புதன், 2 மார்ச், 2016

காஞ்சிப் பெரியவருக்கு ஒரே சந்தோஷம் – இஸ்மாயிலைப் பார்த்ததில்...!


யார் இந்த இஸ்மாயில்..?
சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர் இந்த மு. மு. இஸ்மாயில்..!
இஸ்லாமியராக இருந்தபோதிலும் கம்ப ராமாயணத்தில் ஈடுபாடு அதிகம் கொண்டிருந்தவர் ..!
சென்னையில் கம்பன் கழகத்தை உருவாக்கி ஆரம்ப நாள் முதல் , தன் அந்திமக் காலம்வரை அந்த அமைப்பின் தலைவராக இருந்தவர்..!
“கம்பன் கண்ட சமரசம்” , “கம்பன் கண்ட ராமன்” இன்னும் பல இலக்கிய நூல்களை இனிக்க இனிக்க எழுதியவர்..!
அந்த கம்பனின் ரசிகரான நீதிபதி இஸ்மாயிலும் , காஞ்சிப் பெரியவரும் ஒருமுறை சந்தித்து , சந்தோஷமாக உரையாடினார்கள்..!
இலக்கியம்... கம்பராமாயணம்.... இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் இருவரும் விரிவாக விவாதித்தனர்...!
குறிப்பாக , நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் எழுதிய “மூன்று வினாக்கள்” என்ற புத்தகத்தைப் பற்றி..!
அந்தப் புத்தகத்தில் , “ வாலியை இராமன் மறைந்திருந்து கொன்றது சரிதான்..” என திட்டவட்டமாக , தீர்ப்பளித்து எழுதி இருந்தாராம் நீதிபதி இஸ்மாயில் ..!
அதைக் குறிப்பிட்டு காஞ்சிப் பெரியவர் , “ஒரு தலைமை நீதிபதியான , நீங்கள் இராமனுக்கே நீதி வழங்கி விட்டீர்கள் ” என்று ரொம்பவும் சந்தோஷப்பட்டாராம்..!
இருவரும் விடை பெறும் நேரம்..!
இப்போது மடத்திலிருந்தவர்களுக்கு மனதுக்குள் ஒரு பெருத்த சந்தேகம்..!
நீதிபதி விடை பெற்றுப் புறப்படும்போது...காஞ்சிப் பெரியவர் என்ன பிரசாதம் கொடுக்கப் போகிறார் ..?
இந்துக்கள் என்றால் விபூதி , குங்குமம் கொடுப்பார் ..!
ஆனால் ஒரு இஸ்லாமியருக்கு , இந்து மத பெரியவர் என்ன பிரசாதம் கொடுக்க முடியும்....?
இதோ... இஸ்மாயில் விடை பெற எழுந்து விட்டார்...!
அனைவரும் ஆவலோடு உற்று நோக்க....
காஞ்சிப் பெரியவர் ஒரு வெள்ளிப் பேழையில் இருந்த சந்தனத்தை எடுத்து , இஸ்மாயிலைப் பார்த்து “இந்தப் பேழையில் சந்தனம் இருக்கிறது... நம் இரு மதத்தினருக்கும் பொதுவான அம்சம் இந்த சந்தனம்...! உங்கள் தர்காவிலும் சந்தனக்கூடு இருக்கிறது...எங்கள் கோவில்களிலும் சந்தனம் இருக்கிறது... இதை அணிந்துகொண்டு நலமாக இருங்கள்” என்று வழியனுப்பி வைக்க , சந்தனத்தோடும் , சந்தோஷத்தோடும் புறப்பட்டுச் சென்றாராம் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில்..!
# படிக்கும்போதே சந்தனமாக மணக்கிறது இந்த சந்திப்பு...!
# அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும்....!
இது போன்ற பெரியவர்கள் இருக்க இருக்க
இந் நாட்டில் சமாதானம் இருக்கும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக