செவ்வாய், 20 அக்டோபர், 2015

அஹ்லுல் பைத்தினர்கள் என்பவர்கள் யார்?

அஹ்லுல் பைத்தினர்கள் என்பவர்கள் யார்? 
அவர்களின் சிறப்புகள் என்ன?
மற்றும் அவர்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம்....??

ஸாதாத்துமார்கள் என்றால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த இரத்தத்திலிருந்து உதித்தவர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கென்று தனிப்பட்ட தகைமையும் கௌரவமும் இருக்கிறது என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது அல்ல. என்றாலும் குழப்பமும் குதர்க்கமும் நிறைந்த இக்கால கட்டத்தில் அவர்களைப்பற்றிய மரியாதையைக் குலைப்பதற்காகவே ஒரு கூட்டம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. எனவே ஸாதாத்துமார்களைப்பற்றிய மாண்புகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நாம் யாவருக்கும் கடமையாகும்.

🔺என் சுற்றத்தார்களிடம் அன்பு வைக்க வேண்டுமென்பதைத் தவிர வேறெந்த கூலியையும் உங்களிடம் நான் கேட்க வில்லை என்ற வசனம் இறங்கியபோது, "நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நங்கள் அன்பு வைக்க கடமைப்பட்ட உங்களின் சுற்றத்தினர் யார்?" 
என்று ஸஹாபா பெருமக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவினார்கள். அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "
அலீ (ரலியல்லாஹு அன்ஹு), பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா), ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு), ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு)" என்று பதிலளித்தார்கள்.

🔺நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அலீ ரலியல்லாஹு அன்ஹு, பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா, ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு, ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் இருந்தனர். அவ்விருவரையும் தன் தொடையில் வைத்துக் கொண்டு ஒரு போர்வையால் எல்லோரையும் போர்த்தி, "நபியின் குடும்பத்தார்களே! உங்களை இறைவன் பரிசுத்தப்படுத்திவிட்டான்" என்ற ஆயத்தை ஓதினார்கள். 
பிறகு, "இறைவா! இதோ இவர்கள் என்னுடைய அஹ்லு பைத்துகளாகும். ஆகவே இவர்களை பரிசுத்தப்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.

மேற்படி போர்வைக்குள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்களில் ஒருவரான உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நுழைந்து கொள்ள முயன்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நுழைய விடாமல் தடுத்து விட்டதுடன், "நிச்சயமாக நீங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவிமார்களில் உள்ளவராகும்" என்று கூறியதாக வந்துள்ள ரிவாயத் இந்த இடத்தில் சிந்தனைக்குரியதாகும். (நூருல் அப்ஸார்)

அஹ்லுல் பைத்தினர்கள் சம்பந்தமாக வந்த ஹதீஸ்களில் சில

💝பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சுவனப் பெண்களின் தலைவியாகும். 
📚(புகாரி, முஸ்லிம், திர்மிதி)

💝"ஸெய்யிதுனா ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஸெய்யிதுனா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் சுவனத்து வாலிபர்களின் தலைவர்களாகும்" 
(திர்மிதி)

💝"மனிதர்களே அறிந்து கொள்ளுங்கள். எம்மிடம் மரண தூதுவர் வரும் நேரம் நெருங்கி விட்டது. நான் அவருக்கு விடையளிக்கப் போகிறேன். மேலும் நான் உங்களிடையே இரு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டில் முதலாவது அல்லாஹ்வின் வேதம். அதில் நேர்வழியும் பேரொளியும் இருக்கிறது. ஆகவே அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். 
இரண்டாவது அஹ்லுபைத்துக்கள் என்ற என் குடும்பத்தார்களாகும். ஆகவே அவர்கள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டுமென்று அல்லாஹ்வை முன் வைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்து கொள்கிறேன்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 3 முறை கூறினார்கள். 
📚(முஸ்லிம், மிஷ்காத்)

💝 "என் மறைவுக்குப் பிறகு என் குடும்பத்தாருக்கு நல்லவரே உங்களில் நல்லவர்" (மஜ்மஉஸ் ஸவாயித்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக