சனி, 19 ஜூலை, 2014

இஸ்லாம் குறித்து கவிஞர் வாலி:

எழுத்தால் போட முடியாத எடை ......... கவிஞர் வாலி 



பாடம் பயில நான் 
பள்ளிவாசல் புகுந்த 
பிராயந்தொட்டு தொழுகை புரிய 
பள்ளிவாசல் 
புகுவாரோடு பழகி நின்றவன்! 
அவர்களது அன்பை ஆரா 
அமுதமாய் தின்றவன் ! 

என் ஒவ்வொரு பருவத்திலும் 
எனக்கு ஒத்தாசை பண்ணிய பெருமக்கள் 
இஸ்லாமிய இனத்தவர் 
அவரெலாம் - தண்ணீர் கலவா 
தாய்ப்பால் மனத்தவர் ! 

இன்றைய என் ஏற்றம் 
அவர்களிட்ட பிச்சை 
இதைச் சொல்ல 
எனக்கில்லை லஜ்ஜை ! 

எல்லா சமயமும் 
எல்லாச்சமயமும் 
பேசுவது அன்பு 
பேணுவது அறம் இதை 
ஒர்ந்தார்க்கு இயல்பாகக் 
கைவரும் சமயப் பொறை 
எனும் இமயப் பொறை ! 
இந்தப் பொறை 
இருப்பின் இச்சமயம் 
அச்சமயம் 
என எச்சமயமாயினும் 
எவரும் 
அச்சமின்றி வாழலாம் என்பதை 
உணர்ந்து வாழ்ந்திடும் மன்பதை ! 

கவிவேந்தர் மு.மேத்தா காவியமாய் 
வரைந்த நபிகளார் வரலாற்றை வரிவிடாமல் 
படித்தவன் படித்து - பரவசத்தில் புளகாங்கிதம் எய்தி 
விழிப்புனலை வடித்தவன் ! 

அருளார்ந்த அத்தனும் அன்னையுமான 
அப்துல்லாவும் ஆமினாவும்
 இருளார்ந்த உலகிற்கு ஓர் இரவியை ஈந்தனர்
 அங்கனம் ஈர்ந்ததால் அவர்கள் மரித்த பின்னும் 
மக்கள் மனங்களில் மீந்தனர் ! 

அண்ணலார் அவர்கள் என்பு தோல் 
கொண்டு எழுந்து வந்த அன்புரு ! ம
றம் தன்னை புறம் காண வந்த அறம் ! 
காலணி அணிந்து தர்மம் நடந்த நூலணி ! 
மனிதம் என்னும் வடிவில் வந்த புனிதம் ! 
பயிர் உய்ய பெய்யும் வான் மழைபோல் 
ஞாலத்தின் உயிர் உய்யப் பெய்த ஞான மழை ! 
உலகு வணங்கும் உயரிய விழுமங்களின் 
மொத்தக் குழுமம் 
தகிக்கும் பாலையில் 
தவிக்கும் வேர்களுக்கான 
தண்ணீர்த் தடாகம் ! 
கதியற்றோர் கண்ணீரைத் துடைக்க 
வந்த பூந்துவாலை ! 
விட்டொழிக்க வேண்டிய வெற்றுச் சடங்குகளை 
சுட்டெரிக்க வந்த செந்தணல் சுவாலை ! 
எவ்வுயிரும் ஏற்று நிற்கும் செவ்வுயிர் ! 
சுருங்கச் சொன்னால் 
அண்ணல் நபிகளார் அவர்கள் 
இவ்வுலகிற்கு இறைவன் தந்த கொடை ! 
தூரிகையால் தீட்ட முடியாத ஓவியம் ! 
யாப்பதிகாரங்களால் காட்ட முடியாத காவியம் ! 
வார்த்தைகளால் சுட்ட முடியாதவர் வானம் போல் 
எட்ட முடியாதவர் ! 

பகை புகுந்த நெஞ்சத்தார் பார்வையில் படாமல் 
குகை புகுந்த குணாளரை 
கதீஜா மணாளரை காத்து நின்றது - ஒரு கருஞ்சிலந்தி ! 
அது - வாய் நூலால் குகைக்கு 
வாய்ப் பூட்டுப் போட்ட அருஞ்சிலந்தி ! 
ஆறறிவிடமிருந்து - ஒரு பேரறிவை 
ஆன்றறிவில்லாத ஒரு மூன்றறிவுக் காத்தது 
அதனால் அதற்கு அழியாப் புகழ் பூத்தது ! 
நபிகளார் பற்றி நாளெல்லாம் சொல்லலாம் 
சொல்லச் சொல்ல இன்னும் 
சொல்லாததாய் இருக்கும் சொல்லலாம் ! .....


.நன்றி:நமது முற்றம் - மாத இதழ் - ஜூலை -2007 
நன்றி: அபு ஹாசிமா

1 கருத்து: