செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

தியாகமே ஹிஜ்ரத்

       (முதுவைக் கவிஞர் மெளலவி .உமர் ஜஹ்பர் மன்பயீ)

ஆமினாரின் மணிவயிற்றில் மனிதரெனக் கருவாகி
  அரும்ஹீரா குகையினிலே மாநபியாய் உருவாகி
தேமதுர தீன்காக்க தவ்ரு குகையில் மறைவாகத்
  தனித்திருந்த திருநபியின் ஹிஜ்ரத்தைக் கூறுகிறேன் !

 தமக்காக வாழாமல் தன்னலத்தைப் பாராமல்
  தரணிமுழு மனிதருக்கும் தானுருகி ஒளியுமிழந்து
எமைக்காத்த உத்தமரின் தனிப்பயணம் ஹிஜ்ரத்தாம் !
  இதயத்தை சுடுமணலில் நடத்திவைத்த சரித்திரமாம் !

மக்கத்துப் பாறையிலே தீன்விதையை முளைக்க வைத்து
  மதீனத்து மனங்களிலே மறுநடவாய்ப் பதியமிட்டு
முக்காலம் விளைகின்ற வாழையடி வாழையென
  முப்போகம் விளைவிக்கச் சென்றதுதான் ஹிஜ்ரத்தாம் !

பக்கத்துத் தாயிபிலே போட்டவிதை முளைக்கவில்லை !
  பாவிகளின் நெஞ்சுக்குப் பாய்ச்சிய நீர் சேரவில்லை !
விக்கித்துப் போகாமல் வேதனையில் வாடாமல்
  வேகமுள்ள ஹிஜ்ரத்தால் விவசாயம் செய்தனரே !

மரம் வெட்டிப் போட்டாலும் சமையலுக்கு விறகாகும் !
  மெழுகுதனை எரித்தாலும் மேலுருகி வெளிச்சந்தரும் !
தரைபோட்டுத் தேய்த்தாலும் சந்தனமோ வாசந்தரும் !
  திருநபிக்குத் தரும்துன்பம் திரும்பினாலும் இன்பந்தரும் !

விரல் பறித்த மலர் கூட வஞ்சமின்றி வாசந்தரும் !
  வெட்டியமண் விழிதிறந்து ஊற்றெடுத்து நீரைத்தரும் !
தரங்கெட்டு ஊர் துறக்க வைத்தவரின் வாழ்வுக்கோ
  தாஹா ரசூல் ஹிஜ்ரத்தோ தண்டனையாய் அன்பைத்தரும் !!

தாய்மைக்குத் தத்துவமே தன்சேயைச் சுமப்பதுதான் !
  தங்கத்தின் இலக்கணமோ தான்வெந்து ஒளிர்வதுதான் !
தூயநபி வரலாறோ துயர்வென்று நிலைப்பதுதான் !
  தூய ஹிஜ்ரத் தீனைத்துளிர் விடச் செய்வதுதான் !

சேய்செய்யும் பிழைக்காகப் பெற்றமனம் அழுவதுபோல்
  சிந்திக்க வழிதெரியா சிறுமனத்தார் பாவங்களை
தான் மனதால் மன்னித்துதன் மனதால் நேசித்து
  தீன்மனதால் ஒன்றிணைந்த தியாகமதே ஹிஜ்ரத்தாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக