இன்று ஒரு தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்று ஒரு தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 ஜூன், 2016

தமிழ் மொழியும் சோழர்களும்

 தமிழ் மொழிப் பற்று ஒரு சிறுவிழுக்காட்டினரைத் தவிர மற்றவர்களுக்கு இல்லை. தமிழ்மொழி பல நூற்றாண்டுகளாக தமிழர்களது சமூக தளத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய இராஇராச சோழன் (அவனது இயற்பெயர் அருண்மொழித் தேவன்) ஒரு தமிழ்ப் பள்ளிக் கூடம் கட்டவில்லை. மாறாக நூற்றுக் கணக்கான வேத பாடசாலைகளை நிறுவி அவற்றுக்கு நிவந்தங்கள் பல வழங்கினான். ஆசிரியர்களுக்கு அரச கருவூலத்தில் இருந்து ஊதியம கொடுக்கப்பட்டது. இராசஇராசன் அவன் மகன் முதலாவது முதலாவது இராசேந்திரன் காலத்தில் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை கஷ்மீர், வங்காளம் போன்ற நாடுகளில் இருந்து கொண்டுவந்து இறையிலி நிலங்களில் குடியேற்றினான். அவன் காலத்தில் தமிழகம் சமற்கிருத மயமாக்கப்பட்டது. இராசராசனது அரச குரு வடநாட்டு ஈசான பண்டிதர். இராசேந்திரனது அரச குரு சர்வசிவ பண்டிதர். முதலாம் குலோத்துங்க சோழன் சமயம் சார்ந்த அரச நிருவாகத்தை தனது குரு சுவாமி தேவரிடம் ஒப்படைத்திருந்தான். பல்லவர், சோழர் ஆட்சியில் தமிழ் நீச பாசை எனவும் சமற்கிருதம் தேவ பாசை என்றும் கொண்டாடப்பட்டது. இதனால் தமிழ்மொழி ஓரங்கட்டப்பட்டது. சாமிநாத தேசிகர் என்று ஒருவர் 17ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலி ஈசான மடத்தில் இருந்தார். அதனால் ஈசான தேசிகர் என்றும் அவருக்குப் பெயருண்டு. இலக்கணக் கொத்து என்ற அவருடைய நூலுக்கு, அவரே ஒரு பாயிரமும் எழுதியிருக்கிறார். (இலக்கணக் கொத்தை ஆறுமுக நாவலர் ஓலைச்சுவடியில் இருந்து வெளிக் கொணர்ந்தார்.) அந்தப் பாயிரத்தில் தான் இந்த "ஐந்தெழுத்துப் பாடை" என்ற சொற்றொடர் வருகிறது. வடமொழியில் இல்லாத ழ. ற, ன, எ, ஒ ஆகிய ஐந்தெழுத்துக்கள் தமிழில் உள்ளனவாம்; மற்றவை எல்லாம் வடமொழியில் இருக்கின்றனவாம். எனவே தமிழ் மொழி 5 எழுத்துக்களால் ஆன மொழி என ஈசான தேசிகர் தமிழைப் பழித்தார். 

"அதாவது, "வடநூல் வழி கலவாது, தமிழைத் தனியே தர முடியாது - வேறு வாக்கில் சொன்னால், வடமொழி இன்றி தமிழ் தனித்தியங்காது. தமிழ்நூல் ஒன்றிலும் தனித் தமிழ் கிடையாது; ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று சொல்லிக் கொள்ள அறிவுடையோர் நாணுவோர்; நானும் நாணுகிறேன்; வடமொழி, தமிழ்மொழி ஆகிய இரண்டிற்கும் ஒரே இலக்கணம்" என்று சொல்லுகிறார. தமிழர்களது கோயில்களில் தமிழ் இல்லை. தேவார திருவாசகங்கள் உள் வீதியில் இருந்து பூசைகள் எல்லாம் முடிந்த பின்னர் பாடப்படுகிறது. தமிழ் தமிழர்களது திருமணத்தில் இல்லை. யாருக்கும் புரியாத சமற்கிருத மொழியில்செய்யப்படும் திருமணத்தை தமிழர்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழ் தமிழர்களது பெயர்களில் இல்லை. இன்றைய பிள்ளைகளுக்கு பெற்றோர் பொருள் இல்லாத வாயில் எளிதாக நுழையாத பெயர்களைச் சூட்டுகிறார்கள். ஆசா, கோசா, யுரேனியா, லக்ஷன், ருக்ஷன், அலக்கா, நிரோஷன் (வெட்கம் இல்லாதவன்) நிரோஷினி (வெட்கம் இல்லாதவள்) அஷ்யா, மகிஷா (எருமைமாடு) யதூஷா, யூவிஸ் போன்ற பெயர்கள் அருவருக்கத்தக்க பெயர்களாகும்.


- வேலுப்பிள்ளை தங்கவேலு (இலங்கை)

புதன், 21 ஜனவரி, 2015

எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்:-

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.
7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.
10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.
11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.
12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.
13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.
14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.
15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.
16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.
17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.
18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.
19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.
20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.
21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.
22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.
23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.
24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்தான்.
25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

வியாழன், 16 அக்டோபர், 2014

ஆய கலைகள் 64

ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . அவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்வோம்.
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்)
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

சனி, 20 செப்டம்பர், 2014

நம் முள்ளந்தண்டில் 18 படிகள்!

முதலில் சரியை, கிரியை நெறியில் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் :-
காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்துஅழிவு ஏற்படுகிறது.
குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இது சரியை, கிரியை நெறியில் உள்ள விளக்கமாகும்.

ஆனால் யோகநெறியும் தாண்டிய ஞானநெறியில் உடலையே ஆலயமாகப் பாவித்து, இறையுடன் இரண்டறக் கலந்து முற்றுப்பெற்ற ஞானி / சித்தராவர். நமது முள்ளந்தட்டில் 18 கோர்வைகள் உண்டு. விந்தானது முள்ளந்தட்டிலுள்ள பதினெட்டுப் படிகள் தாண்டி கழுத்தைத் தாண்டும்போது அமிர்தமாக மாறி அன்னாக்கில் சிந்தும்போது நம் பொய்யுடல் ஜோதிவடிவான மெய்யுடலாகும்.

புதன், 27 நவம்பர், 2013

ஜம் ஜம் பசிக்கு உணவு …! நோய்க்கு மருந்து ..!



( ஆபிதா அதிய்யா )


   

நிலத்தில் கிடைக்கும் அனைத்து நீரிலும் ‘ஜம் ஜம்’ மிகவும் தூய்மையானது. அதில் ஒருவர் தமது பசிக்குரிய உணவையும் நோய்க்கான மருந்தையும் கண்டு கொள்ளலாம்.” ( நபிமொழி )

முஸ்லிம்கள் ஜம்ஜம் தண்ணீரைத் தனித்துவமானதாகவும், சிறப்பானதாகவும் கருதுகின்றார்கள். இந்த அற்புதமான நீரை முஸ்லிம்கள் தாங்கள் விரும்புகின்ற நேரத்திலெல்லாம் அருந்துவதற்குப் பேராவல் கொள்பவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் ஹஜ் உம்ரா செய்பவர்கள், இந்த நீரின் எடையைக்கூட பொருட்படுத்தாமல் தங்கள் ஊருக்கு எடுத்துச்சென்று, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அதனைப் பரிசாக வழங்கி மகிழ்ச்சியடைகின்றார்கள்.

ஆகவே, புனிதமிக்க இந்த ஜம்ஜம் தண்ணீரில் அப்படி என்ன தான் சிறப்பு இருக்கிறது என்றால் அதில் அனைத்தும் இருக்கின்றது.

வறண்ட பாலைவனத்தில் உதித்த இந்நீரூற்று பல நூறு ஆண்டுகளாய் வற்றாமல், மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது. என்றைக்குமே வற்றாத நீரூற்றாகத் தொடர்ந்து ஒலித்தோடிக் கொண்டிருக்கிறது.

இது ஐந்தடி ஆழமுள்ள கிணறு. இதற்கு அருகில் எந்த நீர் நிலைகளும், நீராதாரமும் மிக்க எந்த வழிகளும் கிடையாது. இந்தக் கிணற்றின் நீர் எப்போதும் தானாகவே பொங்கி வரக்கூடியதாகவும், கோடிக்கணக்கான ஹாஜிகளுக்கு நீர் புகட்டுவதோடு, தங்கள் தேவைகளுக்காகத் தாய்நாட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்கும் நீர் சுரக்கின்றது.

இதில், கால்சியம், மெக்னீசியம் இருப்பதன் காரணமாக நோயைக் குணப்படுத்துகிறது.

இயற்கையாகவே, இதில் ஃபுளூரைடு கலந்திருப்பதால் நோய்க் கிருமிகளைக் கொல்லக்கூடிய தன்மைகள் உண்டு என்று மருத்துவ அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மிதவெப்பமான காலத்தில் நீர் நிலைகளில் ‘ஆல்கே’ என்ற பாசி படியும். ஆனால் இக் கிணற்றில் எவ்விதப் பாசியும் படிவதில்லை. மேலும் இது உயிர் – வேதியியல் காரணிகளின் கேடுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டது.

ஜம் ஜம் தோன்றிய வரலாறு
அன்னை ஹாஜரா (அலை) அவர்கள், தனது புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு பருகக் கொடுப்பதற்காக, இந்தப் பாலைப் பெருவெளியில் தண்ணீருக்காக ஸஃபா, மர்வா எனும் இரு மலைக் குன்றுகளுக்குக்கிடையில் ஓடிக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் தனது அருட்கொடையினால் இந்த நீரூற்றை ஓடச் செய்தான். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

“அல்லாஹ் தனது மிகப்பெரும் கருணையை இஸ்மாயீல் (அலை) அவர்களது அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் மீது பொழிவானாக ! அன்னை ஹாஜரா அவர்கள் அந்த ஜம்ஜம் தண்ணீரை (ஊற்றை) அது எவ்வாறு இருந்ததோ அதன்படி, (அதில் தொட்டி போன்று எதனையும் கட்டாமல்) அதிலிருந்து நீரூற்றாக ஒலித்தோடும்படி விட்டு வைத்தார்கள். ஜூர்ஹூம் என்ற அரபு கோத்திரதார் ஹாஜரா (அலை) அவர்களுடன் வந்து, நாங்கள் இங்கே உங்களுடன் தங்கிக் கொள்ளலாமா? என்று கேட்டபோது, ஆம் ..! (தங்கிக் கொள்ளலாம்) ஆனால், இந்த நீரூற்றின் மீது உங்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. (என்றால் நீங்கள் தங்கிக் கொள்ளலாம்) என்றார்கள். அவர்களும் இதற்கு ஒப்புக்கொண்டார்கள். (புகாரி)

இவ்வாறே உயிர் வாழ்வதற்கு எந்தவித ஆதாரமும் அற்ற அந்தப் பாலைப்பெருவெளியில் மனிதர்கள் குடியேறத் துவங்கினர்.

ஜம் ஜம் நீரூற்றின் மறுபிறப்பு !
மக்காவில் முதன் முதலில் குடியேறி ஜூர்ஹூம்கல் நீதமாகவும் நேர்மையாகவும் நடப்பதை விட்டுவிட்டு அடக்குமுறையாளர்களாக மாறிய போது, மக்காவை விட்டும் அவர்களை வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. அவர்கள் இப்புனித நீரூற்றின் மகத்துவத்தினைப் பற்றி அக்கறையில்லாத காரணத்தால், ஜம்ஜம் நீரூற்று அதன் அருட்கொடைகளை அம்மக்களுக்கு வழங்க மறுத்தது. நீரூற்றை பூமி இழுத்துக் கொண்டது. அதன் பின்பு ஜம்ஜம் திறக்கப்படாமலேயே மறக்கப்பட்டதாகவும் ஆகிப் போனது.

இவ்வாறு பல தலைமுறைகள் வந்து போயின. பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப்பின் தலைமுறை வரைக்கும் இவ்வாறிருந்தது. அதன் பின் அப்துல் முத்தலிப் அவர்கள் இந்த நீரூற்றை மீண்டும் தோண்டினார். தொடர்ச்சியாக மூன்று நாட்கள், மூடப்பட்ட நிலையில் கிடந்த கிணற்றைத் தோண்டுவது போலக் கனவு கண்டார்.

அன்று மக்காவாசிகளிடம் இருந்த கடுமையான இறை நிராகரிப்பின் காரணமாக, ‘இந்தப் பாழ் பட்டுப்போன இடத்திலா தண்ணீரைத் தேடுகிறீர்கள்’ என்று அப்துல் முத்தலிபை நோக்கி ஏளனமாகச் சிரித்தார்கள். பின் அந்தத் தொன்மையான கிணறு கஅபாவிற்கு மிக அருகில் தான் உள்ளது என்பதைக் கண்டு கொண்டார்கள்.

ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றுவதற்காக மக்கா வரும் பயணிகளுக்கு ஜம்ஜம் நீர் எளிதாகக் கிடைப்பதற்குண்டான வழிகளை ஏற்பாடு செய்து கொடுக்கும் பொறுப்பை அப்துல் முத்தலிப் ஏற்றுக் கொண்டார்.

அப்துல் முத்தலிபின் முயற்சியால் ஜம்ஜம் நீரூற்று புதுப்பொலிவை அடைந்தது. அது புனிதமானது என நம்பினார். முக்கியப் பிரச்சனைகளின் பொழுது, ஜம்ஜம் நீரைப் பருகிவிட்டு நிகழ்ச்சியை ஆரம்பிக்கக் கூடியவராக இருந்தார்.

அல்ஹாரித் இப்னு கலீஃபா அஸ்ஸாதீ என்பவர் அறிவிக்கின்றார்கள்:

“குறைஷிகள் தங்களது எதிரிகளைச் சந்திக்கச் செல்லுமுன், அதற்கான தயாரிப்புகளுக்கு முன்பாக ஜம்ஜம் நீரைப் பருகும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தம்முடைய பிரச்சனையின் தீவிரத்தை வெளிக்காட்ட விரும்பும் ஒருவர், ஜம்ஜம் கிணற்றின் அருகிலிருக்கும் பானைகளைச் சேகரிப்பதன் மூலம் அதனை வெளிப்படுத்துவார். பிரச்சனைகளின் போது இந் நீர் தங்களுக்கு அருட்கொடையை வழங்கும் என நம்பிக்கை கொண்டிருந்தாலும், பல நேரங்களில் அவர்களது நம்பிக்கைக்கு மாற்றமாகவும் நடந்திருக்கின்றன.

கிணற்றின் அமைவிடம்
கஅபாவிற்குச் சில அடி தூரத்திலும், மகாமே இபுராஹீமிற்குப் பின்புறத்திலும் இக்கிணறு அமைந்துள்ளது. இப்பொழுது இந்த இடத்தை வட்ட வடிவ அமைப்பிலான மார்பிள் கட்டுமானத்துடன் கட்டப்பட்டுள்ளது. இன்னும் கஅபாவை வலம் (தவாஃப்) வரக் கூடியவர்களுக்கு இடையூறின்றி, தரை மட்டத்திலிருந்து கீழே அமைக்கப்பட்டுள்ளது. மாசுகளிலிருந்தும் பாதுகாக்கும் பொருட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்ஜம் கிணறு கண்டுபிடிக்கப்பட்டதன் பின்பு, இதே பெயரினைக் கொண்ட கிணறுகள் மதீனாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான அத்தாட்சிகள்

ஜம்ஜம் கிணறு அமைந்துள்ள ‘ஹரம்’ பள்ளிவாசல் தான் உலகிலேயே ஓரிறைவனை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட முதல் புனிதமிக்க பள்ளிவாசலாகும். இப் புனிதத்துடன் இன்னும் பல அடையாளங்களையும் இவ்விடத்தின் மீது அருட்கொடையாக இறைவன் வழங்கியிருக்கிறான்.

இறைவன் தன் இறைமறையிலே கூறுகின்றான் : “(இறைவணக்கத்திற்கென) மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வீடு, நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரகத்து (அருள்வளம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (இப்ராஹீம் நின்ற இடம்) மகாமே இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்புப் பெறுகிறார்.” (3 : 96-97)

ஜம்ஜம் கிணறுகூட தெளிவான அத்தாட்சிகளில் உள்ளதாகும். வரலாற்றுக் குறிப்பின்படி, இப்ராஹீம் (அலை), தனது மனைவியையும், குழந்தையையும் அந்தப் பாலைவனப் பிரதேசத்தில் விட்டுவிட்டுச் செல்லும்பொழுது, இறைவனிடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கின்றார்:

“எங்கள் இறைவனே ! நான் என் மக்களில் சிலரை விவசாயம் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன்னுடைய இல்லத்தருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவனே ! அவர்கள் (இங்கு) தொழுகையை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்) எனவே, அவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக ! மேலும், இவர்களுக்கு உண் பொருள்களை வழங்குவாயாக ! இவர்கள் நன்றியுடையவர்களாய்த் திகழக்கூடும்!” (அல்குர்ஆன் 14:37)

வாழ்வாதாரத் தேவைகளில் இறைவன் வழங்கியிருக்கின்ற எல்லாவற்றிலும் முதன்மையானது ஜம்ஜம்.

வற்றாத நீரூற்று

ஜம்ஜம் நீரூற்றின் மற்றொரு சிறப்பம்சம். இது வற்றாத நீரூற்றாகும். இது மக்காவிற்கு, ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்ற வரும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:

“அல்லாஹ் தனது முழுமையான அருளை அன்னை ஹாஜரா மீது பொழிவானாக ! அவர்கள் இவ்வற்றாத ஊற்றிலிருந்து (ஜம்ஜம்) நீரை வழிந்தோடும் படிச் செய்வதற்குக் காரணமாக அமைந்தார்கள்.”

(அஹ்மத்)

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பில்லியன் கணக்கான மக்கள் இந்நீரைப் பருகிச் சென்றவண்ணம் இருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களின் பள்ளி அமைந்திருக்கும் மதீனாவிற்கும் இந்நீர் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஹஜ், உம்ரா செய்பவர்கள் மில்லியன் கணக்கான லிட்டர்கள் இந்நீரை எடுத்துச் சொல்கிறார்கள்.


இதன் சிறப்பு என்னவெனில், எந்த அளவு இந்நீரைப் பருகுகின்றோமோ, அந்த அளவுக்கு அது ஊறிக் கொண்டேயிருக்கும்.

நன்றி : நம்பிக்கை மாத இதழ், மலேசியா, நவம்பர் 2010

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

இன்று ஒரு தகவல் 1

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான்உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.

கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இ இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன் ,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

இந்தக் கதைய வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.