சனி, 31 மார்ச், 2012

ஒன்றாம் வகுப்பு மீனாட்சி.

'அப்பா...
ஒரு கதை சொல்லு'
ஓடி வந்தாள்
ஒன்றாம் வகுப்பு மீனாட்சி.

ஆர்வத்துடன் ஆரம்பித்தேன்
'முயலுக்கும் ஆமைக்கும்
ஓட்டப் பந்தயம்
முயல் உறங்க
ஆமை வென்றது'
அபிநயத்துடன்
அரங்கேற்றினேன்.

'போப்பா!
தப்புத் தப்பா சொல்றே...
மெள்ள நகரும் ஆமைக்கும்
துள்ளி ஓடும் முயலுக்கும்
போட்டி என்பது நியாயமா?'

ஒன்றாம் வகுப்பின்
கேள்வியால்
நூற்றாண்டுத் தத்துவம்
நொடியில் உடைந்தது.
கேள்வியே கல்வி என்று
இப்போது புரிந்தது.

ம்...ம்... பள்ளிக்குப்
போக வேண்டியது
மீனாட்சியல்ல!

- அமிர்தநேயன்
(விகடன் - 07.அக்டோபர்.09 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக