ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

திருமந்திரம்

எல்லாம் சிவமயம்
தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மலை யாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே. – (திருமந்திரம்)
விளக்கம்:
தானே தன்னுடைய கடவுளாய் நிற்கின்றான். தான் வசிக்கும் மலைகளில் அவனே மலையாகவும் நிற்கின்றான். தனக்கு தானே சிவமயமாய் நிற்கின்றான். அந்த ஈசன் தனக்கு தலைவன் தானே ஆம்.
(இங்கே நிற்கும் என்று சொல்லப்படுவது அதன் தன்மையாய் உள்ளான் என எடுத்துக் கொள்ளலாம். அதாவது அவனே தலைவன், அந்த தலைவனின் தலைமைத் தன்மையும் அவனே. மலையில் இருப்பதும் அவனே, மலைக்கு அதன் தெய்வத் தன்மையை தருவதும் அவனே. சிவமயமாய் இருப்பது அவனே. அந்த சிவமயத்தன்மையும் அவனே. இதெல்லாம் எப்படி என்றால் அவன் தலைவனுக்கு தலைவனாய் இருப்பதால்).
திருச்சிற்றம்பலம்

சனி, 26 செப்டம்பர், 2015

இந்தியால் ஏன் இரண்டு தேசியமொழி கூடாது! தமிழும் தேசிய மொழியே.




இன்றும் தமிழை தேசிய மொழியாக ஆக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். அது போன்றவர்களை தமிழ் பைத்தியங்கள் என்று நமது நாட்டில் பலர் கேலி செய்கிறார்கள். என்னை பொறுத்தவரை. தமிழ் தேசிய மொழியாக வேண்டும் என்று சொல்வது எவ்வாறு ஒருவரின் தனிப்பட்ட உரிமையோ. அதே போல் அவ்வாறு சொல்பவர்களை பிறர் விமர்சிப்பதும் அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் இந்த மொழி வெறி என்பது. என்னமோ தமிழகத்தில் மட்டும் இருப்பதை போல் பலர் சொல்வது தான் சிறந்த நகைச்சுவை.
தாவுத் இப்ராஹிம் குண்டு வெய்த்து 200 பேரை கொன்றான் என்றால். கலவரங்கள் மூலம் இரண்டாயிரம் பேருக்கு மேல் கொன்ற அதி பயங்கரவாதி பால் தாக்ரே. அவன் இறந்த பொழுது. அரசாங்க மரியாதையுடன் அவன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவன் இறந்தவுடன் அரசாங்க விடுமுறை விடப்பட்டதை விமர்சித்து ஒரு பெண் மருத்துவர் பதிவு போட்டு இருந்தார். அவ்வாறு பதிவு போட்ட அந்த பெண் மருத்துவரின் வீடு மருத்துவமனை மட்டும் அல்லாமல். அந்த பதிவுக்கு லைக் போட்ட இருவரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதில் உச்சகட்ட கொடுமை என்னவென்றால். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கைது செய்யபட்டார்கள். தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை. இரவோடு இரவாக பத்தாயிரம் வெளி மாநிலத்தவர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு மும்பையை விட்டு ஓடியதற்கு காரணம் என்ன? மராத்திய வெறி.
மா சுப்ரமண்யம் சென்னை மேயராக இருந்த பொழுது. கடை பலகைகளின் பெயர்கள். எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கூடுதலாக தமிழில் இருக்க வேண்டும். அவ்வாறு ஏதேனும் ஒரு கடையில் தமிழில் பெயர் பலகை இல்லையென்றால். அந்த கடையின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று ஒரு சட்டம் போட்டார். எனக்கு மா சுப்ரமண்யம் பிடித்த அரசியல்வாதி அல்ல. திமுக எனக்கு பிடித்த கட்சியல்ல என்றாலும். மா சுப்ரமண்யத்தின் இந்த சட்டம் பாராட்டுதலுக்கு உரியதே. ஆனால் இதை தமிழ் பாசிசம் என்று சிலர் விமர்சித்தார்கள்.
சென்னையில் கன்னட, தெலுங்கு, மலையாள பெயர்களில் மட்டுமே உள்ள பலகைகள் சில நமது கண்ணில் படுகிறது. மைசூரில் தமிழ் பலகையோடு மட்டும் ஒரு கடை இருந்தால். அந்த கடையின் நிலமை என்ன? ஆகும்.
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மைசூர் சென்றார். அவருக்கு கன்னடம் தெரியாது. ஒரு மளிகை கடையில் அவர் சாமான்களை தமிழில் கேட்ட பொழுது அந்த கடைகாரர். கன்னடத்தில் ஏதோ அவரிடம் கோபமாக பேசி அனுப்பி விட்டார். மறுநாள். அந்த தமிழர். கன்னட மொழி தெரிந்த ஒரு நண்பருடன். அதே கடைக்கு சென்றார். அப்பொழுது. நேற்று கோபமாக பேசிய அதே கடைகாரர். மிக சிரித்த முகத்துடன் தமிழில் வாங்க, வணக்கம். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
அதை பார்த்து மிக ஆச்சர்யம் அடைந்த என் நண்பர். நேற்று ஏன்? என்னிடம் அவ்ளவு கோபமாக பேசினீர்கள் என்று கேட்க்க. அந்த கடைகாரர். நானும் தமிழன் தாங்க. நான் கோபத்தினால் அவ்வாறு பேசவில்லை. பயத்தினால் தான் பேசினேன். நீங்கள் என் கடைக்கு நேற்று வந்த பொழுது. கன்னட மொழி இயக்கங்கள், வட்டாள் நாகராஜ் போன்ற தரம் கெட்ட அரசியல்வாதிகளின் அடிபொடிகள். உங்கள் அருகில் தான் நின்று கொண்டு இருந்தார்கள். நான் தமிழில் பேசியிருந்தால். அந்த வெறியர்கள் என்னை மட்டுமல்ல. என் கடையையே அடித்து நாசம் செய்து இருப்பார்கள் என்று மரண பீதியோடு அவர் சொன்னார்.
அது மட்டுமா. இங்கு உள்ள தனி மனிதனும் சரி. நமது தமிழ் சினிமா நடிகர்களும் சரி. உங்களுக்கு எந்த நடிகர் பிடிக்கும் என்று கேட்டால். ப்ருச்லீ, ஜெட்லி, ஜாக்கி ஜான் என்று நாம் யாரை வேண்டுமானாலும் சொல்லலாம். அவ்வாறு சொன்னால். நம்மை அடிக்க மாட்டார்கள். ஆனால்? கன்னட நடிகர் சாய்குமாரை ஒருமுறை. கன்னட வெறி மீடியாக்கள் பேட்டி எடுத்த பொழுது உங்களுக்கு எந்த ஹீரோவை பிடிக்கும் என்று கேட்டதற்கு. எனக்கு சிவாஜி கணேசனை ரொம்ப பிடிக்கும் என்று சொன்னார். இதுல என்னங்க தப்பு இருக்கு. உடனே மைக் பிடிச்சி நின்னுண்டு இருந்த சில பயலுங்க. நீ எப்டி சிவாஜி என்கிற தமிழன் பெயரை சொல்லலாம். ராஜ்குமாரை தான் பிடிக்கும்னு சொல்லுனு அந்த மைக்காலயே அவரை அடி, அடினு அடிச்சாங்க. அந்த சாய்குமார் தான். இப்பொழுது வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் இன்று, நேற்று, நாளை படத்தில் டெரர் வில்லனாக நடித்தவர்.
இதற்க்கு முன் பிரபு தேவா கன்னடத்தில் ஒரு படம் எடுத்த பொழுது. அதில் 1,2 தமிழ் வார்த்தைகள் இருந்தது என்னும் ஒரே காரணத்திற்க்காக. அந்த படத்துக்கு எதிராக போராடிய போராளி குடும்பம் தான் ராஜ்குமார் குடும்பம். வீரப்பன் ராஜ்குமாரை தூக்கினது தப்பே இல்லை.
அணைத்து மொழிகளிலுமே. நல்லவர்கள், பறந்த மனப்பான்மை உடையவர்கள் பலர் இருக்கிறார்கள். இல்லையென்று சொல்லவில்லை. கன்னட தேசத்தில் கூட. இப்பொழுது வெறி தனம் குறைந்து கொண்டு வருகிறது. ஆனால்? தமிழ்நாட்டில் தான்
இந்தியாவிலேயே அதிக மொழி வெறியர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வது சிறு புள்ளை தனமான விஷயம். எவ்ளவோ பேர் மற்ற மாநிலங்களில் இருந்து வந்து இங்கு வேலை பார்க்கிறார்கள். ரயில், பஸ் முதலியவற்றில் பயணம் செய்யும் பொழுது. அவர்கள் மொழி பாடல்களை கொரியன் செட்டில் அலற விட்டு அதை கேட்கிறார்கள். இந்த தமிழ் நாட்டில் தமிழர்கள், தமிழர்கள் அல்லாதவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான சுதந்திரம். ஆனால்? வெளி மாநிலங்களில் உள்ள தமிழர்களுக்கு அது இல்லை. சுதந்திரம் கிடைத்ததில் இருந்து. இன்றுவரை. 2,3 பேரை தவிர. நம்மை ஆண்ட அணைத்து முதல்வர்களுமே. தமிழ் அல்லாத வேறு மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்கள்.
தமிழர்கள் அல்லாதோர் நமது மாநிலத்தை ஆளக் கூடாது என்று சொல்ல வரவில்லை. நான் ஒன்றும் சைமான் குரூப் அல்ல. நல்லவர்கள். பறந்த மனப்பான்மை உடையவர்கள் எந்த மொழியினராக இருந்தாலும். அத்தகைய ஒரு தலைவன், தலைவியின் ஆட்சி தான். அடுத்து தமிழகத்துக்கு தேவை.

சரி. தேசிய மொழி சமாசாரத்துக்கு நாம் வருவோம்.
ஏறத்தாழ நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழே. அதனால் மற்ற மொழிகளை விட தமிழுக்கே தேசிய மொழியாகும் அணைத்து தகுதிகளும் இருக்கிறது என்று பாராளுமன்றத்தில் வெடித்தவர். மராத்தியரான அண்ணல் அம்பேத்கர். ஆனால் அவரது சிலைக்கு செருப்பு மாலை போடாத ஆதிக்க ஜாதி கிராமங்களே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம். சரி அது ஒருபக்கம் இருக்கட்டும். நமது நாட்டிற்கு தேசிய ஜாதி, தேசிய மதம் என்று இல்லாத பொழுது. தேசிய மொழி என்று ஒன்று ஏன்? இருக்க வேண்டும்.
ஒரு நாட்டின் தேசிய சின்னங்களாக இருப்பவை. பழமை, பாரம்பர்யத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும். மயிலை விட நமது நாட்டில் காக்கா அதிகம். ஏன்? நமது நாட்டின் தேசிய பறவையாக காக்கா இல்லை. நமது நாட்டில் ஹிந்தியை அதிக மக்கள் பேசுகிறார்கள் என்பதால் மட்டும். அது நமது தேசிய மொழிக்கு தகுதியான மொழியாகி விடாது. உலகின் மிக பழமையான 6 மொழிகளில் 2 மொழி நமது நாட்டில் தோன்றியது. தமிழ், சமிஸ்கிருதம் இரண்டுமே நமது நாட்டின் தேசிய மொழிகளாகும் தகுதியுடைய செம்மொழிகள். கனடா, அல்ஜீரியா போன்ற நாடுகளில் 2 தேசிய மொழிகள் இல்லையா. பெல்ஜியம், சைனா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் மூன்று தேசிய மொழிகள் இல்லையா. தமிழும் இந்தியாவின் ஒரு தேசிய மொழியாக ஏன்? ஆக கூடாது.
மைசூர்க்கு சென்ற என் நண்பரை பற்றி சொன்னேன் அல்லவா. அவர் அங்கு ஒரு கோவிலுக்கு சென்றார். கோவில் அர்ச்சகர் பிரசாதத்தை கையில் வெய்த்து கொண்டு அந்த தமிழரை பார்த்து. நீர் பேக்கா என்று கேட்டார். பலர் முன்னிலையில் அவ்வாறு கேட்டவுடன். அந்த நண்பர் முதலில் அதை அவமானமாக கருதினார். அருகில் இருந்த ஒரு அர்ச்சகர். அந்த தமிழர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை புரிந்து கொண்டு. கன்னட மொழியில் பேக்கு என்றால். வேணுமா என்று அர்த்தம் என்று சொன்னவுடன் என் நண்பர் சிரித்து விட்டார்.
உலகிலேயே அதிக மொழி வெறி உடையவர்கள் தமிழர்கள் என்று நினைப்போர் தமிழ் பேக்குகள்.

இப்படிக்கு காக்கா& பேக்கா கோ.

************
முகநூல் நண்பர் H V krishnaprasad எழுதி இருக்கும் இந்த கட்டூரையைப் படித்துப்பருங்கள் சிறப்பாக இருக்கிறது. இதன் மூலம் நமது மொழி உணர்வு.. வெறி இவற்றிற்கான வேறுபாட்டை நாம் உணரலாம். நமது தமிழின் சிறப்பு பற்றியும் உணரலாம். பாராட்டுக்கள் கிருஷ்ணப்பிரஷாத்.

விருப்பு வெறுப்பிறகு அப்பாற்பட்டு சொல்ல வேண்டுமானால் அன்றைக்கு நமது பாராளுமன்றத்தில் தமிழின் தொண்மையை உரைத்து தேசிய மொழி ஆகும் தகுதி ஒரு மொழிக்கு உண்டென்றால் அது நமது தமிழ் மொழிக்கு தான் உண்டு என்று யாரும் சொல்வதற்கு முன் முழங்கிய மேதை கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஆவார்கள் என்பதையும் இதை இந்திய வரலாறு தன்னகத்தே பதிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

- முஹையத்தீன் பாட்ஷா

திங்கள், 21 செப்டம்பர், 2015

‪எலி‬, ‪பல்லி‬, ‪கரப்பான்‬ பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்!!!


கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் பல்லி, கரப்பான் பூச்சி, கொசு, எலி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம். கடைகளில் விற்கும் கண்ட பொருட்களையும் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம்.
1 எலி
எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.
2 கரப்பான் பூச்சி
கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம். அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.
3 ஈ
சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும். அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள். இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள். இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.
வேறு சில வழிகள்
4 மூட்டைப்பூச்சி
மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்துவிடும்
5 பல்லி
உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா? அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள். இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.
6 கொசுக்கள்
கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும். மேலும் பல கொசுவிரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள். இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

கலாம் பற்றிய செய்திகள் சொல்கிறார் அவர் அண்ணன் முஹம்மது மீரான் லெப்பை


மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமை இழந்த துயரம் ராமேஸ்வரத்தைவிட்டு இன்னும் நீங்கவில்லை. கடலில் மிதந்துகொண்டிருந்த அந்த சின்னஞ்சிறிய தீவு, ஜூலை 27-ஆம் தேதியிலிருந்து கண்ணீரில்தான் மிதந்துகொண்டிருக்கிறது. அங்கு, மசூதித் தெருவில் இருக்கும் கலாமின் இல்லம் இன்னும் துக்கம்கப்பிய நிலையில்தான் இருக்கிறது. கலாமின் அபிமானிகள் நாடுமுழுவதிலுமிருந்து அவரது இல்லத்திற்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். மனமொடிந்து போயிருக்கும் கலாமின் 98 வயது அண்ணன், முகமது மீரான் லெப்பை மரைக்காயர், கலாமின் நினைவாகவே இருக்கிறார். சுகர், பிரஷர் என்று எந்தக் கோளாறும் இல்லாமல், நல்ல தெளிவோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கும் அவர், மனரீதியாக பலமாக பாதிக்கப் பட்டிருக்கிறார். நம் வாசகர்களுக்காக அவரிடம் சில கேள்விகளை நாம் வைத்தோம். கேட்கும் திறன் குறைந்திருக்கும் மரைக்காயர் பதில்தர, அவரின் மகள் முனைவர் நசீமாவும் பேரன் சேக் சலீமும் உதவினார்கள்.

அய்யா எப்படி இருக்கிறீங்க?

ஏதோ இருக்கேன். ஒரே நாள்ல எல்லாத்தை யும் இழந்துட்டதுபோல இருக்கேன். எனக்கு 98 வயசாகுது. கலாம் என்னைவிட 14 வயசு சின்னவர். அவருக்கு இப்படி ஆகியிருக்கக்கூடாது. ரொம்ப நல்லவர். கடின உழைப்பாளி. ஒரு ஈ, எறும்புக்குக்கூட தீங்கு நினைக்காதவர். இந்தியாவே பெருமைப்படும்படி இருந்தார். ஒரு மகான்போல வாழ்ந்தார். அவரைப் பறிகொடுத்துட்டு நிக்கிறோம்.

உங்களைப் பத்தி சொல்லுங்கய்யா?

பெருசா சொல்லிக்க ஒண்ணுமில்ல. நான் 5 ஆம் வகுப்புவரைதான் படிச்சேன். கலாம் படிப்பில் ரொம்ப ஆர்வமா இருந்ததால், அவனைப் படிக்கவச்சோம். மரக்கலம் (படகு) விடுறதுதான் எங்க குடும்பத் தொழில். நான் ராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் ’பாசஞ்சர் போட் ’விட்டுக்கிட்டி ருந்தேன். 64-ஆம் வருஷ புயலில் தனுஷ்கோடி உட்பட எல்லாம் போச்சு. அப்ப பாம்பன் பாலத்தில் ஓடிய ஒரு ரயில் கடலோட போச்சு. இந்தப் பகுதி மக்களோட தலையெழுத்தையே அந்தப் புயல் மாத்திடிச்சி. புயலுக்கு அப்புறம், தலைமன்னாருக்கு படகு விடமுடியலை. அதனால் படகுகளை மீன்பிடி படகா மாத்தி, வாடகைக்கு விட்டேன். தோப்புத் தொறவை முழுசா பார்த்துக் கிட்டிருந்தேன். பெரிய தென்னந்தோப்பு இருக்கு. அதில் ஓரளவு வருமானம். இதுக்கிடையில் ராமேஸ்வரம் பஞ்சாயத்துத் தலைவரா தேர்தல்ல நின்னு ஜெயிச்சேன். முடிஞ்சதை ஊருக்கு செஞ்சேன். வயசான பிறகு ஓஞ்சுபோய் உட்கார்ந்துட்டேன். அதுக்குப் பிறகு குடும்பத்தை கலாம் கையில் எடுத்துக் கிட்டான்.

உங்க குடும்பத்தைப் பத்தி?

என் மனைவி பேரு அகமது கனிஅம்மாள். மவுத் (இறப்பு) ஆயிட்டார். எங்களுக்கு அஞ்சு பொண்ணுங்க. ரெண்டு மகன்கள். அதில் என் மூத்த மகன் சாகுல் ஹமீதும் மகள் தங்கராணியும்கூட மவுத் ஆயிட்டாங்க. மத்தவங்க இங்க ராமேஸ்வரத்திலேயே இருக்காங்க. ஆளாளுக்கு ஒரு தொழிலை வச்சி பொழப்பை நடத்தறாங்க. பேரப் பிள்ளைக, கொள்ளுப்பேரப் பிள்ளை களோட பெரிய குடும்பமா வாழ்ந்துக் கிட்டிருக்கோம். என்னை என் மகள் நசீமாவும் மகன் ஜெய்னுலாபுதீனும் நல்லபடியா பார்த்துக்கறாங்க.

கலாம் சின்னவயசில் எப்படி?

கலாம் என்னை எப்பவும் காக்கான்னு கூப்பிடுவார். பெரியவங் களை இப்படிக் கூப்பிடுறது இந்தவூர் பழக்கம். என் மனைவி அகமது கனியை மச்சின்னு கூப்பிடுவார். தன் அண்ணிமேல் ரொம்ப மரியாதை யாவும் அன்பாவும் இருப்பார் கலாம். கலாமுக்கு அப்ப இருட்டுன்னா பயம். கொல்லைப்புறம் போகனும்னாக்கூட, வீட்டில் யாரையாவது துணைக்கு அழைச்சிக்கிட்டுப் போவார்.

பூரணம் வச்ச போலி, பயித்தம் லட்டுன்னா கலாமுக்கு உசுரு. வீட்டில் எங்க அம்மா லட்டு பண்ணி ஏனத் தில் போட்டு பரணியில் வச்சிருப் பாங்க. எங்க அம்மா தூங்கிக்கிட்டி ருந்தாக்கூட ஸ்டூலைப் போட்டு ஏறி, லட்டை எடுத்து ஆசையா சாப்பிடு வார். எங்க அம்மா எழுந்ததும், உங்கிட்ட சொல்லாம லட்டை எடுத்துச் சாப்பிட்டுட்டேம்மான்னு சொல்லிடுவார். பொய் பேசமாட்டார். படிப்பில் கெட்டிக்காரர். கொஞ்சம் குறும்புக்காரர். சும்மா இருக்கமாட்டார். துறுதுறுன்னு இருப்பார். படிக்கும்போதே பிறருக்கு உபகாரங்கள் பண்ணுவார். ஒரு தடவை படிச்சிக்கிட்டிருந்த கலாமைக் காணலை. பார்த்தா, பக்கத்தில் இருந்தவங்க சொன்னாங்கன்னு, டீக்கடைக்கு போய் அவங்களுக்கு தேத்தண்ணி வாங்கிட்டு வந்துக்கிட் டிருந்தார். வீட்டுக்கு வந்ததும், இதான் படிக்கிற லட்சணமான்னு முதுகில வச்சேன். இப்படி அவர் அருமை தெரியாம நிறையதடவை அடிச்சிருக் கேன். வாத்தியார்கள்ட்ட அவருக்கு பக்தி அதிகம்.

சின்ன வயசிலேயே, பைலட் ஆவப் போறேன், ஏரோப்பிளேன்ல பறக்கப் போறேன்னு சொல்லிக்கிட்டு இருப் பார். அப்பவே வித்தியாசமா இருந் தார். எங்க ஊர்ல கலாம்தான் முதல் பட்டதாரி.

உங்களுக்கும் கலாமுக்கும் கிடைச்ச அப்பா- அம்மாவைப் பத்தி சொல்லுங்க?

ரொம்ப அருமையானவங்க. நாங்க எங்க அப்பா- அம்மாமேல பய பக்தியா இருப்போம். அப்பா ஜெய்னுலாபுதீன் பாக்க, ஆள் நெடுநெடுன்னு சிவப்பா, கம்பீரமா இருப்பார். தர்மசீலர். அதேசமயம் கொஞ்சம் கோபக்காரர். தப்பு செஞ்சா எங்களை பின்னி எடுத்துடு வார். ஊர்த் தலைவரா இருந்தார். மும்மத ஜனங்களும் அவரை ஊர்த் தலைவரா ஏத்துக்கிட்டாங்க. எங்க ஊர்ல அப்ப கோர்ட் கிடையாது. அவர்தான் கோர்ட். குடும்பப் பிரச்சினையில் இருந்து வாய்க்கா வரப்புப் பிரச்சினை வரை, அவர் தீர்த்துவச்சிடுவார். பாசஞ்சர் படகும் அவருக்கு ஓடுச்சு. ஒருதரம், ராமேஸ்வரம் கோயில் உற்சவம். படகில் வந்துக்கிட்டிருந்தப்ப, திடீர்ன்னு படகு கவிழ்ந்துபோய், சாமி சிலைகள் கடல்ல விழுந்துடுச்சி. அப்ப எங்க அப்பாவும் அவர் ஆளுங்களும்தான் கடல்ல குதிச்சி, சாமி சிலைகளை தேடியெடுத்துக் கொடுத்தாங்க. உடனே கோயில் அதிகாரிகள், இனி உங்க படகில்தான் சாமி வரும்ன்னு சொல்லிட்டாங்க. அதிலிருந்து கோயில் உற்சவம் எங்க அப்பா படகில் நடக்க ஆரம்பிச்சிது.

கலாம் ஜனாதிபதி ஆவார் என அதற்கு முன்பு நீங்கள் நினைத்துப் பார்த்தது உண்டா?

இல்லை. ஆனா ரொம்பப் பெரிய ஆளா வருவார்ன்னு மட்டும் நெனைச்சேன். ஜனாதிபதிக்கு வாஜ்பாய் நிக்கச் சொன்னப்ப, ரெண்டுமணி நேரம் யோசிக்க டைம் வாங்கினார். அப்ப என்கிட்டயும் போன் பண்ணி, இதப் போல வாஜ்பாய் சொல்றார். ஜனாதிபதிக்கு நிக்கலாமானு கேட்டார். சந்தோசமா இருந்துச்சு. உன்னைத்தேடி பொறுப்பு வரும்போது தைரியமா ஏத்துக்க. அதைவச்சி நாட்டுக்கு என்ன பண்ணனுமோ பண்ணு. நீ எங்க போனாலும் அங்க நீ உன்னை நிரூபின்னு வாழ்த்தினேன்.

கலாமுக்குத் திருமணம் பண்ணிவைக்க நீங்கள் யாரும் முயற்சி எடுக்கவில்லையா?

எவ்வளவோ முயற்சி எடுத்தோம். மதுரை, அழகன்குளம் எல்லாம் போய் கலாமுக்குப் பெண் பார்த்தோம். அதோட கலாம் நிறைய படிச்சிருந்ததால, நிறையபேர் பெண் கொடுக்க முன்வந்தாங்க. சில பெண்களை எங்களுக்குப் பிடிச்சிப்போய், நீ ஒருதரம் நேர்லவந்து பார்த்துட்டுப் போய்யான்னு கலாமைக் கூப்பிட்டிருக்கோம். அதோ வர்றேன் இதோ வர்றேன்னு சொல்வார். வரவேமாட்டார். இப்படியே நாளோடிப்போச்சு. கடைசியா என் தம்பி ஜெய்னுலாபுதீனுக்கும் ரெண்டு தங்கை களுக்கும் சேர்த்து ஒரே நாளில் நிக்காஹ் பண்ணிவச்சோம். அப்பவும் கலாமுக்கும் சேர்த்து நடத்த திட்டம்போட்டோம். ஒண்ணும் நடக்கலை. அந்தசமயம் ஜப்பான் போயிருந்த கலாம், கல்யாணப் பரிசா ஜப்பான் புடவைகளை வாங்கிவந்திருந்தார்.

கலாம் மாதிரி உங்க வீட்டில் எல்லாருமே சைவம்தானா? அவருக்குப் பிடிச்ச உணவு என்ன?

நாங்க எல்லாம் அசைவம் சாப்பிடுவோம். கலாமும் எங்க மகள் நசீமாவும் சைவம். அவருக்கு சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர், பொறியல் இதுதான் பிடிக்கும். இதைத்தான் அவர் விரும்பிச் சாப்பிடுவார். அவரோட வர்ற ஆளுங்கள்ல அசைவம் சாப்பிடறவங்க இருந்தா, அவங்களுக்குத் தனியா அசைவச் சாப்பாடு ரெடி பண்ணச்சொல்வேன். அவர் இங்க வரும்போதேல்லாம் வீட்டுக்கு பக்ரீத், ரம்ஜான் வந்தமாதிரி இருக்கும். எங்க சொந்த பந்தங்கள் எல்லாரும் ஒண்ணா கூடுவாங்க. அன்னைக்கு எல்லாருக்கும் இங்க சைவச் சாப்பாடுதான்.

கலாம் உங்களுக்கு எதாவது வாங்கிட்டு வருவாரா?

சால்வை, துண்டு, ட்ரெஸ்ன்னு பலதும் வாங்கிட்டு வருவார். பழங்கள் நிறைய கொண்டுவந்து சாப்பிடச் சொல்வார். குழந்தைகளுக்கு பிஸ்கட், சாக்லெட்டுன்னு அள்ளிக் கிட்டு வருவார். எல்லாம் இப்ப கனவா ஆய்டிச்சி.

கடைசியாக எப்போது ராமேஸ்வரம் வந்தார்? அப்போது என்ன சொன் னார்?
(பேரன் சேக் சலீமிடம் தேதி, நேரத்தைக் கேட்டுக் கொண்டு)

பிப்ரவரி 3-ஆம் தேதி மதுரைக்குப் போய்ட்டு காலைல பதினொன்னரை மணிக்கு கலாம் வந்தார். அன்பா கட்டித்தழுவி எனக்கு ஒரு பெரிய சால்வை போட் டார். ரெண்டு வருசத்தில் உங்களுக்கு நூறுவயசு ஆகுது. அதை நான் சிறப்பா கொண்டாட னும்ன்னு ஆசைப்படறேன். என் ஆசை நிறைவேற துவா’ பண்ணுங்கன்னு சொன்னார். கலாமை பக்கத்தில் உட்காரவச்சி, நான் துவா செஞ்சேன். ரொம்ப சந்தோசமா இருந் தார். நங்க ரெண்டுபேரும் பேசிக்கிட்டே என் அறை யில் உட்கார்ந்து சாப்பிட் டோம். அப்புறம் வந்த அத்தனை உறவுக்காரங் களையும் அழைத்து நலம் விசாரிச்சார். பிள்ளை கள்ட்ட படிப்பைப் பத்தி விசாரிச்சார். என் மகன் ஜெய்னுலாபுதீனையும் மகள் நசீமாவையும் கூப்பிட்டு, காக்காவை நல்லா பாத்துக் கங்க. அவர் ஆரோக்கியமா நடமாடறதை பாக்குறப்ப சந்தோசமா இருக்கு. அவரை தினமும் வாக்கிங் கூட்டிட்டுப் போங்க. செரிக்கிற மாதிரியான உணவைக் கொடுங்க. நீங்க விரும்பறதைக் கொடுக்காம, அவர் விரும்பறதைக் கொடுங்கன்னு அக்கறை யாச் சொன்னார். சாயந் தரம் நாலரைக்குப் புறப்பட்டுட்டார். அதான் கடைசி சந்திப்புன்னு தெரியாமப் போய்டுச்சி. என் நூறாவது வயசைக் கொண்டாட ஆசைப்பட்டார். அந்த ஆசை நிறைவேறாத ஆசையா ஆய்டிச்சி. மவுத்துக்கு மொதநாள் போன்ல அன்பா என் மகன்கிட்டயும் மகள்கிட்டவும், காக்கா என்ன சாப்பிட்டார். எப்படி இருக்கார். இன்னைக்கு வீட்ல என்ன மெனுன்னு விசாரிச்சார். கூடிய சீக்கிரம் ராமேஸ்வரம் வருவேன்னு சொன்னார். இப்படி உயிரில்லாம வருவார்ன்னு நினைச்சிக்கூட பார்க்கலை. (அவரது கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர்).

கலாம், இந்த ராமேஸ்வரத்துக்கு எதையாவது செய்திருக்கிறாரா?

நூறுவருட பாம்பன் பாலத்தைப் புதுப்பிச்சிக் கொடுத்தார். 25 லட்சத்தில் லைப்ரரி கொண்டு வந்தார். மீனவக் குடும்பங்களுக்கு சோலார் லைட்டுகளை ஏற்பாடுசெஞ்சார். இப்படி முடிஞ் சதை செஞ்சிருக்கார்.

கலாம் நினைவிடம் பற்றி அதிகாரிகள் உங்ககிட்ட பேசினாங்களா?

இல்லை. (ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் கலாமை அடக்கம் செஞ்ச இடம் ஒரு ஏக்கர் 63 சென்ட் பரப்பளவு கொண்டது) அதிகாரிங்க அடக்க ஸ்தலத்தை அளந்துட்டுப் போயிருக்காங்க. எங்க கிட்ட நினைவிடத்தை எப்படி கட்ட போறாங் கன்னு யாரும் சொல்லலை. 40 நாள் துக்கம் கழிச்சிதான் இதுபத்திக் கேக்கப்போறோம். அடக்கஸ்தலம் வெறும் சமாதி மேடையா இருக்கக்கூடாது. அங்க மாணவர்களுக்குப் பயனுள் ளதை உருவாக்கனும். (அங்கு மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வு மையம் அமைக்கனும் என்பது எங்க எல்லோரின் விருப்பமாகும் என்றார் பேரன் சேக் சலீம்) கலாமுக்கு மாணவர்கள்மேல் பிரியம் ஜாஸ்தி. அதனால் இறந்த பிறகும் கலாம், மாணவர்களுக்கு மத்தியிலேயே இருக்கனும்.

தன்னம்பிக்கை நாயகரான கலாம் கலங்கி நீங்கள் பார்த்ததுண்டா?

எங்க அம்மா, வாப்பா மவுத்தில் அவர் கதறி அழுததைப் பார்த்தோம். எங்க அப்பா ஜெய்னு லாபுதீன், உடம்பு சரியில்லாம இருந்தார். நாட்டு வைத்தியம்தான் பார்த்துக்குவார். ஆஸ்பத்திரிக்குப் போகமாட்டார். 72 வாக்கில், ஒருநாள் அவர் மதிய சாப்பாடு சாப்பிடாம படுத்துட்டார். நாங்க சொல்லியும் அவர் சாப்பிடலை. அப்ப வைத்தியர் அவர் நாடியைப் பிடிச்சிப் பார்த்துவிட்டு, பல்ஸ் ரொம்ப வீக்கா ஆய்டிச்சின்னு சொன்னார். டாக்டர்கள் வந்து பார்த்த கொஞ்ச நேரத்தில் உயிர் போயிடுச்சி. உடனே திருவனந்தபுரத்தில் வேலை பார்த்துக்கிட்டிருந்த கலாமுக்கு டரங்கால் புக் பண்ணித் தகவல் கொடுத்தோம். ஊருக்குவந்த கலாம், "வாப்பா'ன்டு கதறி அழுதுக்கிட்டே வந்தார். ரொம்பக் கலங்கிப் போயிட்டார். எங்கம்மா அடுத்த ஒரு வருசத்தில் ஒரு அதிகாலையில் மவுத் ஆனாங்க. கலாமுக்குத் தகவல் கொடுத்தோம். மிட்நைட் 12 மணிக்கு வந்தார். பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச் சத்தில் காத்திருந்தோம். அப்பவும் அழுதுபுரண் டார். கொஞ்ச நேரத்தில் அடக்கம் பண்ணியாச்சு. இவங்களோட கடைசி நேரத்தில் பக்கத்தில் இருக்க முடியலையேங்கிற ஏக்கம் கலாமுக்கு கடைசிவரை இருந்தது.

கலாம் என்றால்...?

தன்னம்பிக்கை, தைரியம், உழைப்பு, நேர்மை, வெற்றி.

சனி, 19 செப்டம்பர், 2015

சுத்தமான தங்கமா..?


முன்பெல்லாம் தங்க நகைகளை நம்பிக்கையின் அடிப்படையில் நன்கு பழகிய கடைகளில்தான் வாங்கினார்கள். ஆனால், இன்றோ ஹால்மார்க் முத்திரை வந்துவிட்டது. இந்த முத்திரை பொறித்த நகைகளை வாங்கினால் போதும், தங்கத்தின் தரத்திற்கு கியாரண்டி. இந்த ஹால்மார்க் முத்திரை எவ்வாறு வழங்கப்படுகிறது?

ஹால்மார்க்!

சுத்தமான தங்கம் என்பதன் அடையாளமாக காட்டப் படுவதுதான் ஹால்மார்க் முத்திரை. தங்கத்தில் 24, 22, 18, 14, 10, 9, 8 கேரட்கள்உள்ளன. இதில் 24, 22, 18 கேரட் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. 24 கேரட் என்பது 99.9% சுத்தமான தங்கம். முதலீட்டு அடிப்படையில் தங்கக் கட்டிகளாக வாங்குகிறவர்கள் இந்த 24 கேரட் தங்கத்தையே வாங்குவார்கள். இந்த 24 கேரட் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கத்தைவிட சற்று கூடுதலாக இருக்கும். இந்த சுத்த தங்கத்தைக் கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது என்பதால், சில உலோகங்களைச் சேர்த்து 22 கேரட் மற்றும் 18 கேரட்களில் நகை செய்கிறார்கள். இந்த நகையைதான் ஆபரணத் தங்கம் என்கிறோம்.

அதிக அளவில் உலோகத்தைக் கலக்கும்போது தங்கத்தின் சுத்தத் தன்மை குறைந்துவிடுகிறது. வாங்கும் போது 22 கேரட்டுக்கான விலை கொடுத்து வாங்கிவிட்டு, விற்கும்போது அது வெறும் 18 கேரட் தங்கம்தான் என்பது தெரியவரும்போது வாங்கியவர்கள் நொந்துபோய் விடுகிறார்கள்.


யார் வழங்குகிறார்கள்?


இந்திய அரசின் தரக்கட்டுப்பாடு அமைப்பான 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.) என்கிற அமைப்புதான் இந்த ஹால்மார்க் முத்திரையைத் தருகிறது. ஹால்மார்க் முத்திரை வழங்கும் டீலர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். இந்த முத்திரை வழங்குவதற்கு பி.ஐ.எஸ். அமைப்பு இவர்களுக்கு லைசென்ஸ் தந்திருக்கிறது. இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும்.


தர பரிசோதனை!


தங்களுக்குத் தேவையான நகைகளை பொற்கொல்லர்களை வைத்து செய்வது தான் நகைக் கடைகளின் முந்தைய வழக்கம். ஆனால், இப்போதோ வளையலுக்கு ஒருவர், நெக்லஸுக்கு ஒருவர், மோதிரத் திற்கு இன்னொருவர் என பலரிடமிருந்து நகைகளை மொத்தமாகச் செய்து, அதை வாங்கி விற்கின்றனர் நகைக் கடைக்காரர்கள். இப்படிச் செய்யப்படும் நகைகளை ஹால்மார்க் டீலர்களிடம் கொடுத்து நகையின் தரத்தைப் பரிசோதிக்கின்றனர்.
இப்படி தரம் பரிசோதிக் கப்பட்ட நகைகள் 22 கேரட் எனில் 91.6% ஹால்மார்க் முத்திரையைத் தருகின்றனர். 18 கேரட் நகை எனில் 75% ஹால்மார்க் முத்திரை தருவார்கள். எனவே, ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்ப்பதோடு, அது 91.6 சதவிகிதமா, இல்லை 75 சதவிகிதமா என கட்டாயம் பார்ப்பது அவசியம்.


முத்திரையில் ஏமாற்றினால்..?


நகை வாங்கும்போது 22 கேரட் என வாங்கிவிட்டு, விற்கப் போகும்போது 18 கேரட் என தெரிய வந்தால் உடனடியாக பி.ஐ.எஸ். அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த அலுவலகம் இருக்கிறது. தரம் குறைவாக இருக்கும் நகையை அவர்கள் பரிசோதித்து புகார் உறுதி செய்யப்பட்டால் அந்த ஹால்மார்க் முத்திரை வழங்கிய டீலரின் லைசென்ஸை உடனடியாக ரத்து செய்வார்கள்.


எந்த கடையில் நகை வாங்கினோமோ அந்தக் கடை கண்டிப்பாக நஷ்டஈடு வழங்கியாக வேண்டும். ஒருவேளை நஷ்ட ஈடு தர மறுத்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். சின்ன மோதிரமோ, காதில் அணியும் தோடோ அனைத்து நகைகளிலும் இந்த ஹால்மார்க் முத்திரை இருக்கும். ஹால்மார்க் முத்திரை வழங்கும் ஒவ்வொரு டீலருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளத்துடன் கூடிய முத்திரை இருக்கும். இந்த முத்திரையை வைத்து அதை வழங்கிய டீலரை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.


ஹால்மார்க் முத்திரை என்பதை ஏதோ ஐ.எஸ்.ஐ. முத்திரை போல பொதுவான ஒரு விஷயமாக மக்கள் நினைக் கிறார்கள். தரத்திற்கேற்ப இந்த முத்திரையும் மாறும் என்பதில் கவனம் கொண்டால், நகை வாங்கும்போது நாம் ஏமாற வாய்ப்பில்லை என்பது நிச்சயம்.

புதன், 16 செப்டம்பர், 2015

அவுரங்கசீப் VS அரவிந்தர் நீலகண்டர்

by ஹமீது ஜாஃபர்
வரலாற்று நிகழ்வுகளில் கண்டறியப்படும் உண்மைகள் இஸ்லாத்துக்கு ஆதரவாக இருந்தால் அது கட்டுக்கதை; சொன்னவர்கள் இடது சாரிகள், தாலிபான்கள், ஸ்டாலினிஸ்டுக்கள் etc., etc., பாதமாக இருந்தால் அவைகளே உண்மை; சொன்னவர்கள் ஆழ்ந்த ஆராய்ச்சியாளர்கள். இது ஆர் எஸ் எஸ் காரர்களின் ஓயாத ஒப்பாரி. இஸ்லாத்தைப் பற்றி தாக்கி எழுதினால் அதை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவார்கள்; அதுவும் ஒரு முஸ்லிம் எழுதினால் இவர்களுக்கு அல்வா தின்பது மாதிரி. மார்க்க அறிஞர்கள் சிலர் செய்த தவறை சுட்டிக்காட்டி 'இவர்கள் அறிவீனர்கள் ' என்ற தலைப்பில் எழுதியதை தன் வலைப்பக்கத்தில் இட்டு மகிழ்ச்சியடைந்த மஹா புருஷர் திரு அரவிந்தன் நீலகண்டன். இவரால் எப்படி நடுநிலையாகப் பார்க்கமுடியும் ? முஸ்லீம்களுக்கு ஆதரவாக எழுதும் எல்லோருமே இடதுசாரிகள்தான் Nationaly and Internationaly. நல்ல Concept !
மொகலாய மன்னர்களில் அவுரங்கசீப்பை வம்புக்கு இழுக்காவிட்டால் இவர்களுக்குத் தூக்கம் வராது. பாவம் அவுரங்கசீப் செய்த ஒரே குற்றம் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்தது. புனிதமான ஆலயத்தில் பகவான் முன்பு மகா புனிதமான காரியம் நடந்தேறியுள்ளது.. அது ஒன்றும் பிசகல்ல! வர்ணாசிரமத்தில் பிராமணர் எதுவும் செய்யலாம், ராணியை கைங்காரியம் செய்தாலும் புனிதமானதுதான். ஏன் ? மனு தர்மப்படி அவாள் பிரம்மாவின் வாயிலிருந்து படைக்கப்பட்டவாள் ஆச்சே! அதனால்தான் பிரம்மானந்தாக்கள் பிரம்மாநந்தமாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் மதவெறியர்கள் அதிலும் குறிப்பாக அவுரங்கசீப் மதவெறியன்; இந்துக்களை கொடுமைப் படுத்தினான்; இந்து கோயில்களை இடித்தான்; ஜெஸ்யா வரி விதித்து இந்து மக்களை கொடுமைக்கு ஆளாக்கினான் என்றெல்லாம் இந்துத்துவாக்களின் குற்றச்சாட்டு.
ஐயா, உங்கள் கூற்றுபடி அவர்கள் மதவெறியர்களாக இருந்திருந்தால், அவர்களின் 1000 ஆண்டுகால ஆட்சியில் இந்தியத் திருநாட்டில் ஒரு அரவிந்த சாமியையோ ஒர் நீலகண்ட சாஸ்திரிகளையோ காணமுடியாது மாறாக ஒரு அப்துல் காதரையும் ஒரு அஹமது ஹஸனையும்தான் காண முடியும். ' யாதும் ஊரே யாவரும் கேளீர் ' என்ற பண்பாட்டைக் கட்டிக்காத்ததினால்தான் இன்று வாய் கிழியப் பேசுகிறீர்கள்.
நீங்கள் சொல்வதுபோல் அவ்ரங்கசீப் மதவெறியன்தான். எப்படிப்பட்ட மதவெறியன் என்று பார்ப்போம். ஆனால் எங்கள் பாஷையில் அதற்கு மதஇனக்கம் என்று சொல்வார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் அவருக்கு மனத்ததால் மத நெறியாளர் என்றுகூட சொல்லலாம்.
1679 ல் அவருடைய ராணுவத்தில் 'மன்சூதார்கள் ' என்றழைக்கப்படும் உயர் ராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை 575. அதாவது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு ஒரு மன்சூதார் என்ற கணக்கில் இருந்தனர். அதில் 182 பேர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் (நிச்சயமாக இடதுசாரிகள் அல்ல). அதுபோன்று நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் முக்கியமானவர்கள் ராஜா ஜெஸ்வத் சிங், ராஜா ஜெய்சிங் ராஜா அவ்ராத்சிங் ஹதா, பீஷம்சிங் கத்வானி ஆகியவர்கள்.
சுவாத்தி என்றரசன் மஹோலியைக் கைப்பற்றுவதற்காக படை எடுத்துச் சென்றபோது அதை காப்பாற்றுவதற்காக ராஜா மனோகர்தாஸ் என்ற மன்சூதார் தலைமையில் ஒரு படையை அனுப்பிவைத்தார் என்று வரலாறு கூறுகிறது. இதுவும் இடதுசாரி வரலாறாக இருக்குமோ ?
திரு P. N. பாண்டே (தாலிபானிஸ்ட் ?) அவர்கள் அலகாபாத்தில் மேயராக இருந்தபோது கோயில் பற்றிய ஒரு பிரச்சினை வந்தது. ஒரு கோயிலுக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த மானியம் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் அதை மீண்டும் வழங்கக் கோரி அந்த கோயிலின் Trust வழக்குத் தொடர்ந்தது. அதற்கு ஆதாரமாக Royal Farman என்று சொல்லப்படும் அரசு ஆணை ஒன்றை முன் வைத்தது. அந்த அரசு ஆணை மன்னர் அவுரங்கசீப் அவர்களினால் பார்ஸி மொழியில் வழங்கப்பட்டிருந்தது.
மதவெறிப் பிடித்து கோயிலை இடிக்கும் மன்னன் ஒரு கோயிலுக்கு மானியம் எப்படி வழங்கமுடியும் ? அது பொய்யான ஆவணமாகத்தான் இருக்கமுடியும் என்று பாண்டே கருதினார். இருந்தாலும் அதை பரிசீலிக்கக் கருதி பாரஸீக மொழியிலிருக்கும் அரசு ஆணைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்த திரு ராஜா தேவ்பஹ்தூர் பர்மன் அவர்களிடம் கொடுத்து ஆராய்ந்தபோது அது உண்மையானதுதான் என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. தவிர மேலும் ஆரய்ந்தபோது
மதுரா கோயில் உள்பட நானூறுக்கும் மேற்பட்ட கோயில்கள், குருதுவாராக்கள், ஜெய்ன மடங்களுக்கு மானியம் வழங்கி அவற்றின் பராமரிப்புக்கு உதவினார் என்பதும் தெரியவந்தது. இதை பற்றி பேராசிரியர் சதீஷ்சந்திரா தன்னுடைய ' 'Essays on Medieval India ' வில் இப்படி கூறுகிறார் :-
Not only did many old Hindu Temples continue to exist in different parts of the country, there is also documentary evidence of Aurangazeb 's renewal of land grants enjoyed by Hindu Temples at Madhura and elsewhere, and of his offering gifts to them. (such as to the Sikh Gurudwara at Dehra Dun, continuation of Madad-i-m 'aash grants to math of Nathpanthi yogis in Pargana Didwana, Sarkar Nagar to Ganesh Bharti... பேராசிரியர் எந்தசாரி என்பது நமக்கு விளங்காத விஷயம்!
கோயிலுக்கு மானியம் வழங்கும் மன்னன் காசி விஸ்வநாதர் ஆலயத்தைமட்டும் ஏன் இடிக்கவேண்டும் ? அதை இடித்து பொன்னும் பொருளையும் கொள்ளை அடித்தான் என்று வரலாற்றில் காணப்படவில்லை; இல்லை அணு ஆயுதம் chemical weapon அப்படி இப்படி என்று பொய்யை உலகிற்கு சொல்லி புஷ் மஹாராஜா ஈராக்கைத் தாக்கி அழித்ததைப் போல் அங்கு வைரங்களும் வைடூரியங்களும் நிறைந்துகிடக்கின்றன என்ற பேராசையில் கோயிலை இடித்தான் என்றும் வரலாறு இல்லை. பின் ஏன் இடிக்கவேண்டும் ? தலைமைப் பூசாரி திருவாளர் பண்டிட் மகந்த்ஜி கட்ச் ராணியை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்று பரமபதம் ஆடியது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இதை பூசிமெழுகினால் எப்படி ? ஆனால் ஒரு திருத்தம், பூசாரி சாரின் செயலால் கோயிலின் தூய்மைக் கெட்டுவிட்டது எனவே அங்குள்ள விக்ரகத்தை எடுத்துவிட்டு வேறு இடத்தில் வைக்குமாறு ராஜாக்கள் humbly கேட்டுக்கொண்டதால் அந்த கோயிலை இடித்துவிட்டு இப்போதிருக்கும் இடத்தில் கோயில் கட்டிக்கொடுத்தார் என்பதுதான் வரலாற்று நிகழ்வு. ஆனால் இந்த தகவலை ஆராய்ந்துச் சொன்ன மிஸ்டர் பாண்டே இடதுசாரியாச்சே! யாரோ ஊர்பேர் தெரியாத முல்லா நசுருதீன் சொன்ன கதையை நம்பியவரை நம்பி மோசம் போய்விட்டார், அவர் என்ன நம்மைப் போல் அறி வாளியா ?
அவுரங்கசீப் ஆலயத்தை இடித்ததை நம்மால் ஜீரணிக்கமுடியவில்லை. ஆனால் பல கோயில்கள் இந்து மன்னர்களால் இடிக்கப்பட்டு சூரையாடப்பட்டுள்ளதே! அதை ஏன் நாம் கண்டுக்கொள்வதில்லை ? சாசங்கன் என்ற மன்னன் குப்த கோயில்களை இடித்துத்தள்ளியிருக்கிறான் என்பது வரலாற்று உண்மை; ஹர்ஷ்பேறு என்ற மன்னன் கோயில்களை இடித்து அங்குள்ள பொன்னும் பொருளைகளையும் கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தான், அதற்கென்று தனிப்படை அமைத்து தனி மந்திரியும் அமைத்திருந்தான்; பார்மரா நாட்டு மன்னன் குஜராத்திலுள்ள சமணக்கோயில்களை இடித்து தள்ளியுள்ளான்; இப்படி பட்டியல் நீண்டுக்கொண்டு போகிறதே! ஏன் நம்ம காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்கூட சமணக் கோயிலாக இருந்ததாக வரலாறு கூறுகிறதே!! ஆனால் இவைகள் புளுகு மூட்டைகளே, இந்து மன்னர்கள் எல்லாம் பக்திமான்கள்.
பேரரசர் அக்பரால் நீக்கப்பட்ட ஜெஸ்யா வரியை மீண்டும் கொண்டுவந்து இந்துக்களை துன்புறுத்தினான் அவுரங்கசீப் - இது ஒரு குற்றச்சாட்டு. ஜெஸ்யா வரி என்றால் என்ன ? இஸ்லாமிய ஆட்சியில் பாதுகாப்புக் கொடுக்கவேண்டிய மாற்று சமயத்தவர்களை 'திம்மி 'கள் என்று அழைக்கப்பட்டனர். அத்தகையவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக ஒரு வரி போடப்பட்டது. அதற்கு ஜெஸ்யா வரி என்று பெயர்.
அவுரங்கசீப் ஆட்சிக்கு வந்தது 1658. ஜெஸ்யா வரி போடப்பட்டது ஆட்சிக்கு வந்து 22 வருடம் கழித்து அதாவது 1679 ல். அவர் ஆட்சிக்கு வந்தவுடனேயே 80 க்கும்மேற்பட்ட வரிகளை நீக்கியிருக்கிறார். அவைகளில் சில: கங்கையில் புனித நீராட போடப்பட்டிருந்த வரி நீக்கப் பட்டது; அஸ்தியை கங்கையில் கரைக்கப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; மீன், காய்கறி போன்ற உணவுப்பொருள்களுக்குப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; சாலை வரி, தொழில் வரி, ஆடுமாடு மேய்ச்சல் வரி, விற்பனை வரி போன்றவைகள் நீக்கப்பட்டன; தீபாவளியின்போது செய்யப்படும் தீப அலங்கார வரி, முஸ்லிம்களின் பராஅத் இரவு செய்யப்படும் தீப அலங்கார வரி நீக்கப்பட்டன; விதவைகள் மறுமண வரி நீக்கப்பட்டது இப்படி 80 வகையான வரிகள் நீக்கப்பட்டன.
இத்தனை வரிகளை நீக்கியவர் ஜஸ்யா வரியை ஏன் போடவேண்டும் ? இதை 'கரைகண்டம் கி. நெடுஞ்செழியன் ' சொல்வதை பார்ப்போம். 'அதுவும் அவர் ஆட்சிக்கு வந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி. 1679 ல் ஜெஸ்யா வரியை விதிக்க முடிவு செய்தார். அதே நேரத்தில் ஏழைகள், பெண்கள், குழந்தைகள், உடல் ஊனமுற்றோர், அரசு பணியில் உள்ளோர், வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்வோர் என எண்ணற்றோர் இந்த வரியிலிருந்து விலக்குப் பெற்றனர். மொத்தத்தில் இந்த வரியைச் செலுத்தியவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன ' '.
'இந்த வரி விதிப்பானது இஸ்லாமியர் அல்லாதோர் இஸ்லாமியராக மதம் மாறவேண்டும் என்ற நிர்பந்தத்திற்காகவோ, இஸ்லாத்தை இந்த வரிவிதிப்பின் மூலம் நாடு முழுவதும் பரப்பிவிடலாம் என்ற ஆசையினாலோ ஒளரங்கஜேப் இந்த வரிவிதிப்பை அமுல்படுத்தவில்லை. ஆனால் இந்த வரிவிதிப்பின் மூலம் அரசியல் ரீதியாகத் தன்னை எதிர்த்து கிளர்ச்சி செய்து வந்த தக்கான சுல்தான்களைத் திருப்தி படுத்திவிடலாம் என்று ஒளரங்கஜேப் ஒரு அரசியல் கணக்கைப் போட்டார் என்கிறார் பேராசிரியர் சதீஸ் சந்திரா. ' (முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்).
பொருளாதார சீர்திருத்தத்திற்காவே ஜெஸ்யா வரி விதிக்கப்பட்டதாகவும் 1705 ம் ஆண்டு இந்த வரியினை அவுரங்கசீப் அடியோடு நீக்கிவிட்டார் என்றும் இந்திய சரித்திரத்தில் மாற்றம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக முதன் முதலில் எழுதிய சர் எலியட் என்ற ஆங்கிலேயே வரலாற்றாசிரியர் கூறுகிறார்.
இந்த வரி யாருக்கு எப்படி போடப்பட்டது ?
எல்லா செலவுகளும் போக ஆண்டொன்றுக்கு வருமானத்தில் ரூபாய் 52 மிஞ்சினால் அதற்கு வரி ரூ.3/4. ரூபாய் 250 மிஞ்சினால் வரி ரூ61/2. ரூபாய் 2500 மிஞ்சினால் வரி ரூ 13. அதற்குமேல் வரி இல்லை. இதை நடுத்தர வர்க்கமாக இருந்தால் இரண்டு தவணைகளிலும் சாதாரண வர்க்கமாக இருந்தால் மூன்று தவணைகளிலும் செலுத்தலாம்.
வரி விலக்கு அளிக்கப்பட்டவர்கள்:
ஆறு மாதங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருக்கு வரி இல்லை; உழவருக்கு வரி இல்லை; தச்சருக்கு வரி இல்லை; பொற்கொல்லருக்கு வரி இல்லை; கருமாருக்கு வரி இல்லை; கொத்தனாருக்கு வரி இல்லை; கூலி வேலை செய்பவருக்கு வரி இல்லை; அரசாங்க ஊழியருக்கு வரி இல்ல அவர் எந்த பதவியில் இருந்தாலும்; அர்ச்சகர், புரோகிதர், துறவிகள் இவர்களுக்கு வரி இல்லை. (அப்போதெல்லாம் டை கட்டிக்கொண்டு ஆபிஸிலும் பேங்கிலும் உத்தியோகம் பார்க்காத காலம்)
அப்படியானால் வரி வசூலித்தது எவ்வளவு ? ஒரு புள்ளி விபரம்:
1680-81 ம் ஆண்டில் பாதுஷாபூர் என்ற பட்டணத்தில் வாழ்ந்த மக்களின் முஸ்லிம் அல்லாதோர் எண்ணிக்கை 1855. அதில் வரி விலக்கு அளிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 1320. வரி அளித்தவர்கள் 535 பேர் மட்டுமே. வசூலிக்கப்பட்ட மொத்தத் தொகை ரூபாய் 2950.
அவுரங்கசீப்புக்கு யார் யார் எதிரி:-
சீக்கியர்கள் தங்கள் மத நடவடிக்கைகள் தவிர அரசியலில் தீவிரம் காட்டிப் பேரரசருக்கு எதிராக ஆலோசனைகளும் ஆயுதங்களும் தந்து கிளர்ச்சிக்கு உதவிக்குக் காரணமான குருதேஜ பஹ்தூர் கொல்லப்பட்டார், எனவே சீக்கியர்கள் எதிரி.
மூடப்பழக்க வழக்கங்களைத் தடுக்கும்பொருட்டு ஜோதிடம் பார்த்தல், பஞ்சாங்கம் தயாரித்தல், குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற வைகளுக்குத் தடை விதித்ததார். எனவே ராஜபுத்திரர்கள் எதிரி.
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து பொது மக்களுக்கும் சமூகத்திற்கும் தொல்லை கொடுத்த 'சத்நாமிகள் ' என்ற கூட்டத்தாரை அழித்ததால் அந்த இனம் பாதுஷாவுக்கு பரம்பரை எதிரி.
மராட்டியர்களின் நாயகனாகக் கருதப்பட்ட சிவாஜியை கைது செய்து சிறையில் அடைத்ததார். அவர் தந்திரமாகத் தப்பிச்சென்று அவுரங்கசீப்புக்கு எதிராக மராட்டிய மக்களிடம் பிரச்சாரம் செய்தகாரணத்தினால் மராட்டியர்கள் எதிரி.
ஷியா முஸ்லிம்கள் தங்கள் உடல் முழுவதும் அலகுகள் குத்திக்கொண்டும் சாட்டையால் தங்களை அடித்துக்கொண்டும், மார்பில் அடித்துக்கொண்டும் மொஹரம் பண்டிகையைக் கொண்டாடினர். அந்த பண்டிகை ஊர்வலத்திற்கு தடை விதித்ததால் ஷியா முஸ்லிம்கள் அவுரங்கசீப்புக்கு எதிரி. (முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் - கரைகண்டம் கி. நெடுஞ்செழியன்)
காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்ததோடு மட்டுமல்லாமல் இந்துக்கள் மீது ஜெஸ்யா வரியை விதித்து கொடுமைப் படுத்தியதினால் 340 ஆண்டுகளுக்குப் பின் ஆர். எஸ். எஸ், சங் பரிவார் இத்யாதி இத்யாதி + அரவிந்தன் நீலகண்டன் எதிரி.
அவுரங்கசீப், தான் முடி சூட்டிய நாளிலிருந்து இறுதி நாள் வரை போராட்டங்களை சந்திக்க வேண்டியவராக இருந்தார். அவர் பதவி ஏற்றதும் இறந்ததும் போர்களத்தில். அவருக்கு எதிரான சதித் திட்டங்கள் பெரும்பாலும் மந்திர்களில் தீட்டப்பட்டன. எனவே அன்னை இந்திரா காந்தியின் பாணியில் Oparation Blue Star (ஆமிர்தசரஸ் பொற்கோயில்) நடத்தி எதிரிகளை ஒழிக்கவேண்டிதாகிவிட்டது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு இந்து மன்சூதார்களே அனுப்பப்பட்டனர். ஆனால் அதனால் சேதமடைந்த ஆலயங்களை அவுரங்கசீப் தன்னுடைய நேரடிப் பார்வையில் செப்பனிட்டதாக 'கிஸ்ஸா யே ஆலம்கீர் ' என்ற உர்து மொழி புத்தகத்தில் ஓம் ப்ரகாஷ்லால் சியால்கோட்டி எனவர் குறிப்பிட்டுள்ளார் (1909 ம் ஆண்டு லாகூர் பதிப்பு). மூல நூலான ஆலம்கீர் நாமா, ஈஸ்வர்தாஸ் நாகர் என்பவரால் பார்ஸி மொழியில் எழுதப்பட்டது.
'மனமது செம்மையானால் மந்திரம் தேவை இல்லை ' என்பார்கள். தெளிந்த அறிவும் பரந்த கண்ணோட்டமும் இருந்தால் உண்மை அதன் வடிவில் தெரியும். அவை இல்லாதவரை அவுரங்கசீப் அல்ல எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும்.

சனி, 12 செப்டம்பர், 2015

விடுதலைப் போரின் விடிவெள்ளி மாவீரன் திப்பு சுல்தான்

“பல நாள் பதுங்கி வாழும் நாயைவிட, சில நிமிடங்கள் போர் புரிந்து உயிர் துறக்கும் சிங்கம் மேலானது” என்ற பூகம்பமொழியை வரலாற்றுக்கு வழங்கிய போராளிதான் மாவீரன் திப்பு சுல்தான்.
இந்திய வரலாறு பல மாவீரர்களை கண்டிருந்தாலும் திப்பு சுல்தானுக்கு இணையான ஒருவிடுதலை வீரனை யாரோடும் ஒப்பிட முடியாது.
சிலருக்கு அரசியல் தெரிந்தளவுக்கு வீரமிருக்காது. வீரமிருக்கும் அளவுக்கு ஆட்சி திறன் இருக்காது. ஆட்சித் திறன் இருக்கும் அளவுக்கு நிலப்பரப்பு இருக்காது. ஆனால், ஒரு மன்னனுக்கு & ஒரு தலைவனுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களும், அந்த ஆற்றல்களுக்கு ஏற்ற வாய்ப்புகளும் பெற்ற பிறவி தலைவன் திப்பு சுல்தான். பன்முக ஆற்றல் கொண்ட அறிஞன்.
“திப்புவின் தலைமையில் இந்திய விடுதலைப் போர் தொடர்ந்திருந்தால் இந்தியா என்றோ விடுதலை பெற்றிருக்கும்” என தனது இளைய இந்தியா பத்திரிகையில் காந்தியடிகள் சிலாகித்தார்கள்.
விடுதலை உணர்வு திப்புவுக்கு தாய்ப்பாலோடு சேர்த்தே புகட்டப்பட்டது. அவரது தந்தை ஹைதர் அலியும் ஒரு விடுதலை வீரரே! அவர்தான் மகனுக்கு வழிகாட்டி!
இவரது முன்னோர் அஜ்மீர், குல்பர்கா பகுதிகளிலிருந்து குடியேறிவர்கள். இவர் மைசூர் அரசின் ராணுவ தளபதி. பின்னாளில் மைசூர் அரசுக்கு அரசராக பொறுப்பேற்றார்.
ஹைதர் அலி, ஃபக்ர் நிஸா ஆகியோருக்கு 20.11.1750 அன்று திப்பு சுல்தான் பிறந்தார். அவருக்கு கருவறையே பாசறையாக இருந்தது. பாசறையே கருவறையாக திகழ்ந்தது!
பெத்தனூர் மன்னருடன் பாலம் என்ற இடத்தில் ஹைதர் அலி போர் புரிய நேர்ந்தது. மகன் திப்புவையும் அழைத்துச் சென்று போர்க்களத்தை காட்டினார் தந்தை ஹைதர் அலி. போர்க்களம் அவர்களுக்கு பூங்காவாகவே தெரிந்தது. இப்படித்தான் திப்பு போராடி வளர்ந்தார். தந்தையும், மகனும் ஒரே களத்தில் எதிரிகளைச் சந்தித்தனர்.
ஆந்திரா, மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா என இன்றைய இந்திய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்து ஹைதர் அலி தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.
1782ல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான இரண்டாவது மைசூர் போரில் ஹைதர் அலி வீரமரண மடைந்தார். தன் தந்தை வழியேற்று விடுதலைப் போரை தொடர்ந்தார் திப்பு. இவர் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயர்கள் அதிர்ந்த னர். ஆம்! திப்பு ஒரு விடுதலை புலி! அவரது கொடியில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.
திப்பு ஒரு சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர், தொழுகையாளர். தனது அரசை இறைவழியில் செயல்படும் அரசு என்றார். தனது வீரர்களை முஜாஹிதீன்கள் என்றார். ஆங்கிலேயருக்கு எதிரான தனது விடுதலைப் போரை ‘ஜிஹாத்’ என வர்ணித்தார்.
சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றார். தவறு செய்த முஸ்லிம்கள் மீது ஷரீஅத் சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கினார். மற்றவர்களுக்கு பொதுச் சட்டங்களின் கீழ் தீர்ப்பு வழங்கினார். தனது அதிகாரிகளுக்கு அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடும்போது நபி (ஸல்) அவர்கள் எமது தலைவர் என குறிப்பிடுவார்.
சீர்திருத்தவாதி
ஆடம்பரங்களை எதிர்த்த திப்பு ஒருவர் தனது வருமானத்தில் 1 சதவீதத்தை மட்டுமே திருமணத்திற்கு செலவு செய்ய வேண்டும் என அறிவித்த சீர்திருத்தவாதி.
சட்டப்படியான விசாரணையும், தண்டனையும் நமது நல்ல மரபை பாதுகாக்க உதவ வேண்டும். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாக சட்டம் இருக்க வேண்டும் என ஆணையிட்ட மனித உரிமைப் போராளி.
கலைஞன் & கல்விச் செம்மல்
உருவமற்ற ஓவியங்களையும், தோட்டங்களையும், நீரூற்றுகளையும் தனது அரண்மையில் உருவாக்கிய திப்பு மிகச் சிறந்த கலை ரசிகர். நல்ல கலைஞர்.
நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை அமல்படுத்திய திப்பு, காமராஜரின் முன்னோடி எனலாம். அவரது ஆட்சியில் முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும் மதரஸா கல்வி கூடுதலாகப் போதிக்கப்பட்டது.
இஸ்லாம் மனித குலத்துக்கான அருட்கொடை என்பதை ஆழமாக நம்பிய திப்பு, ஹதீஸ்களை ஆழ்ந்து பார்த்தார். குர்ஆனை தானும் ஓதி, தனது ஆட்சியில் வாழும் முஸ்லிம்களையும் ஓத வலியுறுத்தினார்.
தன் பிள்ளையை படிக்க வைக்காத தந்தை தன் கடமையை மறந்தவன் ஆகிறான் என்பது அவரது அறிவிப்பாக இருந்தது.
நூலகமும் & அறிவாற்றலும்
ஏழைகள் இரவும், பகலும் உழைத்துத் தந்து அப்படியே மரணிக்கின்றனர். ஓடும் ஆறுகளின் அழகை ரசிக்கவோ, மேகத்திரள்களை கண்டு மகிழவோ, வானங்களை, சோலைகளை ரசிக்கவோ, சிலாகிக்கவோ அவர்களுக்கு நேரமில்லை. யார் ஆண்டாலும் அவர்களதுநிலை அப்படியேதான் உள்ளது என்று இலக்கியப் பார்வையுடன் கூடிய இரக்கமுள்ள ஆட்சியாளனாகவும் திகழ்ந்தார்.
இந்தியாவிலேயே நூலகங்களை தனது அரண்மனையில் ஏற்படுத்திய முதல் மன்னன் திப்பு சுல்தான். அவரது நூலகத்திற்கு ஓரியண்டன் எனப் பெயரிட்டார். அந்த காலத்திலேயே 2000க்கும் அதிகமான நூல்கள் இருந்திருக்கிறது. திப்பு ஒரு பன்மொழிப் புலவர். உர்து, ஆங்கிலம், பார்ஸி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகள் அவரது நாவில் சுரக்கும்.
வெளியுறவுக் கொள்கை
திப்பு பல பரிமாணங்களைக் கொண்டவர். மிகச் சிறந்த அரசியல் விஞ்ஞானி. இந்தியாவின் முதல் வெளியுறவு துறையின் கொள்கை வகுப்பாளர் எனலாம். ஆங்கிலேய ஆட்சியை இந்தமண்ணில் வேரூன்ற விட மாட்டேன் என முழங்கியதோடு நில்லாமல், அதற்கான மாற்று செயல் திட்டங்களையும் வகுத்தார். அன்றைய முஸ்லிம் உலகின் தலைமையகமாகத் திகழ்ந்த துருக்கிய பேரரசின் உதவியை நாடினார்.
1784ல் உஸ்மான்கான் என்பவரின் தலைமையில் எகிப்தின் புகழ் பெற்ற வரலாற்று நகரான கான்ஸ்டான்டி நோபிலுக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அச்சமயம் துருக்கியர்கள், மிகப் பெரிய ரஷ்யாவை எதிர்த்து போர் நடத்திக் கொண்டிருந்ததால் அவர்களால் திப்புவுக்கு உதவ முடியவில்லை. மனம் தளராத திப்பு அன்றைய ஐரோப்பாவை மிரட்டிய நெப்போலியனுடன் ராணுவ ஒப்பந்தம் போட ஒரு தூதுக் குழுவை அனுப்பினார். ஆங்கிலேயர்களை ஐரோப்பாவில் மிரட்டிய நெப்போலியனும், இந்தியாவில் அதிர வைத்த திப்புவும் ஓரணி திளர வேண்டிய தருணம் வந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு பாராட்டி பரிசுகளை அனுப்பி மகிழ்ந்தனர். ஆனாலும் உறவுகளும், ஒப்பந்தங்களும் வந்தபோதும், அது நிறைவேறாமல் போனது வரலாற்று விபத்தாகும்.
திப்புவுக்கு நெப்போலியன் கடிதம் எழுதினார். அது பின்வருமாறு…
தேசிய அமைப்பின் தலைமை தளபதி நெப்போலியன் போனபர்ட் தமது உன்னத நண்பரும், மகத்தான சுல்தானுமாகிய திப்புவுக்கு எழுதுவது.
வெல்ல முடியாத படையுடன், தங்களை பிரிட்டனின் இரும்புச் சங்கிலியிலிருந்து விடுவிக்க ஆவலுடன் வரவிருக்கிறோம்-. மஸ்கட் வழியாக தாங்கள் அனுப்பிய தகவல்கள்படி தங்களின் விருப்பத்தையும், அரசியல் சூழ்நிலைகளையும் அறிந்தோம். சூயிஸ் (கால்வாய்) அல்லது கெய்ரோவுக்கு தங்களது கருத்தை அதிகாரப்பூர்வமான & திறமைமிக்க ஒருவர் மூலம் அனுப்பவும். அவருடன் நான் விவாதிக்க விரும்புகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வலிமை சேர்க்கட்டும். தங்கள் எதிரிகளை அழிக்கட்டும்.
புகழ்பெற்ற இக்கடிதம் 1798ல் கெய்ரோவில் இருந்தபடி நெப்போலியன் எழுதியது.
இக்கடிதம் திப்புவின் கைகளுக்கு கிடைக்கும் முன்னரே திப்பு கொல்லப்பட்டு விட்டார். புகழ்பெற்ற முதல் ஆசிய, ஐரோப்பிய ராணுவ உடன்படிக்கையாக மலர வேண்டிய அந்த ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது, இந்திய விடுதலையை இருநூறு ஆண்டுகள் ஒத்தி வைத்தது.
சமூக நல்லிணக்கத் தலைவன்
தமிழக விடுதலை வீரர்களான தீரன் சின்னமலை, சின்ன மருது ஆகியோர் திப்புவிடம் ராணுவ உதவியை பெற்றவர் கள். ஆற்காடு நவாப், ஹைதராபாத் நிஜாம் போன்றவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும், அவர்கள் ஆங்கிலேயர்களின் அரவணைப்பில் இருந்த தால் அவர்களை எதிரிகளாகவும், துரோகிகளாகவுமே கருதினார் திப்பு.
திப்பு சுல்தானின் ஆட்சிப் பகுதி கேரளாவின் மலபார், ஆந்திராவின் ஒரு பகுதி, தமிழகத்தில் கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டது. இதில் 10 சதவீதம் மட்டுமே முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள்.
பிற இந்து, கிறிஸ்தவ சமுதாயங்களின் நன்மதிப்பைப் பெற்ற திப்பு சுல்தானை மிகச் சிறந்த சமூக நல்லிணக்கவாதி என வரலாற்று அறிஞர்கள் புகழ்கிறார்கள்.
“மதங்களிடையே நல்லுறவு என்பது குர்ஆனின் கூற்று. லகும் தீனுகும் வலியதீன் என்பதாகும்” என தனது 1787ஆம் ஆண்டின் பிரகடனத்தில் திப்பு வெளியிட்டார்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.
தன்னை மன்னன் திப்பு என்றழைப்பதை விட 'சிட்டிசன் திப்பு" என்று பெருமிதம் பொங்க அழைத்துக் கொண்டார்.
இந்துக்களின் நண்பன்
கி.பி 14ஆம் நு£ற்றாண்டில் மராட்டிய இந்துப்படை சிருங்கேரி நகரைத் தாக்கி 17 லட்சம் வராகன் மதிப்புள்ள சொத்துக்களை கொள்ளையடித்தது. அதில் தங்கத்தால் செய்யப்பட்ட சாரதா தேவி சிலையும் ஒன்று. இதனால் மிகவும் வருத்தத்தில் இருந்த சங்கராச் சாரியாருக்கு உதவ திப்பு முன் வந்தார். பெருமளவில் நிதியுதவி செய்து மீண்டும் சிருங்கேரி மடத்தை செயல்பட வைத்தார்.
திப்புவின் மலபார் படையெடுப்பில் குருவாயூர் பிடிபட்டது. அங்குள்ள கிருஷ்ணன் கோவில் அர்ச்சகர்கள் ஓடி ஒளிந்தனர். கிருஷ்ணன்சிலையை வேறு ஊருக்கு மாற்றினர்.
இதையறிந்த திப்பு, தான் மதவெறியனல்ல என்பதையும், தனது நோக்கம் ஆட்சியை விரிவுபடுத்துவதும், ஆங்கிலேயர்களை எதிர்ப்பதும்தான் என்பதையும் தெளிவுபடுத்த அந்த கோயிலுக்கு பாதுகாப்பை வழங் கினார். மீண்டும் அங்கே கிருஷ்ணர் சிலையை கொண்டு வரச்செய்தார். குருவாயூர் வட்டத்தின் வரி வசூல் முழுமையையும் கிருஷ்ணர் கோயிலுக்கு அளித்தார். இந்துக்கள் வியந்து போய், திப்புவின் நேர்மையைக் கொண்டாடினர்.
மைசூரை அடுத்த மேலக் கோட்டையில் ஐயர்களுக்கும் & ஐயங்கார்களுக்கும் இடையில் வடகலையா-? தென்கலையா? என்ற உள் மத மோதல் நிலவியது. இதனால் கோயில் சடங்குகளில் பிரச்சினைகள் உருவானது. இதையறிந்த திப்பு இருபிரிவுக்கும் இடையில் சமாதானம் செய்து, இரு தரப்பும் ஏற்கும் வகையில் கோயில் நிகழச்சிகளை நடத்திட தீர்ப்பளித்தார்.
திப்புவின் தலைநகர் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் விஜய நகர பேரரசின் காலத்தில் கட்டப்பட்ட கோயில் அவரது அரண்மனைக்கு அருகிலேயே இருந்தது. அதில் தடையின்றி வழிபாடுகள் நடக்க உதவி செய்தார். அவர்களின் வழிபாட்டுரிமையை கட்டிக் காத்தார்.
அறிவிக்கப்படாத ஒரு இந்து அறநிலையத் துறையை திப்பு தன் ஆட்சியில் இருந்த பெரும்பான்மை இந்து மக்களுக்காக நடத்தினார் எனலாம். அம்மக்களின் வழிபாட்டு உரிமைகளுக்காகவும், செலவினங்களுக்காகவும் ஏராளமான நிலங்களையும், நிதிகளையும் வாரி வழங்கினார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்தார். ஆனால் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு உதவிகள் செய்தார். இவரது உதவிகள் அனைத்தும் பல இன மக்கள் வாழும் நாட்டின் ஆட்சியாளர் என்ற அடிப்படையில் நீதியாகவே இருந்தது.
ஓரிறைக் கொள்கை கொண்ட திப்பு, பிற மக்களின் பல கடவுள் வழிபாட்டுக்கு இடையூறு செய்யவில்லை. அவர்தான் திப்பு!
மது விலக்கு
தமது மக்களின் சமுதாய, பொருளாதார ஆன்மீக நன்மைக்காக மது காய்ச்சுவதும், விற்பதும் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என திப்பு (வருவாய் துறை சட்டம் 1787) அறிவித்து அதை அமல் படுத்தினார்.
மது விற்பனையை தடை செய்ததோடு, அத் தொழிலை செய்து வந்தவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளுக்கும் அவர் ஏற்பாடு செய்தார். இது குறித்து தனது ஆட்சி பணியாளர் மீர் சாதிக் என்பவருக்கு 1787ல் திப்பு ஒரு கடிதம் எழுதினார்.
‘முழுமையான மதுவிலக்கு கொண்டு வருவதில் உள்ள பொருளாதார லாப நஷ்டங்களுக்காக தயங்கவோ, ஒதுங்கவோ கூடாது. இது மக்களுக்கு நல்ல தல்ல. இதில் உறுதியான முடிவெடுக்க வேண்டும். நமது இளைஞர்களிடம் நல்லொழுக்கம் உருவாக்க வேண்டியது நமது கடமை. நமது மக்களின் உடல் நலம், வளமான வாழ்வு இவற்றைவிட நமது அரசு கஜானாவை நிரப்புவதை முக்கியமாக கருதுவது எப் படி சரியாகும்? என இடித்துரைத்தார் அக்கடிதத்தில்.
இன்று அரசு வருவாய்க்காக மதுக்கடைகளை நடத்துகிறோம் என நியாயப்படுத்தும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் கடிதம் ஒரு சரியான விளக்கமாகும்.
விவசாயம்
விவசாயம்தான் ஒரு நாட்டின் ஜீவநாடி என்பதை உணர்ந்த திப்பு ‘உழுபவனுக்கு நிலம் சொந்தம்’ என்ற புரட்சிகர திட்டத்தை அமல்படுத்தினார். விவசாயிகளுக்கு கடன் வழங்கினார். விவசாயத்தில் பண்ணை யாளர் போக்குக்கு எதிராக, உழைக்கும் விவசாயிக ளுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
நீர்வளம் காக்க குளங்கள், ஏரிகளை தோண்டினார். சிறிய அணைகளையும், கால்வாய்களையும் உருவாக்கினார். புதிய ஒட்டு ரக மா மரக்கன்றுகள் விவ சாயிகளுக்கு வழங்கப்பட்டது. கரும்பு பயிரிட ஊக்க மளிக்கப்பட்டது. விவசாய உற்பத்தி பொருள்களை அரசே நல்ல விலைக்கு கொள்முதல் செய்தது. அரசே, ஏற்றுமதி, இறக்குமதியை கையாளும் வகையில் வணிகக் கப்பல்களும் வாங்கப்பட்டது. 1790ல் காவிரியின் நடுவே அணை கட்ட அடிக்கல் நாட்டினார் திப்பு.
தொழில்கள்
திப்புவின் தொழில் கொள்கை, உள்நாட்டு தொழில்களுக்கே முன்னுரிமை தந்தது. இரும்பை காய்ச்சி வடிக்கும் 5 உருக்காலைகளை திப்பு உருவாக்கினார்.
துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதங்களை பிரான்ஸ் பொறியாளர்களின் துணையுடன் உருவாக்கினார்.
பட்டு உற்பத்தி, காகிதம் தயாரித்தல் இவற்றின் தொழில்நுட்பங்களை அறிந்துவர தொழில் வல்லுனர்களை பிரான்சுக்கு அனுப்பினார்.
1788ல் தொழிலதிபர்களுக்கு கடிதம் எழுதிய திப்பு, நமது பொருளாதார, தொழில் கொள்கைகள் வளர்ச்சி, முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்றார்.
முத்து வளர்த்தல், கிரானைட் கற்களை பாலீஷ் செய்தல், தோல் பதனிடல் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து உள்நாட்டில் பயிற்சியளிக்க வைத்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
திப்பு இயற்கையின் ரசிகர். உயிரினங்களின் நேசர். பறவைகள், விலங்கினங்களை அழிப்பதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும் என எச்சரித்தார். உயிரின காப்பகங்களை அமைத்ததோடு, அரிதான விலங்குகளை வேட்டையாடவும் தடை செய்தார்.
காவிரியோரம் அமைந்திருந்த ஆயுதத் தொழிற்சாலை ஒன்றின் கந்தகக் கழிவுகள் ஆற்று மீனை அழித்துவிடக் கூடும் என்பதால், அந்த தொழிற் சாலையை வேறு இடத்துக்கு மாற்றினார். இப்போது போபால் விஷ வாயு விபத்து நடந்து 26 ஆண்டு காலமாய் அம்மக்கள் படும் துயரத்தை நினைக்கும் போது, திப்புவின் இச்செயல்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.
தவறு செய்யும் விவசாயிகளுக்கு வித்தியாசமான முறையில், ’’சேவை செய்யும்’’ தண்டனை வழங்கப் பட்டது. அவர்கள் வாழும் சிற்று£ரில் இரண்டு மாமரங்கள், இரண்டு பலா மரங்கள் நட்டு, அவற்றுக்கு நீர் ஊற்றி வளர்த்து, மூன்றடி உயரம் வரை அதை வளர்க்க வேண்டும் என்று ஆணையிட்டார் திப்பு. இன்றைய புவி வெப்பமயமாதல் பிரச்சினை குறித்து அன்றே கவலைப்பட்டிருக்கிறார் திப்பு.
திப்புவும் & மார்க்கமும்
இஸ்லாத்தை எல்லா நிலைகளிலும் போற்றிய திப்பு, ஒரு தொழுகையாளி மட்டுமல்ல. அழைப்புப் பணியிலும் ஆர்வம் காட்டியிருக்கிறார். நெப்போலிய னுக்கு அவர் இஸ்லாத்தைப் பற்றி விளக்கமாக கடிதம் எழுதியிருக்கிறார்.
இன்றைய ஓமன் தலைநகர் மஸ்கட் அன்று பெரும் வணிக நகராக இருந்தது. பல இந்திய வணிகர்களின் போக்குவரத்து நகராகவும் இருந்தது. அங்கு ஒரு பள்ளிவாசலை கட்ட திப்பு நிதியுதவி அளித்துள்ளார். மதரஸாக்களுக்கும், உலமாக்களுக்கும் வாரி வழங்கியி ருக்கிறார். குர்ஆனை அனைவரும் ஓத வேண்டும் என முஸ்லிம்களிடம் வலியுறுத்தியிருக்கிறார்.
பார்ஸியை ஆட்சி மொழியாக்கிய திப்பு உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அரசை நிறுவ விரும்பினார். தனது தலைநகர் சிரீறங்கப்பட்டினத்தில் அரண்மனை அருகே பள்ளிவாசலை கட்டினார். அவர் கொல்லப் பட்ட பிறகு, எரிக்கப்பட்ட அவரது அரண்மனை நூல கத்தில் 44 குர்ஆன் பிரதிகளும், குர்ஆன் தப்ஸீர் நூல்களும், 41 ஹதீஸ் நூல்களும், 56 இஸ்லாமிய அறிவியல், வரலாறு, வானியல், சட்ட நூல்களும் கண்டெடுக்கப்பட்டன.
திப்பு தன் நாணயங்களுக்கு அரபி, பார்ஸி பெயர் களை சூட்டினார். அதில் கலீஃபாக்கள் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி ஆகியோரின் பெயர்களைச் சூட்டினார். தங்க, வெள்ளி நாணயங்களிலும் கலீஃபாக்களின் பெயர்களை பொறித்தார். ஆனால் எதிலும் தனது பெயரை அவர் பொறிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனித நேயம்
இன்றைய கேரள மாநிலம் மலபார் திப்பு ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்கள் ஜாக்கெட் (மேலாடை) அணிந்து மார்பகங்களை மூடாமல் வாழ்வது அறிந்து பதறினார் திப்பு.
1785&ல் மலபார் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில், இது தொன்மையான பழக்கமா-? அல்லது வறுமையா? வறுமை என்றால், அவர்கள் மேலாடை அணிய அனைத்து நிதி உதவிகளையும் செய்யுங்கள். இது மத நம்பிக்கை எனில், நம்பிக்கையை புண்படுத்தாத வண்ணம் நட்பு ரீதியாகப் பேசி நடவடிக்கை எடுங்கள். ஆண்களுக்கு இல்லாமல், பெண்களுக்கு மட்டும் இது சுமத்தப்பட்டால் அது நீதிக்குப் புறம்பானது. தமது தாய்மார்களும், சகோதரிகளும் பாதி நிர்வாணமாக நடமாடுவதை எப்படி அந்த இன இளைஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்? என அக்கடிதத்தில் திப்பு அங்கலாய்த்திருக்கிறார்.
இறுதியில் அந்த பெண்கள் மேலாடை அணிய வேண்டும் என்ற திப்புவின் முயற்சி வென்றது.
போர்திறமை :
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் பெரும் சவாலாகவும் இருந்தவர் திப்பு சுல்தான். ‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73) என்ற நூலில் குறிப்பிடுகிறார் ஜவஹர்லால் நேரு.
முதலாம் மற்றும் இரண்டாம் மைசூர் போர்களில் கடும் தோல்வியைச் சந்தித்த ஆங்கிலேயர், திப்புவை நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாது என்பதை புரிந்துக்கொண்டு அவர்களின் வழக்கமான ‘ஆயுதமான’ பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தினர். அன்று அவர்கள் விதைத்த விதை இன்றும் விஷ விருட்சமாக வளர்ந்து நின்று இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.
"தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க் களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள்.
அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்" என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு.
ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.
திப்புவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் ஆங்கிலேயர்கள் விரண்டோடுவதை விளக்கும் வண்ணமாக லண்டனில் வெளிவந்த கேலிச்சித்திரம் அனைவரையும் கவர்ந்தது. இந்த கேலிசித்திரம் மூலமாக மாவீரனின் போர்த் திரமையை அறிந்துகொள்ளலாம்.
மாவீரனின் போர் வாள்
போரில் கடுமையாக காயமடைந்து தோல்வியின் விளிம்பில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையிலும் தனக்கு உகப்பான இந்த வாளைப் ப்றிக்க முயன்ற ஆங்கிலேய சிப்பாயை இந்த வாளாலேயே கொன்றார் மாவீரர் திப்பு.
மிக பிடித்தமான விளையாட்டு சாமான்
இது தான் மாவீரர் திப்பு சுல்தானுக்கு மிக பிடித்தமான விளையாட்டு சாமான். 'சீறும் புலியின் கால்களில் சிக்கி கதறும் ஆங்கில படை வீரன்' அந்த அளவுக்கு ஆங்கிலேயர் மீது வெறுப்பு கொண்டிருந்தார்.
ஷஹீதானார் ‘திப்பு’
ஆங்கிலேயர்களை அலற வைத்து, அவர்களை தென்னிந்தியாவிலேயே தடுத்து நிறுத்தி போராடிக் கொண்டிருந்த திப்பு, இறுதியாக மூன்றாம் மைசூர் போரில் ஆங்கிலேயருடன் போரிட்டார். துரோகம், எதிரிகளின் பெரும் படை, நவீன ஆயுதங்கள் எல்லாம் எதிரணியின் பக்கம். திப்புவின் படை வீரப் போரிட் டது. எனினும் தோல்வியைச் சந்தித்தது. திப்பு சரணடையவும், சமாதானம் பேசவும் ஆங்கிலேயர்கள் வாய்ப்பு வழங்கினாலும், அவர் அதை நிராகரித்தார். இறுதியாக தன்னந்தனியாக வாளைச் சுழற்றி எதிரி களை வீழ்த்த, எங்கிருந்தோ வந்த குண்டுகள் திப்புவை துளைத்து மண்ணில் சாய்த்தது. தப்பிவிட வாய்ப்பிருந்தும் அதை அவர் செய்யவில்லை.
தன் வீரர்களின் உடல்களுக்கு மத்தியில் 1799, மே&4 அன்று திப்பு ஷஹீதானார். இந்திய விடுதலைக்கு உரமானார். அவர் அருகில் அவர் நேசித்த திருக்குர் ஆனும், ‘இறைவனின் வாள்’ என பொறிக்கப்பட்ட வாளும் மட்டுமே அப்போது கிடந்தன.
நன்றி மறந்த தேசம்
இந்தியாவின் விடுதலைக்கும், சுதந்திரத்திற்கும் காரணமாக யார், யாரோ குறிப்பிடப்பட்டிருக்கிறார் கள். ஆனால் திப்புவின் தியாகமும், வரலாறும் மறைக் கப்படுகிறது.
நடிகர் சஞ்சய்கான் என்பவர் ‘திப்புவின் வாள்’ என்று தூர்தர்ஷனுக்கு தொலைக்காட்சித் தொடர் ஒன்றை தயாரித்தார். ஆனால், அது ‘ஒரு கற்பனைக் கதை’ என அடைப்புக் குறிக்குள் போட வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டது. அதன் பிறகே மத்திய அரசின் தொலைக்காட்சி அனுமதி அளித்து, தன்னை கேவலப்படுத்திக் கொண்டது.
1980களின் இறுதியில் நடைபெற்ற இச்சம்பவம் வரலாற்று ஆர்வலர்களையும், தேசப்பற்றாளர்களை யும் உலுக்கியது. அந்த டி.டி. தொலைக்காட்சியில் அதிக மக்கள் பார்க்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் பகல் நேரத்தில் ஒளிபரப்ப அனுமதி வழங்காமல், சனிக்கிழமை இரவு 10 மணிக்கு பிறகே ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டது. அந்நாட்களில் மக்கள் முன் கூட்டியே உறங்கிவிடும் பழக்கத்தில் வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே காலகட்டத்தில் நேருவினால் கற்பனை என கூறப்பட்ட, ராமாயணம், மஹாபாரதம் போன்ற தொடர்கள் அதே தொலைக்காட்சியில் ஞாயிற்றுக் கிழமையின் பகல் பொழுதுகளில் ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டது.
அமெரிக்காவில் மரியாதை
இன்றைய ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்பு சுல்தானே. அவர்தான் குறுந்தொலைவு பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை தயாரித்து பயன் படுத்தினார். இது குறித்து முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தனது ‘அக்னிச் சிறகுகள்’ என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
நான் பயிற்சி பெற அமெரிக்காவின் தலைசிறந்த ராக்கெட் தொழில்நுட்ப ஆய்வுக் கூடமான வாலோ பஸீக்கு சென்றேன். அமெரிக்க ராணுவ ஆய்வு அமைப்பான நாசாவின் அந்த இடத்தின் வரவேற்பு கூடத்தில் ராக்கெட் தாக்குதல் நடக்கும் ஒரு போர்க் களத்தின் மிகப் பெரிய ஓவியத்தைப் பார்த்தேன்.
அது பிரிட்டிஷாரை எதிர்த்து 200 ஆண்டுக ளுக்கு முன்பு சிரீரங்கப்பட்டிணத்தில் திப்பு நடத்திய விடுதலைப் போர் காட்சி என்பது என் வியப்பை அதிகரித்தது.
திப்புவின் தாய் மண்ணே நினைவு கூறத் தவறிய அவரது ராக்கெட்

பெண்களும், கல்வியும்

 நாகூர் ரூமி


  அறிவைத் தேடுகின்ற தகுதி ஆண்களுக்கு மட்டும்தான் உள்ளது என்று திருமறையின் எந்த வசனமும் சொல்லவில்லை. மாறாக, கிட்டத்தட்ட 750 வசனங்களில் இறைவனின் படைப்பினங்களைப் பற்றிச் சிந்திக்கும்படித் திருமறை ஆண்களையும், பெண்களையும் கேட்கிறது. பெருமானார் மிகவும் தெளிவாகக் கூறிய ஹதீதுகளையும் கல்வியின் முக்கியத்துவத்தை உறுதி செய்வதாக உள்ளன. சில உதாரணங்கள்.


  “நபியே எந்தக் காரியம் சிறந்தது?” என்று ஒரு முறை பெருமானாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு “அறிவே சிறந்தது” என்று பதில் சொன்னார்கள்.


  “நபியே திருமறையை ஓதுவதைவிட கல்வி கற்றுக் கொள்வது சிறந்ததா?” என்று ஒருமுறை பெருமானாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு “அறிவின் மூலமாக அன்றி, வேறு எப்படித் திருமறையால் உங்களுக்கு நன்மை செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.


  “நான் எப்படி ஒரு சாதாரண மனிதரை விட (இறைத் தூதர் என்ற) அந்தஸ்தில் உயர்ந்திருக்கிறேனோ அதைப் போல, இறைவனை வணங்க மட்டுமே செய்கின்ற ஒருவரை விட ஓர் அறிஞர் உயர்ந்திருக்கின்றார்.”


  ஒருமுறை பெருமானார் வெளியில் வந்தபோது இரண்டு குழுவினர் தென்பட்டனர். ஒரு குழு இறைவனை வணங்கிக் கொண்டிருந்தது. இன்னொன்று கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது. பெருமானார் அந்த இரண்டாவது குழுவில் பொய் அமர்ந்து கொண்டார்கள்.


  ஒரு மனிதன் இறக்கும்போது அவனுடைய எல்லா செயல்களும் நின்று போகின்றன. மூன்றைத் தவிர, அவை 1. நிரந்தரமான (கல்விச்சாலை, மருத்துவமனை போன்ற) தர்ம காரியங்கள், 2. நற்குணம் கொண்ட வாரிசுகள். 3. பயனுள்ள அறிவு. (அறிவு பயனுள்ளதாக இருப்பது மிகவும் முக்கியமானது. எது ஒருவனுடைய சூழ்நிலையில் அவனுக்குத் தேவையான அறிவாக இருக்கிறதோ, அதை மட்டும்தான் அவன் கற்றுக் கொள்ள வேண்டும். பயனற்ற அறிவிலிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக, இறைவா! என்று பெருமானார் இறைஞ்சிய ஹதீதும் உள்ளது.)


  கற்றறிந்தவர்களே நபிமார்களின் வாரிசுகளாவார்கள். அறிஞர்களுடைய அந்தஸ்து இறைத்தூதர்களுடையதற்கு அடுத்தபடியானதாக இருக்கிறது.


  விண்ணிலும், மண்ணிலும் உள்ளதெல்லாம் கற்றறிந்தவர்களுக்காக மன்றாடி இறைவனிடம் மன்னிப்புக் கேட்கிறது.


  மறுமை நாளில், அறிஞனின் எழுதுகோலின் மையானது இறைப்பாதையில் போர் செய்து உயிர் துறந்த தியாகியின் ரத்தத்தைவிடச் சிறந்ததாக இருக்கும்.


  இறைவனுடைய மார்க்கத்தைப் பற்றி அறிந்து கொள்பவரின் கவலைகளைப் போக்க இறைவன் ஒருவனே போதுமானவன். அவன் அறிந்திராத புரத்திலிருந்து அவனுக்கானது வந்து சேரும்.

  இப்ராஹீமிடம் இறைவன் சொன்னான், “ஓ! இபுராஹீம், நான் எல்லாமறிந்த ஞானவானாக இருக்கிறேன். எனவே பூமியில் அறிஞர்களை நான் நேசிக்கிறேன்.”


  அறிவைத் தேடி ஒரு மனிதன் செல்வானாகில், அவனுக்கு சொர்க்கத்தின் வழியை இறைவன் காட்டுவான். அறிவைத் தேடி ஒருவர் வெளியில் காலெடுத்து வைக்கையில் அவருக்காக தன் சிறகுகளை வானவர் விரிக்கின்றனர்.

  அறியாதவர் தம் அறியாமை பற்றியும், அறிஞர் தம் அறிவின் மீதும் அலட்சியம் காட்டி இருந்துவிடக் கூடாது.


  அறிவார்ந்த ஒரு வார்த்தை ஓராண்டு தொழுவதைவிடச் சிறந்தது. அறிவைத் தேடுவதே வணக்கமாகும். அதனை அடைவது இறையச்சமாகும். அதனை அறியாதவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது தர்மமாகும்.

  இறந்த இதயங்களுக்கு உயிர் கொடுப்பது அறிவேயாகும். இறைவனால் படைக்கப்பட்ட முதல் விஷயமே அறிவுதான்.

  கல்வியின் முக்கியத்துவம் பற்றிய இது போன்ற ஹதீதுகள் எண்ணற்றவை. அவற்றில் எதுவுமே இது ஆணுக்கு மட்டும் என்றோ, இது பெண்ணுக்கு மட்டும் என்றோ பிரித்துச் சொல்லப்பட்டதல்ல.
  பெருமானார் மட்டுமல்ல, இஸ்லாமிய ஞானவான்கள் பலரும் கல்வியின் முக்கியத்துவம் பற்றி சொல்லியிருக்கிறார்கள்.

  அறிஞர்களைத் தவிர மற்ற அனைவரும் செத்தவர்களே. அறிஞர்கள் மட்டுமே நித்யமானவர்கள். செல்வத்தை நீங்கள் பாதுகாக்க வேண்டும். ஆனால் கல்வி உங்களைப் பாதுகாக்கும். இவ்வாறு அலீ கூறினார்கள்.


  “இறைவா ! எங்களுக்கு இம்மையில் சிறந்ததையும், மறுமையில் சிறந்ததையும் தந்தருள்வாயாக” (சூரா பகரா 2:297) என்று ஒரு பிரார்த்தனை உள்ளது. இந்த வசனத்தில் வரும் “சிறந்தது” என்ற சொல் இம்மையைப் பொறுத்தவரை கல்வியையும், மறுமையை பொறுத்தவரை சொர்க்கத்தையும் குறிக்கிறது என்று ஹஸன்பஸரீ என்ற இறைநேசர் விளக்கம் கொடுக்கிறார்கள்.

  “அறிந்தோரும், அறியாதோரும் சமமானவர்களா?” என்று திருமறை (சூரா அஸ்ஸுமர் 39:09) கேட்கிறது. “சீனா சென்றேனும் கல்வி கற்றுக்கொள்” என்ற ஹதீதில் பெண் – ஆண் என்ற வேற்றுமை உளதா? அல்லது எந்த மொழி என்ற நிபந்தனையேனும் உளதா? என்று கேட்கிறார் தமிழில் முதல் நாவல் எழுதிய முஸ்லிம் பெண்மணி சித்தி ஜுனைதா பேகம் (காதலா கடமையா, 164)

  இவை எல்லாவற்றுக்கும் மேலாக முத்திரையடியைப் போன்ற ஹதீது ஒன்றும் உள்ளது. “கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு முஸ்லிம் ஆணுக்கும், பெண்ணுக்கும் கடமையாகும்” என்று பெருமானார் சொன்னார்கள் என்பதுதான் அது. கல்வியை ஒரு கடமையின் அந்தஸ்திற்கு உயர்த்திய மார்க்கம் வேறெதுவும் உள்ளதா என்று தெரியவில்லை.

  இதெல்லாம் வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, பெருமானார் காலத்திலேயே கல்வி கேள்விகளில் உயர்ந்த பெண்மணிகள் பலரை நாம் பார்க்க முடிகிறது. இஸ்லாமியக் கலாச்சாரம், பண்பாடு, இறையியல், திருமறை ஹதீது விளக்கங்கள், மார்க்க சட்டங்கள் ஆகியவற்றை எடுத்துரைப்பதில் பெருமானாரின் மனைவிமார்கள் சிறந்து விளங்கினர். அவர்களில் கதீஜா, ஆயிஷா, பெருமானாரின் மகளார் ஃபாத்திமா ஆகியோர் மிக முக்கியமானவர்கள்.

அன்னை ஆயிஷாவின் சிறப்பு

  இவர்களிலும் ஆயிஷா அவர்களின் இடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவர்கள் மூலமாகத்தான் நூற்றுக்கணக்கான ஹதீதுகளை நாம் பெற்றிருக்கிறோம். பெருமானாருக்குப் பிறகு திருமறை ஹதீது இஸ்லாமிய சட்டம் ஆகியவற்றை விளக்குவதில் முக்கியமான ஆறு வல்லுநர்களில் ஒருவராக அவர்கள் திகழ்ந்தார்கள். அவர்களுக்கிருந்த அதிசயிக்கத்தக்க நினைவாற்றலும் இதற்கு உதவியது. அவர்கள் ஒரு விஷயத்துக்கு விளக்கம் சொல்லி விட்டால் அதற்கு அடுத்த பேச்சு என்பதே இல்லாமலிருந்தது. ஓர் உதாரணம்.

