செவ்வாய், 20 அக்டோபர், 2015

அஹ்லுல் பைத்தினர்கள் என்பவர்கள் யார்?

அஹ்லுல் பைத்தினர்கள் என்பவர்கள் யார்? 
அவர்களின் சிறப்புகள் என்ன?
மற்றும் அவர்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம்....??

ஸாதாத்துமார்கள் என்றால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த இரத்தத்திலிருந்து உதித்தவர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கென்று தனிப்பட்ட தகைமையும் கௌரவமும் இருக்கிறது என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது அல்ல. என்றாலும் குழப்பமும் குதர்க்கமும் நிறைந்த இக்கால கட்டத்தில் அவர்களைப்பற்றிய மரியாதையைக் குலைப்பதற்காகவே ஒரு கூட்டம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. எனவே ஸாதாத்துமார்களைப்பற்றிய மாண்புகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நாம் யாவருக்கும் கடமையாகும்.

🔺என் சுற்றத்தார்களிடம் அன்பு வைக்க வேண்டுமென்பதைத் தவிர வேறெந்த கூலியையும் உங்களிடம் நான் கேட்க வில்லை என்ற வசனம் இறங்கியபோது, "நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நங்கள் அன்பு வைக்க கடமைப்பட்ட உங்களின் சுற்றத்தினர் யார்?" 
என்று ஸஹாபா பெருமக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவினார்கள். அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "
அலீ (ரலியல்லாஹு அன்ஹு), பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா), ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு), ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு)" என்று பதிலளித்தார்கள்.

🔺நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அலீ ரலியல்லாஹு அன்ஹு, பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா, ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு, ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் இருந்தனர். அவ்விருவரையும் தன் தொடையில் வைத்துக் கொண்டு ஒரு போர்வையால் எல்லோரையும் போர்த்தி, "நபியின் குடும்பத்தார்களே! உங்களை இறைவன் பரிசுத்தப்படுத்திவிட்டான்" என்ற ஆயத்தை ஓதினார்கள். 
பிறகு, "இறைவா! இதோ இவர்கள் என்னுடைய அஹ்லு பைத்துகளாகும். ஆகவே இவர்களை பரிசுத்தப்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.

மேற்படி போர்வைக்குள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்களில் ஒருவரான உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நுழைந்து கொள்ள முயன்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நுழைய விடாமல் தடுத்து விட்டதுடன், "நிச்சயமாக நீங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவிமார்களில் உள்ளவராகும்" என்று கூறியதாக வந்துள்ள ரிவாயத் இந்த இடத்தில் சிந்தனைக்குரியதாகும். (நூருல் அப்ஸார்)

அஹ்லுல் பைத்தினர்கள் சம்பந்தமாக வந்த ஹதீஸ்களில் சில

💝பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சுவனப் பெண்களின் தலைவியாகும். 
📚(புகாரி, முஸ்லிம், திர்மிதி)

💝"ஸெய்யிதுனா ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஸெய்யிதுனா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் சுவனத்து வாலிபர்களின் தலைவர்களாகும்" 
(திர்மிதி)

💝"மனிதர்களே அறிந்து கொள்ளுங்கள். எம்மிடம் மரண தூதுவர் வரும் நேரம் நெருங்கி விட்டது. நான் அவருக்கு விடையளிக்கப் போகிறேன். மேலும் நான் உங்களிடையே இரு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டில் முதலாவது அல்லாஹ்வின் வேதம். அதில் நேர்வழியும் பேரொளியும் இருக்கிறது. ஆகவே அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். 
இரண்டாவது அஹ்லுபைத்துக்கள் என்ற என் குடும்பத்தார்களாகும். ஆகவே அவர்கள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டுமென்று அல்லாஹ்வை முன் வைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்து கொள்கிறேன்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 3 முறை கூறினார்கள். 
📚(முஸ்லிம், மிஷ்காத்)

💝 "என் மறைவுக்குப் பிறகு என் குடும்பத்தாருக்கு நல்லவரே உங்களில் நல்லவர்" (மஜ்மஉஸ் ஸவாயித்)

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

தொழுகையின் அந்தரங்கம்


மஹான்  முஹம்மது தாஹிர் பாவா ஹசனி ரஹமத்துல்லாஹி அலைஹி,                  வழுத்தூர், தஞ்சை மாவட்டம் 



"ஓ. மனிதனே! உனக்கு உடலில்லை, உயிரில்லை நாமமில்லை, ரூபமில்லை. நீ ஆகாயமுமல்ல, ஆத்மாவுமல்ல! நீ யார் என்று பார்? உன் தத்துவங்களை ஞாபகம் செய்! நாம் விக்கிரஹத்தை நிக்ஹிரகம் செய்தால் (துவைதத்தை கைவிட்டு அத்துவைதத்தை கைகொண்டால் எல்லாம் நம்மையே வணங்கும்."

குருமகான் அவ்லாதுர் ரசூல், ஆரிஃபு பில்லாஹ், மஷாயிஹ், மவ்லான, மௌலவீ ஏ.முகம்மது தாஹிர் ஹஸனீ காதிரி (கத்தஸல்லாஹூ ஸிர்ரஹுல் அஜீஸ்  (படத்தில்) அவர்களின் போதனைகளை தொகுத்து எழுதி 1994ம் ஆண்டு இந்தியாவின் மதுக்கூரில் தெளிவகம் வெளியிடப்பட்ட சம்பூரண சுயம் பிரகாசம் (Complete Self-Illumination) நூலிலிருந்து.

ஆண்டவன் ஒவ்வொரு வஸ்திலும் ஒரு இன்பத்தைப் படைத்திருக்கிறான். இன்பமில்லாதது ஒன்றுமே இல்லை. ஒரு ஜீவனுக்குப் பிடிக்காதது மற்றொரு ஜீவனுக்கு ப்ரியமானதாயிருக்கும். இப்படியே இந்திரியங்களாலடையும் சுகத்தையும் உத்தேசித்துக் கொள்க. 

சரீர சுகத்தைப் பார்க்கிலும் இந்திரிய (புலன்கள்) சுகமே அதிக மேலானது. சரீரம் மட்டும் தனியே யாதொரு சுகத்தையும் அடையாது. இதற்கு இந்திரியமும் அவசியம் சம்பந்தப் பட்டேயிருக்க வேண்டும். ஆக எல்லா வஸ்திலும் இன்பமுண்டாயிருக்கிறது.

எல்லா வஸ்துவுமே இன்ப வடிவு, சர்வமுமே சுக வடிவு. இப்படியாக எல்லா வஸ்துக்களையும் இன்ப ரூபமாய் அமைத்தவன் மனிதனை எதற்காகப் படைத்தானோ அதிலும் விஷேஷமான இன்பமிருக்க வேண்டும். எதற்காகப் படைத்தது ஆண்டவனை வணங்குவதற்கு! அப்படியாயின் ஆண்டவனை வணங்குவதில் அல்லது தொழுவதில் இருக்கும் இன்பம் எல்லாவற்றையும் விட அதிக மேலானதாயிருக்கும் மனிதன் காரணம், அசல் மற்றவை நிமித்த காரணம்.ஆகவே மனிதனுடைய இன்பம் வேறெந்த வஸ்த்துவுக்குமில்லை. மனிதனே மேலான இன்பத்தை அறிவான்.

ஜுர நோய்காரனுக்கு தேன் கசப்பாயிருக்கும். ஆனால் தேன் கசப்பல்ல அது வியாதியின் சேஷ்டை. அப்படியே தொழுகையில் இன்பம் இல்லாது போனால், உடனே அந்த வியாதிக்கு பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அது ஆன்மா சம்பந்தமான சங்கடம் (பிணி) அனேகமாக ஞானம் இல்லாததால் உண்டாகும். சிகிச்சை ஆன்மீக வைத்தியர்களால் செய்யச் சாத்தியப்படும்.

உதாரணமாக ஸ்திரியின் இன்பத்தை அடையச் சக்தியில்லாது போனால் அனேக பொருட்களை செலவு செய்து சிகிச்சை செய்கிறான். அது குணமாகாது விடில் விசனிக்கிறான். இன்னும் அனேக இடங்களில் ரோசத்தினால் மாண்டும் இருக்கிறார்கள். இவ்வித மரணம் சில விடயங்களில் நடந்திருக்கலாம். 

கேவலம், “ஆகாயத்தில் பச்சி பறக்க அதன் நிழலை வேட்டையாடுவது போலும்” “எறிந்த கல்லை எழும்பென்றென்னி வாலையாட்டிக் கொண்டோடும் நாயைப் போலும்” “கஸ்தூரிக்காய் முற்றியவுடன் அதன் வாசத்தை சுவாசத்தில் எட்டிக் கொண்ட மானானது அதைத் தேடி அலைந்ததுபோலுமிருக்கிறது. எது சத்தோ அது அசத்தியத்திலிருக்காது. ஸ்திரியின் சுகம் ஆன்ம சுகத்திற்கீடாகாது என்றாலும், அதை அடுத்திருந்த போதிலும் சூரியனுக்கும் அதன் விம்பத்திற்கும் வித்தியாசமுண்டு.

காமத்திலுண்டாகும் சுகம் நீங்கிவிடும், கடவுள் அன்பினால் உண்டாகின்ற சுகம் நீங்கிவிடாது. ஆன்மாவுக்கு இன்பமே கடவுளின் அன்பு. ஆன்மாவுக்கு ஸ்திரி சரியான ஜோடியல்ல. கடவுளே சரியான ஜோடி. ஆன்மாவுக்கு கடவுளுடன் அனுபவிக்கும் ஆனந்தம் அபாரசக்தியுள்ளது. 

இதற்கு சரியான உவமானம் சொல்ல தரிபடாததால் விளக்கத்திற்காக ஸ்திரியின் சம்பவத்தை எடுத்துக் காட்டப்பட்டது. அனுபோகிகளுக்கு நன்றாய் விளங்கியிருக்கும். 

ஆன்ம சுகம் தெரியாத பேடிகள், ஆண்டவனோடு சுகிக்க, ஆரோக்கியம் பெற, ஆனந்திக்க இன்பமடைய வேண்டுமானால், தங்கள் பேடித்தனம் நீங்கத்தக்க பரிகாரம் செய்யவேண்டும். தன் மனைவியுடன் கூடச் சக்தியில்லாவிட்டால் எவ்வளவு அவமானம்! நம்மையாளும் கர்த்தா தன்னுடன் கூடி ஆனந்திக்க சக்தியில்லாமல் போனால் அதிலும் கொடிய மானக்கேடு! இந்த ஆன்ம சம்பந்தமான பிணி அல்லது பேடித்தனம் நீங்க ஏன் கவலையில்லை? அதில் நாம் அதிகம் கவலையெடுக்க வேண்டும். ஒருவன் மனைவி வேறொருவனை இச்சிக்க அவனுக்கு இஷ்டமிருக்குமா? இருக்காது. அப்படியே ஆண்டவனை விட்டு வேறொரு வஸ்துவை இச்சிக்க ஆண்டவனுக்கு பொருத்தமிருக்காது. 

ஆண்டவனை விட்டு வேறொரு வஸ்துக்கு நாம் அச்சப்படவும், ஆண்டவனைத் தவிர வேறொரு வஸ்துவின் பேரில் நம்பிக்கை வைக்கவும் அவனுக்கு இஷ்டமில்லை.

நமது இன்பத்திற்கு ஊற்றுக்கண் ஆண்டவன். சகல இன்பத்தையும் நாம் அங்கிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். சகலதையும் அவனிடம் ஒப்புவித்துவிட வேண்டும். பாவத்தைவிட வேண்டும். அவனிடம் அடி எடுத்துவைத்துப் பின்வாங்கக் கூடாது. எல்லாக் கஷ்டத்தையும் சகிக்க வேண்டும். இந்திரியங்களை அடக்க வேண்டும். ஆங்காரத்தை நாசம் செய்ய வேண்டும். அப்படியிருந்தால் மின்னலைப் போன்று ஒரு ஒளி பிரகாசித்து வீசும்!

அந்த ஆன்மாவில் ஆழமாக குணம் செய்கின்றன. அப்படியே ஆன்மாவின் சுகம் சரீரத்திலும் தாவுகின்றன. நமக்கு சிரிப்பு உண்டானால் சந்தோசமும், அழுகையுண்டானால் துக்கமும் உண்டாகின்றது. ஆகவே தொழுகையில் சாஷ்டாங்கம் முதலானது வீணல்ல. நமது உறுப்புக்கள் ஓய்ந்து நமது எண்ணங்கள் அசைவற்று ஒற்றுமைப்பாட்டை அதிகப்படுத்தும். இப்படித் தொழுவதால் இன்பமில்லாமல் போகாது.

சாராயம் குடிகத்துவங்கிறவன் ஆரம்பத்தில் யாதொரு இன்பமுமில்லாமல்தான் குடிக்கிறான். வரவர குடிக்கக் குடிக்க ஒரு இன்பத்தைப் பெறுகிறான். பிறகு நிறுத்த அவனால் முடியவில்லை. விடமுடியாத காரணமென்ன? அதைப் போல் தொழுகையை விடாமல் தொழுது வந்தால் ஆரம்பத்தில் இன்பமில்லாவிட்டாலும் வரவர இன்பமுண்டாகும். தொழுகையை விட முடியாது. 

“தலையில் இருக்கிற சுமையை இறக்கித் தள்ளுவதுபோல் தொழுவதும், ராஜனுக்கு வரி செலுத்துவதுபோல் செலுத்துவதும், இது மனமில்லாமல் தொழுகிற தொழுகையாயிருக்கும். ஆண்டவனுக்கு இது அவசியம் போலிருக்கிறது? அவன் தேவையற்றவன் இது நமக்குத்தான் அவசியம் அவன் கட்டளையினால் நாமே பயனடைகின்றோம். நம் நாட்டத்தை அவனிடம் பெற்றுக் கொள்கின்றோம்.

நம்மிடத்தில் ஞானமும், பக்தியும் ஒன்றுதான் வேறாகாது, அவரவர்கள் பதவிக்கேற்றபடி ஒரு லச்சியத்தின் பேரில் இருந்தாலும் சரி. தபம் கூடாதென்பதும், தபம் வேண்டுமென்பதும் இரண்டையும் வேறாகக் கூறுவதுதான். விளக்கத்திற்காக இரண்டையும் வேறாக கூறுவது சரியே. இவ்வளவு சன்னமான பேச்சுக்களை விளங்காதவர்கள் தொ ழுகிறவர்களை கண்டிப்பதும், தொழாதவர்களை நிர்பந்தம் செய்வதும் வழக்கம். 

ஜடப் பொருட்களில் எல்லாம் ஆன்மஒளி பரவியிருக்கிறது. ஜடபொருளில்லாமல் ஆன்மாவை தனியே காண தோதுயில்லை. கர்ப்பத்தில் அது இந்திரியத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறது. நாம் உணரலாதவிதமாக கர்பத்தை வளர்த்து வருகிறது. அப்படியே அப்படியே தொழுகையின் ஆரம்பத்தில் அப்வொளி பிரகாசிக்கிறது. பிண்டத்திலும் அவயங்கள் வளர வளர ஆன்ம ஒளி பிரகாசித்து உறுப்புகளை அசைய செய்து ஜடத்திற்கு வேறாக ஒரு பொருளிருப்பதாக காட்டி விடுகிறது.

அப்படியே நாம் தொழுகையிலும் மின்னலைப்போல் பிரகாசித்து அவ்வொளி அதிகத் துலக்கமாய், மேலே நமது அன்பினால் ஊர்த்துவ முகமாய் ஏறும். இதற்கு பகரமாக அதே முகமாய் கடவுள் அன்பினாலும் ஒர் ஒளி இறங்கும். இரண்டும் சந்திக்கும் இதுவே ஆண் பெண்னின் இரகசியம் என உவமை கூறப்பட்டது. 

ஆண்டவன் அடிமைக்குள்ள சம்பந்தம், பேரானந்தம் மன வெளிச்சம், கடவுள் சம்பாஷணை, கேட்கப்பட்டது கிடைக்கும் அற்புதம், சொர்க்கத்தின் இன்பம், கடவுள் தரிசணம், எல்லாம் கிடைக்கும் இதற்கு மேல் சொல்வது வழக்கமில்லை தாமே அறிவார்கள்.

மனிதர்கள் சந்ததியை வெளிப்படுத்த வேண்டுமென்று, மனிதர்கள் இதில் ஹிம்சை கூடாதென்று கடவுள் ஆணுக்கும் பெண்னுக்கும் இன்பத்தை உண்டாக்குகின்றான். இல்லாவிட்டால் இந்தப் பெரிய காரியத்தை செய்வதற்கு இருவரும் அபிமானம் அல்லது வெட்கஸ்தளங்களை காட்டுவதற்கு அவர்களிடம் இருக்கும் வெட்கம் ஒருபோதும் இடம் கொடாது. மற்றப்படி சில புத்தியில்லாதவர்கள் இந்த இன்பத்தையே பெரிதாகக் காணுகிறார்கள். சிலர் தொழுகையின் அங்கங்களையெல்லாம் சேர்த்து வாதிக்கிறார்கள். (இலாஹீயத்து) பரஸ்பரம் எல்லோருக்கும் பொது.

மனிதனல்லாது எந்த ஜீவன் எப் பொருள்களுக்கும் பரஸ்பரம் பொதுவாயிருக்குமென்பது, அலியாயிருப்பவனுக்கும் கால் அல்லது கையில்லாதவனுக்கும் பரஸ்பரத்துக்கு வழியில்லாமல் போகிறது.

சனி, 17 அக்டோபர், 2015

அழகிய முடிவு

“எல்லாப் படைப்புக்களின் எதார்த்தம் இந்தப் பூஜ்யம்தான். சூஃபிகள் உணர்ந்த ஞானம் இது. இருப்பது இறைவன் மட்டுமே. அவனே உள்ளமை (உஜூத்). இருக்கும் உள்ளமை ஒன்றே, ஏக உள்ளமை – வஹ்தத்துல் உஜூத். இதுவே ஏகத்துவ ஞானம் (இல்முத் தவ்ஹீத்).
அந்த இறைவனின் சுயம் பூர்வீகமானது (தாத்தெ கிதம்). படைப்புக்களின் சுயம் வெறுமை (தாத்தெ அதம்). ’அடிமை’ (அப்து) என்னும் சொல்லின் தாத்பரியம் இதுவே. எனவே ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு பூஜ்யம்.
பூஜ்யத்தில் இருந்தே மற்ற எண்கள் பலுகிப் பெருகியுள்ளன. சிலர் பத்தாக இருக்கிறார்கள். சிலர் ஒன்பதாக இருக்கிறார்கள். சிலர் எட்டாக இருக்கிறார்கள். ஆளுமைச் சிதைவுகள். இதில் தான் யார் என்பதில் குழப்பம். சில காலம் இது என்றும் சில காலம் அது என்றும் மயக்கம். தொடர்ந்து ஒரே நபராக இருப்பதில் தயக்கம். பொய் ஆளுமை சிதையும் போது கலக்கம்.
ஆன்மிகம் என்பது கவ்ண்ட் டவ்ன். 10 9 8 7 6 5 4 3 2 1 0.
”இறைவனே இருக்கிறான், நான் இல்லை” என்பதை உணர்ந்து கொண்ட ஒருவன், தன்னைப் பூஜ்யம் என்று உணர்ந்து கொண்ட ஒருவன் ஆகிறான். பிரபஞ்சம் அத்தகைய ஒருவனையே பூஜ்யஸ்ரீ என்று கொண்டாடும். அவனே இறை உள்ளமையின் கண்ணாடி.
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் பூஜ்ய நிலையில் திளைத்திருக்கிறது. அழகான ஆரோக்கியமான பூஜ்யங்கள் (Beautiful healthy zeros).
’அனைத்து வஸ்துக்களும் என் ஒளியிலிருந்து வந்தன’ என்கிறார்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
’பிரபஞ்சத்தை வளைக்கும்
மாபெரும் பூஜ்யம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என்றார்கள் சூஃகபிள்.
மத வாழ்வைப் பொருத்த வரை மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள் 1.அறிபவர்கள், 2.ஆற்றுபவர்கள், 3.ஆகுபவர்கள்.
Knowing ones; Doing ones; Being ones.
இவை மூன்றும் முறையே ஆன்மிகத்தின் படிநிலைகள் என்று காணலாம்.
பலர் ஆன்மிக விஷயங்களை அறிவதோடு நின்று விடுகிறார்கள். அவர்களில் சிலரே செயலாற்றும் நிலைக்கு உயர்கிறார்கள்.
அவர்களில் பலர் வழிபாடுகள் தியானங்கள் செய்வதோடு நின்று விடுகிறார்கள். சிலரே அதுவாகி இருத்தல் என்னும் நிலையை அடைகிறார்கள்.
அறிதல் என்பது க்கால் (qaal – பேச்சு) மட்டுமே.
ஆற்றுதல் என்பது ஃபஅல் (fa’al – செயல்) மட்டுமே.
ஆகுதல் என்பதே ஹால் (haal - அனுபவ நிலை).
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த ஒரு பிரார்த்தனை இம்மூன்று கட்டங்களையும் குறிக்கிறது:
“அல்லாஹும்மர்ஸுக்னா இல்மத் தவ்ஹீதி வ அமலல் இஃக்லாஸி வ ஹுஸ்னல் ஃகாத்திமா”
(அல்லாஹ்வே! எமக்கு ஏகத்துவ அறிவும் பரிசுத்த வழிபாடும், அழகிய முடிவும் அருள்வாயாக”
இறுதியில் அவனாகும் நிலையே அழகிய முடிவு.

வியாழன், 8 அக்டோபர், 2015

"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"

"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...
“நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
"ஆணவம் ஆயுளை குறைக்கும்..."

மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி,
ஆனந்தமாக வாழுங்கள்..