவதற்கு அவள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், காட்டும் ஆர்வமும் அளவிடற்கரியவை.
இத்தனை கருத்துக்களை அவள் மீது நான் கொண்டிருந்ததை ஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதேயில்லை. ஆண்செருக்கு என்பார்கள், நிச்சயமாக அது இல்லை, இருந்திருந்தால் இந்த உறுத்தல் வந்துருக்காது. நேரம் இல்லை என்பார்கள், பொய் 32 ஆண்டுகளில் பத்து நிமிடம் கூடவா கிடைக்காமல் போயிருக்கும். தானாகவே புரிந்து கொள்வார்கள் என்பார்கள். என்றால் மொழி எதற்கு? மொழியின் வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு? பேசுவதற்குதானே? உணர்த்துவதற்குதானே? ஒரு சொல் ஓராயிரம் புரியவைக்குமே.

காலம் கடந்து பயன்படுத்தினால் பயனற்றுப்போவது பதார்த்தங்கள் மட்டுமா? வார்த்தைகளும் தானே. சரியான நேரத்தில் வெளிபடுதாவிட்டால், 'மன்னிப்பு', 'நன்றி' , ' காதல் ' என்ற எந்த சொல்லுக்கும் உயிர் இருக்காது, விலையும் இருக்காது. இத்தனை கற்றும் கடமை தவறியதாகவே கருதுகிறேன்.

ஒருநாள் ஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், உன்னால் தான் உயர்வு பெற்றேன் என்று கூட அல்ல, உன்னால்தான் இந்த பிரச்சனை தீர்ந்தது, உன் துணைதான் இந்த துன்பமான நேரத்தை கடக்க வைத்தது. உன் ஆலோசனைதான் என் குழப்பத்திற்கு தீர்வு தந்தது. என் வேதனையை பகிர்ந்து கொண்டு என்னை இலேசாக்கினாய் என்று ஒருமுறையாவது கூறியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பாய். கோடிரூபாய் கொட்டிகொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருப்பாயே...

ஊட்டிக்குப் பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அவளின் உடல் நலம் மோசமடைததாக செய்தி கிடைத்தது வரும் வழியெல்லாம் இப்படியே யோசித்து இன்று அவளிடம் எப்படியும் உள்ளத்தை திறந்து இத்தனை நாள் சேர்த்து வைத்து இருந்ததை எல்லாம் கொட்டிவிட வேண்டும் என்று வந்து பார்த்தல் முற்றிலும் நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாள்.

நினைவு திரும்ப வாய்ப்பேயில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொன்னபிறகு, மெல்ல அவள் காதருகே குனிந்து 'மும்தாஜை' ஷாஜகான் 'தாஜ்' என்று தனிமையில் அழைத்ததைபோல தேவிகாராணியை 'தேவி' என அழைத்தபோது , மூன்றாவது அழைப்பில் மருத்துவத்தை கடந்து அதிசயமாக புருவங்கள் இரண்டும் 'என்ன' என்று கேட்பது போல மேல உயர்ந்து வலது விழியோரம் ஒரு துளி கண்ணீர் உருண்டோடியபோது நான் உடைந்துபோனேன்.

பேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும் பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது, இன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். வருகிகிறவரிடமெல்லாம் அவள் உயர்வுகளை நாளெல்லாம் உணர்கிறேன். ஒரே ஒருமுறை, அவள் கம்பீரமாய் உலவிய நாட்களில் உட்கார வைத்து பேசிஇருந்தால்.... இவர் நம்மை முழுதாக புரிந்து கொண்டாரோ, இல்லையோ என்ற குழப்பத்திலேயே போய்இருப்பாளோ என்று நாளும் துடிக்கிறேன்.

எனக்கு ஆறுதல் கூறவந்த திரு.இவிகேஎஸ். இளங்கோவன், "வருத்தப்படாதீர்கள் இதெல்லாம் அவர்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும் " என்று சமாதானப் படுத்தினார். நான் அவரிடம் கேட்டேன் , " நீங்களோ நானோ பொதுக்கூட்டத்தில் பேசுகிறபொழுதே, நம்முடைய பேச்சு சிறப்பாக இருந்ததோ இல்லையோ, என்பதை கூடத்தில் எழும் கரவொலி மூலம், முகக்குரிப்பின் மூலம், ஆதரவாளரின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், நிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறியவுடன் உடன் பயனிபவர்கள் அந்த உரை குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என ஏன் எதிர் பார்க்கிறோம். பாராட்டினால் பரவசமடைகிறோம் . அதுபற்றி எதுவுமே பேசாமல் கூட வருபவர்கள் அமைதி காத்தால் கோபம் கொள்கிறோமே ஏன்? அது போலதான் வீட்டில் இருக்கிற பெண்களும் தங்கள் செயல்களுக்கும், சேவைகளுக்கும், பணிகளுக்கும், ஒரு வார்த்தை அன்பாக , கனிவாக, பாராட்டு சொல்லாக, கணவன் சொன்னால் மகிழ்வார்கள். இதில் நாம் இழப்பது எதுவுமே இல்லையே என சொன்னேன்.

ஏழு நாட்களுக்கு மேலாகி விட்டது, அவள் படத்தை பார்க்கிறபோதெல்லாம் நெஞ்சிலே இருந்து எதோ ஒன்று கிளம்பி கண்களில் நீராய் முட்டுகிறது.காலங்கடந்து நான் உணர்கிறேன். தோழர்களே! தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை, பெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள்...

என் மனைவிக்கு என்னை உணர்த்தாமலே, என் உள்ளதை திறக்காமலே, பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி மகிழவைகாமலேயே அனுப்பி வாய்த்த கொடுமை இனி வேறெங்கும் நிகழவேண்டாம்.. வேண்டி கேட்கிறேன் உங்களுக்காகவே
உங்கள் பிள்ளைகளை,
உங்கள் பிரச்சனைகளை,
உங்கள் உறவுகளை, சுமந்து உங்கள் தேவைகளைப் புரிந்து தீர்த்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பொருள் தேடி, புகழ்தேடி நாம் வெளியே சுற்றுகிரபோதேல்லாம், காவல் தெய்வமாய் குடும்பத்தைக் காக்கும் அந்த பெண்களை புரிந்து கொண்டோம் என்பதன் அடையாளமாய், அங்கிகரமாய் நாலு வார்த்தைகள் தயவு செய்து பேசுங்கள்!

நான் சந்தித்து கேட்டவர்களில் 95 விழுக்காட்டினர் என்னைப் போலவே பேசுவதில்லை என்றே சொன்னார்கள். இது மாறட்டும்... என் மனைவியின் பிரிவு தரும் வேதனையை விட இந்த உறுத்தல் தரும் வேதனை மிக அதிகமாக இருக்கிறது. என் அனுபவம் சிலருக்காவது உதவட்டும் என்றே இதை எழுத முனைகிறேன். சில வீடுகளாவது நிம்மதியில், மகிழ்ச்சியில் நிலைக்கட்டும்.

என் வேதனை, நான்படும் துயரம்... வேறெவர்க்கும் எதிர்காலத்தில் வேண்டாம் அவளோடு வாழ்ந்த நாட்களின் இனிமையான தருணங்களின் நினைவுகளே துணையாக அந்த நினைவுகளே சுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..... இதனை இப்போது சொல்லும் நான் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் கூட வாய்விட்டு வார்த்தைகளில் ஒருமுறை கூட சொன்னதில்லை.....

# ஒவ்வொரு கணவனும் படிக்கவேண்டிய பதிவு....

முக்கியமாக அரசியல்வாதிகள் என்றால் அசால்டாக பேசிவிடும் அனைவரும் படிக்கவேண்டிய பதிவு.... ஒரு அரசியல்வாதியின் வாழ்வில் அவர்கள் இழப்பது என்னவெல்லாம் என்பதை வாழ்வின் வலியை உணர்பவர்களால் மட்டும் நன்கு புரிந்துகொள்ளமுடியும்...

ஓஷோ துளிகள்

1. உட்காருகையில் வெறுமனே உட்கார், நடக்கையில்
வெறுமனே நட, எல்லாவற்றிற்கும் மேலே நடுங்காதே.
2. ஈடுபாடில்லாமல் ஈடுபடு.
3. கோபமும், சோகமும் ஒரே சக்திதான், வன்முறையின்
வெளிப்பாடு.
4. செயலில் எண்ணங்களுக்கு பதிலாக விழிப்புணர்வை
வை.
5. தனிப்பட்ட குறிக்கோள்கள் பக்குவமடையாமையைக்
காட்டுகிறது.
6. குளிர்ந்த அன்பே கருணை
7. சமுகம் ஆணவத்தை ஊட்டுகிறது.
8. பொய்மைக்கும் நிதர்சனத்திற்கும் இடைப்பட்டது
மாயை.
9. உண்மையான சுதந்திரம் உன்னிடமிருந்து
சுதந்திரமடைவதுதான்.
10. மனமே காலம்.

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியவைகள்....!!

1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள்
முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத்
தவிர்க்க வேண்டும்.
3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ,மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில்
பதிய வைப்பதோ தவறு.
4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும்
அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும்
கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல்
துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத
நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்
அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.
6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக்கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.
7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.
இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக்கற்றுக் கொடுத்துவிடும்.
8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக
நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக்கொடுத்துவிட வேண்டும்.
9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச்செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள்
அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.
10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள்
உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப்பகுதிகளை பிறர் யாரும்
தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால்,அவசியமற்ற உதவிகளை செய்யும்
போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது
11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக்கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும்
அடங்கும்.
12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித்திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.
13. குழந்தை ஒருவரைப்பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே,அதை கவனிக்கத் தொடங்குங்கள்.கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம்.நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.
மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்;அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி!

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

அப்பன் காட்டிய வழி

அஞ்சாங் கிளாஸ் படிக்காத
அப்பா -
I.A.S. படித்த அதிகாரியை
ஆட்டிப் படைப்பதை
அருகிருந்து பார்த்த
அமைச்சரின் மகன்...
ஜனநாயகத்தின்
சக்தியை புரிந்து கொண்டு
பள்ளிப் படிப்பிற்கு - முற்றுப்
புள்ளி வைத்து விட்டு...
சோடா பாட்டில் அடித்தல்;
சைக்கிள் செயின் சுழற்றுதல்;
உருட்டுக் கட்டை உபயோகித்தல்
ஆசிட் பல்பு வீசியெறிதல் -
ஆகிய...
ஆயகலை அனைத்தையும்
ஐயந்திரிபறக் கற்று -
அடுத்த தேர்தலுக்கு
ஆயத்த மானான்!
~ கவிஞர் வாலி