சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 நவம்பர், 2013

“நான் ஹஜ்ஜூக்குப் போகணும்!”

-கே.ஜெய்புன்னிஸா ( ஜெய்பு )
தணல் அடுப்போடு இணைக்கப்பட்ட அலுமினிய தேக்சாவோடு ஊர்வலம் புறப்பட்டு விட்டார் அபூபக்கர். 
சுக்கு காப்பி சூடான சுக்கு காப்பி! கட்டமிட்ட லுங்கியும் அரைக்கைச் சட்டையுமாக சுக்குக் காப்பி விற்கக் கிளம்பினார். அவர் காய்கறி, மளிகைக் கடைகள் நிறைந்த அந்த அங்காடியில் இருந்த வியாபாரிகளே அவரது வாடிக்கையாளர்கள் !
என்ன அபூபக்கரே ஹஜ்ஜூக்குப் போகனும்னு ஒவ்வொரு வருஷமும் சொல்லிட்டிருப்பியே? என்னாச்சு? வெங்காயக் கடை வகாபு வாயைக் கிளறினான். 
நிச்சயமா ஒரு நாளு நானும் ஹஜ்ஜூக்கு மக்கத்துக்குப் போயி அல்லாவோட பள்ளியிலே தொழுவேன்! இது நெசம்! சுக்குக் காப்பியை ஆற்றிக்கொண்டே சொன்ன அபூபக்கரின் வார்த்தைகளில் உறுதி தொனித்தது. 
இருக்கப்பட்ட பணக்காரங்களாலேதான் ஹஜ்ஜூக்குப் பயணம் போகமுடியும்? ஒங்களைப்போல கூலிப்பாட்டுக் காரங்களாலே லட்சக்கணக்கிலே பணம் செலவு செஞ்சிட்டுப் போக ஏலுமா? அவன் குரலில் கிண்டல் தெரிந்தது. 
நானு சுக்குக் காப்பி விக்கிறவன் தான். நாளு முச்சூடும் சுத்தினாலும் முப்பது ரூபாய்க்கு மேலே கிடைக்காத வருமானம் இதிலே தெனமும் ஒரு வேளைச் சாப்பாட்டைக் குறைச்சுட்டு பத்து ரூவாயா சேர்த்துக்கிட்டு வர்றேன்!
எந்த வேளைச் சாப்பாட்டை குறைக்கிறே? 
காலம்பற பசியாறலைத்தான்! வெறும் சுக்குக் காப்பியோடு சரி!!
இல்லாட்டா மட்டும் பரோட்டாவும் குருமாவுமாக ஆக்கி எறக்குறேயாக்கும்? காயற கும்பி ஒரு நல்ல கொள்கைக் காகக் காயட்டுமே?
பேசிக்கொண்டே லாவகமாகக் கூடியிருந்த கூட்டத்தினருக்குச் சுக்குக் காப்பியை ஆற்றிக் கொடுத்துத் தலைக்கு அறுபது காசாக வாங்கிப் பையில் போட்டுக் கொண்டிருந்தார் அபூபக்கர். 
பத்து ரூபாயாகப் பணம் சேர்த்து மக்கத்துக்குப் போறது எந்த நாளு? அதுக்குளர ஆயுசு முடிஞ்சுருமே? பக்கத்துக் கடை மணியும் அவரைக் கிண்டல் செய்வதில் சேர்ந்து கொண்டான். 
அப்படிச் சொல்லாதீங்க! கண்ணை மூடறதுக்குள்ளே ஹஜ்ஜூக்குப் போயி ஹாஜியாராத் திரும்பணுங்கிறது என்னட நெடுநாளு ஹாஜத்து (ஆசை) 
என்னென்னமோ அதிசயமெல்லாம் இந்த கம்ப்யூட்டர் காலத்துல நடக்குது ! அப்படி ஏதாவது அதிசயம் நடந்து லாட்டரியிலே லட்சமாக விழுந்தா நீ ஹாஜியாராகலாம் ! குஞ்சு வாப்பாவின் வார்த்தைகளில் நையாண்டி தொனித்தது.
சுக்குக் காப்பி… சூடான சுக்கு காப்பி … சுமை இறக்கிக் கொண்டிருந்த லாரியை நெருங்கினார் அபூபக்கர் காப்பி பாத்திரம் அந்தக் காலை வேளையில் காலியாகிக் கொண்டிருந்தது.
அபூபக்கருக்கு ஆண் வாரிசு இல்லை. பெற்றது இரண்டுமே பெண்கள் எப்படியோ ஏழெட்டு வகுப்புவரை படிக்க வைத்தார். பெண்கள் புத்தியறிஞ்சவுடன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே குர்ஆன் ஓதவைத்தார். மூன்று வருடங்களில் பெண்கள் அரபிப் பாடங்களை ஓதி முடித்தனர். 
சிறுகச் சிறுக சிறுவாடு சேர்த்துக் காதை மூக்கை மூடி அரிசிக் கிடங்கில் சாக்குத் தைத்துக் கொண்டிருந்த ஈசுபுக்கு மூத்த பெண்ணை எளிமையாக மணம் முடித்துக் கொடுத்தார். 
இரண்டாவது பெண் முமினாவையும் சைக்கிளில் சுற்றிப் பழைய பேப்பர் வியாபாரம் செய்து கொண்டிருந்த தூரத்து உறவான இஸ்மாயிலுக்கு மணம் முடித்துக் கொடுத்துத் தன் கடமையை முடித்தார். 
நெஞ்சில் சிறு பொறியாய் ஒளிர்ந்த ஹஜ் பயண ஆசை நாளாக ஆக பெருந்தீயாய்ப் பற்றியெரிந்தது. நபிகள் நாயகம் நடந்த புனித மண்ணை மிதிக்க வேண்டும்! அவர்களின் அடக்கத்தலத்தைக் காணவேண்டும். மக்கத்துப் பள்ளியில் தொழவேண்டும். ஹஜ்ஜூ கடமையை நிறைவேற்ற வேண்டும். என்ற அவா இப்பொழுது அவர் நெஞ்சின் வேட்கையாகவே மாறிவிட்டது. 
அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாத ஒரு பரம ஏழை. ஹஜ்ஜூக்கு போகவேண்டும் என்கிற பணக்கார பெரிய கனா காண்பதையறிந்து அந்த வட்டாரத்தில் அவரை அறிந்தவர்கள் வேண்டுமென்றே வாயைக் கிண்டி கிண்டல் செய்வது வாடிக்கையாகிப்போனது.
யார் என்ன கேளி செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஹஜ்ஜூப் பயணத்திற்காக யார் யாரையோ போய்ப் பார்த்து அதுபற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டு எழுதிப் போட்டார். ஹஜ் கமிட்டி மூலம் ஒவ்வோர் ஆண்டும் இலவசப் பயணமாக ஒருவரின் செலவை அவர்களே ஏற்றுக் கொள்வதையறிந்து அதற்கும் பெரிதும் முயன்றார். 
உங்களுக்கு வேற வேலையில்லே! பணம் படைச்சவங்களே ஹஜ்ஜூக்குப் பயணம் பண்ண ஏலும் நம்மப்போல கூலிக்காரங்க அதை நெனச்சுக் கூடப் பார்க்க முடியாதே? வீணா ஏங்க ஆசையை வளர்த்துக்கிறீங்க 
அவர் மனைவி புலம்பினாள்.
ஆயிஷா பார்த்துக்கிட்டே இரேன்! என்னை கேலிபேசின இந்த ஊருக்காரங்களே மூக்கு மேலே விரல் வெக்கிற மாதிரி நானும் ஒரு நாளு ஹஜ்ஜூக் கடமையை நிறைவேத்த மக்காவுக்கு போகத்தான் போறேன். எப்பவும்போல ஹஜ்ஜூக் கமிட்டிக்கி எழுதிப் போட்டிருக்கு ! என்னிக்காச்சும் கிடைக்கும் !
மண்ணில் பாய்ந்த ஆணிவேராய் அவர் நெஞ்சில் வேரோடி யிருந்த அந்த அசைக்க முடியாத நம்பிக்கை கண்டு மலைத்துப் போனாள் ஆயிஷா. 
வெள்ளிக்கிழமை ஜூம் ஆத் தொழுகை நேரத்தில் மவுலவி, ஹதீஸ் என்னும் நபிகள் நாயக வாழ்வின் நிகழ்ச்சி பற்றி உரையாற்றி முடித்தார்.
அப்போது 
ஜமாஅத் குழுவில் முத்தவல்லி முக்கிய செய்தியை அறிவிக்கும் பொருட்டுக் கூட்டத்தின் முன் வந்தார். ஊரார் பற்றிய முக்கியமான அறிவிப்பை அப்போதுதான் தெரிவிப்பது அவ்வூரின் வழக்கம். 
முத்தவல்லி தொடர்ந்தார். இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் செல்பவர்கள் பட்டியலில் ஹஜ் கமிட்டியின் செலவில் இலவசப் பயணம் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் தெரியுமா? அவர் நிறுத்திவிட்டுக் கூட்டத்தினரைப் பார்த்தார்.
அவைக்கூட்டம் வியப்பும் ஆர்வமுமாகப் பார்த்தது அந்த அதிர்ஷடசாலி வேறு யாருமல்ல சுக்குக் காப்பி விற்கும் அபூபக்கர்தான் ! அவருக்கு நாம் உதவுவதோடு நம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
கூட்டத்திலுள்ளவர்கள் அல்ஹம்துலில்லாஹ் என்று இறைவனைப் புகழ்ந்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அந்த ஆனந்தம் அடங்க சில நிமிடங்களாயிற்று. 
கடைசியில் அவரோட அசைக்க முடியாத நம்பிக்கை நிறைவேறிவிட்டது. 
கூட்டம் பரவசத்தோடு முணுமுணுத்தது.
படைச்சவனே! என் நாட்டத்தை நிறைவேத்திட்டே! நன்றி ஆனந்தக் கண்ணீர் பார்வையை மறைக்க இரு கரமேந்தி இறைவனுக்கு நன்றி கூறினார் அபூபக்கர்.
தொழுகைக்கு கூடிய கூட்டத்தினர் அபூபக்கருக்காகத் துண்டேந்தி வந்தவரிடம் தம்மால் முடிந்த தொகையை அள்ளிக்கொடுத்தனர். 
தன்னுடைய புனிதப் பயணத்திற்காக ஊராரே முன்வந்து உதவுவதைக் கண்டு மனமுருக மெய்யுருக மெழுகாய்க் கரைந்து கண்களிலிருந்து நீர் வழிய நின்றார் அவர். 
இறைவன் எவ்வளவு கருணையாளன்!
அந்த நல்ல செய்தியை தம் மனைவி ஆயிஷாவிடம் சொல்ல உள்ளம் நிறைந்த உவகையோடும் கனக்கும் பணப்பையோடும் வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தார் அபூபக்கர். 
நன்றி : இனிய திசைகள் பிப்ரவரி 2003
எழுதியவர்: ஜெய்பு

சனி, 19 ஜனவரி, 2013

இதுவும் கடந்து போகும்

"எல்லா காலங்களுக்கும், சந்தர்ப்பங்களுக்கும் பொருத்தமாக வழி காட்டக்கூடிய ஒரு சுருக்கமான மந்திரமோ, வாக்கியமோ இருக்கிறதா?" என்று ஒரு சக்கரவர்த்தி தன் சபையில் இருந்த அறிஞர் பெருமக்களைக் கேட்டார்.

சர்வரோகங்களுக்கும் ஒரே நிவாரணி என்கிற மாதிரி அவர் கேட்டதற்கு அந்த அறிஞர் பெருமக்கள் ஒன்று கூடி சிந்தித்தார்கள். பலரும் பலதைச் சொன்னார்கள். ஆனால் அதெல்லாம் ஒரு சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமாகத் தோன்றியது இன்னொன்றிற்கு அபத்தமாகத் தோன்றியது. எனவே அவற்றையெல்லாம் அவர்கள் ஒதுக்கி விட்டார்கள்.

கடைசியில் ஒரு முதிய அறிஞர் ஒன்று சொல்ல அவர்களுக்கு அதுவே சரியான வாசகமாகப் பட்டது. அதை ஒரு காகிதத்தில் எழுதிக் கொண்டு வந்தனர். "அரசே! நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் இதில் உள்ளது. ஆனால் இதை நீங்கள் இப்போது படிக்கக் கூடாது. நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக இக்கட்டான சூழ்நிலையில் தான் எடுத்துப் படிக்க வேண்டும்" என்றனர்.

சக்கரவர்த்தியும் அதை ஏற்றுக் கொண்டு அதை ஒரு வைர மோதிரத்தின் அடியில் வைத்துக் கொண்டு அதை விரலில் மாட்டிக் கொண்டார். சில காலம் கழித்து பக்கத்து நாட்டுடன் போர் மூள அந்தச் சக்கரவர்த்தி போரில் படு தோல்வி அடைந்தார். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் தப்பியோட வேண்டியதாயிற்று. எதிரிப்படையினர் துரத்தி வர ஒரு காட்டுப் பாதையில் ஓடிய சக்கரவர்த்தி ஓரிடத்தில் அப்பாதை முடிந்து ஒரு பெரிய பள்ளத்தாக்கு தான் அதற்குப் பின் இருந்ததைக் கண்டார். மேலே போக வழியில்லை. பின் செல்லவும் வழியில்லை. தொலைவில் எதிரி வீரர்கள் வரும் காலடி ஓசை வேறு கேட்டது.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வதென்று கலங்கிய சக்கரவர்த்திக்கு அந்த அறிஞர்கள் தந்த வாசகம் பற்றிய நினைவு வர வைர மோதிரத்தினடியில் இருந்த அந்த காகிதத்தைப் பிரித்துப் படித்தார். அதில் எழுதியிருந்தது - "இதுவும் கடந்து போகும்". அதை மீண்டும் படித்தார். மனதில் பொறி தட்டியது.

சில நாட்களுக்கு முன் அவர் பெரிய சக்கரவர்த்தியாக இருந்தார். எல்லா செல்வமும், படைபலமும் அவரிடம் இருந்தன. அவை எல்லாம் இன்று அவரைக் கடந்து போய் விட்டன. இன்று தோல்வியும், தனிமையும் மட்டுமே இருக்கின்றன. இதுவும் ஒரு கட்டத்தில் போகுமல்லவா?.... சிந்திக்க சிந்திக்க சொல்லொணா அமைதி அவரை சூழ்ந்தது. லேசான மனதுடன் எதிரிகளை எதிர்நோக்கி நின்றார். ஆனால் எதிரி வீரர்கள் காட்டின் மற்றொரு பாதையைத் தேர்ந்தெடுத்து அவரைத் தேடுவது, குறைந்து வந்த அவர்கள் காலடியோசை மூலம் தெரிந்தது.

கடைசியில் தப்பித்து தன் நேச நாடுகளின் உதவி கொண்டு மீண்டும் படைகளைத் திரட்டி போரிட்டு எதிரிகளைத் தோற்கடித்து அவர் பெருவெற்றி பெற்றார். நாட்டு மக்களின் வாழ்த்தும், வெற்றி வாகை சூடிய பூரிப்பும் சேர்ந்த போது அவருக்கு மனதில் கர்வம் வந்தது. "அப்படி சுலபமாக நான் விட்டுக் கொடுத்து விடுவேனா? என்னை வெல்வது யாருக்கும் சாத்தியமா?". அந்த எண்ணம் வர வர சூரிய ஒளிபட்டு அவர் வைர மோதிரம் பளீரிட்டது. படிக்காமலேயே அந்த செய்தியை அது நினைவூட்டியது. "இதுவும் கடந்து போகும்". அந்தக் கணத்தில் அவர் கர்வம் நீங்கியது. அன்றிலிருந்து அவர் வாழ்க்கையில் அந்த வாக்கியம் தாரக மந்திரம் ஆகியது. அமைதி குறையாத அரசரென அவர் எல்லோராலும் பாராட்டு பெறும்படி ஆட்சியையும் வாழ்க்கையையும் நடத்தினார்.

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா? வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானதல்ல. அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்காது.

தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோர்ந்து விட மாட்டீர்கள்.

நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது அவர்களை கௌரவிப்பீர்கள். அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.

தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.

நெற்றி சுருங்கும் போதெல்லாம் "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.

நினைவில் கொள்ளும் அவசியமே இல்லாமல் வாழ்க்கையின் ஜீவநாதமாக அந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால் அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்.

சனி, 24 மார்ச், 2012

நாம் வழிப்போக்கர்கள்

மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏகநாதர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும், புன்னகையும் தவழும். அவரை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒரு மனிதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பல ஆன்மீகவாதிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த அளவு தொடர்ந்து அமைதியாக இருக்க முடிந்த ஆட்களைப் பார்த்ததில்லை. ஒரு முறை அமைதியாக இருக்க முடிந்த நபர் இன்னொரு முறை அமைதியாக இருப்பதில்லை. இப்படி எதிலேயும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து அமைதியாக இருக்க முடிவது என்றால் அதில் ஏதோ ரகசியம் அல்லது சூட்சுமம் இருக்க வேண்டும் என்று நினைத்தார். 

ஒரு நாள் அதை அவர் ஏகநாதரிடம் சென்று கேட்டே விட்டார். 'சுவாமி உங்களால் எப்படி இப்படி அமைதியாக, எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிகிறது? இப்படி முடிவதன் ரகசியம் என்ன?'

ஏகநாதர் அவரையே உற்றுப் பார்த்து விட்டு 'நீ உன் கையைக் காட்டு' என்றார். 
அந்த மனிதரும் தன் கையை நீட்டினார். 
அவரது ரேகைகளை ஆராய்ந்த ஏகநாதர் 'உனக்கு இன்னும் ஏழு நாட்கள் ஆயுள் தான் பாக்கி இருக்கிறது'

அந்த மனிதருக்கு அதிர்ச்சி. ஏதோ கேட்க வந்து ஏதோ கேட்க நேர்ந்ததே என்று மனம் நொந்தார். ஏகநாதரின் அமைதியின் ரகசியம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அதிகமாய் சுயபச்சாதாபம் அவருக்குள் வந்தது. ஞானிகள் எக்காலத்தையும் அறிய வல்லவர்கள் என்பதால் அவருக்கு ஏகநாதர் சொன்னதில் எந்த சந்தேகமும் இல்லை. அவசரமாக வீட்டுக்குச் சென்றார். மனைவி மக்களிடம் தகவலைச் சொன்னார். குடும்பம் அழுதது. அவரும் வருத்ததில் ஆழ்ந்தார். ஆனால் அழுது புலம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்த அந்த மனிதர் வருத்தத்தை எல்லாம் சீக்கிரமே மூட்டை கட்டி வைத்து விட்டு சாவதற் குள் செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார். 

ஏகநாதர் சரியாக ஒரு வாரம் கழித்து அந்த மனிதரை அவர் வீட்டில் சந்தித்தார். அந்த மனிதர் மிகுந்த அமைதியுடன் இருந்தார். 'நான் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.' 

ஏகநாதர் சொன்னார். 'நீ இப்போது எந்த மனநிலையில் இருக்கிறாயோ அதே மனநிலையில் நான் என்றும் இருக்கிறேன் மகனே. மரணம் வரும், எல்லாம் முடிந்து போகும் என்ற உண்மையை உணர்வதால் கிடைக்கும் அமைதியே அலாதியானது. அதற்குப் பிறகு எதுவும் பெரிய விஷய மாகத் தோன்றுவதில்லை. எதுவும் அதிகமாக பாதிப்பதில்லை. இதைச் சொன்னால் புரியாது, அனுபவத்தில் மட்டுமே உணர முடியும் என்பதற்காகத் தான் நான் உன் கேள்விக்குப் பதிலாக உன்னிடம் ஏழுநாட்கள் மட்டுமே ஆயுள் பாக்கி உள்ளது என்றேன். உண்மையில் உனக்கு தீர்க்காயுள் இருக்கிறது. நீ நீண்ட காலம் வாழ்வாய்' என்று சொல்லி விட்டு வாழ்த்தி விட்டு சென்றார். 

ஏகநாதர் சொன்னது உண்மையே. மரணம் என்னேரமும் வரலாம் என்று தத்துவம் பேசுகிறோமே ஒழிய, அந்த உண்மை நம் அறிவிற்கு எட்டுகிறதே ஒழிய, அது நம் ஆழ்மனதிற்கு எட்டுவதில்லை. 

வாழ்ந்த காலத்தில் எப்படி உயர்ந்தோமோ, எப்படி தாழ்ந்தோமோ அதெல்லாம் மரணத்தின் கணக்கில் இல்லை. மரணம் போன்ற சமத்துவவாதியை யாராலும் காண்பதரிது. இருப்பவன்-இல்லாதவன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஆள்பவன்-ஆண்டி போன்ற பேதங்கள் எல்லாம் மரணத்திடம் இல்லை. எல்லோரையும் அது பேதமின்றி அது கண்டிப்பாக அணுகுகிறது. 

அது போல மரணத்தைப் போல மிகப் பெரிய நண்பனையும் காண முடியாது. நம் தீராத பிரச்னைகள் எல்லாவற்றையும் ஒரே கணத்தில் தீர்த்து விடுகிறது.

ஆதி அந்தம் இல்லாத கால விஸ்தீரணத்தில் நாம் வாழும் காலம் ஒரு புள்ளியளவும் இல்லை. நம் காலமே ஒரு புள்ளியளவும் இல்லை என்கிற போது அந்தக் காலத்தில் வாழும் உயிரினங்கள் அடையாளமென்ன, அந்த கோடானு கோடி உயிரினங்களில் ஒரு இனமான மனித இனத்தின் அடையாளமென்ன, அந்த பலகோடி மனிதர்களில் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்ன? 

இப்படி இருக்கையில் வெற்றி என்ன, தோல்வி என்ன? சாதனை என்ன? வேதனை என்ன? எல்லாம் முடிந்து போய் மிஞ்சுவதென்ன? எதுவும் எத்தனை நாள் நீடிக்க முடியும்? இதில் சாதித்தோம் என்று பெருமைப்பட என்ன இருக்கிறது? நினைத்ததெதுவும் நடக்கவில்லை என்று வேதனைப் பட என்ன இருக்கிறது? இதை வேதாந்தம், தத்துவம் என்று பெயரிட்டு அலட்சியப்படுத்த வேண்டாம். இது பாடங்களிலேயே மிகப்பெரிய பாடம். 

வாழ்க்கையில் நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை சிறப்பாக வாழவேண்டும். செய்வதை எல்லாம் கச்சிதமாகச் செய்யவேண்டும். ஆனால் அந்த பாத்திரமாகவே மாறி என்றைக்கும் நிரந்தரமாக இருப்பது போல பாவித்து விடக்கூடாது. நாமே நிரந்தரமல்ல என்கிற போது நம் பிரச்சினைகளும் நிரந்தரமல்ல அல்லவா? இருந்த சுவடே இல்லாமல் போகப்போகும் வாழ்க்கையில் வருத்தத்திற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? வெறுப்பிற்கும், கோபத்திற்கும், பேராசைக்கும், சண்டைகளுக்கும் என்ன அர்த்தம் இருக்கிறது? 

நாம் வழிப்போக்கர்கள். அவ்வளவே. வந்தது போலவே இங்கிருந்து ஒருநாள் சென்றும் விடுவோம். அதனால் இங்கு இருக்கும் வரை, முடிந்த வரை எல்லாவற்றையும் முழு மனதோடு செய்ய முயற்சிப்போம். இது வரை நாம் படித்த/ அனுபவ சாலிகள் சொன்ன பாடங்களைப் புரிந்துகொண்டு சரியாகவும் முறையாகவும் வாழும் போது வாழ்க்கை சுலபமாகும், 

நாமாக விரித்துக் கொண்ட வலைகளில் சிக்கித் தவிக்க நேராது. அது முடிகிறதோ, இல்லையோ அதற்குப் பின் வருவதில் பெரிதாக மன அமைதியிழந்து விடக்கூடாது. ஏனென்றால் எல்லாம் ஒரு நாள் முடியும்! இது தான் உண்மை.. 

புதன், 14 மார்ச், 2012

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்


ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார். சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".
காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார். சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".

ஞாயிறு, 11 மார்ச், 2012

அமெரிக்க இளைஞனும், சிவப்பு இந்திய இளைஞனும்

ஒரு அமெரிக்க இளைஞனும், ஒரு சிவப்பு இந்திய இளைஞனும்
ஒரு பாலை வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தனர்.
பொழுது சாய்ந்திடவே ஓரிடத்தில் தங்கள் கூடாரத்தினை
அமைத்து அதனுள் இருவரும் படுத்தனர்.

இரவு சுமார் மணி மூன்று இருக்கும். சில்லென்று காற்று வீசவே
சிவப்பிந்தியஇளைஞன் விழித்துக் கொண்டான். நண்பனை எழுப்பிக்
கேட்டான், “மேலே பார். என்னதெரிகிறது?” என்று.

வெள்ளை இளைஞன் சொன்னான், “கோடிக் கணக்கான நட்சத்திரங்கள்
இருக்கின்றன” என்று.

சிவப்பிந்தியன் கேட்டான், “அப்புறம்?”

“வான சாஸ்திரப்படி சொன்னால் அந்த நட்சத்திரங்களைச் சுற்றி
பலகோடி கிரகங்கள் இருக்கும் என்று தோன்றுகிறது.”

“அப்புறம்?”

“ஜோதிட சாஸ்திரப் படி சொன்னால் சனி கிரகம் சிம்ம லக்னத்திற்கு
நகர்ந்துள்ளது.”

“அப்புறம்?”

“வானிலை சாஸ்திரப் படி சொன்னால் நாளை மேக மூட்டமிருக்கது.”

“நண்பா நமது கூடாரத்தை யாரோ திருடி கொண்டு போய்விட்டார்கள்
என்பது தெரியவில்லை உனக்கு..!?”?????????????நாம கூட பல நேரங்களில் இப்படி தான்! தலைக்கு மேல் போன விஷயத்தை விட்டு போட்டு வேற ஏதாவது உருப்படாத கவலைகளை மனதில் போட்டு குழப்பி கொள்கிறோம் ..............