வெள்ளி, 29 ஜூன், 2012

எல்லைக்காவலில் எல்லை காந்தி - 3



தேசப் பிரிவினை: தேசப்பிரிவினையை முழுதும் எதிர்த்த கஃபார்கான் எப்படியாவது பிரிவினையைத்தடுத்துவிட முனைந்தார். அவருக்குக் கிடைத்தது முஸ்லிகளின் எதிரி என்ற பட்டம். அதன் காரணமாக 1946ல் சக பஷ்தூன் மக்களாலேயே தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

1947ல் பிரிவினைக்கு முன்பு பிரிட்டிஷார் எடுத்த வாக்கெடுப்பில் லஞ்சம் கொடுத்தும், பலரை கலந்துகொள்ள விடாமலும் செய்து பெருவரியான மக்கள் பாக்கிஸ்தானுடன் இணைவதையே விரும்புவதுபோல முடிவுகளை உண்டாக்கினர் பிரிட்டிஷார்.

தனியானதொரு பஷ்தூனிஸ்தான் என்ற தனிநாடு பிரிவதற்கு வாய்ப்புத் தராமல் இந்தியாவுடனா, பாகிஸ்தனுடனா என்ற கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கும்படி செய்தனர், பிரிட்டிஷார். இதன் காரணமாக கஃபார்கான் இந்த ஒட்டெடுப்பை புறக்கணிக்கும்படி சொல்ல வேண்டியதாயிற்று.

பிரிவினையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் அடைபட்டுப் போனதால் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. அப்போது கான் அப்துல் கஃபார்கான் காந்தியடிகளையும், இந்திய தேசிய காங்கிரஸில் இருந்தவர்களையும் பார்த்து கடைசியாக சொன்னது :

''எங்களை ( பஷ்தூன்களையும், கடவுளின் சேவகர்கள் அமைப்பினரையும்) கடைசியில் ஓநாய்களிடம் தூக்கிப்போட்டு விட்டீர்கள்” என ஆறவொண்ணா மன வருத்ததுடன் சொன்னார்.

காந்தியடிகளின் உண்மைச் சீடராக இறுதிவரை அஹிம்சையில் நம்பிக்கை இழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தானின் தோற்றத்திற்குப் பின் கஃபார்கானின் நிலை: முகமது அலி ஜின்னாவினால் பலப்பல காரணங்களுக்காய் இவர் வீட்டுக் காவலிலும், சிறையிலும், அடைக்கப்பட்டார். 1948 முதல் 1954 வரை எந்தவிதக் குற்றமும் சாட்டப்படமல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது அவர் மனம் வருந்திச் சொன்னது. “பிரிட்டிஷ் ஆட்சியிலும் சிறை செல்ல நேர்ந்திருக்கிறது. அவர்களுடன் மோதலிலும் இருந்தோம். ஆனால் அவர்களது சிறையில் எனக்கு நடந்த கொடுமைகள் தாங்க முடிவதாகவும், அவர்கள் குறைந்தபட்ச நாகரீகத்துடனும் நடந்துகொண்டர்கள். ஆனால் எனக்கு நமது இஸ்லாமிய நாட்டுச் சிறையில் நடந்த கொடுமைகளையும், அவமதிப்புகளையும் வெளியில் சொல்லக் கூட விரும்பவில்லை என்றார்.”

1962ல் ஆம்னஸ்டி இண்டர்நேஷனலின் அந்த ஆண்டுக்கான சிறைக்கைதியாய் தேர்ந்தெடுத்தது. ''இவரது நிலையே உலகம் முழுதும் சிறையில் வாடும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனசாட்சிப்படி நடந்துகொண்டோரின் நிலை” எனக் கூறியது.

1964ல் இவரது சிகிச்சைக்காக இங்கிலந்து சென்றார். அங்கிருந்து மேல் மருத்துவம் செய்வதற்காக அமெரிக்கா செல்ல வேண்டியதிருந்தது. இவரது பாகிஸ்தானிய தொடர்பினால் அமெரிக்கா இவருக்கு விசா வழங்க மறுத்தது. இறுதியில் 1988 , ஜனவரி 20ல் பெஷாவரில் வீட்டுக்காவலில் இருக்கும்போது மரனமடைந்தார்.

அவரது ஆசைப்படி அவரது நல்லடக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலாலாபாத்தில் செய்யப்பட்டது. அவரை கவுரவிக்கும் முகமாக ஐந்து நாட்கள் அரசு விடுமுறை அளித்தது இந்தியா. தனது வாழ்நாளில் 52 ஆண்டுகளை சிறையிலும், வீட்டுக்காவலிலுமே கழித்தார். இஸ்லாமிய நாடு பிரிக்கக் கூடது என சொன்னதற்காக அவரைப் பற்றிய எந்தக்குறிப்பும் பள்ளிப்பாடங்களில் வராமல் பார்த்துக் கொண்டது இஸ்லாமிய அடிப்படைவாத பாகிஸ்தானிய அரசாங்கம்.

காந்தியக் கொள்கையான அஹிம்சையையும், நாடுபிரிவினைக்கு தள்ளப்படக் கூடாது என்பதற்காக தனது வாழ்க்கையையே பணயம் வைத்த கான் அப்துல் கஃபார்கானின் வாழ்க்கை உண்மையும் சத்தியமும் என்றும் தோற்பதில்லை என்பதை என்றும் நிலைநாட்டிக்கொண்டே இருக்கும். மதத்தின் பெயரால் நாட்டைப் பிரிவினை செய்தாக வேண்டும் என முழங்கிய பிரிவினைவாதி ஜின்னாவின் பிடிவாதத்தால் உருவான பாகிஸ்தான் இன்று மதவெறியர்களின் பிடியில் சிக்கி சீரழிவதைப் பார்க்கிறோம்.

எல்லைக்காந்தியை ஒத்த சிந்தனையாளர்கள் இருந்திருந்து, எல்லைகாந்தியின் முயற்சியும் வென்றிருந்தால் பிரிவினையே இல்லாமல் கஃபார்கானும் , காந்தியும் கனவுகண்ட ஒரு சமதர்ம சமுதாயம் இணைந்த இந்தியாவில் உருவாகிவிட்டிருக்கும்.

எல்லைக்காவலில் எல்லை காந்தி - 2



குதாய்கித்மத்கர்: காலப்போக்கில் கஃபார்கானின் எண்ணம், செயல் எல்லாம் ஒருங்கிணைந்த, மதச்சார்பற்ற, சுதந்திர இந்தியாவாகியது. அதற்கு அவர் காந்தியக் கொள்கையான சத்யாக்கிரகத்தைத் தேர்ந்தெடுத்தார். தனது கனவை அடைய அவர் ஆரம்பித்த இயக்கத்திற்கு குதாய்கித்மத்கர் (கடவுளின் சேவகர்கள்) எனப் பெயரிட்டார். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பஷ்தூன் இனமக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர் திரட்டினார். அவர்களிடம் கஃபார்கான் பேசும்போது..

“ நான் உங்களுக்கு போலீசாலும், ராணுவத்தாலும் ஒன்றும் செய்ய இயலாத ஒரு ஆயுதத்தை வழங்கப் போகிறேன். அது நமது தீர்க்கதரிசியின் ஆயுதம். ஆனால் அது உங்களுக்குத் தெரியாது. அது என்னவெனில் பொறுமையும், சத்தியமும். உலகின் எந்த சக்தியாலும் அதை எதிர்த்து நிற்க முடியாது”

இந்த இயக்கம் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைந்தது, பிரிட்டிஷாருக்கு எதிராக அஹிம்சையினாலும், ஒத்துழையாமையாலும். வடமேற்கு மாகாணத்தில் அது ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றது. அதன் அரசியல் பிரிவை கஃபார்கானின் தம்பி டாக்டர்.கான் அப்துல் ஜாஃபர்கான் நடத்தி வந்தார். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீகைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா அவரது அரசை கலைக்கும் வரை முதல்வராக இருந்தார்.

இந்திய தேசியக் காங்கிரஸ் உடனான காஃபார்கானின் உறவு: தேசப்பிதாவும், அஹிம்சைக் கொள்கையின் முன்னோடியுமான காந்தியடிகளுடன் இதயபூர்வமான, எந்த உள்நோக்கங்களும் அற்ற ஒரு பக்திபூர்வமான உறவைப் பேணினார், கஃபார்கான். அவரது ”கடவுளின் சேவகர்கள்” படையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டது. இந்திய தேசிய காங்கிரசில் அவரை தலைவர் பதவியை எடுத்துக்கொள்ளும்படி வேண்டினர். நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் எனக்கூறி அந்தப் பதவியையே மறுத்தவர்.

ஏப்ரல் 23, 1930 ல் காந்தியடிகள் அறிவித்த உப்புசத்தியாக்கிரகத்தை பெஷாவரில் உள்ள கிஸ்ஸா கஹானி பஜாரில் தொடங்கினார். அதை எதிர்கொள்ள பிரிட்டிஷார் ஆயுதம் ஏதுமின்றி சத்தியாக்கிரஹ முறையில் போராட வந்த கஃபார்கானினால் வழிநடத்தப்பட்ட தொண்டர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தொண்டர்களும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது போலவே எந்த எதிர்ப்பும் காட்டாமல் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாயினர்.

இறந்தவர்களை ஓரமாக கிடத்தி விட்டு அணியணியாக வந்து ராணுவத்தின் குண்டுகளுக்கு கிட்டத்தட்ட 200 பேர் இரையாயினர். ஒரு கட்டத்தில் ராணுவத்தினரே சுட மறுத்த நிலை உண்டானது. அவ்வாறு சுட மறுத்த வீரர்கள் கடுமையாக பின்னர் தண்டிக்கப்பட்டனர்.

கஃபார்கான் சத்தியாக்கிரஹம் மற்றும் பெண் விடுதலையின் முன்னோடியாக திகழ்ந்தார். வன்முறையையே வாழ்க்கையாகக் கொண்ட சமூகத்தில் இவரது தனித்துவமான சிந்தனைகளுக்காகவும், தைரியத்திற்க்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டார்.

அவர் இறக்கும்வரை அஹிம்சையின் மீதான நம்பிக்கையை இழக்காமலும், அஹிம்சையும், இஸ்லாமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்ல முடியும் என முழுமூச்சுடன் நம்பியதும் இல்லாமல் வாழ்ந்தும் காட்டினார். காந்தியடிகளுடன் நெருக்கமானவராக அறியப்பட்டு காந்தியடிகளின் கொள்கைகளை பிரிக்கப்படாதிருந்த எல்லையில் செயல்படுத்தியதால் 'எல்லைக்காந்தி' எனவும் அழைக்கப்பட்டார்.

எல்லைக்காவலில் எல்லை காந்தி - 1

இந்தியக் குடியுரிமை இன்றியே இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான பாரத ரத்னாவைப் பெற்றவர் (1987) 

ஒருவர் மீது ஒருவர் வன்மமும், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வாழ்ந்திருந்த பஷ்தூன்கள் கூட்டத்தில் பிறந்தும் அகிம்சையை மட்டுமே போதித்து தனக்கும் தான் பிறந்த இனத்திற்கும், இஸ்லாத்திற்கும் கவுரவத்தையும், மரியாதையையும் பெற்றுத் தந்த மகத்தான இஸ்லாமியர்

பிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்டு விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நிற்போம் என இந்திய இஸ்லாமியர்கள் முடிவெடுத்தபோது அவர்களின் முடிவுகளுக்கெதிராய் ஆங்கிலேயரை அகிம்சை வழியில் எதிர்த்தவர்

1985ம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட, அன்பே உருவான ராமகிருஷ்ன பரமஹம்சரின் வடிவத்தை ஒத்த கான் அப்துல் கஃபார்கான் தான் அவர்.

ஒருங்கினைந்த இந்தியாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் காவல்காரராக செயல்பட்டதால் 'எல்லைக்காந்தி' எனவும் அழைக்கப்பட்டார்.

இளமைக் காலம்: 1890ம் ஆண்டு ஹர்ஷ்ட் நகர், ஷர்சாடா என்ற கிராமத்தில் பிறந்தார். உள்ளூர் முல்லாக்களின் எதிர்ப்புகளையும் மீறி இவரது தந்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த எட்வர்டு மிஷன் பள்ளியில் படித்து வந்தார். நன்றாகப் படித்த கஃபார் கான் அவரது ஆசிரியர் ரெவெரெண்ட் விக்ரம் என்பவரால் ஈர்க்கப்பட்டு சமூக முன்னேற்றத்தில் கல்வியின் பங்கு குறித்து அறிந்து கொண்டார்.

பள்ளி இறுதி ஆண்டில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் உயர்ந்த பதவியான தி.கைட்ஸ் என்ற பஷ்தூன் வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த பட்ச பட்டம் வழங்கப்பட்டது. அந்தப் பட்டத்திற்குப் பின்னரும் இரண்டாம் தர குடிமகனாகவே தான் நடத்தப்படுவதை அறிந்ததும் அந்த கைட்ஸ் பட்டத்தை திருப்பி அளித்து விட்டார்.

அவரது அண்ணன் ஏற்கனவே லண்டனில் படிக்க சென்றிருந்ததால் மேற்படிப்புக்கு லண்டன் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தாயின் அனுமதி கிடைக்கவில்லை என்பது ஒருபுறம், மற்றும் சமயத்திற்கு எதிரானதாக முல்லாக்கள் கருதியதாலும் தகப்பனாரின் நிலபுலன்களை பார்த்துக்கொள்ளத் தலைப்பட்டார். ஆனாலும் தனது சமூகத்திற்காக என்ன செய்வது என்பது பற்றியே அவரது மனம் நினைத்துக் கொண்டிருந்தது.

பாட்சா கான் ஆதல்: தன்னால் தொடர முடியாத படிப்பை பிறர் தொடர உதவினார். பிரிட்டிஷார் புதியதாகப் பிரித்த வடமேற்கு மாகாணத்தில் அவர் வாழ்ந்த பஷ்தூனும் அமைந்து விட்டது. இது ரஷ்யாவுக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கும் அரசியல் ரீதியாக மிகமுக்கியமான இடமாக அமைந்து விட்டது, ஒருபக்கம் பிரிட்டிஷாரின் ஒடுக்குமுறை, மறுபக்கம் முல்லாக்களின் அடக்குமுறை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கஃபார்கான் தனது இருபதாவது வயதில் முதல் பள்ளியை உத்மன்சாய் என்ற இடத்தில் தொடங்குகிறார்.

அது உடனடி வெற்றியைத் தர அவரைப்போலவே சிந்திப்பவர்கள் அனைவரும் அவருடன் இனைந்தனர். 1915 முதல் 1918 வரை பஷ்தூன் இனமக்கள் வாழும் 500 மாவட்டங்களுக்கும் பயணம் செய்ததும், அவரது நட்புறவு செய்தியும் அவரை பாட்ஷாகான் என அழைக்கப்பட வைத்தது.

திருமணமும் குழந்தைகளும்: முதலில் ஒரு திருமணம், இரு குழந்தைகள். மனைவி இன்புளுயென்சாவில் மரணமடைய இரண்டாம் திருமணம் இரண்டாவது மனைவியின் மூலம் ஒரு மகளும், மகனும் பிறந்தனர். இரண்டாம் மனைவியும் வீட்டில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து இறக்கிறார். முதல் மனைவிக்கு பிறந்த அப்துல் கனி கான் பெரிதும் அறியப்பெற்ற பாடகரும், கவிஞரும் ஆவார்.

வியாழன், 28 ஜூன், 2012

பின்பற்றப்பட வேண்டிய பத்து ஆலோசனைகள்....

சுஜாதாவின் பின்பற்றப்பட வேண்டிய பத்து ஆலோசனைகள்....

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்..

பொன்மொழிகள் - எழுத்தாளர் சுஜாதா

1)நாம் எடுத்துக்கொள்வதுதான் வாழ்க்கை. எப்போதும் அது அபபடித்தான் இருந்தது, இருக்கும். வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி தராது. அதை விரும்ப வேண்டும். வாழ்க்கை உனக்கு நேரமும் இடமும் மட்டும் தரும். நிரப்ப வேண்டியது உன் சாமர்த்தியம்.

2)எந்தச் சமயத்திலும் கைவிடாமல் குறிக்கோள் வைத்து வெல். முயற்சியை நிறுத்தும்போதுதான் தோற்கிறாய்.

3)தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான் சாம்பியன்கள் மற்றவர்கள் நம்பவில்லையென்றாலும் 'நம்மால் முடியும்' என்பதை நம்பியவர்கள், முடியும் என்றால் முடியும்.

4)தோல்வியிலிருந்து எதும் கற்றுக் கொள்ளாவிட்டால்தான் அது உண்மையான தோல்வி.. தோல்வி உங்களை அடையாளம் காட்டும் நான் மற்றபடி வாழ்ந்தால் இன்னும் தப்புகள் செய்வேன்.

5)களத்தில் குதியுஙகள். கைகள் அழுக்காகட்டும், தடுக்கி விழுங்கள். எழுந்து நட்சத்திரங்களைச் சாடுங்கள்.

6)மேதை என்பது ஒரு சதவிகிதம்தான் உள்ளுணர்வு மற்றதெல்லாம் வியர்வை. ஆபத்தில்லாத, ரிஸ்க் எடுக்காத பாதைதான் அதிக ஆபத்தானது.

7)வெற்றிக்கு அதிக நாளாகும். நாள் மட்டும்தான்.

8 )சின்ன காரியங்களை நன்றாக இப்போது செய்யுங்கள். நாளடைவில் பெரிய காரியங்கள் உங்களைத் தேடிவரும். எல்லா ஆரம்பங்களும் சிறியவையே ஆரம்பிப்பதுதான் கடினம்.

9)வாய்ப்புகளைப் பெரும்பாலோர் தவறவிடுவதற்குக் காரணம் அவை உழைப்பு வடிவத்தில் வருவதால். இதுதான் சந்தர்ப்பம் என்று எதிலும் எழுதி ஒட்டியிருக்காது.

10)கிடைப்பது உயிர் வாழப்போதும். கொடுப்பதில்தான் நிஜ வாழ்க்கை இருக்கிறது. மற்றறவரை உற்சாகப் படுத்தும்போது நமக்கு எத்தனை உற்சாகம் ஏற்படுகிறது!

11)யாரும் தான்தோன்றியல்ல. நம்மை ஆக்கியவர்கள் ஆயிரம்பேர், ஒவ்வொருவரும் நமக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார்கள். உற்சாக வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். குணத்திலும், எண்ணத்திலும், வெற்றியிலும் உதவியிருக்கிறார்கள்.

12)நட்சத்திரமாக சொந்த வெளிச்சம் தேவை, சொந்தப்பாதை தேவை. இருட்டைக் கண்டு பயப்படக்கூடாது இருட்டில்தான் நடசத்திரங்கள் நன்றாக ஜொலிக்கும்.

13)தினம் பத்து நிமிஷமாவது படியுங்கள். தினம் படிக்க வேண்டியது முக்கியம். மனசுக்குள் படியுங்கள்
ஒரே சமயத்தில் நான்கைந்து புத்தகம் வைத்துக் கொண்டு படிக்கலாம்

14)எல்லோருடைய முதல் புத்தகங்களை படியுங்கள். இருபது விழுக்காடு ·Fiction, எண்பது Non-Fiction. படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை வைத்திருங்கள்

15) வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் க்யூ வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்போதெல்லாம் புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள்

16)நூலகங்களுக்கு குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள்.

நன்றி : சினிபைல்

கற்பில் கவனம் தேவை



( தேங்கை ஷறஃபுத்தீன் மிஸ்பாஹி )


அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கிய பாவங்களுக்கு மத்தியில்- கொலை – கொள்ளை, திருட்டு, மது அருந்துதல், மோசடி செய்தல், அவதூறு பரப்புதல், பொய் – புறம் பேசுதல் போன்ற பாவங்களெல்லாம் ‘ஆண் – பெண்’ ஆகிய இரு பாலருடனும் தனித்தனியே தொடர்புடையவையாகும். ஆனால் விபச்சாரம் எனும் கொடிய பாவம் மட்டும் இரு பாலரின் கூட்டு முயற்சியால் உருவாகக் கூடியதாகும். இந்தப் பாவம் இன்றைய காலகட்டத்தில் பெருகிக் கொண்டே வருவதை பத்திரிகைச் செய்திகளின் மூலம் நம்மால் உணர முடிகிறது.

சிவப்பு விளக்குப் பகுதிகளிலும் விடுதிகளிலும், உல்லாச மாளிகைகளிலும் ஒடுங்கிக் கிடந்த விபச்சாரம் இந்நாளில் ‘செல்போன்’ மூலம் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு சாலையோரத்தில் மாருதி கார்களில் நடைபெறுமளவிற்கு மலிந்து விட்டது. ‘இன்டர்நெட்’ மூலம் வாடிக்கையாளர்களுக்கு வலை வீசும் அளவு சமீபத்தில் மேலும் பெருகி விட்டது விபச்சாரம். இந்த விபச்சாரம் வெறும் கண்பார்வையால் கூட நிகழாமல் தடுக்கத் தீய ஆசைப் பார்வையை விலக்கிய விந்தை மார்க்கம் இஸ்லாம் ஆகும்.
  
ஒவ்வோர் ஆணும் ஒவ்வொரு பெண்ணும் தம்முடைய பாலியல் ஆசையுணர்வுகளையெல்லாம் கணவனுக்குள்ளேயோ தன் மனைவியர்களுக்கிடையேயோ கட்டுப்படுத்தி வாழ்வதே ஒழுக்கமான வாழ்வு!” என்பது உலக நீதி ஒத்துக் கொண்ட உண்மையாகும்.         குர்ஆனும் நபி மொழியும் கற்பிக்கும் இத்தகைய ஒழுக்க நெறிக்கு ‘கற்பு’ என்று பெயர்.

     ‘கற்பு’ எனும் சொல் இந்நாளில் பெண்களுக்கு மட்டுமே உரியது போல் பெரும்பாலோரும் எண்ணியுள்ளனர். உண்மை நிலை அதுவல்ல. ‘கற்பு’ எனும் மூன்றடுக்கு மாளிகை, பெண் எனும் ஒரு பாலரின் தனியுடைமையா? இல்லை. இருபாலரின் பொதுவுடைமையாகும். எனவே தான் திருமறை மூலம் இறைவன் நபியை நோக்கி, “(பிற ஆண்களை ஏறெடுத்துப் பார்ப்பதை விட்டு) தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தம் மறைவிடங்களை (கற்பு நெறி தவறுவதிலிருந்து) காத்துக் கொள்ளுமாறும் இறைநம்பிக்கையுள்ள பெண்களை நோக்கிக் கூறுவீராக!” (குர் ஆன் 24:31) என்று குறிப்பிட்டதுடன் (பிற பெண்களை ஏறெடுத்துப் பார்ப்பதை விட்டு) தம் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் மறைவிடங்களை (கற்பு நெறி தவறுவதிலிருந்து) காத்துக் கொள்ளுமாறும் இறைநம்பிக்கையுள்ள ஆண்களை நோக்கிக் கூறுவீராக!” என்றும் குறிப்பிட்டுள்ளான். மேலும், “தம் மறைவிடங்களைப் பாதுகாக்கும் ஆண்களும் பெண்களும்    (குர்ஆன் 33:35) அல்லாஹ் தயாரித்து வைத்திருக்கும் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் பெறுவதற்கு தகுதியுள்ள பத்து சாராரில் ஒரு சாரார் ஆவர்.’ (குர்ஆன் 24:31) என்றுதான் இறைமறை இயம்புகிறதேயல்லாமல் வெறும் பெண்களை மட்டும் தனியாகச் சொல்லவில்லை.
    
ஓர் ஆண், தன் மனைவியல்லாத அந்நியப் பெண்ணுடன் பலவந்தமாக உடலுறவு கொண்டு விட்டால் மட்டும் ‘பெண் கற்பழிக்கப்பட்டாள்’ என உலகம் பேசுகிறதே தவிர அந்தப் பெண் காதலன் என்ற பெயரில் அந்நிய ஆணுடன் உடலுறவு கொள்ள இணங்கும்போது ‘அவள் கற்பழிக்கப்பட்டாள்’ என் யாரும் குறிப்பிடுவதில்லை. கணவன் அல்லாதவன் பலவந்தமாக உடலுறவு கொண்டால் அழிகின்ற கற்பு ஒரு பெண்ணின் இசைவோடு நிகழும் உடலுறவினால் மட்டும் அழியாமல் நீடித்திருக்குமா என்ன? மனைவியல்லாத பெண்ணுடன் ஒருவன் உடலுறவு கொள்ளும் போது அவனுடைய கற்பு அவனாலேயே அழிக்கப்படுகிறதல்லவா? எனவே, ‘ஆண் கற்பழிக்கப்பட்டான்’ என்றும் சொல்வதில்லையே !
   

கற்பு பெரும்பாலும் நான்கு காரணங்களுக்காக அழிக்கப்பட்டு வருகிறதெனக் கணிக்கலாம். தன் ஆசை தணிக்கப்படும் விஷயத்தில் போதிய திருப்தியைக் கணவன் மூலம் அடையவியலாத பெண்களாலும், மனைவியின் மூலம் போதிய திருப்தியை அடையவியலாத ஆண்களாலும் அவரவர் கற்பு அழிக்கப்படுகிறது. இவ்வாறு கற்பை இழப்பதில், பெண்களை விட ஆண்கள்தான் பெரும்பாலும் தீவிரமாக உள்ளனர். திருமணம் புரியும் நிலையிலுள்ள இரு தரப்பைச் சார்ந்த இளைய வயதினர் ‘காதல்’ எனும் காந்தத்தால் ஒருவரையொருவர் கவர்ந்திழுக்கும் போது புதிய அனுபவத்தினால் பூரிப்படைய தம் கற்பை விடுகின்றனர். இவ்வகையைச் சார்ந்த கற்பிழப்பில் இரு தரப்பினரும் சமமான பங்கை வகிக்கின்றனர்.
    
வறுமையின் கோரப் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், வாழ்வில் ஓரளவுக்குக் கிடைக்கும் வசதிகளை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் பெண்களில் சிலர் தம் கற்பைத் தாமே அழித்து விடுகின்றனர். இத்தகைய நோக்கில் கற்பை இழப்பது பெண்களுக்கிடையேதான் காணப்படுகிறது. ஆசை வெறி பிடித்த மிருகங்கள் அப்பாவிப் பெண்களைச் சில நேரங்களில் அத்து மீறித் தூக்கிச் சென்று பலவந்தமாகக் கற்பழித்து விடுகின்றனர். இம்முறையிலுள்ள கற்பழிப்பு செய்வோர்களோடு மட்டுமே தொடர்புடையதாகவுள்ளது.


     இத்தகைய நான்கு விதமான கற்பழிப்புகளில் நான்காவதாகக் கூறப்பட்ட வகையில் சிக்கிக் கொண்ட பெண்களைத் தவிர ஏனைய அனைத்து வகைக் கற்பழிப்புகளில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும் அல்லாஹ்வின் கடுமையான கோபத்திற்கும் சாபத்திற்கும் உரியவர்களாவர்.

     ‘விபச்சாரம்’ எனப்படும் இத்தகைய கற்பழிப்பினைக் குறித்து இறைவன் “விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்” நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும் அது (பல்வேறு கேடுகளுக்கான) தீய பாதையாகவும் இருக்கிறது” என்று திருமறை மூலம் எச்சரிக்கிறான (குர்ஆன் 17:32) இறைவன் மனிதர்களை நோக்கி “விபச்சாரம் செய்யாதீர்கள்” என்று கூறுவதற்குப் பதில் ’விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்’ என்று விலக்கியிருப்பது எத்துணை அழுத்தமானது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ‘நெருப்பைத் தொடாதே!’ என்பதை விட ‘நெருப்பின் பக்கமே நெருங்காதே!’ என்றுரைப்பது வலிவு மிக்கதல்லவா? வார்த்தைச் சித்தர் வலம்புரியார் உவமைப்படுத்துவது போல் ‘விபச்சாரம்’ எனும் கொசுக்களை ஒழிக்க வேண்டும்’ என்று மட்டும் இஸ்லாம் கூறாமல் இந்தக் கொசுக்கள் உருவாவதற்குக் காரணமான ‘ஆசைப்பார்வை’ எனும் சாக்கடையையே அகற்ற வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது. ‘விபச்சாரம் நிகழ்வதற்குக் காரணமாக அமைந்து விடும் அந்நிய ஆண் – பெண் தனிமையாக இருக்கும் நிலை கூட மேற்கண்ட வசனத்தின் மூலம் மறைமுகமாக விலக்கப்பட்டிருக்கிறது.


     ஒருவன் ஒரு பெண்ணுடன் தனித்திருக்கும் போது அங்கே அவர்களோடு மூன்றாம் நபராக ஷைத்தானும் இருக்கிறான் எனும் நபிமொழி (உமர் (ரளி), திர்மிதீ) மேற்கண்ட திருவசனத்தின் கருத்தை மேலும் விளக்குகிறது.


     ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் மிகப் பெரியதாகக் கருதப்படும் பாவம் எது? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி, அல்லாஹ் உம்மைப் படைத்திருக்க அவனை வணங்குவதில் வேறு ஒருவனை அல்லது ஒன்றை அவனுக்கு இணைகற்பிப்பது’ என்றார்கள். ‘இதற்குப் பின் எந்தப் பாவம் மிகப் பெரியது? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் ‘உன்னோடு உணவருந்துவதை (வறுமையை) அஞ்சி உம் குழந்தையைக் கொலை செய்வது!’ என்றார்கள். ‘இதற்குப் பின் எந்தப் பாவம் பெரியது? என்று அவர் மீண்டும் கேட்டதும், நபியவர்கள் அவரை ‘உம் அண்டை வீட்டாரின் மனைவியோடு நீர் விபச்சாரம் செய்வது பெரிய பாவம்!’ என்று பதிலளித்தார்கள். அந்நேரம் அண்ணலாரின் மேற்கண்ட பதிலை உண்மைப்படுத்தும் நிலையில் – அருளாளனின் நல்லடியார்களான அவர்கள்) அல்லாஹ்வுடன் இன்னொரு இறைவனை வணங்க மாட்டார்கள். (கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் விலக்கிய உயிரை அநியாயமாகக் கொலை செய்ய மாட்டார்கள்.’ விபச்சாரமும் செய்ய மாட்டார்கள்’ எனும் திருவசனத்தை (குர்ஆன் 25:68) அல்லாஹ் அருளினான். (இப்னு மஸ்வூத் (ரளி), புகாரீ, முஸ்லிம்) அண்டை வீட்டாரின் மனைவியிடம் விபச்சாரம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், பொதுவாகக் கொடிய பாவமான விபச்சாரம் அண்டை வீட்டானின் மனைவியோடு அமையும் போது பாவம் இன்னும் கொடியதாகி விடுகிறது எனும் உண்மையினைக் குறிப்பிடுவதேயாகும். ஏனெனில் அண்டை வீட்டானிடம் அணுக வேண்டிய நல்லன்பும் நம்பிக்கையும் இதனால் தகர்த்தப்படுகிறது.


கற்பைக் காப்பவர்கள் சுவனத்தில் கண்ணியப்படுத்தப்படும் எட்டு சாராரில் ஒரு சாரார் என்று குர்ஆன் 23:29 கூறுகிறது. பிர்தவ்ஸ் என்ற உயர் சுவனத்தின் வாரிசுக்காரர்களாய் அமைந்து வெற்றி பெறும் மூமின்களின் ஆறு சாராரில் கற்பைக் காப்போரும் ஒரு சாரார் ஆவர் என்றும் அருள்மறை (23:5) உணர்த்துகிறது. ஒருவர் இரு தொடைகளுக்கிடையில் இருக்கும் இன உறுப்பையும் இரு தாடைகளுக்கிடையில் இருக்கும் நாவையும் (தீய வழியிலிருந்து) காத்துக் கொள்வதாக என்னிடம் பொறுப்பு ஏற்றுக் கொண்டால் அவருக்கு நான், சுவனத்தைப் பெற்றுத் தர பொறுப்பேற்கிறேன்” எனும் நபிமொழியும் (ஸஹ்லிப்னு ஸஃது (ரளி, புகாரீ) மேற்கண்ட மறைமொழிகளும் இம்மையில் கற்பைக் காப்போர் மறுமையில் பெறவிருக்கும் இனிய வாழ்வை உறுதிப்படுத்துகிறது. எனவே இம்மையின் அற்ப ஆசைக்காகக் கற்பை இழந்துவிட்டு மறுமையின் அற்புத ஆனந்தங்களை இழக்க நேரிடும் இழிநிலையிலிருந்து நம்மை நாம் காப்போம்! நாயனருள் பெற்றிட முனைவோம்.

நன்றி : சிந்தனை சரம் – நவம்பர் 2005

இஸ்லாம் - ஏம்பல் தஜம்முல் முஹம்மது


“இஸ்லாம் தான்உயர் தத்துவம் – இதை
ஏற்பது தான்முதல் உத்தமம்!
நம்பிச் செயல்படல் பத்தியம் – இது
நலமெலாம் தருதல் சத்தியம் !”
என்று பாடினார் ஒருவர்.

‘இஸ்லாம் என்றால் என்ன?’ என்ற வினாவிற்குச் சமயம் என்பர் சிலர்; மார்க்கம் என்பர் பலர். இன்னும் ஏற்ற பல விடைகள் உண்டு. அவ்வாறு சொல்வதற்கேற்ற பொருட் செறிவு உள்ள சொல் ’இஸ்லாம்’ என்ற சொல். அது, நானிலத்திற்கு நலமெலாம் தர வந்த சத்தியம் என்றும் அதற்கு ஏற்ற தத்துவம் என்றும் இசை பெற்றிருக்கிறது என்பதை மேற்கண்ட பாடல் சுட்டிக்காட்டுகிறது.

அந்தத் தத்துவம், அமைதித் தத்துவம்; அமைதிக்கான தத்துவம்; அமைதியை – சாந்தியை – நோக்கி நடத்தும் தத்துவம். அமைதியின் பயன்களைப் பெற்றுத் தருவது அந்தத் தத்துவத்தின் இலட்சியம். தன் தத்துவத்தையும், தன் இலட்சியத்தையும், தன் தனிச் சிறப்பையும் தன் பெயரிலேயே பெற்றிருக்கும் ஒரு நெறி இஸ்லாம் ! வாழும் சமயங்களின் பெயர்ப்பட்டியலையும் இதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை இனிதே புலப்படும்.

ஒரு மலர்க்கொடி மொட்டுவிடுகிறது; பின்னர் மொட்டு கட்டவிழ்கிறது; மலர்கிறது; மணம் வீசுகிறது; மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது; சூல் கொள்கிறது; காய்க்கிறது; கனிகிறது; இதே பயன்களைப் பன்மடங்காய்ப் பெருக்க வல்ல எத்தனையோ வித்துக்களை அந்தக் கனி, தன்னகத்தே இருந்து வெளிப்படுத்துகிறது; உலகம் பயன்பெறுகிறது; எல்லாம் அமைதியாக…! இந்த அமைதி எவ்வளவு ஆக்கவளம் செறிந்த அமைதி ! ஆற்றல் பெருக்கும் அமைதி! இடையறாச் செயற்பாட்டை உடைய இயக்க அமைதி !

இத்தகைய இனிய அமைதிக்கு இந்த உலகம் எப்போதும் ஏங்கிக் கொண்டே இருக்கிறது !
“நம்நோக்கங்கள் ஒன்றேயாகட்டும் !
நம் இதயங்கள் ஒன்றாகச் சேரட்டும் !
ஒற்றுமையில் மனம் சாந்தி அடையட்டும் !
அனைவருடனும் அமைதியாக இருப்போம் !”
                                         என்பது
ஒரு புராதான கால அழைப்பு.

  “முன்னெப்போதும் நடாத்தப்படாத அளவுக்குத் துணிந்து நடாத்தப்படும் மிக்க நீதியான போரைவிட மிகவும் அநீதியான அமைதியாக இருந்தாலும் அந்த அமைதியையே நான் விரும்பித் தேர்ந்தெடுப்பேன்”
என்பது அதை அடுத்ததொரு காலகட்டத்து அமைதி விரும்பியின் விருப்பம்.

  “போரிட்டாவது நீ அமைதியைத் தேடிக்கொள் !”
                              என்பது

இந்த நூற்றாண்டின் தொடக்க காலம் தெரிவித்த ஒரு தீர்வு.

  “புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் !”
                              என்பது
‘சாந்தியால் உலகம் தழைக்க வேண்டும்’ என்று சங்க நாதம் புரிந்த ஒரு புரட்சிக்காரரின் போர்க்குரல், நம் காலத்தில் நாம் கேட்ட குரல் !

அமைதி வேண்டுமென்றால் அனைவரும் ஒன்றாக வேண்டும். அப்போதுதான் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஏற்படும். அதற்கு வேற்றுமைகளை வேரறுக்க வேண்டும். அதற்கு ஏற்ற முழக்கங்களும் எழாமல் இல்லை.

  “ஒன்றே குலம் ! ஒருவனே தேவன் !”
                              என்றொரு
முழக்கம் எழுந்தது. பின்னர்,

“குலமும் ஒன்றே ! குடியும் ஒன்றே !
இறப்பும் ஒன்றே ! பிறப்பும் ஒன்றே !
வழிபடு தெய்வமும் ஒன்றே !
என்று சற்றே விளக்கமான முழக்கமும் எழுந்தது. இப்படி எத்தனையோ குரல்கள் !

அமைதிக்கும் ஒற்றுமைக்கும் தேவையான அனைத்தையும் ஒருங்கிணைத்து – நீணிலமெங்கும் நீறுபூத்த நெருப்பாக இருந்த எத்தனை எத்தனையோ நல்லெண்ணங்களையெல்லாம் ஊதி ஊதிப் பெருஞ் சோதியாக்கி இதோ ‘இஸ்லாம்!’ என்று அரபு தீபகற்பம் அறிமுகம் செய்தது !

ஒருவனே இறைவன் ! ஒன்றே மனுக்குலம் !
அனைத்து மக்களின் அன்னை ஒருவரே !
அனைத்து வேதங்களின் அடிப்படை ஒன்றே !
இம்மையும் ஒன்றே ! மறுமையும் ஒன்றே
இறுதி வேதமும் ஒன்றே ! இறுதித் தூதும் ஒன்றே !
என்பன அந்தச் சோதியின் பெருஞ்சுடர்கள் !

இந்த இஸ்லாம் – இஸ்லாம் எனும் சொல், அரபு மொழிச் சொல் என்பதற்காக இது நமக்குச் சொந்தமானது இல்லை என்று சிந்தனையுள்ள யாரும் சொல்ல மாட்டார்கள். மனித வசதிக்கும், உரிமைகளுக்கும், நல்வாழ்வுக்கும் ஏற்றதாக எங்கிருந்து எந்த நலன்கள் கிடைத்தாலும் அதைப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்கிற உருண்டைச் சிற்றூர் (Global Village) ஆன இன்றைய உலகம், இஸ்லாம் தன் கொடை வளத்தால் கொடுக்கும் சாந்தி, சமத்துவம், சகோதரத்துவம், சமரசம், சத்தியம் முதலிய எத்தனையோ நன்மைகளை – ஊற்றுப் பெருக்காய் உலகுக்கு ஊட்டும் நன்மைகளை- வேண்டாம் என்று சொல்லுமா என்ன?

(ஸல்ம்) என்னும் வேர்ச் சொல்லில் இருந்து (ஸலம) என்னும் சொல்லும் அதிலிருந்து (அஸ்லம) என்னும் சொல்லும், அதிலிருந்து (இஸ்லாம்) எனும் சொல்லும் தோன்றின என்பர் அரபு மொழி அறிஞர்கள் ‘இஸ்லாம்’ என்ற சொல்லே ஒரு வேர்ச் சொல்தான் என்பாரும் உளர்.

ஸல்ம் – அமைதி, ஸலம – அமைதியடைந்தான், அஸ்லம – அமைதி பெறத் தேடினான் – அமைதி தேடியவன், இஸ்லாம் – அமைதி பெறத் தேடுதல் – இறைவனுக்கு அடிபணிந்து அமைதி பெறல் – அமைதி சாந்தி என்பன முறையே அந்தச் சொற்களின் பொருள்களாக இருக்கின்றன. இதிலிருந்து இஸ்லாம் எனும் சொல்லின் மூல முதற் சொல்லின் பொருளும் அமைதிதான்; இஸ்லாம் எனும் சொல்லின் பொருளும் அமைதிதான் என்று அறிகிறோம். மார்க்க அடிப்படையில், இஸ்லாமிய வாழ்வை வாழ்ந்து காட்டியவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வின் அடிப்படையில், மனித குலத்துக்கு வாய்த்த பேறுகளின் அடிப்படையில் இஸ்லாம் என்றால், எவ்வுயிர்க்கும் இன்னமைதி ஈந்துவக்கும் சன்மார்க்கம் என்று சற்றே விளக்கமாய்ப் பொருள் கொள்ளலாம்.

வணக்கத்திற்குரிய ஏக இறைவன் அல்லாஹ்வுக்கு அழகிய பல திருநாமங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று அஸ்ஸலாம் – இன்னமைதி அருள்பவன் – என்பதையும் கவனத்தில் கொள்வோமாக.

இந்த இறைவன் இந்த மார்க்கத்தின் மூலம் இந்த உலகத்திற்கு வாழ்வின் எல்லா அம்சங்கள் குறித்தும் தெளிவான வழிகாட்டுதல்களை அளித்துள்ளான். இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் சமுதாயத்தை ‘நடுநிலையுள்ள சமுதாயமாக’ – ‘உம்மத்தே வஸதாக’ – ஆக்கியுள்ளான் (2;143) நடுநிலை என்பது நீதி அல்லவோ !

  ”… நாம் படைத்த மக்களில் ஒரு பிரிவினர் இப்படியும் இருக்கிறார்கள்:
அவர்கள் முற்றிலும் சத்தியத்திற்கேற்பவே வழி
காட்டுகிறார்கள். மேலும் சத்தியத்திற்கேற்பவே
நீதி வழங்குகிறார்கள்” (7:181) என்கிறது திருக்குர்ஆன்

  “நீதி, நேர்மை ஆகியவற்றில் நிலைபெற்று, வரம்பு மீறாமல் நடுநிலையான வழியில் சென்று, எவருடனும் அநீதியான அசத்தியமான முறைகளில் தொடர்பு கொள்ளாமல், சத்தியம், மெய்ம்மை ஆகியவற்றில் அடிப்படையில் மட்டுமே எல்லாருடனும் தமது உறவை ஒரேவிதமாக அமைத்துக் கொண்டு உலக சமுதாயங்களுக்கு மத்தியில் பாரபட்சமற்ற வகையில் நீதி வழங்கும் அந்தஸ்த்திலுள்ள உயர்வும் சிறப்பும் கொண்ட ஒரு குழுவுக்குத்தான் திருக்குர்ஆன் தன் மொழி வழக்கில் உம்மத்தே – வஸத் – நடுநிலையுள்ள சமுதாயம் என்று கூறுகிறது.”

உலக மக்கள் நடுநிலையாக நடந்து கொள்வது என்று முடிவு செய்து விட்டால் மனித குலத்துக்கு அதைவிட இயல்பான பொருத்தமான, நேரான, நிம்மதியான வழியாக வேறு என்ன இருக்க முடியும்! எனவேதான் இஃது ‘அவனுடைய இயற்கை வழி’ என்றும் ‘நிலையான வழி’ என்றும் (30:30) அடைமொழிகள் பெற்றுள்ளன.

‘ஒருவன் நேரான வழியை மேற்கொள்கிறானெனில், அவனது நேரான வழி அவனுக்கே பயனளிக்கும், (17:15)’ ஒரு சமூகம் நேரான வழியை மேற்கொள்கின்றது என்றால் அதனுடைய நேரான வழி அந்தச் சமூகத்துக்கே பயனளிக்கும். இந்த உலகமே நேரான வழியை மேற்கொள்கின்றதென்றால் அஃது ஒட்டு மொத்தமாக இந்த உலகத்துக்கே பயனளிக்கும். இதை யாரால் மறுக்க முடியும்? இத்தகையதோர் ஒளிவுமறைவு அற்ற பரிபூரணமான உயர் நேர் வழியைத்தான் இஸ்லாம் உலகுக்குப் பொதுவுடைமை ஆக்கியுள்ளது.

  அதற்கான பிரகடனம் 11.3.கி.பி.632 (9.12.ஹி10) – ஆம் நாள் வெள்ளிக்கிழமை அந்திப்பொழுதில் எல்லாம் வல்ல இறைவனால் இவ்வாறு இறக்கி அருளப்பட்டது.

  ”…இன்றைய தினம் நான் உங்களுக்கு, உங்களுடைய மார்க்கத்தைச் சம்பூரணமாக்கிவிட்டேன். என் அருட்
கொடையையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்திருக்
கிறேன். உங்களுக்காக இந்த இஸ்லாமை மார்க்கமாகவும்
பொருந்திக் கொண்டேன் …” (5:3)

( பன்னூலாசிரியர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது எழுதிய ‘இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி )

நூலை மேலும் வாசிக்க கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு பெறலாம்.

கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது எம்.ஏ
NEWLIGHT BOOK CENTRE
1504 - A, MIG, 3rd Main Road
Mathur MMDA
Chennai - 600 068
E-mail : 

Cell : 99944 05644
Tel : 044 25552846









இப்போது கையிருப்பில் உள்ள பன்னூலாசிரியர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது எழுதிய நூல்களின் விவரம் பின் வருமாறு:

1.வீரம் செறிந்த இஸ்லாம்(சீதக்காதி அறக்கட்டளை பரிசு பெற்ற நூல்)-விலை ரூ.150/=
2.இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்..............................................................................ரூ.055/=
3.Religious Harmony-an Islamic Doctrine............................................................................................Rs.150/=
4.திருக்குரானில் பிற சமய மதிப்பீடுகள்................................................................................ரூ.020/=
(இந்த 2,3&4 நூல்கள் எழுதியமைக்காக எனக்கு சிறந்த சமய நல்லிணக்க நூலாசிரியர்
என்ற விருது இஸ்லாமிய இலக்கியக் கழகத்தால் வழங்கப்பட்டது)
5.அந்த ஒளி!அந்த வழி!!(அண்ணல் நபியவர்களையும் அவர்களின் திருத் 
தோழர்களையும் மிகச் சிறப்பாக அறிமுகம் செய்யும் நூல்)...........................................ரூ.030/=
6.அல்லாஹ்வின் வணிகர் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்-ரலி-
(கடந்த 1400 ஆண்டுகால வரலாற்றில் இதுவே இவர்களைப் பற்றிய ஆதார பூர்வமான
முதல் வரலாற்று நூல்).....................................................................................................................ரூ.075/=
முதல் 6 நூல்களின் மொத்த விலை ரூ.0480/= 
*******************************************************************************************************************************************************************
7.இஸ்லாம் மார்க்க அடிப்படைகள்(பாகம்-1,2&3-Basics of Islam என்ற அருமையான
ஆங்கில நூலின் அழகிய தமிழ் மொழி பெயர்ப்பு-பல வண்ண சிறுவர் நூல்-)1செட் .........ரூ.0280/=
8.Basics of Islam 1 to 7 vol..in English.................................................................................................................ரூ1320/=
(7-வது,8-வது கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மதுவின் வெளியீடுகள் அல்ல. இவற்றை நான் இங்கு குறிப்பிடக் காரணம் இவற்றைவிடச் சிறந்த பாட நூல்கள்-1முதல் 7வகுப்பு வரைக்குமான முஸ்லிம் மாணவர்களுக்கு-வேறில்லை என்பதனால் இவற்றை மார்க்க ஆர்வம் உள்ளவர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் அறிமுகப் படுத்துவது கூடுதல் நன்மையாக இருக்கும் என்று மனப் பூர்வமாக நம்புவதுதான்.இவ் விவரம் முதல் 3 பகுதியை கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது மொழி பெயர்த்தபோது அறிந்துகொண்டதாகும்)


For Book Orders Pl. send MO / DD in favour of NEWLIGHT BOOK CENTRE, CHENNAI

கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது எம்.ஏ
NEWLIGHT BOOK CENTRE
1504 - A, MIG, 3rd Main Road
Mathur MMDA
Chennai - 600 068
E-mail : 

Cell : 99944 05644
Tel : 044 25552846

தளபதி திருப்பூர் மொய்தீன்



பதவி பேறுகள் எதுவும் இல்லாமலே முப்பத்தைந்து ஆண்டுகள் தன்னலமற்ற அரசியற் பணி புரிவது என்பது அரசியல் உலகில் ஒரு அற்புத விந்தையாகும்.அந்த விந்தையை காரிய சாதனையாக இயற்றி நம் மத்தியில் வாழ்ந்து மறைந்தவர் திருப்பூர் மொய்தீன். அவர் தமிழ்நாடு முஸ்லீம் லீக் துணை தலைவராகவும், சிறந்த பேச்சாளராகவும், வீர வாள் பரிசு பெற்ற தளபதியாகவும் விளங்கினார்.


தளபதி மொய்தீன் அவர்களுடைய அரசியல் வாழ்வு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பரந்துபட்டதாகும். "கொடி காத்த குமரன்" என்று இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழரின் வீரத்திற்கு இலக்கணமாக விளைந்த திருப்பூர் குமரனும், திருப்பூர் மொய்தீன் அவர்களும் ஒரே ஊரவர்கள் மட்டும் அல்ல. ஒன்றாக அரசியல் என்னும் வேள்வி குண்டத்திலே குதித்தவர்கள். அந்நிய நாட்டு துணி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்டு இருவரும் அரசியல் அரங்கில் அடியெடுத்து வைத்தார்கள். இந்த எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு அங்கமாக கிளைத்த ரயில் வண்டி மறியலிலும் இருவரும் ஒன்றாகவே செயலில் இறங்கினர்.

மறியல் போராட்டம் அன்று விடியற் காலை 8.30 மணிக்கு ரயில் வண்டியின் முன்னர் படுத்து திருப்பூர் மொய்தீன் அவர்கள் மறியல் செய்தார்கள். இதுவே மறியல் இயக்கத்தின் தொடக்கம். உடனேயே அவர் போலீஸ் சாரால் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து சரியாக காலை 8.45 மணிக்கு திருப்பூர் குமரனும் ரயில் முன் படுத்து மறியல் செய்தார். காவல் துறையினரின் தடியடிக்கு மத்தியிலும் சுதந்திர கொடியின் மானத்தை காத்தார். அமரரானார்.

சுதந்திர போராட்ட காலத்தில், தமிழ்நாட்டு அரசியலில் மூத்த தளபதி என அழைக்கப்பட்ட பட்டுகோட்டை சிங்கம் அழகிரிசாமி அவர்கள் அன்று நடைபெற்ற அரசியற் கூட்டத்தில் ஒரு திருப்பூர் குமரனுக்கு ஈடாக எமக்கு ஒரு திருப்பூர் மொய்தீன் கிடைத்து இருக்கின்றார். குமரனின் பணியை மொய்தீன் தொடருவார். என குறிப்பிட்டார். அழகிரிசாமி அவர்களின் கணிப்பு சற்றும் பிசகவில்லை. மொய்தீன் அவர்களின் பணி அவ்வாறே அமைந்து இருந்தது.

மொய்தீன் அவர்கள் நாவன்மை மிக்க பேச்சாளர் ஆவார். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் தம் சிம்ம குரலால் இயக்க எழுச்சியை ஊட்டினார். ஆங்கில கல்வி மூலம் பட்டம் பெற்றவர்களும் தெளிவுபடுத்த முடியாத சிக்கலான அரசியற் பிரச்சினைகளை எல்லாம் தமக்கே உரிய கம்பீர தொனியில் கேட்போர் நெஞ்சை ஈர்க்கும் வகையில் விளக்க வல்ல ஆற்றல் பெற்று விளங்கினார். தான் தோன்றி தலைமை தனத்தை வெறுத்தவர். இயக்க ரீதியான கட்டுபாடுகளுக்கு பணியும் பண்பு உடையவர். சமுதாய பணியையே வாழ்கையின் லட்சியமாக வரித்து கொண்டவர்.

தேசிய போராட்ட காலங்களிலும் சரி, முஸ்லீம் லீகின் அரசியற் பணிகளிலும் சரி மொய்தீன் அவர்களின் தொண்டு தனித்துவ முத்திரை பெற்று திகழ்ந்தது. லீகிற்குள் மிதவாத கொள்கைக்கு மாறுபட்ட தீவிர செயற் போக்கினை ஆதரித்தவர். மக்களுடன் மக்களாக வாழ்ந்து, மக்களுடைய துன்பங்களையும் துயரங்களையும் தெளிவாக உணர்ந்து இருந்தார். இதனால் மொய்தீன் அவர்கள் இடதுசாரி அரசியல்வாதி என்றும் அழைக்கபட்டார்.

மொய்தீன் அவர்களுடைய இந்த தனித்துவ போக்கு 1941 ஆம் ஆண்டிலேயே தூலமாக தெரிந்தது. அவ்வாண்டில் முஸ்லீம் லீகின் தலைமை பதவிக்கு ஜனாப் அப்துல் ஹமீது அவர்களும், கா ஈ தே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களும் போட்டியிட்டனர். அப்துல் ஹமிது இடதுசாரி மனப்பான்மை உள்ளவர் அல்ல. எனினும் மிதவாதி அல்லர். இதன் காரணமாக மொய்தீன் அவர்கள் அப்துல் ஹமீது அவர்களை ஆதரித்தார். அதன் விளைவாக தான் இன்று மொய்தீன் அனுபவிக்கிறார் என்று அவருடைய அரசியல் வாழ்வை கூர்ந்து கவனித்தவர்கள் அபிபிராயபட்டதாகும்.

மொய்தீன் அவர்கள் பணி பயன் பற்றட்டது. பிரிக்கப்பட்ட இந்தியாவில் முஸ்லிம் லீக் சிறிது காலம் செயற் படாமல் இருந்தது. அப்பொழுது கூட மொய்தீன் அவர்களின் பணி பட்டி தொட்டி எல்லாம் தொட்டு பரவியது.

அவருடைய கலப்பற்ற தொண்டு மனப்பான்மையும் , சீரிய நாவன்மையும், பிரிக்கப்பட்ட இந்தியாவில் முஸ்லிம் லீக் முறையாக செயற்படத் தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, காயல்பட்டினம் தொல்குடியில் உள்ள மக்கள் மொய்தீன் அவர்களின் சமுதாய பணிகளை பாராட்டி கவுரவித்தனர் என்பது குறிப்பிடத்தகது. 1954 ஆம் ஆண்டில் இதற்காக காயல்பட்டிணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட விழாவிலே அவருக்கு வீரவாள் வழங்கபெற்றது. தளபதி என்ற பெயரும் சூட்ட பெற்றது.

இந்தியாவில் முஸ்லிம் லீகின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதற்கான முயற்சிகள் 1956 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டது. லீகின் அமைப்பாளராக இஸ்மாயில் சாஹிப் தேர்வு செய்யபட்டார். இதே ஆண்டில் சென்னை ராஜாஜி மண்டபத்தில் முஸ்லிம் லீக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. முஸ்லிம் லீக் கலைக்கபடல் வேண்டும் என்றும், அன்றேல் முஸ்லிம் மக்கள் வன்முறையில் பழிவாங்க படுவர்கள் என்றும், பட்டதாரிகளான முஸ்லிம்கள் அச்சம் தெரிவித்தனர். சிலர் லீகை கலைத்துவிட்டு, சுய ஆதாயம் பெறவும் விழைந்தனர்.

எப்படியும் முஸ்லிம் லீக் செயற்படல் வேண்டுமென்ற கொள்கையில் இஸ்மாயில் சாஹிப் உறுதியாக நின்றார். அப்பொழுது அவருடைய கொள்கைகளுக்கு உறுதுணையாக நின்று, அவருடைய முயற்சியில் பக்க பலமாக உழைத்தவர்கள் திருப்பூர் மொய்தீன், கே.டி.எம். அஹ்மத் இப்ராஹிம் சாஹிப், எம். எல். எ. மஜீத், ராஜாகான் ஆகியோர். உழைப்பு பயன் தந்தது. அகில இந்திய முஸ்லிம் லீக் என்ற பெயர் புதிய சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என மறு பெயர் சூட்டப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அரசியற் நிறுவனமாக செயற்படுவது பற்றிய வாக்கு எடுப்பில் ஒன்பது பேர் எதிர்த்து வாக்கு அளித்ததுடன், சிலர் லீகின் உறுப்பினர் பதவிகளையும் துறந்தனர். எதிர்தோருள் சையீத் அப்துல் காதர் அவர்கள் குறுபிடதக்கவர். ஆயினும், அப்பொழுது அதனை அரசியல் நிறுவனம் ஆக்க வேண்டும் என்று வாக்கு அளித்த எட்டு பேருடைய சலியாத உழைப்பினால் 1956 ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட கோட்பாடுகளையும், சட்ட திட்டங்களையும் அடித்தளமாக வைத்து 1958 ஆம் ஆண்டளவில் இயக்க ரீதியாக செழிப்புடன் செயற்பட தொடங்கியது.

1960 ஆம் ஆண்டில் முஸ்லீம் லீகின் மாநாடு குரோம்பேட்டை இல் நடைபெற்றது. இம்மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன் எனில் இந்த மாநாட்டில் தான் பொது தேர்தலில் போட்டி இடுவது என்ற தீர்மானம் ஏக மனதாக நிறைவேறியது. இத்தீர்மானத்திற்கு அமைய 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொது தேர்தலில், எதிர் கட்சிகள் சிலவற்றின் ஆதரவுடன் லீக் வேட்பாளர் ஏழு பேர் தமிழ்நாட்டில் போட்டி இட்டனர். அந்த தேர்தலில் எந்த வேட்பாளரும் வெற்றி ஈட்டவில்லை. லீகின் ஆதரவுடன் போட்டி இட்ட திராவிட முன்னேற்ற கழகத்தினர் தமிழ்நாடு சட்ட சபையில் ஐம்பது இடங்களில் வெற்றி ஈட்டினர். தேர்தலிலே செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ்நாடு மேல் சபைக்கு லீகின் பிரதிநிதி ஒருவரை வேட்பாளராக நிறுத்த தி.மு.க. முன்வந்தது.

பொது தேர்தலில் போட்டி இட்டு தோல்வி அடைந்த எவரையும் மேற்சபைக்கு வேட்பாளராக நிறுத்துவது இல்லை என்ற முடிவினை லீக் எடுத்து இருந்தது. இதன் காரணமாக மேற்சபைக்கு உறுபினராகும் நல்லதொரு சந்தர்பத்தை திருப்பூர் மொய்தீன் இழக்க நேரிட்டது. இருப்பினும் ராஜ்ய சபைக்கு லீக் உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்யும் வாய்ப்பு வரும் பொழுது திருப்பூர் மொய்தீன் அவர்களுக்கே முதலிடம் கொடுப்பது என்று அப்பொழுது கொள்கை அளவில் ஏற்று கொள்ளப்பட்டது.

1964 ஆம் ஆண்டில் அத்தகைய ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. லீகில் புதிதாக சேர்ந்த சில ஆங்கில பட்டதாரிகள், முது பெரும் அரசியல்வாதியான மொய்தீன் அவர்களுக்கு போதிய ஆங்கில அறிவு இல்லை என்பதை காரணமாக காட்டி அந்த பெருமை அவருக்கு கிட்டாதவாறு தடுத்தனர். இது மொய்தீன் அவர்களுக்கு எதிராக லீகின் அங்கத்தினர்கள் இயற்றிய மாபெரும் அநீதியாகும். ஏன் எனில் 1962 ஆம் ஆண்டில் ராஜ்ய சபைக்கு போட்டி இடும் தகுதி திருப்பூர் மொய்தீன் அவர்களுக்கு இருப்பதாக கணித்து, அவரை ஒரு வேட்பாளராக நிறுத்திய லீகின் காரிய சபை, 1964 ஆம் ஆண்டில் ராஜ்ய சபைக்கு தகுதி இல்லை என முடிவெடுத்தது எவ்வகையிலும் நியாயம் ஆகாது. இந்த செயல் அன்று தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1966 ஆம் ஆண்டில் சென்னை மேற் சபைக்கு காலியாகும் இடம் ஒன்றினை எப்படியும் .மு.க ஆதரவுடன் மொய்தீன் அவர்களுக்கு பெற்று கொடுப்பதாக அப்பொழுது மிகுந்த சமாதானம் கூறபெற்றது. எனினும் இந்த வாக்குறுதி காப்பாற்ற படவில்லை. சென்னை மேற் சபை உறுப்பினர் பதவி தேவை இல்லை . சென்னை மாநகராட்சி துணை மேயர் பதவி வேண்டும் என்று ஆம் ஆண்டில் லீக் செய்த தீர்மானம் வேண்டும் என்றே மொய்தீன் அவர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கை மோசடி என அன்றைய முஸ்லீம் லீக் பிரமுகர்களே கருத்து கூறினர்.

1967 ஆம் ஆண்டில் பொது தேர்தல்கள் வந்தன. சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதின் பேரில் மொய்தீன் போட்டியிடவில்லை. 1968 ஆம் ஆண்டில் ராஜ்ய சபைக்கு லீகின் வேட்பாளராக மொய்தீன் அவர்களை நிறுத்துவது என வாக்குறுதி தரப்பட்டது. 1968 ஆம் ஆண்டு வந்தது. லீகின் காரிய கமிட்டி கூடியது. ராஜ்ய சபைக்கு லீகின் மனு கோரி மொய்தீன் அவர்களுடன் கே.டி.எம்.அஹ்மத் இப்ராஹிம் சாஹிப், எஸ்.எ. காஜா மொய்தீன் ஆகியோர் விண்ணப்பித்து இருந்தனர். திருப்பூர் மொய்தீன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீண்டும் மீறப்பட்டு, யாரை லீகின் வேட்பாளராக நிறுத்துவது என்பதை காரிய சபை வாக்கெடுப்பில் காஜா மொய்தீன், திருப்பூர் மொய்தீன் அவர்களை காட்டிலும் ஐந்து வாக்குகள் அதிகம் பெற்றார்.

கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்படல், தனக்கு பதவிகள் கிட்டக்கூடிய சந்தர்பங்கள் ஒவொன்றாக கை நழுவியமை பற்றி பாராட்டாது, கவலையோ, ஏமாற்றமோ சிறிதும் கொள்ளாது, தமது அரசியற் பணிகளை சிறப்பாக செய்து வந்தவர். இதுவே மொய்தீன் அவர்களின் சிறந்த பண்பிற்கு உதாரணமாகும்.

அன்றைய சூழலில் ஜனாப். தை.அ. அப்துல் காதர் அவர்களுக்கும் மொய்தீன் அவர்களுக்கும் உள்ள தொடர்பினை குறிப்பிடுதல் சற்று பொருத்தமானதாகும். அப்துல் காதர் அவர்கள் லீகின் பொருளாளராக ஏழு ஆண்டுகள் பணி செய்தவர். முஸ்லீம் லீக் அரசியற் கட்சியாக செய்யற்படுவதில் திருப்பூர் மொய்தீன் அவர்களுடன் இவர் அன்று காலகட்டத்தில் கருத்து வேறுபாடு கொண்டு இருந்தார். பின்னர் அவரது வலக்கரமாக இணைந்து உழைத்து வந்தார். சென்னை மேற்சபைக்கு லீகின் மனுகோரி இருவர் போட்டி இட்டனர். ஒருவர் தை.அ. அப்துல் காதர் மற்றவர் ஜானி சாஹிப். தை.அ. அவர்களும் ஐந்து வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டார். மொய்தீன் அவர்கள் மீது கொண்டுள்ள பற்று காரணமாக தான் தை.அ. தோற்கடிக்கப்பட்டார் என்று அன்றைய அரசியல் வட்டாரத்தின் கணிப்பாகும்.

திருப்பூர் மொய்தீன், தை.அ. செ. அப்துல் காதர் போன்றோர் சுய பலன் கருதாது பொதுப்பணி புரியும் பண்பினர். லீகின் கட்டுபாடுகளுக்கு, எவ்வளவு நம்பிக்கை மோசடிகள் நடைபெற்ற போதிலும், கீழ்படிந்து பணி புரிந்து, லட்சியத்துடன் வாழ்ந்தவர்.

எந்த அரசியற் கட்சிக்குள்ளும் உள்கட்சி போராட்டம் நடைபெறுவது உண்டு. இந்த உள் கட்சி போராட்டம் கட்சியின் கொள்கை அடிப்படையில் மட்டுமே நடைபெற்றால், வரவேற்கலாம். ஜனநாயக வளர்ச்சிக்கு இந்த உள்கட்சி போராட்டம் உதவியாக இருக்கும். ஆனால் முஸ்லீம் லீகில் அன்று நடைபெற்ற உள்கட்சி போராட்டம் வேறு வகையில் அமைந்து இருந்தது. கோஸ்டி பிரிவினர் ஒருவரை ஒருவர் அழிப்பதற்கும், அடக்கி ஒடுக்குவதற்கும் பயன்படுத்த பட்ட செயல்கள் அன்று முதல் இன்று வரை அக்கட்சி வளர முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணமாகும்.

முஸ்லீம் லீகிற்குள் அன்று புதிதாக இணைந்த ஆங்கில கல்வி பெற்றவர்கள் (அப்துல் சமது ) ஒரு பிரிவாகும், மற்றவர்கள் ஒரு பிரிவாகவும் செயற்பட்டு வந்தனர்.

தமக்கு ஆங்கில அறிவு இருப்பதாக நினைத்து அரசியல் வானில் கொடி கட்டி பறக்க வேண்டிய கர்மவீரர்களை அதற்கு பலிகடா ஆக்கியது மிக பெரிய தவறாகும். இதனால் முஸ்லீம் லீகின் வளர்ச்சி பெருமளவில் பாதிப்பு அடைந்தது. திருப்பூர் மொய்தீன் போன்றோர் அனுபவம் மிக்கவர்கள். மக்களின் நம்பக தன்மைக்கு ஏற்ப உண்மையாக நடந்தார். அவருக்கு தமிழக அரசியல் வரலாற்றில் கிடைத்த மரியாதை இன்றைய இளைய சமூகத்துக்கு தெரியாமல் போனது வேதனைக்குரியதாகும்.

பொது மேடைகள் மூலம் பொது மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட செம்மல்களுள் மூவர் விசேசமாக குறிப்பிட தக்கவர்கள். முதலில் பெரியார் ஈ.வே.ரா.வை குறிப்பிடலாம். அவர் கண்ட மேடைகள் பதினைந்து ஆயிரத்திற்கு அதிகம் என்று கணிப்பர். அடுத்தது திருப்பூர் மொய்தீன். இவர் சுமார் பத்து ஆயிரம் மேடைகளில் உரை நிகழ்த்தி உள்ளார். மூன்றாவது தமிழக முதல் அமைச்சராக இருந்த அண்ணாதுரை சுமார் ஏழு ஆயிரம் என்று கணிக்கப்படுகிறது.

இனிமேல் திருப்பூர் மொய்தீன் அவர்கள் எந்த ஒரு பதவிக்கும் போட்டி இடுவதில்லை என்ற முடிவிற்கு வந்தார். பதவிப் பித்தர்கள் பதவியை அனுபவித்து கொண்டு போகட்டும். நம் வழி பணி செய்து கிடப்பதே என்ற அடிப்படையில் தம் வாழ் நாள் வரை சமுகப் பணி செய்து மறைந்தார்.

ஒரு சமுதாய தலைவரை முஸ்லீம் லீக் மறந்தது மறைத்தது இல்லாமல் தமிழ் (முஸ்லீம்) சமுகம் அவரை நினைவு கூற மறந்தது வேதனையான செயலாகும்.

அனுப்பி உதவியவர் : ராஜகிரி கஸாலி 

திங்கள், 11 ஜூன், 2012

இல்லாத ஊருக்கு செல்லாத வழியைக் காட்டுவதால் என்ன பயன்? - கே.எம்.கே.


நடுவண் அரசின் உள்துறைச் செயலாளர் ஆர்.கே. சிங், எல்லா மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். முஸ்லிம்கள் பெருகிவாழும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஒரு முஸ்லிம் சப் இன்ஸ்பெக்டர் அல்லது ஒரு முஸ்லிம் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிபிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தச் செய்தி 7/8-6-2012 மணிச்சுடரில் பிரசுரமாயிருக் கிறது. 8.6.2012 தினகரனில் இதே செய்தி வந்திருக்கிறது. செய்தியைப் படிக்கும்போது இனிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், இதனை எந்த மாநில அரசு நடைமுறைப்படுத்துகிறது? என்ற வினாதான் பெரிதாக எழும்புகிறது.

கேரளாவில் 12 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம் பிற்பட்ட வகுப்பினருக்கு இருக்கிறது. தமிழகத்தில் 3.5 சதவீதம் உள்ளது. ஆந்திராவில் 4 சதவீதம், கர்நாடகாவில் 5 சதவீதம், மணிப்பூரில் 4 சதவீதம் என்று இட ஒதுக்கீடு இருக்கிறது.

கேரளம், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், மணிப்பூர் ஆகிய இந்த ஐந்து மாநிலங்களில் மட்டுமே முஸ்லிம்கள் தங்களுக்குள்ள இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் காவல்துறையில் சேர முடியும். இந்த மாநிலங்களில் மட்டுமே முஸ்லிம்கள் பெருகிவாழும் பகுதிக் காவல் நிலையங்களில் முஸ்லிம் சப் இன்ஸ்பெக்டர் அல்லது இன்ஸ்பெக்டர் என்று நியமனம் செய்யப்படுவதற்குச் சாத்தியம் இருக்கிறது. இட ஒதுக்கீடு இல்லாத மற்ற மாநிலங்களில் முஸ்லிம்கள் வேலை-வாய்ப்பு பெற வழியே இல்லை. பொது பட்டியலில் மிக மிக உயர்ந்த மதிப்பெண்கள் பெறுகிறவர்கள் தேர்வு பெறுகிறார்கள். அந்தப் பட்டியலில் முஸ்லிம்கள் இடம் பெறுவது அபூர்வத்திலும் அபூர்வமாகும். இந்த நிலையில் இட ஒதுக்கீடு இல்லாத மாநிலங்களில் முஸ்லிம் இன்ஸ்பெக்டர் எப்படி நியமிக்கப்பட முடியும்?

மத்திய உள்துறையின் கடிதம் ஓர் அறிவுரையே தவிர, ஆணை அல்ல. உண்மையில், முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் முஸ்லிம் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டுமானால், அந்த மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தாக வேண்டும். மத்திய உள்துறை மாநிலங்களுக்கு எழுத வேண்டிய கடிதம், முஸ்லிம்களுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிப்பதற்கு ஒவ்வொரு மாநில அரசும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் குறித்தாக இருப்பது உசிதமானதாகும்.

மாநில அரசுகளின் கொள்கை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மத்திய அரசு தலையிடலாமா? என்று சிலர் வினா எழுப்புவர். மத்திய அரசு நியமித்த நீதியரசர் சச்சார் குழு பரிந்துரையை மத்திய அரசு ஏற்றிருக்கிறது. அந்தப் பரிந்துரைகளை அமுலாக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறது.

அதேபோல் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையும் வெளிவந்திருக்கிறது. இந்தக் குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டுவரும் முயற்சியாகவே மத்திய அரசு எல்லா சிறுபான்மையினருக்கும் என்று 4.5 சதவீதம் இடஒதுக்கீடு மத்திய வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி சேர்ப்புக்கு வழி கண்டிருக் கிறது. இன்று அது நீதிமன்றத்தில் இருந்தாலும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மத்திய அரசு ஏற்று செயல்படுத்தவும் முன்வந்திருக்கிறது.

இதையே மாநில அரசுகளும் பின்பற்றி, முஸ்லிம்களுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிப்பதற்கு முன்வரவேண்டும் என்பதை மத்திய உள்துறை வலியுறுத்த வேண்டும்.

இட ஒதுக்கீடு இல்லாத மாநிலங்களில் முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம் இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும் என்று கடிதம் எழுது வது, `கொம்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது� என்று சொல்லும் பழமொழிக்கு ஒப்பானதாகும்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் முஸ்லிம் களுக்குரிய இட ஒதுக்கீடு விரைவாக அறிவிக்கப்பட்டால்தான், மத்திய உள்துறை செயலாளரின் ஆசை நிறைவேறும்.

இல்லாத ஊருக்குச் செல்லா வழியைக் காட்டுவதால் எவ்விதப் பயனும் இல்லை!

கண்ணியமிகு தலைவர் காயிதெ மில்லத் -


 -(குடியாத்தம் கவிஞர் வி.எஸ். முஹம்மத்ஃபஸ்லுல்லாஹ் )
இந்திய திருநாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமுதாய மக்களின் ஒப்பற்ற தலைவராகவும், மனிதாபிமானத் தந்தையாகவும், கண்ணியம், புண்ணியம் இந்த இரண்டு சொற்களுக்கு சொந்தக்காரராகவும் வாழ்ந்த கண்ணியத்தின் உருவகம் காயிதே மில்லத்,(ரஹ்) அவர்கள், இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் சின்னமாக, தேசிய ஒருமைப்பாட்டின் தந்தையாக, அழியாத வரலாறு படைத்த அரசியல் மேதையாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தலைவராக திகழ்ந்தவர்.

அனைத்துக்கட்சி தலைவர்கள்,அனைத்து சமய மக்கள் அனைவராலும் """"கண்ணியத்திற்குரிய�� என்ற அடைமொழியோடு போற்றப்பட்ட ஒரே தலைவர் காயிதே மில்லத் என்றால் அது மிகையாகாது. தாம் பேசிய தாய்மொழி தமிழுக்கும், பேணிய இஸ்லாமிய மார்க்க வழிக்கும், பிறந்த பொன்னாட்டுக்கும், பெற்றெடுத்த சமுதாயத்திற்கும் சேவையாற்றிய தலைவராக மக்கள் உள்ளங்களில் அங்கீரிக்கப்பட்டிருக்கிறார். """"காயிதே மில்லத்�� என்றால் சமுதாய வழிகாட்டி என்று பொருள், இந்த சிறப்பு பெயருக்கு ஏற்ப, பல இன்னல்களையும், பழிசொற்களையும் தம் இதயத்தில் தாங்கிக்கொண்டு சமுதாயத்தை வழிநடத்தினார்.

காயிதே மில்லத் பிறப்பும் குடும்பமும்;
கவ்மின் காவலர் காயிதே மில்லத் அவர்கள் தென்னகத்தின் நன்னகரம் நெல்லை சீமையிலே உள்ள பேட்டை என்ற ஊரில் சிறப்புமிக்க குடும்பத்தில் கி.பி.1896 ஆம் ஆண்டு ஜூன் 5ம் நான் அன்று பிறந்தார். தந்தை மௌலவி மியாகான் ராவுத்தர். தாயார் ஹமீதா பீவி இளம் வயதிலேயே தந்தையாரை இழந்துவிட்ட காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் தன் தாயாரிடமே அரபுக் கல்வியையும் மார்க்க போதனைகளையும் ஒருங்கே கற்றார். பின்னர் நெல்லை சி.எம்.எஸ்.மிஷனரி பள்ளிக்கூடத்தில் பயின்றார் பிறகு திருச்சி ஜோசப் கல்லூரியிலும், சென்னை கிருஸ்துவ கல்லூரியிலும் சேர்ந்து உயர்கல்வி பெற்றார். இளைஞராக இருக்கும் போது தமது பேட்டையில் பால்ய முஸ்லிம் சங்கம் என்ற சங்கத்தை துவக்கினார்.

கல்லூரியில் படித்துவந்த காயிதே மில்லத் அவர்கள் தம் பி.ஏ பட்டம் இரண்டு மாதங்களே இருந்த சமயத்தில் தான் நம் தாய்நாட்டின் தந்தை காந்திஜீ அவர்கள் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கி இளைஞர்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் கலந்து கொள்ள வருமாறு அழைத்தார். நாட்டு விடுதலை உணர்வு கொண்ட காயிதே மில்லத் அவர்கள் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு விடுதலை போரட்டத்தில் குதித்தார். தீவிரமாக தம்மை அர்பணித்துக்கொண்டார். சைமன் கமிஷன் சென்னை வந்த போது பூக்கடை அருகே கருப்பு கொடி காட்டினார். விடுதலை போரட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்த வேண்டியதாயிற்று. 1920 ல் திருநெல்வேலியில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டின் மகாசபையில் இந்தியாவுக்கு பூரண சுதந்திரம் வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ராஜாஜி அவர்களுக்கு பக்கபலமாக இருந்தார் காயிதே மில்லத்.

வணிகமும், வள்ளல் குணமும்:
இந்தியாவிலேயே அதிகமான அளவில் தோல் பதனிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பிரபல வணிக நிலையமாக அன்றைக்கு விளங்கிய ஜமால் முகையதீன் அன்கோ வில் அலுவலக மேலாளர் பணி சேர்ந்தார் காயிதே மில்லத். அந்த கம்பெனியின் பங்காளிகளில் ஒருவரும் காந்திஜீ அவர்களின் நம்பிக்கைக்குரிய நெருங்கிய நண்பராகவும் , நாட்டுக்கும் காங்கிரஸ் காட்சிக்கும் லட்சம் லட்சமாக பணத்தை வாரி கொடுத்த வள்ளலாகவும் திகழ்ந்த ஜமால் முஹம்மது அவர்களின் மதிப்பையும் அன்பையும் தம்முடைய சிறப்பு குணங்களால் பெற்றுக்கொண்ட காயிதே மில்லத் அவர்கள், அந்த கம்பெனியினுடைய நிர்வாக பங்காளியாக உயர்ந்தார். இதனால் அல்லாஹ்வின் அருளால் செல்வம் குவிந்தது. அதை பொதுப்பணிக்களுக்கு வாரி வழங்கிய வள்ளலாகவும் வாழ்ந்தார். காந்திஜீ, அபுல் கலாம் ஆசாத், ராஜாஜி ஆகியோர் கட்சிக்காவும், டாக்டர் ஜாகீர் உசேன் அவர்கள் டில்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் காகவும் நன்கொடை பெற்றுள்ளனர்.

ஜமால் முஹியத்தீன் நிறுவனத்தின் பங்காளியான அப்துல்லா சாஹிப்பின் புதல்வி ஜமால் ஹமீதா பீவியை 19.11.1923 தேதி வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டார். இவர்களுக்கு 10.11.1925 தேதியில் ஒரு மகன் பிறந்தார். இருபெரும் குடுபங்களின் நினைவை போற்றும் வகையில் ஜமால் முஹம்மத் மியாக்கான் என்று பெயர் சூட்டினார். இந்த ஓரே ஒரு மகன் தான் பின்னர் ஜே.எம்.மியாக்கான் என்று சுருக்கமாக அழைக்கப்பட்டார். 27-7-62 ம் தேதியில் காயிதே மில்லத் அவர்களின் துணைவியர் ஹமீதாபீவி காலமானார்.

அரசியல் பணிகள்:
காயிதே ஆஜம் ஜின்னா அவர்களை போல் தீவிர காங்கிரஸ் ஆதரவாளரான காயிதே மில்லத், 1936 ல் காங்கிரஸ் கட்சியில் பெரும்பான்மை வகுப்புவாதம் தலைதூக்கியதால் ஜின்னா விடுத்த ஆழைப்பை ஏற்றுக்கொண்டு 1937ல் அகில இந்திய முஸ்லிம் லீகின் உறுப்பினராக சேர்ந்தார். 1938 ல் சென்னை மாவட்ட தலைவராகவும் 1945ல் மதராஸ் சட்டமன்றத்திற்கு தனி தொகுதியில் இருந்து போட்டியின்றியும் தேர்வு செய்யப்பட்டார். அப்போது சட்டமன்றத்தில் முஸ்லிம் லீக் உறுப்பினர்களின் எண்ணிக்கை 29 1946 ம் ஆண்டு அப்போது சென்னை மாகாணம் பிரிக்கப்படாத பெரும் மாநிலமாக � சென்னை ராஜதானி"" என அழைக்கப்பட்டது. (இதில் ஆந்திரா- கேரளா மாநிலங்கள் அடங்கியிருந்தன.

இதனால் மதராஸ் சட்டசபை என்று அழைக்கப்பட்டது. இந்த சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராகவும், மதராஸ் மாகாண முஸ்லிம் லீக் தலைவராகவும் பதவி வகித்தார்.

1947 ஜுலை மாதம் சென்னையிலிருந்து முஸ்லிம் என்ற தமிழ் நாளிதழ் அரம்பித்தார். இதே ஆண்டில் இந்திய துணைக்கண்டம் இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் இரு தனித்தனி நாடுகளாக பிரிக்கப்பட்டது. பிறகு பாகிஸ்தான் தலைநகரான காராச்சியில் கூடிய அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்ஸிலின் கடைசி கூட்டத்தில் அகில இந்திய முஸ்லிம் லீக் செயல்பாடுகள் முடித்துக் கொள்ளப்பட்டு, �இந்திய முஸ்லிம் லீக்� என்றும் �பாகிஸ்தான் முஸ்லிம் லீக்� என்றும் இரு தனித்தனி அமைப்புகளாக பிரிக்கப்பட்டு காயிதே மில்லத் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அன்றைய தினம் அகில இந்திய முஸ்லிம் லீக் """"டான்�� பத்திரிக்கையில் வரவுகளின் பங்கு தொகையாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கென ரூபாய் 17 லட்சம் ஒதுக்கப்பட்டு அதை பெற்றுக்கொள்ளுமாறு காயிதே ஆஜம் ஜின்னாஹ் அவர்களும் நவாப் லியாகத் அலிகானும் கேட்டுக்கொண்டபோது தலைவர் காயிதே மில்லத் கூறிய வார்த்தைகள், �அந்த 17 லட்சம் ரூபாயை விட எனது லட்சியம் உயர்வானது, அது எங்களுக்கு தேவையில்லை. நீங்கள் கொடுக்கும் பணத்தைக் கொண்டு நாங்கள் இந்தியாவில் முஸ்லிம் லீகை வளர்க்க விரும்பவில்லை. அப்படியே எங்களுக்கு பணம் தேவைப்பட்டால் இந்திய சகோதரர்களிடம் கேட்டு பெற்றுக்கொள்வேன்� என்று கூறிய போது பாகிஸ்தான் பிரதமர் லியாகத்அலிகான் காயிதே மில்லத் அவர்களிடம், �சரி, அந்த பணம் எங்கள் வங்கியில் இருக்கும்-தாங்கள் விரும்பும் போது பெற்றுக்கொள்ளலாம்� என்று கூறினார். இன்றைய மதிப்பில் கூட பெரிய தொகையாக ரூபாய் 17 லட்சம் இருக்கும் போது 1947 ம் ஆண்டில் அது எவ்வளவு பெரிய தொகை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

பிறகு காயிதே மில்லத் பாகிஸ்தான் பிரதமரிடம் கூறிய வார்த்தைகள் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும். """"நாம் முஸ்லிம்களாக இருந்தாலும் இனிமேல் நாம் இருவரும் வேறு-வேறு நாட்டை சேர்ந்தவர்கள். நாம் இன்று முதல் அன்னியர்களாக பிரிகிறோம். எந்த சந்தர்பத்திலும் இந்திய முஸ்லிம்களின் விவகாரத்தில் நீங்கள் தலையிடக்கூடாது, எங்கள் உரிமைகளை எங்கள் கலாசாரத்தை பாதுக்காக்கவும் எங்களுக்கு தெரியும். எங்கள் தாய் நாடாகிய இந்தியாவிலுள்ள சிறுபான்மை முஸ்லிம்களுக்கு என்ன நேர்தாலும் சரி, பாக்கிஸ் தானிலுள்ள இந்து சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்கி, அவர்களை அன்பாகவும், நேர்மையாகவும் நடத்தி இந்து சகோதர்களை கண்கலங்கிடமால் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட ஆவண செய்திட வேண்டுகிறேன். இதுவே இந்திய முஸ்லிம் களுக்கு தங்கள் செய்யும் உதவியாக கருதுகிறேன்""

இவ்வாறு காயிதே மில்லத் கூறியதை கேட்ட காயிதே ஆஜம் ஜின்னாவும், நவாப் லியாகத் அலிகானும் கண்ணீர் மல்க காயிதே மில்லத் புனித கரங்களில் முத்தமிட்டு அப்படியே செய்ய உறுதி கூறினார்கள் என்றால் காயிதே மில்லத் தேசப்பற்றையும். சிறுபான்மை மக்களின் மீது அவருக்கு இருந்த பாசத்தையும் மத நல்லிணக்கத்திற்கு அவர்காட்டிய வழியையும் புரிந்து கொள்ளலாம்.

முஸ்லிம் லீக் தலைமை பொறுப்பு:
இந்திய விடுதலைக்குப்பின் முஸ்லிம்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாக்கப்பட்ட அந்த பதற்றமான காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கு வழிகாட்டவோ, தைரியம் சொல்வோ எந்த ஒரு தலைவரும் முன்வாரத சூழ்நிலையில், முஸ்லிம் லீகின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழந்தது.

அன்றைய மதராஸ் இராஜதானியில் வாழ்ந்த முஸ்லிம்களும், பம்பாய்மாகாண முஸ்லிம்களும் மட்டும்தான் முஸ்லிம் லீக் தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என்று கருதினார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வடக்கில் வாழும் முஸ்லிம்கள் முஸ்லிம் லீகை கலைத்துவிட்டால் தங்கள் எதிர்காலம் நன்றாக அமையகூடும் என்று எண்ணினார்கள்.

வகுப்புக் கலவரங்களினாலும் வெறிபேச்சுகளாலும் அச்சுறுத்தப்பட்ட இந்திய முஸ்லிம்களுக்கு மலை அசைந்தாலும் அல்லாஹ் மீது கொண்ட நம்பிக்கையில் நிலை குலையாத காயிதே மில்லத் அவர்கள் சொன்ன வார்த்தை """"முஸ்லிம்களே ஒரு கொடியின் கீழ் ஒன்று படுங்கள் முஸ்லிம்லீகை பலப்படுத்துங்கள்"" என்பதுதான்.

அதே நேரத்தில் முஸ்லிம் லீக்கை கலைத்து விடுங்கள் என்று பிரதமர் நேரு மிரட்டல் விடுத்தார். மவுண்ட் பேட்டன் பிரபுவை தூதுஅனுப்பி தாய்ச்சபை முஸ்லிம் லீக்கை கலைக்க சென்னார். அவர் மட்டுமல்ல இந்தியாவின் உள்துறை அமைச்சர் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் பச்சை பிறைக்கொடியை பறக்க அனுமதிக்க மாட்டேன் என்று கர்ஜனை செய்தார். சில நேரங்களில் கனிவாகவும் கெஞ்சி வேண்டினார்கள், சில சமயங்களில் பதவி ஆசைகாட்டி பார்த்தார்கள்.

துணிவாக நெஞ்சை நிமிர்த்தி """"முஸ்லிம் லீகைக் கலைக்க முடியாது, அது நான் தொடங்கிய இயக்கம் அல்ல. ஒரு முஸ்லிம் இந்தியாவில் உள்ளவரை முஸ்லிம் லீக் இருந்தே தீரும். அதை யாரலும் தடுக்க முடியாது"" என்று அழுத்தம் திருத்தமாக அன்றைக்கு காயிதே மில்லத் பதில் அடி தந்தார்.

இந்திய முஸ்லிம்களே நீங்கள் அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள். நாம் ஓன்றுப்பட்டு விட்டால் நமக்கு இணையாருமில்லை என்று எடுத்துகூறி கடுமையான இன்னல்களையும், பழிசொற்களையும் தம் இதயத்தில் தாங்கி கொண்டும் சகித்துக்கொண்டும் , தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை நிலைநாட்டிய இணையற்ற தலைவர் தான் காயிதே மில்லத்(ரஹ்) அவர்கள்.

வகுப்புவெறி, மதவெறி கொழுத்து விட்டெரிந்து கொண்டிருந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் என தம்மை இனங்காட்டி கொள்ள அஞ்சிய நேரத்தில், முஸ்லிம் லீக் என்று உச்சரிப்பது கூட தேசத் துரோகம் என்று கருதப்பட்ட காலத்தில் இறைவனைத்தவிர எவருக்கும் அஞ்சாத நெஞ்சத்துணிவுடன் 1948 மார்ச் 10-ல் சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் கூட்டம் நடத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமைப் பொறுப்பை ஏற்று, விடுதலை பெற்ற இந்தியாவில் முஸ்லிம்களுக்கு ஒரு கண்ணியமான மானமிக்க நல்வாழ்வு கிடைக்கவும், சமுதாயத்தின் மீது பிறர்கொண்ட பகைமை மறைந்து பாசம் தழைக்கவும் உழைத்தார்.

பாராளுமன்ற பணி:
தமிழக்தில் பிறந்த காயிதே மில்லத் மலையாள மொழிபேசும் மக்கள் நிறைந்து வாழும் கேரளாவிலுள்ள """"மஞ்சேரி�� பாராளுமன்ற தொகுதியிலிருந்து 1962,1967,1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த மூன்று பொது தேர்தல்களிலும் தொகுதிக்குக்கு ஒரு முறை கூட சென்று மக்களிடம் வாக்கு கேட்காமலேயே மகத்தான வெற்றியை பெற்றார். தொகுதிக்கு செல்லாமலேயே ஒரே தொகுதியில் மூன்று முறை வெற்றிவாகை சூடிய ஒரே தலைவர் காயிதே மில்லத் என்ற பெருமையை பெற்று வரலாற்றில் இடம்பெற்றார்.

பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் உரிமைக்காக மட்டுமல்ல அனைத்து சிறுபான்மை மக்கள். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலை எழுப்பினார்.

1966 ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி பொறுப்புக்கு வந்து வங்கிகள் தேசிய மாயமக்கும் சட்ட மசேதாவும், மன்னர் மானியம் ஒழிப்பு மசோதாவும் கொண்டு வந்தபோது காயிதே மில்லத் அவர்களை சந்தித்து அவர் ஆலோசனை பெற்று நிறைவேற்றி செயல்படுத்தினார். அரசியல் நிர்ணய சபையிலும், நாடாளுமன்ற இருஅவைகளிலும் உறுப்பினராக இருந்த போது அனைவரும் வியந்து போற்றும் வகையில் சிறுபான்மை சமூகங்களின் மொழி. கலாசார, மார்க்கப் பாதுகாப்புக்கு ஒயாமல் குரல் கொடுத்த ஒப்பிலா தலைவராக காயிதே மில்லத் விளங்கினார்.

தமிழர்கள் பலர் இருந்தும், அரசியல் நிர்ணய சபையில் """"தமிழே இனிய மொழி -தொன்மை வாய்ந்த மொழி இந்தியப் பொதுமொழியாக இருக்கும் தகுதி வாய்ந்த மொழி �� என்று முழுக்கமிட்ட ஒரே தலைவர் காயிதே மில்லத் மட்டுமே.

தான் பிறந்த பொன்னாடு பல நெருக்கடிகளாலும் அந்நியநாட்டு தாக்குதலாலும் அலைகழிக்கப்பட்டபோது, தாய்நாட்டிற்காக எதையும் தியாகம் செய்ய துணிந்தார் காயிதே மில்லத். 1962ல் சீனா தாக்குதல் அதன் பிறகு பாகிஸ்தான் படையெடுப்பு நடந்த போது தனது ஒரே ஒரு தவப்புதல்வன் மியாக்கான் அவர்களை ராணுவத்திற்கு அனுப்பிட முன் வந்து பிரதமர் நேருவுக்கு கடிதம் எழுதினார். வீர மகனை இராணுவத்திற்கு அனுப்ப முடிவு செய்ததையும் தலைவரின் தேசப் பற்றையும் தியாக உணர்வையும் நெஞ்சார பாராட்டி 17.11.1962 தேதியில் பாரட்டுமடல் எழுதி காயிதே மில்லத்க்கு அனுப்பினார் நேரு. காயிதே மில்லத் மகனார் மியாகான் அவர்களுக்கு இராணுவத்தில் சேரும் வயது கடந்து விட்டதால் இராணுவ தலைமை சேர்க்க முடியாது. என்று கூறி கடிதம் அனுப்பி விட்டது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தீரும் வரை தனது பாராளுமன்ற சம்பளத்தில் ஒரு கணிசமான தொகையை நாட்டின் பாதுகாப்பு செலவுகளுக்கு தந்துவிட்ட ஈடுஇணையற்ற தியாகி என காயிதே மில்லத்தை நேரு புகழ்ந்தார்.

கூட்டணி தத்துவத்தை உருவாக்கிய தந்தை
இந்தியாவிலேயே முதல் முதலாக அரசியல் கூட்டணி என்ற தத்துவத்தை கட்சிகளிடையே தேர்தல் கூட்டணி அமைப்பு முறையை ஏற்படுத்தி 1967 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுதந்திரா கட்சி, குடியரசு கட்சி, கம்யூனிஸ்ட் உள்பட ஏழு கட்சிகளின் கூட்டணி உருவாகிடவும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடி அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க ஆட்சி அமைய வழிகாட்டிய கூட்டணியின் தந்தை காயிதே மில்லத்.

இதனால் தமிழ்நாட்டு அரசியலில் திருப்புமுனையை உண்டாக்கி தொடர்ந்து கழக ஆட்சி அமைய துணைநின்ற பெருமைமிக்க வரலாறு முஸ்லிம் லீக்கிற்கு உண்டு என்பதை வரலாறு செல்லிக்கொண்டிருக்கிறது.

இதனால் தான் தமிழக முதலமைச்சாரன அறிஞர் அண்ணா இந்த கழக ஆட்சியை கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுக்கு நான் சமர்பணம் செய்கிறேன் என்று குறிப்பிட்டார்.

30.1.1962ல் காஞ்சிபுரத்தில் ஒலி முகம்மது பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள காயிதே மில்லத் காஞ்சிக்கு வந்திருக்கும் இந்த நாள் அரசியலில் ஒரு புனித நாள். காயிதே மில்லத் பாதம் பட்டு காஞ்சி மண் புனிதம் பெற்று விட்டது என்றும் தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிர் காயிதே மில்லத் என்றும் குறிப்பிட்டார்கள்.

அனைத்து துறைகளுக்கும் அடிப்படை கல்வியாகும். ஆகவே நம் சமுதாய மக்கள் வாழ்க்கை உயர கல்வி துறையில் முஸ்லிம்கள் விஷேச கவனம் செலுத்தி முயற்சிகளை எடுக்க வேண்டுமென்று காயிதே மில்லத் எந்த நேரமும் வலியுறுத்தியபடி இருந்தார். தாமே முன் நின்று பல முஸ்லிம் கல்லூரிகள் தோன்றிடக் காரணமாகவும் இருந்தார்கள்.

காயிதே மில்லத் தலைமையில் கல்வி நிதி திரட்ட ஒரு குழு அமைக்கப்பட்டு, இந்தோ , சீனா, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள பெருந்தனக்காரர்கள் பலரை அணுகி ஏழு லட்சம் ரூபாய்களைச் சேகரித்து கொண்டு வந்து அந்த நிதியிலிருந்து முஸ்லிம்களின் நிர்வாக பொறுப்பில் சென்னையில் புதுக்கல்லூரி, திருச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரி, மலபாரில் (கேரளாவில்) ஃபாரூக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் துவக்கப்பட்டன.

அரசியலில் நேர்மை, நியாயம், தூய்மை, வாய்மை, ஒழுக்கம், எளிமை உன்னத மக்கள் சேவை, தன்னல மறுப்பு, முதலியவை நிலவ வேண்டும் என்று எடுத்துரைத்து அதன்படி தன் வாழ்க்கையை நடத்திய மனிதரில் புனிதராக, அன்பு ,அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக வாழ்ந்து அனைத்து கட்சியினரும் மதிக்கதக்க கண்ணியமிகு தலைவராக விளங்கினார்.

1972 -ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ம் நாள் நாட்டு மக்களையும், நம் சமுதாயத்தையும் துயரக்கடலில் கண்ணீர் மல்க வல் அல்லாஹ்வின் நாட்டப்படி காலமானார்.

கண்ணியமிகு தலைவர் காயிதே மில்லத் மறைந்து நாற்பது ஆண்டு உருண்டு ஓடி விட்டன என்றாலும் மறக்கப்படாத மாமனிதராக இந்திய முஸ்லிம்களின் இதயங்களில் வாழ்கிறார்.

* மதத்தால் நல்ல முஸ்லிம்!
* தேசத்தால் நல்ல இந்தியர்!!
*இனத்தால் நல்ல தமிழர்!!!
என்ற பெருமையுடன் ஆத்ம ஞானியாக வாழ்ந்து அழியாத வரலாற்றை படைத்த கண்ணிய மிகு தலைவர் காயிதே மில்லத் புகழ் பரப்புவோம்! அவர் வழிகாட்டி நடத்திய இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பலப்படுத்த பாடுபடுவோம்.


குடியாத்தம் கவிஞர் வி.எஸ். முஹம்மத்ஃபஸ்லுல்லாஹ்
(தலைமை நிலைய பேச்சாளர், இ. யூ. முஸ்லிம் .லீக்)