செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

ரமளான் மாதத்தில் நோன்பிருப்போம் நாட்டோரையும் நோன்பிருக்க வழிகாட்டுவோம் - கே.எம்.கே.



ரமளான் - இஃது அரபி மொழிச் சொல். இஸ்லாமிய காலண்டரில் ஒப்பதாவது மாதத்தைக் குறிக்கும் சொல். திருக்குர்ஆனில், `உங்களில் எவர் அம் மாதத்தை அடைகிறாரோ, அவர் அம் மாத முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்�(2-185) என்று கூறப்பட்டிருக்கிறது.


இதன் அடிப்படையில்தான், நோன்பு, இஸ்லாமிய மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஏற்கப்பட்டிருக்கிறது.


தமிழக முஸ்லிம்கள் இன்றிலிருந்து (2-8-2011 செவ்வாய்) நோன்பு அனுசரிக்கிறார்கள். இந்திய மாநிலங்கள் எல்லாவற்றிலும் இதை நிலைதான். பல முஸ்லிம் நாடுகளில் ரமளான் நோன்பு 1-8-2011-லிருந்து ஆரம்பமாகியுள்ளது. ரமளான் பிறையைப் பார்த்து,

ஒப்புக்கொள்ளக் கூடிய அறிவிப்பு வெளிவருவதைப் பொறுத்து, இந்த தேதி மாற்றம் நிகழ்வது வரலாற்றில் வாடிக்கையான வழக்கமே ஆகும்.


தமிழகத்தில் `ரமளான்� என்னும் சொல்லை, ரம்ஜான் என்றும், ரமலான் என்னும் எழுதுகிறார்கள். அரபியில் உள்ள எழுத்துக்களுக்குரிய சரியான தமிழ்ச் சொல்லாக்கம் ரமளான்தான்!


தமிழ் மொழியில் ளகரம், ழகரம், லகரம் என்று மூன்று ஒலி உச்சரிப்புகள் உள்ளவை உள்ளன.

அதேபோல் அரபி மொழியிலும் ளாத், ழாத், லாம் என்று மூன்று ஒலி உச்சரிப்புகள் உள்ளன.

ரமளான் என்னும் சொல்லில் உள்ள அரபி எழுத்துக்கள் ரே, மீம், ளாத், அலிப்ஃ, நூன் ஆகியவையாகும். இந்த எழுத்துக்கள் அடங்கிய சொல்தான் ரமளான்.

`ரமலான்� என்று அச்சொல்லைத் தமிழ்ப்படுத்தும்போது, அரபி உச்சரிப்பில் ஒச்சம் வருகிறது என்பது மட்டுமல்ல; பொருளிலும் மாறுபட்டு விடுகிறது.

`ரமல� என்பதற்கு `மணல்�, விதவையாதல் என்னும் பொருள் தரப்படுகிறது.

ஆனால் `ரமள� என்பதன் பொருள் சுட்டெரித்தல், கரித்தல், உச்சமான வெயிலில் வாட்டியெடுத்தல் என்று கூறப்பட்டுள்ளது. ரமளான் மாதத்தில் நோன்பிருப்பதன் நோக்கமே, உடம்பின் தீமைகளைச் சுட்டெரிப்பதுதான்! உள்ளத்தின் பாவத் தீமைகளை கரித்துவிடுவதுதான்!

ரமளான் மாதத்தில் ஒவ்வொரு நாளிலும் வைகறைக்கு முன்பிருந்து அந்திப்பொழுது அடங்கும் வரையிலும் உண்ணாமலும், பருகாமலும், தம் துணைவியாருடன் உடலுறவு கொள்ளாமலும் இருந்து ஒரு தவ வாழ்க்கை மேற்கொள்வதைத் தான் நோன்பு என்கிறோம். இதையே அரபியில் `அஸ்ஸெளாம்� என்று அழைக்கிறார்கள்.


நபிகள் நாயகம் முஹம்மது (சல்-அம்) அவர்கள் `ஹிரா� குகையில் தனித்திருந்து, பசித்திருந்து, விழித்திருந்து, தவத்தில் இருந்தார்கள் என்பதும், அது ரமளான் மாதத்தில் நிகழ்ந்தது என்பதும், அந்த நிலையில்தான் இறைவன் புறத்தில் இருந்து வானவர் ஜிப்ரயீல்(அலைஹி) மூலமாக, அந்த ஹிரா குகையில் நபியவர்களுக்கு குர்ஆன் வேதம் வஹீ - ஞான வெளிப்பாடு மூலம் அறிவிக்கப்பட்டது என்பதும் வரலாற்றுச் சத்தியங்களாகும்.


அல்-அமீன் முஹம்மது, ஹிரா குகை வஹி வரவுக்குப் பிறகு அண்ணல் நபி முஹம்மது (சல்-அம்) என்று ஆனார்கள் என்பதை உலகறியும். ரமளான் மாதம் திருக்குர்ஆன் இறங்கிய மாதமாகும். இந்த மாதத்தில்தான் ஆயிரம் மாதங்களுக்கும் மேலான மேன்மைமிக்க `லைலத்துல் கத்ரு� இரவும், இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப் படையிரவில் வரவிருக்கிறது; விதித்துள்ள அனைத்து அருளும் அந்த இரவில் இறையருள் தரவிருக்கிறது.


ரமளான் மாதத்தில் நோன்பிருந்து, குறைதீர்க்க அழுது, நிறைவான வாழ்வு பெற எல்லா வகையிலும் தொழுது இரவு பகலில் இறைமறையாம் திருக்குர்ஆனை ஓதிப்படித்து, சிந்தித்து, செயல்படுத்தி வாழும் வாழ்வியலைத் தெரிந்து இன்புற வாய்ப்பு வந்திருக்கிறது.

இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்துவோர் உலகத்துக்குப் பெரிய நன்மை செய்தவர் ஆவார்கள்.


உலகில் வறுமையை அறவே இல்லாமல் செய்வதற்கு எல்லாரும் நோன்பிருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

``இலாபலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர் ; பலர் நோலா தவர்��

உலகத்தில் நோன்பு நோற்பவர் சிலராகவும், நோன்பை நோற்காதவர் பலராகவும் இருக்கின்ற காரணத்தினால்தான் வறுமையில் வாடுவோர் கூட்டம் பெருகியிருக்கிறது. வறுமையை ஒழிக்க வையகத்தாரில் பலரும் நோன்பு நோற்க வேண்டும்!


ஆம்! நாமும் நோன்பிருப்போம்! நாட்டோரையும் நோன்பிருக்க வழிகாட்டுவோம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக