வியாழன், 3 ஜனவரி, 2013

ஹெலன் ஆடம்ஸ் ஓர் அதிசய சரித்திரம்

மாணவர்களைக் காணும் போதெல்லாம் ‘கனவு காணுங்கள்’ என்று டாக்டர் அப்துல்கலாம் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். கனவு கண்டால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் சிலருக்குத் தோன்றலாம். இதோ ஹெலன் கெல்லரின் வாழ்க்கையை கொஞ்சம் புரட்டிப் பார்த்தாலே போதும், அதற்கான விடை கிடைக்கும்.
1880ம் ஆண்டு அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள துஸ்கும்பியாவில் பிறந்த ஹெலன் ஆடம்ஸ் கெல்லர், பிறக்கும்போது நல்ல ஆரோக்கியத்துடனே இருந்தார்.

ஒன்றரை வயதில் திடீரென ஏற்பட்ட கடுமையான காய்ச்சல் காரணமாக, கண்பார்வை, கேட்கும் தன்மை, பேசும் சக்தி ஆகியவற்றை இழந்துவிட்டார். அதனால் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரியாத ஹெலன், மிகவும் முரட்டுத்தனமான குழந்தையாக வளரத் தொடங்கினார்.

1887ம் வருடம் ஹெலனின் பெற்றோர் அன்று பிரபலமாக இருந்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லைச் சந்தித்து என்ன செய்வது என்று ஆலோசனை நடத்தினார். அவர் கொடுத்த அறிவுரையின் படி ஹெலனை பார்வை இழந்தோருக்கான ‘பெர்கின்ஸ்’ பள்ளிக்கு அனுப்பி ‘சல்லிவன்’ என்ற பெண்ணை அவரது ஆசிரியையாக நியமித்தனர்.

வாழ்க்கையே போய்விட்டது என்று கவலையில் இருந்த ஹெலன் கெல்லருக்கு ஏழு வயதில் புதிய வசந்தம் தொடங்கியது. பிறர் பேசும்போது அவர் உதடுகளில் கைவைத்து அதிர்வுகள் மூலம் பேசுவதைப் புரிந்து கொள்ளும் கலையை கற்றுக்கொடுத்தார் சல்லிவன்.

மேலும் ஹெலனின் உள்ளங்கைகளில் எழுத்துக்களை எழுதி புரிய வைத்தார். அதையடுத்து பார்வையற்றோருக்கான ‘பிரெயில்’ முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் போன்ற மொழிகளையும் கற்றுக்கொண்டார்.

தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட காரணத்தால் பேச்சு மட்டும் வரத் தொடங்கியது. பேச்சுத்திறமையை வளர்த்துக்கொண்டு மிகச்சிறந்த பேச்சாளராக மாறத் தொடங்கினார்.

ஹெலன் நியூயார்க் சென்று அங்கிருந்த காது கேளாதோருக்கான ‘ரைட்-ஹூமாஸன்’ பள்ளி மற்றும் ராட்கிளிஃப் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் காது கேளாத, கண் பார்வையற்ற மனிதர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டப்படிப்பை முடித்த காலத்திலேயே மிகச்சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் உயர்ந்துவிட்டார். உழைப்பாளர் உரிமைகளையும், சோஷலிஸத் தத்துவங்களையும் ஆதரித்து பல கட்டுரைகள், புத்தகங்கள் எழுதினார்.

சமுதாயத்தில் இருக்கும் குற்றம் குறைகளை கண்டுபிடித்து அதனைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். பெரும் சமுதாய விமர்சகராகவும் போற்றப்பட்டார். தன்னுடைய குறைகளை ஒரு பொருட்டாக நினைக்காமல் ஏழைகள், வீடு இல்லாதவர்கள், வறுமையில் வாடியவர்கள், நோயாளிகள், குறிப்பாக உடல் ஊனமுற்றவர்களுக்காகவே வாழத் தொடங்கினார்.

பார்வையற்றோர் நலனுக்காகத் தன்னுடைய பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி ஏராளமான நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, ஊனமுற்றோர் நலனுக்காக தன் வாழ்நாள் முழுவதும் செலவிட்டார்.

அவர் எழுதிய புத்தகங்களும், பேச்சுக்களும் அகில உலக அளவில் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத்தந்தது. சார்லி சாப்ளின் தொடங்கி, பிரிட்டிஸ் அரசி வரையிலான மாபெரும் பிரபலங்கள் அனைவரும் அவரைத் தேடி வந்து அன்பு செலுத்தினர்.

உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஹெலனின் 75வது வயதில் ‘கௌரவ டாக்டர் பட்டம்’ வழங்கியது.

1968ம் வருடம் அதாவது தனது 87வது வயதில் மரணமடையும் வரை, பல்வேறு நோய் தாக்குதலுக்கு இடையிலேயும், நொடிப்பொழுதும் ஓய்ந்து இருக்காமல் பிறருக்கு ஒரு வழிகாட்டியாகவே வாழ்ந்து மறைந்தார்.

அவரது வெற்றியின் ரகசியத்தைக் கேட்டபோது, “இந்த உலகத்தை என்னால் பார்க்க முடியவில்லை என்பது பெரும் ஏமாற்றம். அந்த ஏமாற்றம் தீர வேண்டுமானால், இந்த உலகமே என்னைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். என்னுடைய லட்சியம் ஒரு மாபெரும் கனவு என்பது தெரியும். ஆனாலும் அந்தக் கனவை தினம் தினம் கண்டுகொண்டே இருந்தேன். ஒரு கணம் கூட நான் கனவு காண்பதை நிறுத்தியதே இல்லை. அதனாலேயே வெற்றியும் பெற்றேன்” என்றாள்.

ஒரு நோயாளிப் பெண், பார்வை அற்றவர், காது கேளாதவர் என்று எத்தனையோ குறைபாடுகளுடன் இருந்த ஒருவரால் இந்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்க முடியும்போது நம்மால் முடியாதா? கனவு காணுங்கள். அந்த கனவு நனவாகும் வரை தீவிரமாக முயற்சி செய்யுங்கள். வெற்றி உங்களுக்கே உங்களுக்குத்தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக