புதன், 20 ஆகஸ்ட், 2014

மனதைப் பிழிந்த கவிதை....!



பிரபல பலஸ்தீனக் கவிஞர் சமீஹ் அல் காசிம் அவர்கள் காலமாகிவிட்டதாக இலங்கைக் கவிஞர் அண்ணன் அஷ்ரப் ஷிகாபுத்தீன் அவர்கள் ஒரு இடுகை இட்டிருந்தார். 

அதில் 75 வயதான கவிஞர் சமீஹ்

"மரணமே உன் மீது எனக்குக் காதலோ பயமோ கிடையாது. உடல் கொண்டு ஒரு படுக்கையையும் ஆத்மாவைக் கொண்டு ஒரு போர்வையையும் நீ உருவாக்கியிருக்கிறாய் "

என்று ஒரு குறிப்பை இரண்டு வாரங்களுக்கு முன்ன அவர் எழுதி வைத்திருந்ததையும் குறிப்பிட்டு பின் அவர் எழுதிய ஒரு கவிதையின் தமிழாக்கத்தை பதித்திருந்தார் அதை படித்துவிட்டு மிகுந்த உணர்ச்சி மேலிட வியந்து போனேன். அந்த கவிதையை படித்தால் பலஸ்தீனத்தின் கொடுஞ்சோகம் பட்டென விளங்கும்.. செத்தவனுக்கும் உணர்வு பிறக்கும்... அமைதியாக இருக்கும் நரம்புகளும் ஆர்த்தெழும்....!!!!!!!!!!

அவர்களின் போராட்டத்தை அப்படியே படமெடுத்துக்காட்டும் அந்த கவிதை இதோ.....

என் பாண்துண்டை நான் இழக்க நேரினும்
என் சட்டையையும் கட்டிலையும் விலை கூற நேர்ந்தாலும்
கல்வெட்டியோ சுமைகாவியோ
தெருக்கூட்டியோ நான் பிழைக்க நேரினும்
உன் பண்டசாலையைத்
துடைத்து மினுக்க நேரிட்டாலும்
குப்பையைக் கிளறி உணவெடுக்கும்படி வந்தாலும்
பட்டினி கிடந்து அழுந்த நேரினும்
மனிதனின் எதிரியே
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன் ...

என் காணியின் கடைசித் துண்டையும் பறித்தெடு
என் இளமையைச் சிறைக் கூண்டினுள்ளே புதைத்திடு
என் முதுசொத்தைக் கொள்ளையடி
என் நூல்களை எரித்திடு
என் கோப்பைகளில் உன் நாய்களுக்கு இரைபோடு
போ .. என் ஊரிலுள்ள கூரைகள் மீது
உன் பயங்கர வலைகளை விரித்திடு
மனிதனின் எதிரியே
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன்

என் கண்ணெதிரே
நீ எல்லா விளக்குகளையும் ஊதி அணைத்தாலும்
உதடுகளின் முத்தங்கள் அனைத்தையும்
உறைவித்தாலும்
என் நாட்டின் காற்றினை
சாபங்களால் நிறைத்தாலும்
என் ஓலமிடும் குரல்வளையை
அமுக்கி ஒடுக்கினாலும்
என் காசுகள் போற் பொய்க்காசுகள் தயாரித்தாலும்
என் பிள்ளைகளின் முகத்து முறுவலைப்
பிடுங்கி எடுத்தாலும்
இகழ்ச்சி ஆணி கொண்டு
என் விழிகளில் அறைந்தாலும்
மனிதனின் எதிரியே
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன்

மனிதனின் எதிரியே
துறைமுகங்களில் சைகைகள் உயர்த்தப்பட்டு விட்டன
காற்றெங்கும் அழைப்புகள் நிரம்பி விட்டன
எங்கெங்கும் அவை தெரிகின்றன
அடிவானத்திலே கப்பற்பாய்களைக் காண்கின்றேன்
முயன்று, இடர் மீறி, இழப்புக் கடல்களினின்றும்
யூலிசசின் கப்பல்கள் மீண்டு வருகின்றன
பொழுது புலர்கிறது ... மனிதன் முன்னேறுகிறான் ..
அவன் பொருட்டாக நான் சத்தியம் பண்ணுவேன் -
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன்
போராடுவேன்!

(நன்றி - பலஸ்தீனக் கவிதைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக