வியாழன், 16 அக்டோபர், 2014

ஆய கலைகள் 64

ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . அவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்வோம்.
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்)
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

திங்கள், 6 அக்டோபர், 2014

வார்த்தைகள்

ஓஷோ தன் சீடர்களுக்கு எழுதிய கடிதங்களில்
ஒன்றை உங்களுக்காக தருகிறேன் ...
அன்பே ,
வார்த்தை அது குறிக்கும் பொருளாகாது .
கடவுள் என்ற வார்த்தை கடவுளல்ல,
ஆனால் மனம் வார்த்தைகளை,
வார்த்தைகளை, மேலும் வார்த்தைகளைச்
சேர்த்துக் கொண்டே போகிறது
பிறகு இந்த வார்த்தைகளே தடையாக ஆகிவிடுகிறது
உனக்குள் நான் சொல்வதை கவனமாக உணர்ந்து பார் .
நீ வார்த்தையில்லாமல் எதையாவது பார்க்க முடிகிறதா ?
நீ வார்த்தையில்லாமல் எதையாவது உணர முடிகிறதா ?
ஒரு கணமாவது நீ வார்த்தையில்லாமல்
வாழ முடியுமா ?
ஆக,
நான் சொல்வதை முயற்சித்து பார்
எதாவது ஒரு பொருளை பார்
எந்த சிந்தனையையும் நினைக்காதே ஆனால் பார் .
எந்த கருத்தையும் எண்ணாதே
ஆனால் வெறுமனே பார் .
பிறகு நீ உன்னத உணர்வு தியானத்தில் இருப்பாய் .
வார்த்தைகள் இல்லாமல் வாழ்ந்து பார் .
தியானத்தின் உண்மையான இயல்பை உணர்வாய் .
இந்த உலகில் நிறைய தத்துவவாதிகள் தியானத்தின் அசல்
பொருளை திரித்து தந்து கொண்டு உள்ளனர் .
தியானம் என்கிற தன்மையை தவறான பொருளில் தந்து
அதன் உண்மை இயல்பை சாகடிக்கின்றனர் .
அவர்களாகவே புத்தம் புது விளக்கத்தை தருகின்றனர்
ஆகையால் நீ விழித்திரு ..
வார்த்தைகள் இல்லாமல் வாழ்வதே தியானத்தில் வாழ்வது .
---ஓஷோ ---

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

இருளாக்கிய வெண்மை..!

புலியங்குடி அருள் சாமுவேல்
----------------------------------------------

சில நாட்கள் ஏன்தான் உதிக்கிறதோ என்று தோன்றும்.அந்த லிஸ்ட்டில் தான் கடந்த 23ம் தேதியும் சேர்ந்திருக்கிறது.
..
எல்லாரையும் பதை பதைக்க வைத்திருக்கிறது டில்லி உயிரியல் பூங்கா.அந்த 15 நிமிட வீடியோ காட்சி நம் கண் முன்னேயே நிழலாடுகிறது.
..
மெக்சூத் என்ற அந்த வாலிபர், 10 நிமிடமாக, விஜய் என்று பெயரிடப்பட்ட வெள்ளைப் புலியைக் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருந்த காட்சி பார்க்கிற எல்லோரையும் கண்ணீர் வர வைத்துவிடும்.
..
அந்த வாலிபன் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் என்று முதலில் சொல்லப்பட்டது.
..
இன்று, அந்த வாலிபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், இரண்டு முறை அந்த வாலிபர் புலி இருக்கும் இடத்தில் குதிக்க முயற்சித்ததாகவும், ஆனால் பூங்கா பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டார் என்றும், அதன் பின்னர் பாதுகாவலர்களின் கண்களை மறைத்து, அந்த வாலிபர் உள்ளே குதித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
..
இதில் பல்வேறு கேள்விகள் எழும்புகிறது.
..
1.மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றால் அவரோடு அவரது நண்பர்கள் எப்படி வந்தார்கள்?

2.மன நிலை பாதிக்கப்பட்டவர் பள்ளி சீருடை அணிந்திருந்தது ஏன்?

3.இரண்டு முறை கீழே குதிக்க இருந்த அந்த வாலிபனைத் தடுத்த பாதுகாவலர்கள், ஏன் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தவோ அல்லது காவல்துறையிடமோ ஒப்படைக்க முன் வர வில்லை?

4.உடன் வந்த நண்பர்களும் ஏன் அவரை அங்கிருந்து அகற்றுவதற்கு முயற்சிக்கவில்லை?
..
கேள்விகள்..கேள்விகள்..எங்கெங்கும் விடையில்லாக் கேள்விகள்.
..
சரி..இந்தக் கேள்விகளால் தான் என்ன பயன்? இந்தக் கேள்விகளுக்கு விடையளித்துவிட்டால் மட்டும் அந்த வாலிபன் மீண்டு வரப் போகிறாரா?
..
இல்லை..இல்லவேயில்லை.
..
ஆனால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு, இரவு தூக்கம் இல்லாமல் தவிக்கும் அந்த அர்த்த ராத்திரியில் ஒரே ஒரு கேள்விதான் என் மனதில் நின்றது.
..
அது –
..
கற்றலினால் ஆன பயன் என்ன?
..
எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..பட்டங்கள் வாங்குகிறோம்..கல்வியாளர் என்று அழைக்கப்படுகிறோம்..அறிவாளிகள் என்று போற்றப்படுகிறோம்..விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்..டாக்டர்கள் என்று கெளரவிக்கப்படுகிறோம்.
எல்லாம் சரிதான்.
..
ஆனால்..கற்றலினால் ஆன பயன் தான் என்ன?
ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..
..
ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி கற்றுக்கொடுக்கவேயில்லையே..
..
அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆப்பிரிக்காவில் தங்கம் எந்த இடத்தில் கிடைக்கிறது? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
கெளதம புத்தரின் இயற்பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.”
..
என்ற பாடலை காரணமேயில்லாமல், வக்கனையாய் மனப்பாடமாய் அறிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆனால் ஆபத்து நேரத்தில் எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?
..
அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய் எழும்பி நின்றிருந்தால் அந்தப் புலி ஒருவேளை தன் உயரத்தை விட வளர்த்தியாய் இருக்கிறானே..இவனை எப்படி எதிர் கொள்வது என்று அமைதியாகத் திரும்பிப் போயிருந்திருக்கும்.
ஏனென்றால் அது பசியினால் அவனைத் தாக்கவில்லை. அப்படித் தாக்கியிருந்தால் அவன் சரீரத்தை அங்கு விட்டு விட்டுப் போயிருக்காது. அதுமாத்திரமல்ல..10 நிமிடங்கள் அவனை அப்படியே பார்த்துக்கொண்டேயிருக்கிறது. தாக்க முனையவேயில்லை.
..
ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள். கூச்சலிடுகிறார்கள்.
..
அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.
இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
..
காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை.
மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.
..
கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.
..
இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல் (a+b)2 =a2 + 2ab + b2 என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?
..
ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்?
..
அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.
..
இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன?
..
தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.
..
மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி? சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன? நமக்கான உரிமைகள் என்ன? காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?
..
விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது? விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது? எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?
..
மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது? கணவனிடம் எப்படி நடந்து கொள்வது? மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய் இருப்பது எப்படி?
..
இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?
..
இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே.. ஒரு ஆசிரியனாய் நான் வெட்கப்படுகிறேன்
..
ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட்டது.
..
மெக்சூத்தே.. இளம் வாலிபனே-
..
என்னை.. எங்களை மன்னித்து விடு..!

சனி, 20 செப்டம்பர், 2014

நம் முள்ளந்தண்டில் 18 படிகள்!

முதலில் சரியை, கிரியை நெறியில் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் :-
காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்துஅழிவு ஏற்படுகிறது.
குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இது சரியை, கிரியை நெறியில் உள்ள விளக்கமாகும்.

ஆனால் யோகநெறியும் தாண்டிய ஞானநெறியில் உடலையே ஆலயமாகப் பாவித்து, இறையுடன் இரண்டறக் கலந்து முற்றுப்பெற்ற ஞானி / சித்தராவர். நமது முள்ளந்தட்டில் 18 கோர்வைகள் உண்டு. விந்தானது முள்ளந்தட்டிலுள்ள பதினெட்டுப் படிகள் தாண்டி கழுத்தைத் தாண்டும்போது அமிர்தமாக மாறி அன்னாக்கில் சிந்தும்போது நம் பொய்யுடல் ஜோதிவடிவான மெய்யுடலாகும்.

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

ப. சிதம்பரம் எனும் திறமையாளர்

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது . எந்த சூழ்நிலையிலும் நேரம் தவறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார் . விழாக்களுக்கு குறித்த நேரத்தில் வருவார் .நேர விரயம் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவரது நேரத்தைப் போலவே நமது நேரத்தையும் மதிப்பார். குறித்த நேரத்தில் சந்திப்பார் .காத்திருக்க வைப்பது பிடிக்காது .

வெட்டிப்பேச்சுக்கு இடம் கிடையாது . எவ்வளவு பெரிய விசயத்தையும் ஐந்து நிமிடத்தில் சொல்லிவிட முடியும் ,அப்படி முடியவில்லை என்றால் நமக்கு அவ்விசயத்தில் போதிய பரிச்சயமில்லை என்று பொருள் என்று சொல்லுவார் .

தமிழிலும் ,ஆங்கிலத்திலும் ரசிக்கத்தகக்க ஆளுமை உள்ளவர் . தமிழில் பேசும்போது ஆங்கிலத்தை ஒரு வார்த்தை கூட கலக்க மாட்டார் .பழந்தமிழ் இலக்கியத்தில் மிக நல்ல பரிச்சயம் உள்ளவர் .அதே போல நவீன இலக்கியத்திலும் ஆர்வம் உள்ளவர். நன்றாக எழுதக்கூடியவர்.
எதிர்கருத்துகள் மீது மரியாதை உள்ளவர் . ஒரு தலைவர் ,மிகச்சிறந்த அறிவாளி என்ற அகந்தை எப்போதும் கிடையாது . விவாதத்தில் அவர் கருத்தில் அவர் உறுதியாக இருப்பது போல் நாமும் இருப்பதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் . பிறகு நாம் சொல்லியது சரி என்று உணர்ந்தால் பலபேர் முன்னிலையில் பலநாள் கழிந்த பிறகு கூட அதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் .

தானே மிகப்பெரிய அறிவாளி என்ற போதும் முக்கியமான விசயங்களில் முடிவெடுக்கும் முன் பலருடைய கருத்துக்களையும் கேட்கக் கூடியவர் . அவரிடம் தலைமுறை இடைவெளி என்பது ஒரு துளி கூட கிடையாது . ஒரு 18வயது மாணவரோடு எளிதாக ரிலேட் செய்து கொள்ளக்கூடியவர் .



வார்த்தைகளை தேவைக்கு மேல் பயன்படுத்தவே மாட்டார் . எந்த நேரத்திலும் நிதானம் இழக்க மாட்டார் . ஒரு நாளைக்கு 20மணி நேரம் உழைக்கக் கூடியவர் . அதனால் தான் மிக நெருக்கடியான நேரங்களில் உள்துறையிலும் ,நிதித்துறையிலும் அவரால் சிறப்பாக செயலாற்ற முடிந்தது .

ஒரு சிறு குழந்தையாக இருந்தாலும் மரியாதையாக அழைத்தே பேசுவார். அவர் அமர்ந்திருக்கும் போது எதிரில் யாரும் மரியாதை நிமித்தமாகக் கூட நின்றுகொண்டு பேசுவதை அனுமதிக்க மாட்டார். கட்டாயம் அமர்ந்து தான் பேசவேண்டும் .(அந்த நாற்காலியில் அமர்ந்து பேசுங்கள் தம்பி! ).சாதி ,மதங்களுக்கு அப்பாற்பட்டு பரந்துபட்டுச் சிந்திக்கக் கூடியவர் .

அவர் சொன்னதிலேயே எனக்கு மிகவும் பிடித்தது. "எனக்கு குப்பைகளை அகற்றுவதற்கான ஒரு துறையைக் கொடுத்தால் ஏன் உள்துறை கொடுக்கவில்லை என்று கேட்டுக் கொண்டிருக்க மாட்டேன் . .உலகிலேயே மிகச்சிறந்த குப்பை அகற்றும் துறையாக அதை மாற்றுவது எப்படி என்று சிந்தித்து மாற்றுவேன் " வேறு எதைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருக்காமல் ,கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்கிற கொள்கை உடையவர் .

ஒரு நடமாடும் அறிவுக் களஞ்சியம். நவீனமான சிந்தனையுள்ள வேட்டி கட்டிய மனிதர் ! நான் தொலைவில் இருந்து நிறையக் கற்றுக்கொண்ட துரோணர் !

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தலைவர் . உங்களுக்குள் உள்ள எழுத்தாளருக்கு இப்போதாவது ஒரு வாய்ப்புக் கொடுங்கள் !

புதன், 20 ஆகஸ்ட், 2014

மனதைப் பிழிந்த கவிதை....!



பிரபல பலஸ்தீனக் கவிஞர் சமீஹ் அல் காசிம் அவர்கள் காலமாகிவிட்டதாக இலங்கைக் கவிஞர் அண்ணன் அஷ்ரப் ஷிகாபுத்தீன் அவர்கள் ஒரு இடுகை இட்டிருந்தார். 

அதில் 75 வயதான கவிஞர் சமீஹ்

"மரணமே உன் மீது எனக்குக் காதலோ பயமோ கிடையாது. உடல் கொண்டு ஒரு படுக்கையையும் ஆத்மாவைக் கொண்டு ஒரு போர்வையையும் நீ உருவாக்கியிருக்கிறாய் "

என்று ஒரு குறிப்பை இரண்டு வாரங்களுக்கு முன்ன அவர் எழுதி வைத்திருந்ததையும் குறிப்பிட்டு பின் அவர் எழுதிய ஒரு கவிதையின் தமிழாக்கத்தை பதித்திருந்தார் அதை படித்துவிட்டு மிகுந்த உணர்ச்சி மேலிட வியந்து போனேன். அந்த கவிதையை படித்தால் பலஸ்தீனத்தின் கொடுஞ்சோகம் பட்டென விளங்கும்.. செத்தவனுக்கும் உணர்வு பிறக்கும்... அமைதியாக இருக்கும் நரம்புகளும் ஆர்த்தெழும்....!!!!!!!!!!

அவர்களின் போராட்டத்தை அப்படியே படமெடுத்துக்காட்டும் அந்த கவிதை இதோ.....

என் பாண்துண்டை நான் இழக்க நேரினும்
என் சட்டையையும் கட்டிலையும் விலை கூற நேர்ந்தாலும்
கல்வெட்டியோ சுமைகாவியோ
தெருக்கூட்டியோ நான் பிழைக்க நேரினும்
உன் பண்டசாலையைத்
துடைத்து மினுக்க நேரிட்டாலும்
குப்பையைக் கிளறி உணவெடுக்கும்படி வந்தாலும்
பட்டினி கிடந்து அழுந்த நேரினும்
மனிதனின் எதிரியே
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன் ...

என் காணியின் கடைசித் துண்டையும் பறித்தெடு
என் இளமையைச் சிறைக் கூண்டினுள்ளே புதைத்திடு
என் முதுசொத்தைக் கொள்ளையடி
என் நூல்களை எரித்திடு
என் கோப்பைகளில் உன் நாய்களுக்கு இரைபோடு
போ .. என் ஊரிலுள்ள கூரைகள் மீது
உன் பயங்கர வலைகளை விரித்திடு
மனிதனின் எதிரியே
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன்

என் கண்ணெதிரே
நீ எல்லா விளக்குகளையும் ஊதி அணைத்தாலும்
உதடுகளின் முத்தங்கள் அனைத்தையும்
உறைவித்தாலும்
என் நாட்டின் காற்றினை
சாபங்களால் நிறைத்தாலும்
என் ஓலமிடும் குரல்வளையை
அமுக்கி ஒடுக்கினாலும்
என் காசுகள் போற் பொய்க்காசுகள் தயாரித்தாலும்
என் பிள்ளைகளின் முகத்து முறுவலைப்
பிடுங்கி எடுத்தாலும்
இகழ்ச்சி ஆணி கொண்டு
என் விழிகளில் அறைந்தாலும்
மனிதனின் எதிரியே
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன்

மனிதனின் எதிரியே
துறைமுகங்களில் சைகைகள் உயர்த்தப்பட்டு விட்டன
காற்றெங்கும் அழைப்புகள் நிரம்பி விட்டன
எங்கெங்கும் அவை தெரிகின்றன
அடிவானத்திலே கப்பற்பாய்களைக் காண்கின்றேன்
முயன்று, இடர் மீறி, இழப்புக் கடல்களினின்றும்
யூலிசசின் கப்பல்கள் மீண்டு வருகின்றன
பொழுது புலர்கிறது ... மனிதன் முன்னேறுகிறான் ..
அவன் பொருட்டாக நான் சத்தியம் பண்ணுவேன் -
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன்
போராடுவேன்!

(நன்றி - பலஸ்தீனக் கவிதைகள்)

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

மனைவியிடம் பேசுங்கள்...!!! - திருச்சி சிவா

- திருச்சி சிவா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்

பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதியோடு விட்டுவிட்டு, பதினேழு வயதில் என்னை மணமுடித்து, 32 ஆண்டுகள் வாழ்ந்து, 49 வயது முடியும் நேரத்தில் என்னை தனிமனிதனாக தத்தளிக்க விட்டு என் மனைவி போய் விட்டாள்.அவளுடைய முழு ஒத்துழைப்பு, வாழ விரும்பி நடத்திய போராட்டம், மருத்துவர்களின் முயற்சி, இத்தனையும் மீறி இன்னும் வளர்ந்து நிற்கும் மருத்துவத்திற்கு கட்டுபடாத நோய் ஒன்று, எல்லோரையும் தோற்கடித்து விட்டு அவளை கொண்டு போய்விட்டது.

இதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த, அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை. காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான். ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது.

வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள். பொன் நகைகளை கழட்டிக் கொடுத்து விட்டு, புன்னகையோடு மட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு.

அரசியல் வெப்பம் தகித்தபோதும், தனிமனித வாழ்வின் துன்பங்கள் சூழ்ந்தபோதும், என் அருகே ஆறுதலாய், ஆதரவாய் இருந்தவள். எந்த நிலையிலும் தலை தாழ்ந்து வாழ்ந்திட கூடாது என்கின்ற என் குணத்திற்கு இயைந்து, இணைந்து நடந்தவள். சுயமரியாதையை காப்பதில் என்னையும் தாண்டி நின்றவள். மூன்று குழந்தைகளும் பிறக்கும் நேரத்தில், இடைதேர்தல் பணி, பிரச்சாரப்பணி, போராட்டங்கள் என்று அவள் அருகே இருக்காமல் சுற்றிகொண்டு இருந்தபொது சிறிதும் முகம் சுழிக்காதவள்.

1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன ' என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை பெரியகுளம் இடைத்தேர்தலுக்கு அனுப்பிவிட்டு செப்17 குழந்தை பிறந்து, இரண்டு நாட்கள் கடந்து 19 ந்தேதி நான் பார்க்க வந்தபோது ஒரு சிறிதும் முகம் சுழிக்காமல் ஒருமணி நேரத்திலயே என்னை மீண்டும் தேர்தல் களம் அனுப்பி வைத்த கற்பனை செய்ய முடியாத குணம் கொண்ட குலமகள். இரண்டாவது குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து நேராக அப்போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ் நிலையத்தில் காவலில் இருந்த இடத்தி பிள்ளையை காட்டிவிட்டு பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போன இலட்சியவாதியின் சரியான துணை.

விருந்தோம்பல் , உபசரிப்பு, இன்முகம், என்னைக்கான வருவோர் அத்தனை பேருக்கும் அன்னபூரணி. இரவு இரண்டு மணிக்கு எழுந்து சுடச்சுட தோசையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய துவையலை ஒதுக்கி புதிதாக அரைத்து பசியாற்றி பின்னர் சுருண்டு உறங்கும் அன்பு தெய்வம், தாய் போன துயரம் தெரியாமல், தாயின் இடத்தையும் நிரப்பி, ஒருபொழுதும், எதன் பொருட்டும் முகம் வாடுவது பொறுக்காமல் துடிக்கும் உள்ளம் கொண்ட உத்தமி; பொது வாழ்க்கையில் நான் நெறி பிறழாமல் நடப்பதற்குப் பெரிதும் துணையாய், ஊக்கமாய், பக்கபலமாய், இருந்தவள்.

பண்டிகைகளும், திருநாள்களும், கோலாகலமாய், கூட்டம் கூட்டமாய் கொண்டாடுவதற்கு அவள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், காட்டும் ஆர்வமும் அளவிடற்கரியவை.
இத்தனை கருத்துக்களை அவள் மீது நான் கொண்டிருந்ததை ஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதேயில்லை. ஆண்செருக்கு என்பார்கள், நிச்சயமாக அது இல்லை, இருந்திருந்தால் இந்த உறுத்தல் வந்துருக்காது. நேரம் இல்லை என்பார்கள், பொய் 32 ஆண்டுகளில் பத்து நிமிடம் கூடவா கிடைக்காமல் போயிருக்கும். தானாகவே புரிந்து கொள்வார்கள் என்பார்கள். என்றால் மொழி எதற்கு? மொழியின் வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு? பேசுவதற்குதானே? உணர்த்துவதற்குதானே? ஒரு சொல் ஓராயிரம் புரியவைக்குமே.

காலம் கடந்து பயன்படுத்தினால் பயனற்றுப்போவது பதார்த்தங்கள் மட்டுமா? வார்த்தைகளும் தானே. சரியான நேரத்தில் வெளிபடுதாவிட்டால், 'மன்னிப்பு', 'நன்றி' , ' காதல் ' என்ற எந்த சொல்லுக்கும் உயிர் இருக்காது, விலையும் இருக்காது. இத்தனை கற்றும் கடமை தவறியதாகவே கருதுகிறேன்.

ஒருநாள் ஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், உன்னால் தான் உயர்வு பெற்றேன் என்று கூட அல்ல, உன்னால்தான் இந்த பிரச்சனை தீர்ந்தது, உன் துணைதான் இந்த துன்பமான நேரத்தை கடக்க வைத்தது. உன் ஆலோசனைதான் என் குழப்பத்திற்கு தீர்வு தந்தது. என் வேதனையை பகிர்ந்து கொண்டு என்னை இலேசாக்கினாய் என்று ஒருமுறையாவது கூறியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பாய். கோடிரூபாய் கொட்டிகொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருப்பாயே...

ஊட்டிக்குப் பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அவளின் உடல் நலம் மோசமடைததாக செய்தி கிடைத்தது வரும் வழியெல்லாம் இப்படியே யோசித்து இன்று அவளிடம் எப்படியும் உள்ளத்தை திறந்து இத்தனை நாள் சேர்த்து வைத்து இருந்ததை எல்லாம் கொட்டிவிட வேண்டும் என்று வந்து பார்த்தல் முற்றிலும் நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாள்.

நினைவு திரும்ப வாய்ப்பேயில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொன்னபிறகு, மெல்ல அவள் காதருகே குனிந்து 'மும்தாஜை' ஷாஜகான் 'தாஜ்' என்று தனிமையில் அழைத்ததைபோல தேவிகாராணியை 'தேவி' என அழைத்தபோது , மூன்றாவது அழைப்பில் மருத்துவத்தை கடந்து அதிசயமாக புருவங்கள் இரண்டும் 'என்ன' என்று கேட்பது போல மேல உயர்ந்து வலது விழியோரம் ஒரு துளி கண்ணீர் உருண்டோடியபோது நான் உடைந்துபோனேன்.

பேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும் பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது, இன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். வருகிகிறவரிடமெல்லாம் அவள் உயர்வுகளை நாளெல்லாம் உணர்கிறேன். ஒரே ஒருமுறை, அவள் கம்பீரமாய் உலவிய நாட்களில் உட்கார வைத்து பேசிஇருந்தால்.... இவர் நம்மை முழுதாக புரிந்து கொண்டாரோ, இல்லையோ என்ற குழப்பத்திலேயே போய்இருப்பாளோ என்று நாளும் துடிக்கிறேன்.

எனக்கு ஆறுதல் கூறவந்த திரு.இவிகேஎஸ். இளங்கோவன், "வருத்தப்படாதீர்கள் இதெல்லாம் அவர்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும் " என்று சமாதானப் படுத்தினார். நான் அவரிடம் கேட்டேன் , " நீங்களோ நானோ பொதுக்கூட்டத்தில் பேசுகிறபொழுதே, நம்முடைய பேச்சு சிறப்பாக இருந்ததோ இல்லையோ, என்பதை கூடத்தில் எழும் கரவொலி மூலம், முகக்குரிப்பின் மூலம், ஆதரவாளரின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், நிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறியவுடன் உடன் பயனிபவர்கள் அந்த உரை குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என ஏன் எதிர் பார்க்கிறோம். பாராட்டினால் பரவசமடைகிறோம் . அதுபற்றி எதுவுமே பேசாமல் கூட வருபவர்கள் அமைதி காத்தால் கோபம் கொள்கிறோமே ஏன்? அது போலதான் வீட்டில் இருக்கிற பெண்களும் தங்கள் செயல்களுக்கும், சேவைகளுக்கும், பணிகளுக்கும், ஒரு வார்த்தை அன்பாக , கனிவாக, பாராட்டு சொல்லாக, கணவன் சொன்னால் மகிழ்வார்கள். இதில் நாம் இழப்பது எதுவுமே இல்லையே என சொன்னேன்.

ஏழு நாட்களுக்கு மேலாகி விட்டது, அவள் படத்தை பார்க்கிறபோதெல்லாம் நெஞ்சிலே இருந்து எதோ ஒன்று கிளம்பி கண்களில் நீராய் முட்டுகிறது.காலங்கடந்து நான் உணர்கிறேன். தோழர்களே! தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை, பெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள்...

என் மனைவிக்கு என்னை உணர்த்தாமலே, என் உள்ளதை திறக்காமலே, பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி மகிழவைகாமலேயே அனுப்பி வாய்த்த கொடுமை இனி வேறெங்கும் நிகழவேண்டாம்.. வேண்டி கேட்கிறேன் உங்களுக்காகவே
உங்கள் பிள்ளைகளை,
உங்கள் பிரச்சனைகளை,
உங்கள் உறவுகளை, சுமந்து உங்கள் தேவைகளைப் புரிந்து தீர்த்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பொருள் தேடி, புகழ்தேடி நாம் வெளியே சுற்றுகிரபோதேல்லாம், காவல் தெய்வமாய் குடும்பத்தைக் காக்கும் அந்த பெண்களை புரிந்து கொண்டோம் என்பதன் அடையாளமாய், அங்கிகரமாய் நாலு வார்த்தைகள் தயவு செய்து பேசுங்கள்!

நான் சந்தித்து கேட்டவர்களில் 95 விழுக்காட்டினர் என்னைப் போலவே பேசுவதில்லை என்றே சொன்னார்கள். இது மாறட்டும்... என் மனைவியின் பிரிவு தரும் வேதனையை விட இந்த உறுத்தல் தரும் வேதனை மிக அதிகமாக இருக்கிறது. என் அனுபவம் சிலருக்காவது உதவட்டும் என்றே இதை எழுத முனைகிறேன். சில வீடுகளாவது நிம்மதியில், மகிழ்ச்சியில் நிலைக்கட்டும்.

என் வேதனை, நான்படும் துயரம்... வேறெவர்க்கும் எதிர்காலத்தில் வேண்டாம் அவளோடு வாழ்ந்த நாட்களின் இனிமையான தருணங்களின் நினைவுகளே துணையாக அந்த நினைவுகளே சுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..... இதனை இப்போது சொல்லும் நான் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் கூட வாய்விட்டு வார்த்தைகளில் ஒருமுறை கூட சொன்னதில்லை.....

# ஒவ்வொரு கணவனும் படிக்கவேண்டிய பதிவு....

முக்கியமாக அரசியல்வாதிகள் என்றால் அசால்டாக பேசிவிடும் அனைவரும் படிக்கவேண்டிய பதிவு.... ஒரு அரசியல்வாதியின் வாழ்வில் அவர்கள் இழப்பது என்னவெல்லாம் என்பதை வாழ்வின் வலியை உணர்பவர்களால் மட்டும் நன்கு புரிந்துகொள்ளமுடியும்...