வியாழன், 27 ஜூலை, 2017

அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஒரு பார்வை

*தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்*
*இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே.
*நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்*
*நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்*
*இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது*
*மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்*
*ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்*
*‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது*
*அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன*
*அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்*
*நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்*
*‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்*
*எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது*
*எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்*
*இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’*
*உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை*
*அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்*
*அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை*
*ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்*
*அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு*
*அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்*
*அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்*
*அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்*
*திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954-ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்*
*சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்*
*ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்*
*அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்*
*அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்*
*சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்*
*ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது*
*அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்*
*1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது*
*1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்*
*1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது*
*இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்*
*இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன*
*போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்*
*தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்*
*இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது*
*எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்*
*குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்*
*இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்*
*அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்*
*அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை*
*இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்*
*பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்*
*அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்*
*இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்*
*சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்*
*அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்*
*இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன*
*ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவுற்றது

வியாழன், 15 ஜூன், 2017

கலைஞர் - ஜெயலலிதா முஸ்லிக்களுக்கு என்ன செய்தார்கள்

என் பாசத்துக்குரிய தாஜ் அண்ணே...
என் கேள்விக்கு இத்தனை விளக்கமாக பதில் தருவீர்கள் என்று எண்ணவில்லை...
திகைக்க வைத்து விட்டீர்கள்.
சின்னப்பிள்ளைக்கும் புரியும் வண்ணம் நிஜங்களை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்.
நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் மறுக்க முடியாது.
தேசத்தின் அதிக சம்பளம் பெறும் முதலாளி கலாநிதி மாறன் என்ற நேற்றைய நிஜத்தையும் சேர்த்து.!
இருந்தாலும் சில நியாயங்களைச் சொல்ல முயற்சிக்கிறேன்.
ஓடி வருகிறான் உதயசூரியன் என்ற பாடலைக் கேட்டதிலிருந்தே என் தலைமுறை திமுகவின் வசமாகிப்போனது. என் தந்தையின் காலமோ பெரியாரால் ஈர்க்கப்பட்டது. பகுத்தறிவும் இஸ்லாத்தின் மீதான அண்ணாவின் பரிவும் முஸ்லிம்களை அவர்கள் பால் ஈர்த்ததில் ஆச்சரியமில்லை.
அண்ணாவின் காலத்திற்கு பின் கலைஞர் முதல்வரானார்.
அதுவரை சரியாக போய்க் கொண்டிருந்த கப்பலை திசை திருப்பியதில் எம்ஜிஆருக்கும் பங்கு உண்டு. இந்திராவின் கட்டளைக்கு பயந்து திமுகவை உடைத்த பெருமை எம்ஜிஆர் என்ற சினிமா ஹீரோவுக்கு உண்டு.
அதுவரை திமுகவை மட்டுமே ஆதரித்த தமிழக முஸ்லிம்கள் அதிமுகவையும் ஆதரிக்க ஆரம்பித்தார்கள். முதன் முதலில் அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம் லீக்கை உடைத்தவர் எம்ஜிஆர்தான்.
முழக்கம் ஷெய்குத்தம்பியை வைத்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் என்ற லெட்டர்பேடு கட்சியை ஆரம்பித்தார். அதன் பிறகுதான் சமது லத்தீப் பிளவு ஏற்பட்டது.
அதுமட்டுமா ?
முஸ்லிம்களுக்கு முஸ்லிம்லீக் இருப்பதுபோல் இந்துக்களுக்கு " இந்து முன்னணி " ஏன் இருக்கக் கூடாது என்று மேலப்பாளையம் பொதுக்கூட்டத்தில் பேசி தாணுலிங்க நாடாரை வளர்த்து விட்டவர் எம்ஜிஆர்.
அதன் பிறகு குமரிமாவட்டத்தில் மண்டைக்காடு கலவரம் நடந்ததும் ஏராளமான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதும் நாடறிந்த விஷயம்.
இன்று ராமகோபாலன் தலைமையிலான இந்து முன்னணி முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வளவு தீவிரமாக செயல் படுகிறது என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அதற்கு ஆகாரம் போட்டு கொம்பு சீவி விட்டவர் கொடை வள்ளல் எம்ஜிஆர்தான்.
திமுக ஆட்சியிலும் எம்ஜிஆர் ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு ஓரளவு பிரதிநிதித்துவம் கிடைக்கத்தான் செய்தது.
கருணாநிதி சாதிக் பாட்சாவை நன்றாகத்தான் வைத்திருந்தார். சாதிக் நேர்மையானவர்.
அரசு அனுகூலங்களுக்கு ஆசைப்படாதவர். அதனாலேயே அவரது வாரிசுகள் கஷ்டப்பட்டார்கள். பொதுவாக அரசியலில் கொடிகட்டிப் பறக்கும்போதே தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலி அரசியல்வாதிகளுக்கு அழகு. சாதிக் அதற்கு விதி விலக்கு.அதனால் அவர் வாரிசுகள் சிரமத்திற்கு ஆளானதில் வியப்பொன்றுமில்லை.
நாகூர் ஹனிபா அண்ணனை எம்.எல்.சி ஆகவும் வக்ப் வாரியத் தலைவராகவும் நியமித்தவர் கலைஞர். அதுபோக ராணிப்பேட்டை தொகுதியிலும் சீட் கொடுத்தார். ஹனிபா அண்ணனின் இப்போதைய கஷ்டங்களுக்கு யார் காரணம் என்பது தெரியாது.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அமைந்த அம்மையார் ஆட்சியில்தான் முஸ்லிம்கள் ஓரம் கட்டப்பட்டனர்.
ராஜா முஹம்மது என்பவர் அமைச்சராக இருந்து ...அமைச்சராக இல்லாமல் இருந்து பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. முஸ்லிம் பிரதிநிதித்துவமே இல்லாத மந்திரிசபையாக அம்மையார் மந்திரிசபை இருந்தது. முஸ்லிம்களுக்கென்று எந்தச் சலுகையும் அவரது ஆட்சியில் கிடைக்கவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது கோவைச் சிறையிலிருந்த அப்துல் நாசர் மதானிக்கு மருத்துவ சிகிச்சை வழங்கலாம் என்று சொன்னதற்காக அன்றைய உள்துறைச் செயலாளராக இருந்த முனீர்ஹோதா என்ற
ஐ.எ.எஸ். அதிகாரியின் மீது முஸ்லிம் தீவிரவாதிக்கு உதவி செய்தவர்,
அவர்களோடு தொடர்புடைய அதிகாரி என்று பழிசுமத்தி பணி நீக்கம் செய்தவர் ஜெயா.
அந்த பணி நீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்து பணி நியமன ஆணை பெற்று வந்த பிறகும் முனீர்ஹோதாவை பணியில் சேர்க்காதவரும் ஜெயாதான்.
கருணாநிதிக்கு எதிராக பி.ஜெய்னுலாப்தீன் என்பவரை தூண்டி விட்டு முதல்வர் வீடு முற்றுகை, கவர்னர் மாளிகை முற்றுகை, அண்ணாசாலையில் தொழுகை போன்ற கூத்துகளை நடத்தியவரும் இவர்தான்.
தேர்தல் நேரத்தில் ஊரூராகப்போய் அம்மாவை ஆதரித்து பிஜேயும் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் ...
குஜராத் முதல்வராக மோடி வெற்றி பெற்றதும் அவரது பதவி ஏற்பு விழாவில் ஜெயா கலந்து கொண்டார். அவருக்கு தனது தோட்டத்தில் விருந்தும் கொடுத்தார். தன்னை ஆதரித்த முஸ்லிம்களின் முதுகிலும் குத்தினார். இதெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான அம்மையாரின் நடவடிக்கைகளுக்கு சின்னச் சின்ன ஆதாரங்கள்.
அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜெயாவால் பழிவாங்கப்பட்ட முனீர்ஹோதாவுக்கு முதல்வரின் தனிச் செயலாளர் என்ற அந்தஸ்தை கலைஞர் வழங்கினார். மற்றொரு ஐ.எ.எஸ். அதிகாரியான அலாவுதீனுக்கும் சிறந்த மரியாதை கொடுக்கப்பட்டது. செம்மொழி மாநாட்டின் செயல் அதிகாரியே அவர்தான். ஜமாலுதீன் என்பவருக்கும் நல்ல பொறுப்பு வழங்கப்பட்டது கலைஞரின் ஆட்சிகாலத்தில்.
எல்லாவற்றிற்கும் மேலாக " இட ஒதுக்கீடு " கேட்டு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தன. " தருவேன் " என்று சொல்லி ஆட்சிக்கு வந்ததும் அவர்களை ஏமாற்றியவர் அம்மையார். கலைஞர் வந்ததும் 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வழங்கினார். ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதையே எதிர்த்தவர் ஜெயா. தமிழ் நாட்டிலும் எதிர்த்தார். அதையும் மீறித்தான் கலைஞர் கொடுத்தார்.
இன்று எத்தனையோ முஸ்லிம் மாணவர்கள் மருத்துவமும் பொறியியலும் படிப்பதை சமுதாயம் கண்டு வருகிறது.
பல முஸ்லிம்களுக்கு அரசு வேலை கிடைத்து சந்தோசமாக இருக்கிறார்கள். இதெல்லாம் திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்குக் கிடைத்த அனுகூலங்கள்.
கழிந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு சதவீதத்தை அதிகரித்துத் தருவேன் என்ற உறுதியில்லாத அவரது உறுதி மொழியை ஏற்று அரசியல் சந்தர்ப்பவாதம் செய்த தமுமுக இன்று அதிமுக கூட்டணியை விட்டு விலகி இருக்கிறது.
இது அரசியலில் திமுகவும் அதிமுகவும் நடந்து கொண்ட முறைகள்.
நான் யாரையும் நியாயப்படுத்த விரும்பவில்லை.
பிஜேபியோடு கலைஞர் கூட்டணி வைத்தது குற்றம்..குற்றம்..குற்றமே...
அதுபோல் குஜராத் கலவரத்தை கண்டு கொள்ளாமல் இருந்ததும் குற்றமே...
ஆனால்...
அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு பிஜேபி உடனான திமுகவின் உறவு தொடரவில்லை. பல சந்தர்ப்பங்களில் இந்துத்துவாவை பகிரங்கமாக எதிர்த்தும் முஸ்லிம்களை ஆதரித்தும் குரல் எழுப்பிய கலைஞரின் துணிச்சல் பாராட்டுக்குரியது.
அதே நேரம் மோடியுடனான அதிமுகவின் நெருக்கம் முஸ்லிம்களுக்கு வெறுப்பூட்டக்கூடியது. ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்தக் காரணங்களால் ...
நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை என்றாலும் இந்த தேர்தலில் பிஜேபி எதிர்ப்பு கட்சிகளுக்கே எனது ஆதரவு என்பதில் மற்ற முஸ்லிம்களைப்போலவே நானும் உறுதியாக இருக்கிறேன்.
மற்றபடி தாங்கள் குறிப்பிட்டிருக்கும் ஊழல் மற்றும் வாரிசு அரசியல் உட்பட பலவும் இந்தியாவிலுள்ள எல்லா கட்சிகளுக்கும் பொதுவானதுதான். எந்த கட்சியும் யோக்கியமில்லை. அதில் திமுகவை மட்டும் குறை சொல்லி பயனில்லை.
இறுதியாக...
இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் ஊழல், வாரிசு அரசியல் எதையும் கவனத்தில் கொள்ளவில்லை. காரணம் பிஜேபியின் மதவாத அரசியலை முறியடிப்பதுதான் இப்போதைய ஒரே நோக்கம். அதற்காக பிஜேபியின் மாற்று சக்திகளை அவர்கள் ஆதரிப்பதில் தப்பே இல்லை. மதவாதம் ஆட்சியில் அமர்ந்தால் என்ன ஆகும் என்பதற்கு நெடிய விளக்கம் தர வேண்டும். அது இன்னொரு பதிவில் தருகிறேன்.. மிக மிக ஆபத்தான விளைவுகளைக் கொண்டது அது. அவசியம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
இந்தத் தேர்தலில் ஓட்டுப்போடாமல் ஒதுங்கிக் கொள்ளும் நிலை உங்கள் சுதந்திர முடிவு. அதில் கருத்துச் சொல்ல எனக்கு அதிகாரமில்லை என்றாலும் ஓட்டே போடாமல் ஜனநாயக் கடமையை நிறைவேற்றாமல் நாம் யாரையும் குறை சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.
என் பதிலும் கூடுதலாகி விட்டது... சிரமத்திற்கு மன்னிக்கவும்... கூடுதல் விளக்கங்கள் கேட்டால் தர முயற்சிக்கிறேன்...
இன்ஷா அல்லாஹ்!

அபுஹாஸிமா எழுதியது. 
அண்ணன் Taj Deen
அவர்களுக்கு 2013 ல் முகநூலில்
எழுதிய ஒரு விளக்கம்.

ஞாயிறு, 14 மே, 2017

தமிழ் மொழியே உலகின் மூத்த முதன் மொழி

உலகின் முதல் மொழி தமிழ்!
மொழி அறிவு இன சிறப்பு !!!
ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!!
ஆதாரம் இதோ...........
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
========================
தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .
2015 ஆய்வுகளின் படி :
( Germany-ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள். Germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் (Europe-ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் கூறுகிறார்கள்).
லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் கண்ட எழுத்து மொழி.
("நிறைமொழி" மாந்தர் ஆணையில் கிளர்ந்த "மறைமொழி" தானே மந்திரம் என்ப) என்கிறது தொல்காப்பியம்.
நிறைமொழி - தமிழ்
மறைமொழி - சமஸ்கிரதம்
- சமஸ்கிரதம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி)
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி
மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .
தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
1500 வருடங்களுக்கு முன் தெளுகு என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய தெளுகு.
'தெள்ளு தமிழ் பாடி தெளிவோனே" என்று முருகனை புகழ்கிறது திருப்புகழ்.
1000 வருடங்களுக்கு முன் கன்னடம் என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய கன்னடம்.
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான். மரத்தை கட்டுவதால் கட்டு மரம். இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் "கட்டு மரம்" தான்.
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
இன்று இருக்கும் பழமையான நூல்களில், யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் "தோரா" (கி.முன் 2000 ஆண்டுகள்) ஒன்று மட்டுமே உள்ளது.
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான பல நூல்கள்:
கி.முன் 1000 ஆண்டுகள் - திருக்குறள்
கி.முன் 2000 ஆண்டுகள் - தொல்காப்பியம்
கி. முன் 3000 ஆண்டுகள் திருமந்திரம்
கி.முன் 5000 பரிபாடல்;
கி. முன் 7000 அகத்தியம் போன்றவற்றின்  நூல்கள் உள்ளன.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

அபுல் கலாம் ஆசாத்தின் 59 வது நினைவு தினம்

பிரிட்டிஷ் ஆட்சி இந்து-முஸ்லீம் இடையே பிளவை உண்டாக்கி குளிர்காய்வதின் அடிவேரைக்கண்டு வெட்ட ஆரம்பித்தவர். அதற்காகவே அவர் ஹல் ஹிலால் என ஒரு உருது வார இதழை தொடங்கி வெள்ளைக்காரர்களை வெளுத்தவர்.
இரண்டே ஆண்டில் பத்திரிக்கைகு தடை.. இருந்தாலும் விடவில்லை. மறுபடியும் ஹல் பலாஹி என வேறு பெயரில் பத்திரிகையை கொண்டுவந்தார். அதே ஆவேசமான எழுத்துகள்..அதையும் இரண்டே ஆண்டுகளில் முடக்கியது பிரிட்டிஷ் ஆட்சி..
இப்படித்தான் உருவெடுத்து சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியமான ஆளுமையாக திகழ்ந்தவர். மிகவும் இளம்(35) வயதில் காங்கிரஸ் கட்சிக்கு தலைவ ரானவர், இவருக்கு அடுத்துதான் மகாத்மா காந்தியே 1924-ல் அப்பதவிக்கு வந்தார்.
ஒரு புறம், ஜின்னா போன்றவர்களால் வலுப்பெற்று வந்த நாட்டின் பிரிவினை வாதம்... இன்னொருபுறம் ஆங்கிலேயர்களை எதிர்த்து பல போராட்டங்களுடன் சுதந்திரத்தை நோக்கி நாடு முன்னேறிவந்த தருணம்..
தேசம் பல பிரச்சினைகளை உக்கிரமாக சந்தித்து கொண்டிருந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக 1940 முதல் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய திறமைசாலி்.
பாகிஸ்தான் பிரிவினை தீர்மானத்தை ஆதரித்து வாக்க ளிக்காததால் ( நடுநிலை) ‘’காங்கிரசின் கைப்புள்ளை’’ என முகமது அலி ஜின்னாவால், கேலி பேசப்பட்டவர்.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்..ஐஐடி போன்ற பல கல்வி நிறுவனங்கள் தோன்ற வகை செய்து இன்றைய உயர் கல்வி வளர்ச்சிக்கு அன்றே வித்திட்ட ஒரு சிற்பி..
காந்தி, படேல் நேரு. நேதாஜி வரிசையில் இருந்தவர்..
இஸ்லாமியர் ஒவ்வொருவ்ரும் உச்சபட்ச கனவு, மெக்கா..ஆனால் இவரோ மெக்காவிலேயே பிறந்த பாக்கியத்தை பெற்றவர்
பாரத் ரத்னா அபுல் கலாம் ஆசாத்தின் 59 வது நினைவு தினம் இன்று