சனி, 26 நவம்பர், 2011

வேறு மழை

மிஞ்சிப்போனா என்ன சொல்லிற முடியும் உன்னால
இந்த மழையைப் பத்தி

ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும் குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு
கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க

ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து
பொணத்தோட ராப்பகலா பொழங்கித் தவிச்சதுண்டா

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு உயிர்ப்பதற அழுதிருக்கா உங்குடும்பம்

எதுக்கும் ஏலாம
உஞ்செல்லப்புள்ளையோட சிறுவாட்டக் களவாண்டு
சீவனம் கழிஞ்சிருக்கா

தங்கறதுக்கு வூடும் திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
ஒண்ணு தெரிஞ்சுக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.

- ஆதவன் தீட்சண்யா

பேஸ்புக்கில் பார்த்து என் உதடுகளை மேலுயர்த்தி ஆச்சிரியத்தின் உச்சிக்கு கொண்டு சென்ற கவிதை - கவின் மலர் என்பவர் பகிர்ந்திருந்தார் - நன்றிகளோடு உங்களுக்கு இந்த கவிதைப் படையல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக