சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 பிப்ரவரி, 2016

சமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள்


டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்


  நமது நாடு பல நூற்றாண்டுகளாகவே பல சமயத்தவர், இனத்தவர், மொழியினர், பண்பாட்டு மரபினர் வாழும் பன்மைச் சமூக நாடாக திகழ்ந்து வருகிறது. பன்மைச் சமூகச் சூழலில் இணக்கம் இருந்தால் மட்டுமே அமைதியும், மகிழ்ச்சியும் கிட்டும். நல்லிணக்கமே நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் வலுவான அடித்தளமாகும்.

  சமூக நல்லிணக்கம் மலர, வெற்று வார்த்தைகளும், போலிப் பேச்சுகளும், கண் துடைப்பு நடவடிக்கைகளும் எவ்வகையிலும் உதவ மாட்டா. மனித நேயம், நீதி, நியாயம், தர்மம், அஹிம்சை ஆகியவற்றின் கொள்கைகளும், செயல்பாடுகளுமே சமூக நல்லிணக்கம் உருவாக வழி வகுக்கும்.



 1.மனித நேயத்துடன் வாழ்க !

  சமூக நல்லிணக்கத்திற்குத் தடையாக இருப்பது கொள்கை வேறுபாடுகள் அல்ல. சமூகங்களுக்கிடையில் காணப்படும் ஆதிக்க மனப்பான்மை, வெறுப்பு, பகைமை, மாச்சரியம், பொறாமை, அவநம்பிக்கை, சந்தேகம் ஆகியவையாகும். இவற்றைப் போக்கும் அருமருந்து மனிதநேயமே. மொழியால், இனத்தால், சமயத்தால் வேறுபட்டிருப்பினும் நாம் அனைவரும் மனிதர்கள். ஒரே வகையான உடலமைப்பு, உடல் செயல்பாட்டு முறை, உளவியல் போக்கு கொண்டவர்கள். நமது தேவைகளும், உணர்வுகளும், ஆசைகளும், நிராசைகளும் ஒரே மாதிரியானவை. எனவே, தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்புவோம் என்று எண்ணிச் செயல்பட்டாலே நல்லிணக்கம் நம்மைத் தேடிவரும்.

  ஒன்றே குலம், ஒருவனே தேவன் – திருமூலர்
  யாதும் ஊரே, யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றன்
  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – வள்ளுவம்

  மனிதர்கள் அனைவரும் ஒரே குலத்தில் இருந்து பிறந்தவர்கள் ஒரு தாய் தந்தையரின் வழித்தோன்றல்கள் குர்ஆன் – பைபிள்

   உலகம் ஒரு குடும்பம் வசுதைவ குடும்பகம் என்ற கோட்பாடுகளைச் செயல்படுத்தினால் மனித நேயம் உருவாகும்.



2. உணர்வுகளை மதித்திடுக !

  ஒருவரது மொழியை, இனத்தை, சமயத்தை இழிவுபடுத்தும்போது, மோதல்கள் உருவாகி, இறுதியில் கலவரமாக வெடிக்கின்றது. வகுப்புவாதிகள் மக்களைப் பிளக்க வெறுப்பு விதைகள் விதைப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பிற சமயங்களை, கொள்கைகளை, சித்தாந்தங்களை மறுக்கலாம். ஆனால், உணர்வுகளை மதிக்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களை கண்ணியமாக, மனத்தைப் புண்படுத்தாமல் விமர்சிக்கலாம். ஆனால், இழிவு படுத்தக்கூடாது.


  (முஸ்லிம்களே !) அவர்கள் ஏக இறைவனை விடுத்து யாரை அழைத்து பிரார்த்தனை புரிகின்றார்களோ அவர்களை ஏசாதீர்கள்   (குர்ஆன் 6-108)


  பிற மதங்களைத் திட்டுவதும், விளைவுகளைப் பற்றி அக்கறை இன்றி அறிவிப்புகளை வெளியிடுவதும், பொய் பேசுவதும், அப்பாவி மக்களைக் கொல்வதும், கோயில்களையும், பள்ளிவாசல்களையும் களங்கப்படுத்துவதும் இறைவனை மறுப்பதாகும் காந்தியடிகள்.


3. வேற்றுமையில் ஒற்றுமை காண்க !


  ஒரு நாட்டில் பல்வேறு மதங்களும், பண்பாடுகளும், மொழிகளும் இருப்பது தவிர்க்க முடியாதது. ஒரு மதத்திற்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் உருவாவதும் தவிர்க்க முடியாதது. இப்படி இருக்கையில் ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்பது ஒற்றுமைக்கல்ல, வேற்றுமைக்கே இட்டுச் செல்லும். பிறரது உரிமைகளைப் பறிக்காத வகையில் ஒவ்வொரு பிரிவினரும் தமது சமயத்தை, பண்பாட்டைப் பின்பற்றி நடப்பதால் எவருக்கும் கேடில்லை.

  நமக்குத் தேவை ஒருமைப்பாடே தவிர பிற கலாச்சாரங்களை அழித்து ஒரே மாதிரியாக இருப்பது அல்ல.

 ஒற்றுமை வேறு

 ஒரே மாதிரியாக இருப்பது வேறு

  (இஸ்லாத்தை மேற்கொள்வதில்) யாதொரு கட்டாயமோ, நிர்பந்தமோ இல்லை (குர்ஆன் 2 : 256) என்ற இறைவசனம் கருத்துத் திணிப்பை வன்மையாக எதிர்க்கின்றது.


4. சம உரிமைகளையும், வாய்ப்புகளையும் வழங்குக !

  எவ்வித பேதமுமின்றி குடிமக்கள் அனைவரின் உயிர், உடைமை, கண்ணியம், நம்பிக்கை ஆகியவற்றிற்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் பொருளியல் தளங்களில் அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்க வேண்டும். ஒரு சமூகத்திற்கு ஒரு நீதி என்ற கொள்கையின் அடிப்படையில், உரிமைகளும், வாய்ப்புகளும் மறுக்கப்படும்போது பொறாமையும், வெறுப்பும், துவேஷமும் உருவாகி நல்லிணக்கம் குலைய நேரிடும். நீதி செலுத்துங்கள். எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக்கூடாது.    (குர்ஆன் 5-8) என்ற இறைவசனம் பகைமை கொண்டுள்ள சமுதாயத்திற்கும் நீதி செலுத்திட வேண்டும் என்று பணிக்கின்றது.


5. எல்லோரும் நல்லவரே என்று எண்ணுக

  எல்லா சமயத்தவரிலும், இனத்தவரிலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு என்று சாதாரண உண்மையை மறந்து நமது சமுதாயத்தவர் மட்டும் நல்லவர், பிற சமுதாயத்தவர் மோசமானவர் என்று எண்ணுவது விபரீதமான சிந்தனையாகும். நமது சமுதாயத்தவர்கள் நேர்மையானவர்கள், வீரர்கள், தேச பக்தர்கள், சகிப்புத்தன்மை உடையவர்கள், அறிவு மிக்கவர்கள், மென்மையானவர்கள் மற்ற சமுதாயத்தவர்கள் இதற்கு நேர் மாறானவர்கள் என்று எண்ணுவது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, வெறுப்பையும், பகைமையும் விதைக்கும் தன்மை கொண்டது. வகுப்புவாதிகள் பகைமையை வளர்க்க ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தீய சக்தியாக உருவகப்படுத்திக் காண்பிப்பார்கள். உருப்படியான கொள்கை எதுவும் இல்லாததால் ஒரு பொது எதிரியை உருவாக்கித்தான் தமது இயக்கத்தை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.

  மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற உயரிய சிந்தனையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.
 கிறிஸ்தவத்தோடு இஸ்லாம் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், கிறிஸ்தவர்களின் சில செயல்களை விமர்சித்தாலும், கிறிஸ்தவர்களிடம் காணப்படும் நல்ல பண்புகளை இஸ்லாம் மதிக்கத் தவறவில்லை என்பதைப் பின்வரும் திருமறை வசனம் உணர்த்தும்.

  அவர்கள் (கிறிஸ்தவர்களுள்) வணக்கத்தில் திளைத்த அறிஞர்களும், துறவிகளும் இருக்கின்றனர், மேலும் அவர்கள் அகந்தை கொண்டவர்களாகவும் இல்லை – குர்ஆன் (5-82)

  நமது நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், கலை, இலக்கியம், பண்பாடு, விஞ்ஞானம், விளையாட்டு, கல்வி, மருத்துவம், சமூக சேவை ஆகிய எல்லாத் துறைகளிலும் எல்லா சமயத்தவரும், மாநில மக்களும் பங்களித்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளனர் என்பது உண்மைக்குப் புறம்பானதாகும். இந்தச் செய்திகளை இளம் தலைமுறையினரும் புரிந்து கொள்ளும் வகையில் பாடப் புத்தகங்களிலும் இடம்பெறச் செய்ய வேண்டும்.



6. வரலாற்றைச் சரியான கோணத்தில் புரிந்து கொள்க

  மக்களைப் பிளவுபடுத்த வரலாறு ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. வகுப்பு வாதம் வகுப்பறைகளில் பாடப் புத்தகங்கள் வாயிலாக உருவாக்கப்படுகிறது என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. நாட்டில் விடுதலைக்கு முன்னர் வெள்ளையர்கள் இந்து, முஸ்லிம்களைப் பிளக்க வரலாற்றைத் திரித்தும், புரட்டியும், இட்டுக் கட்டியும் எழுதி தமது ஆட்சிக் காலத்தை நீட்டித்துக் கொண்டனர்.

  அவர்கள் எழுதிச் சென்ற வரலாற்றுக் குறிப்புகளை இன்னமும் நாம் சரி செய்யாமல் இருப்பது, வகுப்பு துவேஷத்திற்கு உரம் ஊட்டுவதாக உள்ளது. இன்றைய வகுப்புவாதிகளும், வகுப்புவாதத்தை மேலும் வளர்க்க வரலாற்றையே ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்.

  வரலாற்றில் பல தவறுகள், அநீதிகள் நடந்துள்ளன என்பது உண்மை. அவற்றை மூடி மறைக்காமலும், மிகைப்படுத்தாமலும், திரிக்காமலும் சொல்ல வேண்டும்.

  நடுநிலையோடு ஆதாரப் பூர்வமாக எழுதப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். உள்நோக்கத்தோடும், ஒரு பக்கச் சார்போடும் எழுதப்பட்ட செய்திகளைப் புறக்கணிக்க வேண்டும்.


  வரலாற்றுக் குறிப்புகளில் உள்ள முரண்பாடுகளை அறிய வேண்டும். ஒரு முஸ்லிம் மன்னர் கோயிலை இடித்தார் என்று ஒரு குறிப்பு காணப்படுகிறது. அதே மன்னர் கோயில்களுக்கு மானியம் வழங்கினார் என்றும் ஆதாரப்பூர்வ ஆவணக் குறிப்புகள், கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. எனவே, இங்கு ஓர் உண்மை திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்பது அம்பலமாகிறது.

  மன்னர்களுக்கிடையில் நடைபெற்ற சண்டைகள் மதங்களுக்கிடையில் நடைபெற்ற சண்டைகளாகவும், சமூகங்களுக்கிடையில் நடைபெற்ற சண்டைகளாகவும், சித்தரிக்கப்படுகின்றன. நாடு பிடிக்கும் ஆசையிலும், செல்வ வளங்களை சுருட்டிக் கொள்ளும் ஆசையிலும் மன்னர்களுக்கிடையில் போர்கள் நடைபெற்றன. இப்போர்கள் மதப்பிரச்சாரத்திற்காக நடைபெற்றவை அல்ல. முஸ்லிம் மன்னர்களின் படையில் தளபதிகளாகவும், சிப்பாய்களாகவும் இந்துக்கள் இருந்துள்ளனர். அதுபோலவே இந்து மன்னர்களின் படைகளில் முஸ்லிம்கள் இடம் பெற்றுள்ளனர். முஸ்லிம் மன்னரும், இன்னொரு முஸ்லிம் மன்னரும் மோதிக்கொள்ளும் வேளையில் அவர்கள் இருவருக்கும் இந்து மன்னர்கள் உதவி உள்ளனர். எனவே இந்த மோதல்களுக்கு மதச்சாயம் பூசுவது உண்மைக்கும் புறம்பானதாகும்.


  வரலாற்றில் நிகழ்ந்துள்ள பிழைகளைச் சரிசெய்யப் புறப்பட்டால் வரலாற்றில் எந்த காலகட்டம் வரை செல்வது? எனவே, வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்று, அதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதே அறிவுடைமையாகும்.

  வரலாற்றில் என்றோ நடந்து விட்ட தவறுகளுக்கு இப்போது வாழும் மக்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தித் தண்டிப்பது நியாயமல்ல.

  வரலாற்று நிகழ்வுகளை இந்த நோக்கில் அணுகாவிடில் உலக முடிவு நாள் வரை நாட்டு மக்களுக்கு அமைதி கிட்டாது.


7. சமூக சேவை ஆற்றுக

  சமூக சேவை பகைமையையும் துவேஷத்தையும் அகற்றி மக்களை இணைக்கும் ஆற்றல் கொண்டது. எனவே, ஒவ்வொரு சமூகமும் சாதி, மதபேதமின்றி அனைவருக்கும் பலன் கிட்டும் வகையில் சமூக சேவைகளைச் செய்து வர வேண்டும். சமூக சேவை, சமூக சேவைக்காகவே செய்யப்பட வேண்டும். சமூக சேவையோடு, மதப் பிரச்சாரத்தையும், கொள்கைப் பிரச்சாரத்தையும் இணைப்பது நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும்.


  சமூக சேவை செய்வது போலவே, நாட்டின் வளர்ச்சிப் பணிகளிலும் எல்லா சமூகங்களும் பங்கேற்க வேண்டும். இப்பணிகளில் எல்லோரும் இணைந்து செயல்படும் போது சமூகங்களுக்கிடையே நெருக்கம் அதிகமாகும். இப்பணிகளில் எந்தச் சமூகத்தையும் ஒதுக்கவும் கூடாது எந்தச் சமூகமும் ஒதுங்கவும் கூடாது.


8. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்க


  நமது நாட்டில் பல்வேறு சமூகங்கள் நூற்றாண்டுகளாக அருகருகே வாழ்ந்து கொண்டிருந்தாலும், ஒரு சமூகத்தின் நம்பிக்கை, கோட்பாடு, வழிபாட்டு முறைகள், பண்பாடு, அச்சமூகத்தின் பிரச்சனைகள், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஆகியவை பற்றி மற்றொரு சமூகத்திற்குத் தெரியாது. அரசியல், பொருளியல், வாணிபம், தொழில், கல்வி, வேலை வாய்ப்புகள் ஆகிய எல்லாவற்றையும் பேசுவார்கள். ஆனால் சமூகம், சமயம் சார்ந்த விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள மாட்டார்கள்.

  இதன் விளைவாக சமூகங்களுக்கிடையில் பெருத்த இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த இடைவெளியைத்தான் வகுப்புவாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பொய்யான செய்திகளை மக்களிடையே பரப்பி, வெறுப்புத் தீயை வேகமாக வளர்க்கின்றனர். எனவே, சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வை அதிகப்படுத்த பல்சயமப் பல் சமூக உரையாடல்களையும் அடிக்கடி நடத்த வேண்டும்.


9. அநீதிக்கெதிராக குரல் எழுப்புக

  மதவெறி, இனவெறி காரணமாக ஒரு சமூகத்தின் உரிமைகள் பறிக்கப்படும்போதும், அச்சமூகத்தினருக்கு அநீதிகள் இழைக்கப்படும் போதும் நாட்டின் எல்லா தரப்பு மக்களும் ஒரே குரலில் கண்டிக்க வேண்டும். அநீதி இழைப்பவர் நமது சமூகத்தவராயினும் விளைவுகளைக் கண்டு அஞ்சாமல் துணிந்து எதிர்க்க வேண்டும். தமது சமூகம் செய்யும் அநீதிகளுக்குத் துணை நிற்பதே இனவெறி என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

  வகுப்பு வெறியர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி அவர்களோடு எந்த அரசியல் உறவுகளும் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் ஆட்சிக் கட்டிலில் ஏறி விடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வகுப்புவாதிகள் ஆன்மீகப் போர்வையிலும் அரசியல் போர்வையிலும் மக்களை ஏமாற்றுகிறார்கள், ஆன்மீகம் வேறு, வகுப்புவாதம் வேறு என்பது மக்களுக்குத் தெளிவாக்கப்பட வேண்டும்.

  வகுப்பு மோதல்கள் நடைபெறும் வேளையில் மட்டும் எதிர்ப்பது, பின்னர் மெளனம் காப்பது என்ற நிலையை விடுத்து வகுப்புவாதத்திற்கு எதிராகத் தொடர்ந்து தொய்வின்றிக் குரல் எழுப்ப வேண்டும்.

  வகுப்பு மோதல்களுக்கான அறிகுறிகள் தென்படும் போது, அப்பகுதிகளுக்குச் சென்று மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.


10. நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்திடு

  நன்மையும், தீமையும் சமமாக மாட்டா, மிகச்சிறந்த நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பீராக, அப்போது கடும் பகை கொண்டவர்கள் கூட உற்ற நண்பர்களாகி விடுவதைக் காண்பீர் என்று கூறுகிறது திருக்குர்ஆன் (41-34,35)

  நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது.
  அது போலவே ஒரு தீமையை இன்னொரு தீமையின் வாயிலாகக் களைந்து விட முடியாது. வகுப்பு வாதத்தை இன்னொரு வகுப்பு வாதத்தால் ஒழிக்க முடியாது.
  வகுப்பு வாதிகள் துவேஷத்தை விதைத்தால் நாம் அன்பை விதைப்போம்.
  வகுப்பு வாதிகள் பொய்ச் செய்தியைப் பரப்பினால் நாம் உண்மையைச் சொல்வோம்.

  சமூக நல்லிணக்கம் மலர பத்து கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றைச் செம்மையாக வாய்மையாகச் செயல்படுத்தினால் மதவெறி, ஜாதி வெறி சாய்ந்து மனித நேயம் வளரும்.

( தினமணி – ஈகைப் பெருநாள் மலர் 2015 )

சனி, 6 டிசம்பர், 2014

பணம் என்ற காகிதத்தை பெற...

சிலர் அன்பை இழக்கின்றனர்.
சிலர் பண்பை இழக்கின்றனர்...
சிலர் நட்புகளை இழக்கின்றனர்.
சிலர் உறவுகளை இழக்கின்றனர்...
சிலர் கற்பை இழக்கின்றனர்...
சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்.
சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்.
சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்..
சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்.
சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்..

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

மனைவியிடம் பேசுங்கள்...!!! - திருச்சி சிவா

- திருச்சி சிவா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்

பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதியோடு விட்டுவிட்டு, பதினேழு வயதில் என்னை மணமுடித்து, 32 ஆண்டுகள் வாழ்ந்து, 49 வயது முடியும் நேரத்தில் என்னை தனிமனிதனாக தத்தளிக்க விட்டு என் மனைவி போய் விட்டாள்.அவளுடைய முழு ஒத்துழைப்பு, வாழ விரும்பி நடத்திய போராட்டம், மருத்துவர்களின் முயற்சி, இத்தனையும் மீறி இன்னும் வளர்ந்து நிற்கும் மருத்துவத்திற்கு கட்டுபடாத நோய் ஒன்று, எல்லோரையும் தோற்கடித்து விட்டு அவளை கொண்டு போய்விட்டது.

இதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த, அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை. காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான். ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது.

வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள். பொன் நகைகளை கழட்டிக் கொடுத்து விட்டு, புன்னகையோடு மட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு.

அரசியல் வெப்பம் தகித்தபோதும், தனிமனித வாழ்வின் துன்பங்கள் சூழ்ந்தபோதும், என் அருகே ஆறுதலாய், ஆதரவாய் இருந்தவள். எந்த நிலையிலும் தலை தாழ்ந்து வாழ்ந்திட கூடாது என்கின்ற என் குணத்திற்கு இயைந்து, இணைந்து நடந்தவள். சுயமரியாதையை காப்பதில் என்னையும் தாண்டி நின்றவள். மூன்று குழந்தைகளும் பிறக்கும் நேரத்தில், இடைதேர்தல் பணி, பிரச்சாரப்பணி, போராட்டங்கள் என்று அவள் அருகே இருக்காமல் சுற்றிகொண்டு இருந்தபொது சிறிதும் முகம் சுழிக்காதவள்.

1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன ' என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை பெரியகுளம் இடைத்தேர்தலுக்கு அனுப்பிவிட்டு செப்17 குழந்தை பிறந்து, இரண்டு நாட்கள் கடந்து 19 ந்தேதி நான் பார்க்க வந்தபோது ஒரு சிறிதும் முகம் சுழிக்காமல் ஒருமணி நேரத்திலயே என்னை மீண்டும் தேர்தல் களம் அனுப்பி வைத்த கற்பனை செய்ய முடியாத குணம் கொண்ட குலமகள். இரண்டாவது குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து நேராக அப்போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ் நிலையத்தில் காவலில் இருந்த இடத்தி பிள்ளையை காட்டிவிட்டு பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போன இலட்சியவாதியின் சரியான துணை.

விருந்தோம்பல் , உபசரிப்பு, இன்முகம், என்னைக்கான வருவோர் அத்தனை பேருக்கும் அன்னபூரணி. இரவு இரண்டு மணிக்கு எழுந்து சுடச்சுட தோசையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய துவையலை ஒதுக்கி புதிதாக அரைத்து பசியாற்றி பின்னர் சுருண்டு உறங்கும் அன்பு தெய்வம், தாய் போன துயரம் தெரியாமல், தாயின் இடத்தையும் நிரப்பி, ஒருபொழுதும், எதன் பொருட்டும் முகம் வாடுவது பொறுக்காமல் துடிக்கும் உள்ளம் கொண்ட உத்தமி; பொது வாழ்க்கையில் நான் நெறி பிறழாமல் நடப்பதற்குப் பெரிதும் துணையாய், ஊக்கமாய், பக்கபலமாய், இருந்தவள்.

பண்டிகைகளும், திருநாள்களும், கோலாகலமாய், கூட்டம் கூட்டமாய் கொண்டாடுவதற்கு அவள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், காட்டும் ஆர்வமும் அளவிடற்கரியவை.
இத்தனை கருத்துக்களை அவள் மீது நான் கொண்டிருந்ததை ஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதேயில்லை. ஆண்செருக்கு என்பார்கள், நிச்சயமாக அது இல்லை, இருந்திருந்தால் இந்த உறுத்தல் வந்துருக்காது. நேரம் இல்லை என்பார்கள், பொய் 32 ஆண்டுகளில் பத்து நிமிடம் கூடவா கிடைக்காமல் போயிருக்கும். தானாகவே புரிந்து கொள்வார்கள் என்பார்கள். என்றால் மொழி எதற்கு? மொழியின் வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு? பேசுவதற்குதானே? உணர்த்துவதற்குதானே? ஒரு சொல் ஓராயிரம் புரியவைக்குமே.

காலம் கடந்து பயன்படுத்தினால் பயனற்றுப்போவது பதார்த்தங்கள் மட்டுமா? வார்த்தைகளும் தானே. சரியான நேரத்தில் வெளிபடுதாவிட்டால், 'மன்னிப்பு', 'நன்றி' , ' காதல் ' என்ற எந்த சொல்லுக்கும் உயிர் இருக்காது, விலையும் இருக்காது. இத்தனை கற்றும் கடமை தவறியதாகவே கருதுகிறேன்.

ஒருநாள் ஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், உன்னால் தான் உயர்வு பெற்றேன் என்று கூட அல்ல, உன்னால்தான் இந்த பிரச்சனை தீர்ந்தது, உன் துணைதான் இந்த துன்பமான நேரத்தை கடக்க வைத்தது. உன் ஆலோசனைதான் என் குழப்பத்திற்கு தீர்வு தந்தது. என் வேதனையை பகிர்ந்து கொண்டு என்னை இலேசாக்கினாய் என்று ஒருமுறையாவது கூறியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பாய். கோடிரூபாய் கொட்டிகொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருப்பாயே...

ஊட்டிக்குப் பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அவளின் உடல் நலம் மோசமடைததாக செய்தி கிடைத்தது வரும் வழியெல்லாம் இப்படியே யோசித்து இன்று அவளிடம் எப்படியும் உள்ளத்தை திறந்து இத்தனை நாள் சேர்த்து வைத்து இருந்ததை எல்லாம் கொட்டிவிட வேண்டும் என்று வந்து பார்த்தல் முற்றிலும் நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாள்.

நினைவு திரும்ப வாய்ப்பேயில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொன்னபிறகு, மெல்ல அவள் காதருகே குனிந்து 'மும்தாஜை' ஷாஜகான் 'தாஜ்' என்று தனிமையில் அழைத்ததைபோல தேவிகாராணியை 'தேவி' என அழைத்தபோது , மூன்றாவது அழைப்பில் மருத்துவத்தை கடந்து அதிசயமாக புருவங்கள் இரண்டும் 'என்ன' என்று கேட்பது போல மேல உயர்ந்து வலது விழியோரம் ஒரு துளி கண்ணீர் உருண்டோடியபோது நான் உடைந்துபோனேன்.

பேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும் பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது, இன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். வருகிகிறவரிடமெல்லாம் அவள் உயர்வுகளை நாளெல்லாம் உணர்கிறேன். ஒரே ஒருமுறை, அவள் கம்பீரமாய் உலவிய நாட்களில் உட்கார வைத்து பேசிஇருந்தால்.... இவர் நம்மை முழுதாக புரிந்து கொண்டாரோ, இல்லையோ என்ற குழப்பத்திலேயே போய்இருப்பாளோ என்று நாளும் துடிக்கிறேன்.

எனக்கு ஆறுதல் கூறவந்த திரு.இவிகேஎஸ். இளங்கோவன், "வருத்தப்படாதீர்கள் இதெல்லாம் அவர்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும் " என்று சமாதானப் படுத்தினார். நான் அவரிடம் கேட்டேன் , " நீங்களோ நானோ பொதுக்கூட்டத்தில் பேசுகிறபொழுதே, நம்முடைய பேச்சு சிறப்பாக இருந்ததோ இல்லையோ, என்பதை கூடத்தில் எழும் கரவொலி மூலம், முகக்குரிப்பின் மூலம், ஆதரவாளரின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், நிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறியவுடன் உடன் பயனிபவர்கள் அந்த உரை குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என ஏன் எதிர் பார்க்கிறோம். பாராட்டினால் பரவசமடைகிறோம் . அதுபற்றி எதுவுமே பேசாமல் கூட வருபவர்கள் அமைதி காத்தால் கோபம் கொள்கிறோமே ஏன்? அது போலதான் வீட்டில் இருக்கிற பெண்களும் தங்கள் செயல்களுக்கும், சேவைகளுக்கும், பணிகளுக்கும், ஒரு வார்த்தை அன்பாக , கனிவாக, பாராட்டு சொல்லாக, கணவன் சொன்னால் மகிழ்வார்கள். இதில் நாம் இழப்பது எதுவுமே இல்லையே என சொன்னேன்.

ஏழு நாட்களுக்கு மேலாகி விட்டது, அவள் படத்தை பார்க்கிறபோதெல்லாம் நெஞ்சிலே இருந்து எதோ ஒன்று கிளம்பி கண்களில் நீராய் முட்டுகிறது.காலங்கடந்து நான் உணர்கிறேன். தோழர்களே! தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை, பெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள்...

என் மனைவிக்கு என்னை உணர்த்தாமலே, என் உள்ளதை திறக்காமலே, பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி மகிழவைகாமலேயே அனுப்பி வாய்த்த கொடுமை இனி வேறெங்கும் நிகழவேண்டாம்.. வேண்டி கேட்கிறேன் உங்களுக்காகவே
உங்கள் பிள்ளைகளை,
உங்கள் பிரச்சனைகளை,
உங்கள் உறவுகளை, சுமந்து உங்கள் தேவைகளைப் புரிந்து தீர்த்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பொருள் தேடி, புகழ்தேடி நாம் வெளியே சுற்றுகிரபோதேல்லாம், காவல் தெய்வமாய் குடும்பத்தைக் காக்கும் அந்த பெண்களை புரிந்து கொண்டோம் என்பதன் அடையாளமாய், அங்கிகரமாய் நாலு வார்த்தைகள் தயவு செய்து பேசுங்கள்!

நான் சந்தித்து கேட்டவர்களில் 95 விழுக்காட்டினர் என்னைப் போலவே பேசுவதில்லை என்றே சொன்னார்கள். இது மாறட்டும்... என் மனைவியின் பிரிவு தரும் வேதனையை விட இந்த உறுத்தல் தரும் வேதனை மிக அதிகமாக இருக்கிறது. என் அனுபவம் சிலருக்காவது உதவட்டும் என்றே இதை எழுத முனைகிறேன். சில வீடுகளாவது நிம்மதியில், மகிழ்ச்சியில் நிலைக்கட்டும்.

என் வேதனை, நான்படும் துயரம்... வேறெவர்க்கும் எதிர்காலத்தில் வேண்டாம் அவளோடு வாழ்ந்த நாட்களின் இனிமையான தருணங்களின் நினைவுகளே துணையாக அந்த நினைவுகளே சுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..... இதனை இப்போது சொல்லும் நான் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் கூட வாய்விட்டு வார்த்தைகளில் ஒருமுறை கூட சொன்னதில்லை.....

# ஒவ்வொரு கணவனும் படிக்கவேண்டிய பதிவு....

முக்கியமாக அரசியல்வாதிகள் என்றால் அசால்டாக பேசிவிடும் அனைவரும் படிக்கவேண்டிய பதிவு.... ஒரு அரசியல்வாதியின் வாழ்வில் அவர்கள் இழப்பது என்னவெல்லாம் என்பதை வாழ்வின் வலியை உணர்பவர்களால் மட்டும் நன்கு புரிந்துகொள்ளமுடியும்...

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

எங்கே ஒற்றுமை? எங்கே சகோதரத்துவம்?