  அபூஹுரைரா (ரலி) அவர்கள் பெருமானாரின் நெருங்கிய தோழர்களில் ஒருவர். அவர் மூலமாகவே இஸ்லாமிய உலகுக்கு அதிகப்படியான ஹதீதுகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தகக்து. ஒருமுறை அபூஹுரைரா பின்வருமாறு சொன்னார்:

  “ஒரு மனிதன் தொழுதுக் கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணோ, ஒரு கழுதையோ அல்லது ஒரு நாயோ குறுக்கே போனால் அவனுடைய தொழுகை செல்லாது.” அதைக் கேள்விப்பட்ட ஆயிஷா அவர்கள்,
  “அபூஹுரைரா என்ன சொல்கிறார்? ஒரு கழுதை அல்லது ஒரு நாயைப் போன்றவள்தான் ஒரு பெண் என்று சொல்ல வருகிறாரா? என்னுடைய அறை மிகவும் சின்னது. அதில் நான் படுக்கும் பாய் பெருமானாரின் தொழுகை விரிப்புக்கு குறுக்காக இருக்கும். நான் காலை நீட்டிப் படுத்திருக்கும் போது பெருமானார் தொழுவார்கள். என்னுடைய கால்கள் அவர்களுடைய தொழுகை விரிப்பைத் தொட்டுக் கொண்டிருக்கும். நெற்றியை பூமியில் வைத்து சஜ்தா செய்யச் செல்லும் போது பெருமானார் லேசாக என் காலில் தட்டுவார்கள். நான் காலைத் தூக்கிக் கொள்வேன். பின் மறுபடியும் நீட்டிக் கொள்வேன். சில நேரங்களில் அவசியம் கருதி அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களுக்குக் குறுக்கே போவேன்.” இவ்வாறு ஆயிஷா அவர்கள் சொன்னவுடன் அபூஹுரைரா தான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

  பெருமானார் இந்த உலகை விட்டுப் பிரிந்த பிறகு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் வரை ஆயிஷா வாழ்ந்தார்கள். பெருமானாரின் தோழர்களில் பெரும்பாலானவர்கள் மறைந்துவிட்ட போது பெருமானாரின் வழிமுறைகளை அனுபவத்திலும், நெருக்கத்திலும் இருந்து கவனித்தவர்களான ஆயிஷா அவர்களிடமே மக்கள் சந்தேகங்களைத் தெரிவித்துத் தெளிவும் பெற்றனர்.


  உஸ்மான் அவர்கள் கலீஃபாவாக இருந்த காலத்தில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு உஸ்மானின் கொள்கைகளே காரணம் என்று தன் அதிருப்தியை வெளிப்படையாகவே ஆயிஷா தெரிவித்தார்கள். அதே சமயம், உஸ்மான் கொலை செய்யப்பட்ட போது, அதை வன்மையாகக் கண்டிக்கவும் செய்தார்கள்.

  அந்தக் காலத்தில் ஒரு பேராசிரியையாக ஆயிஷா திகழ்ந்தார்கள். அன்றாடம் சிறுவர்களையும், சிறுமிகளையும் தனது வீட்டுக்குள் அனுமதித்து சொல்லிக் கொடுப்பார்கள். பெரியவர்களை ஒரு திரைக்குப் பின்னால் அமர வைத்து சொற்பொழிவுகள் விவாதங்கள் மூலமாக அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். உச்சரிப்பில் தனிக்கவனம் செலுத்துவார்கள். மதினாவிலிருந்த அனாதைக் குழந்தைகளுக்கான செலவுகளை அவர்களே பார்த்துக் கொண்டார்கள். சிலரை தனது பிள்ளைகளாகவே சுவீகரித்துக் கொண்டார்கள். ஆயிஷா அவர்களிடம் பயின்ற உர்வா என்பவர் பிற்காலத்தில் மதினாவின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். காசிம் என்பவர் இஸ்லாமிய சட்டத்தில் ஒரு வல்லுநரானார். அபூசல்மா என்பவர் ஹதீது கலை விற்பன்னரானார். மஸ்ரூக் என்பவர் ஈராக் நாட்டின் இஸ்லாமிய சட்ட வல்லுநரானார். உமைரா என்ற பெண் ஆயிஷா அவர்களின் கடிதங்களை எழுதியவராவர். இரண்டாம் உமரின் காலத்திலே தொகுக்கப்பட்ட ஹதீதுகளை விமர்சன நோக்கோடு ஆராய்ந்தவரும் இவரே.

( நர்கிஸ் – ஆகஸ்ட் 2015 )

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

எல்ஐசி எனும் வைரம்----இரா. புண்ணியமூர்த்தி----தி இந்து

எல்ஐசியின் வரலாறு, பொதுத் துறை நிறுவனங்களின் வெற்றி வரலாறு

வைரவிழா ஆண்டில் இன்று அடியெடுத்துவைக்கிறது எல்ஐசி. ஒருவகையில் எல்ஐசியின் வரலாறு, பொதுத் துறை நிறுவனங்களின் வெற்றிகரமான வரலாறு. 59 ஆண்டுகளுக்கு முன் வெறும் ரூ.5 கோடியில் தொடங்கப்பட்ட நிறுவனம், இன்றைக்கு 30 கோடி பாலிசிதாரர்களுடன் உலகின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமாக நிமிர்ந்து நிற்கும் சூழலில் அதன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ. 20.31 லட்சம் கோடி.

இன்றும் அரசின் அந்த ரூ.5 கோடி முதலீட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் லாப ஈவுத் தொகையை எல்ஐசி அளிக்கிறது. 2014-15-ல் இப்படி வழங்கப்பட்ட தொகை

ரூ. 1,803 கோடி. 2001 - 2015 வரையிலான 15 ஆண்டுகளில் மட்டுமே இப்படி அரசுக்கு அளிக்கப்பட்டிருக்கும் தொகை ரூ 13,000 + கோடி. தவிர, உபரி நிதி மதிப்பீட்டின் பிந்தைய வரியாக ரூ. 36,080 கோடியை அரசுக்குச் செலுத்தியுள்ளது. மேலும், தேசத்தின் வளர்ச்சிக்காக அரசின் பத்திரங்களிலும், சமூக நலத்திட்டங்களிலும் ரூ. 12.86 லட்சம் கோடி முதலீடுசெய்துள்ள ஒரே பெரிய இந்திய நிறுவனம் எல்ஐசி. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், 1956-ல் எல்ஐசிக்கு மத்திய அரசு கொடுத்த ரூ. 5 கோடி முதலீட்டைத் தவிர, இடையில் ஒரு நயா பைசாவைக்கூட இதுவரை உதவியாகப் பெறாமலேயே இத்தகைய சாதனைகளை எல்ஐசி நிகழ்த்தியிருக்கிறது என்பதுதான்.

உலகின் முதல் நிறுவனம்

எல்ஐசியின் சாதனைகள் அவ்வளவு எளிதில் நடந்தவை அல்ல. ஏனென்றால், எல்ஐசி உருவாகும் முன் இந்நாட்டின் காப்பீட்டுத் துறை தனியார் நிறுவனங்களின் கைகளில் இருந்தது. மக்கள் பணத்தை அவை சூறையாடின. மக்கள் உரிமத்தொகை வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டார்கள். அப்படியெல்லாம் இருந்தும் நஷ்டக் கணக்கைக் காட்டின அந்நாளைய காப்பீட்டு நிறுவனங்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் நாட்டின் காப்பீட்டுத் துறையை அரசின் கைக்குக் கொண்டுவந்தார் பிரதமர் நேரு. எல்ஐசி நிறுவனம் தொடங்கப்பட்டபோது, “ஆயுள் காப்பீட்டுத் தொழிலை நடத்தத் தேவைப்படும் வணிகத் திறமையும், தகுதிகளும் அரசால் நடத்தப்படுகிற இந்நிறுவனத்துக்கு இருக்குமா?” என்று கேள்வி கேட்ட பொருளாதார நிபுணர்களே அதிகம். ஆனால், படிப்பறிவில்லாத கிராமத்து மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட, பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிரந்தர வருமானம் இல்லாத, தனிநபர் வருமானம் குறைவாக உள்ள ஒரு தேசத்தில், மக்களோடு மக்களாக இந்தப் பொதுத்துறை நிறுவனம் கலந்ததன் விளைவு புதிய முன்னுதாரணங்கள் விளைந்தன.

அதேபோல, 1999-க்குப் பிறகு, காப்பீட்டுத் துறையில் தனியார் நிறுவனங்கள் மீண்டும் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டபோதும், “இனி, எல்ஐசி அவ்வளவுதான்” என்றார்கள். நவீன தாராளவாத ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் பொய்யாக்கி, இன்றைக்கு 23 தனியார் நிறுவனங்கள் ஆயுள் காப்பீட்டுத் துறையில் இயங்கிவரும் நிலையில், பாலிசிகள் எண்ணிக்கை அடிப்படையில் 78% சந்தைப் பங்கை நிலைநிறுத்தியிருக்கிறது எல்ஐசி. எல்லாவற்றுக்கு மேல் எத்தனை பாலிசிகளை விற்கிறது என்பதில் அல்ல ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் சிறப்பு; எவ்வளவு பாலிசிகளுக்கு முதிர்வு / இறப்பு உரிமத்தொகைகளை ஒழுங்காக வழங்குகிறது என்பதிலேயே அதன் சிறப்பு இருக்கிறது. எல்ஐசியின் தலையாய பெருமை இங்கேதான் இருக்கிறது. இறப்பு உரிமங்கள் வழங்குவதில் 99.51%; முதிர்வு உரிமங்கள் வழங்குவதில் 99.78% உரிய முறையில், சரியான நேரத்திலும் வழங்கி உலகிலேயே உரிமங்களை வழங்குவதில் முதல் நிறுவனமாக நிற்கிறது எல்ஐசி.

மத்திய அரசுக்கு உதவும் எல்ஐசி

எல்ஐசியின் வெற்றிக் கதையும் அதன் லாபங்களும் ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் வெற்றியல்ல. மாறாக, இந்திய அரசின், இந்திய மக்களின் வெற்றி. எப்படி? இந்திய ரயில்வே துறையை மேம்படுத்த அடுத்த ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் கோடி அதில் முதலீடு செய்யப்படும் என்று அரசு அறிவித்தது அல்லவா? அந்த முதலீட்டில் முதல் முதலீடு எங்கிருந்து வந்தது? எல்ஐசியிலிருந்து வந்தது. இது சமீபத்திய உதாரணம். அவ்வளவே. நீண்ட காலமாக எல்ஐசியின் நிதி அரசுக்கு உதவிவருகிறது. நாட்டின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு மட்டும் இதுவரை எல்ஐசி வழங்கியிருக்கும் தொகை ரூ. 32.14 லட்சம் கோடி. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் தவிர, கருப்புத் திங்கள், கருப்பு வெள்ளி என்று எப்போதெல்லாம் பங்குச்சந்தை சரிவை நோக்கிச் செல்கிறதோ, அப்போதெல்லாம் மத்திய அரசு எல்ஐசியின் வாசல் கதவைத் தட்டுவதற்குத் தயங்குவதே இல்லை.

ஏன் தனியார்மயம்?

ஒரு பொதுத் துறை நிறுவனத்தைச் சரியான திசையில் செலுத்தினால், அது எந்த அளவு உயரத்துக்கு வரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். மேலும், பொதுத் துறை நிறுவனங்கள் தேசத்தின் கட்டுமானத்தில் கொண்டுள்ள அக்கறைக்கும் தேசத்தின் வளர்ச்சிக்குப் பொதுத் துறை நிறுவனங்கள் அளித்திருக்கும் பங்களிப்புக்கும் இது ஒரு உதாரணம். பொதுத் துறை நிறுவனங்களின் எழுச்சிக்கான குறியீடாக எல்ஐசி இப்படி உயர்ந்து நிற்கும் வைர விழா தருணத்தில், நாம் சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், நம்முடைய அரசாங்கம் ஏன் தொழில் நடத்தத் தனியாரை அழைக்கிறது? ஏன் பொதுத் துறை நிறுவனங்களை மூடி, முழுக்க தனியார்மயமாக்கிவிடத் துடிக்கிறது?

காப்பீட்டுத் துறையைத் தனியாருக்குத் திறந்துவிடப்பட்டபோது அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட முக்கியமான காரணங்கள், “காப்பீட்டுத் துறையை மேலும் பரவலாக்க, மேலும் பல கிராமங்களை நோக்கிச் செல்ல இந்தத் தனியார்மயம் உதவும். மேலும் சந்தையை இது விரிவாக்கும்” என்பது. இதே காரணங்கள்தான் வெவ்வேறு வார்த்தைகளில் எல்லா தனியார்மயமாக்க நடவடிக்கைகளின்போதெல்லாம் சொல்லப்படுகின்றன. ஆனால், இவையெல்லாம் நடந்ததா?

இந்திய அரசுக்கான செய்தி

உண்மையில், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் எந்த கிராமப் பகுதிக்கும் செல்லவில்லை என்பதோடு, சிறிய நகரங்களில் திறந்த அலுவலகங்களைக்கூட மூடிவருகின்றன என்பதே கள யதார்த்தம். சாலைகளே இல்லாத கிராமங்களிலும்கூட எல்ஐசியின் பாலிசிகள் பயணித்திருக்கின்றன. ஆனால், தனியார் நிறுவனங்களோ அதிக பிரிமியம் எனும் இலக்கைக் குறியாக வைத்துக்கொண்டு நகரங்களையே சுற்றுகின்றன. சிறிய தொகையைப் பிரிமியமாகச் செலுத்துகிற எளிய மக்களை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. சரி, சந்தையில் போட்டியை உத்வேகப்படுத்துவதற்காகவே தனியார் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஏன் பொதுத் துறை நிறுவனங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் காலிசெய்ய வேண்டும்?

இன்றைக்கு இந்தியாவில் எல்ஐசி போன்ற விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய நிறுவனங்கள் நீங்கலாக, ஏனைய பொதுத் துறை நிறுவனங்கள் யாவும் கவலையுடனே தங்கள் எதிர்காலத்தை நோக்கியிருக்கின்றன. சுதந்திரமான சந்தையே தேசத்தின் வளர்ச்சிக்கு உதவிடும் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லும் நம்முடைய அரசியல்வாதிகள், பொதுத் துறை நிறுவனங்கள் எனும் மக்கள் சொத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்து, அவற்றைத் தாரைவார்த்துக்கொண்டிருக்கின்றனர். பொதுத் துறை நிறுவனங்கள் நம் சொத்து, அவற்றின் எதிர்காலம் தேசத்தின் எதிர்காலப் பொருளாதாரமும் வேறுவேறல்ல. எல்ஐசி தன்னுடைய வைர விழா தருணத்தில் இந்திய அரசுக்குச் சொல்லும் மகத்தான செய்தி இதுதான்!

- இரா. புண்ணியமூர்த்தி, துணைத் தலைவர்,

தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு.

தொடர்புக்கு: rpmthanjai@gmail.com