வெள்ளி, 19 செப்டம்பர், 2014

ப. சிதம்பரம் எனும் திறமையாளர்

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது . எந்த சூழ்நிலையிலும் நேரம் தவறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார் . விழாக்களுக்கு குறித்த நேரத்தில் வருவார் .நேர விரயம் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவரது நேரத்தைப் போலவே நமது நேரத்தையும் மதிப்பார். குறித்த நேரத்தில் சந்திப்பார் .காத்திருக்க வைப்பது பிடிக்காது .

வெட்டிப்பேச்சுக்கு இடம் கிடையாது . எவ்வளவு பெரிய விசயத்தையும் ஐந்து நிமிடத்தில் சொல்லிவிட முடியும் ,அப்படி முடியவில்லை என்றால் நமக்கு அவ்விசயத்தில் போதிய பரிச்சயமில்லை என்று பொருள் என்று சொல்லுவார் .

தமிழிலும் ,ஆங்கிலத்திலும் ரசிக்கத்தகக்க ஆளுமை உள்ளவர் . தமிழில் பேசும்போது ஆங்கிலத்தை ஒரு வார்த்தை கூட கலக்க மாட்டார் .பழந்தமிழ் இலக்கியத்தில் மிக நல்ல பரிச்சயம் உள்ளவர் .அதே போல நவீன இலக்கியத்திலும் ஆர்வம் உள்ளவர். நன்றாக எழுதக்கூடியவர்.
எதிர்கருத்துகள் மீது மரியாதை உள்ளவர் . ஒரு தலைவர் ,மிகச்சிறந்த அறிவாளி என்ற அகந்தை எப்போதும் கிடையாது . விவாதத்தில் அவர் கருத்தில் அவர் உறுதியாக இருப்பது போல் நாமும் இருப்பதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் . பிறகு நாம் சொல்லியது சரி என்று உணர்ந்தால் பலபேர் முன்னிலையில் பலநாள் கழிந்த பிறகு கூட அதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் .

தானே மிகப்பெரிய அறிவாளி என்ற போதும் முக்கியமான விசயங்களில் முடிவெடுக்கும் முன் பலருடைய கருத்துக்களையும் கேட்கக் கூடியவர் . அவரிடம் தலைமுறை இடைவெளி என்பது ஒரு துளி கூட கிடையாது . ஒரு 18வயது மாணவரோடு எளிதாக ரிலேட் செய்து கொள்ளக்கூடியவர் .



வார்த்தைகளை தேவைக்கு மேல் பயன்படுத்தவே மாட்டார் . எந்த நேரத்திலும் நிதானம் இழக்க மாட்டார் . ஒரு நாளைக்கு 20மணி நேரம் உழைக்கக் கூடியவர் . அதனால் தான் மிக நெருக்கடியான நேரங்களில் உள்துறையிலும் ,நிதித்துறையிலும் அவரால் சிறப்பாக செயலாற்ற முடிந்தது .

ஒரு சிறு குழந்தையாக இருந்தாலும் மரியாதையாக அழைத்தே பேசுவார். அவர் அமர்ந்திருக்கும் போது எதிரில் யாரும் மரியாதை நிமித்தமாகக் கூட நின்றுகொண்டு பேசுவதை அனுமதிக்க மாட்டார். கட்டாயம் அமர்ந்து தான் பேசவேண்டும் .(அந்த நாற்காலியில் அமர்ந்து பேசுங்கள் தம்பி! ).சாதி ,மதங்களுக்கு அப்பாற்பட்டு பரந்துபட்டுச் சிந்திக்கக் கூடியவர் .

அவர் சொன்னதிலேயே எனக்கு மிகவும் பிடித்தது. "எனக்கு குப்பைகளை அகற்றுவதற்கான ஒரு துறையைக் கொடுத்தால் ஏன் உள்துறை கொடுக்கவில்லை என்று கேட்டுக் கொண்டிருக்க மாட்டேன் . .உலகிலேயே மிகச்சிறந்த குப்பை அகற்றும் துறையாக அதை மாற்றுவது எப்படி என்று சிந்தித்து மாற்றுவேன் " வேறு எதைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருக்காமல் ,கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்கிற கொள்கை உடையவர் .

ஒரு நடமாடும் அறிவுக் களஞ்சியம். நவீனமான சிந்தனையுள்ள வேட்டி கட்டிய மனிதர் ! நான் தொலைவில் இருந்து நிறையக் கற்றுக்கொண்ட துரோணர் !

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தலைவர் . உங்களுக்குள் உள்ள எழுத்தாளருக்கு இப்போதாவது ஒரு வாய்ப்புக் கொடுங்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக