சனி, 6 டிசம்பர், 2014

பணம் என்ற காகிதத்தை பெற...

சிலர் அன்பை இழக்கின்றனர்.
சிலர் பண்பை இழக்கின்றனர்...
சிலர் நட்புகளை இழக்கின்றனர்.
சிலர் உறவுகளை இழக்கின்றனர்...
சிலர் கற்பை இழக்கின்றனர்...
சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்.
சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்.
சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்..
சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்.
சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்..

பாபர் மசூதி பற்றிய உண்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்....

ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.
ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.
பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?
பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
அந்த உயிலில்,”மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?
பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.
கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.
பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.
பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.
பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.
கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ”உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.
அதுதான் போகட்டும்! முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.
வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்
”கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.
1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.
இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.
1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.
எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.
இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.

ஞாயிறு, 30 நவம்பர், 2014

சித்தர்கள் என்று ஏன் அவர்களுக்கு பெயர் வந்தது?

கேள்வி: அருள்தந்தை அவர்களே, சித்தர்கள் என்று ஏன் அவர்களுக்கு பெயர் வந்தது?
வேதாத்திரி மகரிஷியின் விடை: "சத்து" என்பது மெய்ப்பொருளைக் குறிக்கும். "சித்து" என்பது உயிரைக் குறிக்கும். "ஆனந்தம்" என்பது மனம் பல்வேறு நிலைகளில் இயங்கிக் கொண்டிருப்பதைக் குறிக்கும். ஆக "மெய்ப்பொருள் - உயிர் - மனம்" இந்த மூன்று நிலைகளையும் "சத்து - சித்து - ஆனந்தம்" என்றும், அவற்றைச் சேர்த்து "சச்சிதானந்தம்" என்றும் வழங்குகிறோம்.
இதில் "சித்து" என்ற உயிரை முழுவதும் உணர்ந்தவர்கள் சித்தர்கள். உயிரின் இருப்பை, தன்மையை, இயக்கத்தை உணர்ந்ததோடு அதை நடத்தும் வல்லமையுடையவர்கள் சித்தர்கள்.
ஆகவே, சித்தர்கள் என்றாலே உயிரை உணர்ந்தவர்கள் என்பதுதான் விளக்கம்.

புதன், 26 நவம்பர், 2014

அஷ்ஷெய்கு ஸதகதுல்லாஹ் அப்பா



அல் ஆழிமுல் பாழில், வல் குத்புல் வாஸில், மாதிஹுர் றஸூல்அஷ்ஷெய்கு ஸதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ! மௌலவீ HMM இப்றாஹீம் நத்வீ அவர்கள் எழுதிய வித்ரிய்யஹ் ஷரீபஹ் நபீபுகழ் காப்பியம் எனும் நூலிலிருந்து இம் மகானவர்கள் ஹிஜ்ரி 1042 இல் இந்தியாவிலுள்ள காயல்பட்டணத்தில் மலர்ந்தார்கள். இவர்களின் தந்தை அற்புதங்கள் பல நிகழ்த்திய அஷ்ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் அவர்களாகும் . ஹழ்றத் சுலைமான் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களுக்கு ஐந்து புதல்வர்கள். முறையே, 01- அஷ்ஷெய்கு ஷம்சுத்தீன் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி 02- அஷ்ஷெய்கு ஷிஹாபுத்தீன் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி 03- அஷ்ஷெய்கு சதகதுல்லாஹ் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி 04- அஷ்ஷெய்கு அஹ்மத் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி 05- அஷ்ஷெய்கு சலாஹுத்தீன் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி ஆகியோராவர்கள் . இவர்கள் அனைவரும் வலீமார்களேயாவர். அவர்களில் மூன்றாமவரே நமது ஞானக்கடல், ஆஷிகுர் றஸூல் குதுபுஸ்ஸமான் அஷ்ஷெய்கு சதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களாகும் .

தந்தை சுலைமான் வலீ , இவர்களுக்கு “சதகத் ” என்று தமது தந்தையின்பெயரையே சூட்டினார்கள் . கல்வி தங்களது ஏழு வயதில் தன் தந்தையிடம்திருக்குர்ஆனை ஓதி முடித்து, அதை மனனம் செய்து மார்க்க அடிப்படைச் சட்டங்களைக் கற்ற சதகத் ( றஹ் ) அவர்கள் உயர் கல்விக்காக தன் தந்தையின் பள்ளித் தோழரும் கீழக்கரை தாறுல்  உலூம் அறபுக் கல்லூரியின் அதிபருமான மக்தூம் சின்னீனா லெப்பை ஆலிம் அவர்களிடம் சென்று மார்க்கக் கல்வியையும் அறபு மொழியையும் திறன் படக்கற்று தலை சிறந்த ஆலிமாகத் திகழ்ந்தார்கள். திருமணம் திருமண வயதையடைந்த மகான் அவர்களுக்கு பெற்றோர் மேலைப்பாளயத்தைச் சேர்ந்த இறை நேசர் பரம்பரையில் தோன்றிய மர்யம் எனும் மங்கையைத் திருமணம்செய்து வைத்தனர். மனைவியுடன் காயல்பட்டணம் வந்த மாதிஹுர் ரஸூல் இமாம் சதகதுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் அங்கு வாழ்ந்து, ஒரு ஆண் பிள்ளையையும் ஐந்து பெண் மக்களையும் பெற்றார்கள் . அவர்கள் முறையே, அஷ்ஷெய்கு முஹம்மது லெப்பை றஹ்மதுல்லாஹ்அலைஹி, கதீஜா, ஆமினா , ஸைனப்,உம்மு ஹானீ , ஸாறா ஆகியோராவர் .

இப்படியும் ஓர் அற்புதம் ஷெய்குனா சதகதுல்லாஹில் காஹிரீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் அதிக காலங்களில் மக்காவுக்குச்சென்றே ஐந்து வக்துக்களையும் தொழுது வந்தார்கள் . ஒரு நாள் வீட்டில் ஒரு குழந்தையைத் தூக்கியவர்களாக இருக்கும் நிலையில் கஃபாவுக்குச் செல்லும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டது . ( இந்நிலை அவ்லியாஉகளுக்கும் , நபீமார்களுக்கும் ஏற்படும் நிலையாகும் .) குழந்தையுடன் சென்ற அவர்கள் கஃபாவில் ஒரு இடத்தில் குழந்தையை வைத்து விட்டு இறை முனாஜாத்தில் இருந்து அவர்கள் அந்த ஆன்மீக நிலையிலேயே ஊர் வந்து விட்டார்கள் .

ஊர் வந்த போதுதான் அவர்களுக்கு ஆன்மிக நிலை தணிந்து தான் தூக்கிச்சென்ற குழந்தையின் நினைவு வந்தது . அதை அங்கிருந்த  முஹிப்பீன்களிடம் சொல்லும் போது அவர்களுக்கு பணிவிடை செய்யும் “காதிமஹ் ” பணிப்பெண் அதைக்கேட்டு உடன் அவர் மக்கா சென்று குழந்தையைத்தூக்கி வந்தார் .இது அனைவருக்கும்வியப்பை ஏற்படுத்தவே அப்பணிப்பெண்ணிடம் இந்த உயர்நிலை உமக்கு எப்படி ஏற்பட்டது ? என்று இருந்தவர்கள் கேட்டனர் .அதற்கு அப்பணிப் பெண்“எமது சங்கைமிகு ஷெய்கு நாயகத்திற்கு நான்இக்லாஸுடன்பணி செய்து வந்துள்ளேன் .”அவர்கள் அணிந்து கழட்டிய உடைகளை நான் கழுவுவது வழக்கம் .அவர்களது உடையைக் கழுவும் போதெல்லாம் கழுகிய தண்ணீரில் பறக்கத்தை நாடி நான் குடித்து வந்தேன். அதன் காரணத்தால்தான் அல்லாஹ் எனக்கு இந்தநிலையைத் தந்தான். எனது தறஜஹ்வை உயர்த்தினான்என்று சொன்னார்கள் .பணிவிடை செய்த பெண்ணுக்கே இந்நிலையென்றால், அவ்லியாஉகள் குத்புமார்களுடைய மாண்பு எப்படி இருக்கும்.

மீக்காயீல் (அலை ) அவர்களும் சதகதுல்லாஹ் அப்பாவும் !

ஒரு நாள் அவர்கள் காயல் நகரிலுள்ள இரட்டைக் குளம் பள்ளியில்அமர்ந்து மார்க்க ஞான போதம் செய்து கொண்டிருக்கும் போது அந்தமான் தீவில் மழையை இறக்குவதற்காகச்சென்று கொண்டிருந்த மீக்காயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சதகதுல்லாஹ் அப்பாவிடம்வந்திறங்கி உரையாடினார்கள். அப்போது அவர்களிடம் இந்தவூரில்மழையின்றி பஞ்சத்தால் மக்கள்நலிகின்றனர் . இங்கும் மழையை இறக்கிச்செல்லுங்கள் என்று வேண்டினார்கள் . அதன்படி மீக்காயீல் மழையை இறக்கிச்சென்றார்கள். மக்களின் பஞ்சம் சதகதுல்லாஹ் அப்பா அவர்களால் மறைந்தது. மேலும் அவர்கள் அப்பள்ளியில் வைத்து மக்களுக்கு உபதேசம் செய்த போது பள்ளியின் தூண் அழுததாகவும்அதில் நீர் சுரந்ததை மக்கள் கண்டதாகவும்சான்றுகள் சொல்கின்றன .மாண்பும் மகத்துவமும் இமாம் மாதிஹுர் ரஸூல் சதகதுல்லாஹ் அல் காஹிரீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் சாதாரண அறிவுடையவர்களல்லர் . காயல் நகர் மற்றுமுள்ள உலமாஉகளிடமும்உங்களில் அறிவால் சம்பூரணத்துவம் பெற்றவர் யார் ? என்று கேட்பின் அனைவரும் ஒரே குரலில் சதகதுல்லாஹ் என்றே சொல்வார்கள், தர்க்கலைப் பீர்முஹம்மது வலியுல்லாஹ்விடம் மார்க்க விவாதம் செய்ய உலமாஉகளால்அனுப்பப்பட்ட அறிவுப் புலி. ஷரீஅத்மேதை .பதினான்கு வகை ஞானங்களையும்அறபு மொழிக்கலைகளையும் கற்றறிந்த மாமேதை . இந்திய தேசத்தின் மாண்புக்குரிய காழி நீதிபதியாக இருந்தவர்கள் . மக்காவிலும் மதீனாவிலும் உள்ள மாமேதைகளுக்குக் கிதாபு ஓதிக்கொடுத்தவர்கள். கொடை வள்ளல் சீதக்காதி மரைக்காயர் ( ஷெய்கப்துல் காதர்) அவர்களின் மெய்ஞ்ஞான குரு. உமறுப்புலவர் அவர்களின் ஸீறாவுக்கு உரை கொடுத்த பெருந்தகை. அண்ணல் நபீ ( ஸல்) அவர்களில் அன்பு கொண்டு “பனா ”தன்னை மறந்தவர்கள்.அல்லாஹ்வை அறிந்த ஆரிபீன்களில் ஒருவர் . மலக்குகளுக்கும் ஜின்களுக்கும் ஓதிக் கொடுத்தவர்கள்.அவர்களின் மகத்துவம் அனந்தம், மாண்புகள் அதிகம்!

“ வித்ரிய்யஹ் ” தந்த பரிசு !
அகிலத்தின் பேரொளி அண்ணல் முஹம்மத் ( ஸல்) அவர்கள் மீது அதிக அன்பு கொண்டு வாழ்ந்த அப்பா அவர்களுக்கு பக்தாதைச் சேர்ந்த முஹம்மத் பின் அபீ பக்ரில் பக்தாதீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களால் அறபியில் எழுதப்பட்ட வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அதில் அறபு அட்சரங்கள் 29 எழுத்துக்களுக்கும் 21 இரண்டடிப்பாக்கள் வீதம் எழுதியிருந்தார்கள் . அதை சதகதுல்லாஹ் அப்பா அவர்கள் மிகவும் விரும்பிப் படித்தார்கள் . கனவில் நபிகள் கோமான்! மாதிஹுர் ரஸூல் இமாம் முஹம்மத் பின் அபீ பக்ர் பக்தாதீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் 1218 கவிதையடிகளைக் கொண்ட வித்ரிய்யஹ் ஷரீபஹ்வைப் பூர்த்தி செய்த அன்றிரவு ஹிஜ்ரி 652 “உந்துலிஸ்” ( ஸ்பெய்ன்) தேசத்தில்  “குர்னாத்தா ” எனும் ஊரில் இருந்தார்கள் . அவர்கள் சொல்கிறார்கள் -அன்றிரவு கனவில் நபி ( ஸல் ) எனது கிதாபைக் கையில் வைத்து பக்கம் பக்கமாகப் பார்த்து மகிழ்ந்து எவ்வளவு அழகாக எனது மத்ஹை எழுதியுள்ளீர் . மிக அழகாக இருக்கின்றதென்று அருகில் நின்ற தோழர்களிடமும் அதைப்பார்க்கும்படி கொடுத்து என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.சஹாபாக்களில் ஹழ்றத் அபூபக்ர் றழியல்லாஹு அன்ஹுஅவர்களை மட்டுமே கனவில் இன்னார் என்று தெரிய வந்தது . மற்றவர்கள்
யாரென்பது புரியவில்லை .கண்விழித்து விட்டேன் . எனது மத்ஹை றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி  வஸல்லம் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை அறிந்து பேரானந்தம் கொண்டேன் . என்று ! சதகதுல்லாஹ் அப்பாவின் ஆசை !
அண்ணல் நபீ மீது காதல் கொண்டு மகான் முஹம்மத் பின் அபீ பக்ர் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களால் எழுதப்பட்டிருந்த ( 29 x 21 = 609 x 2 = 1218 அடிகள்) வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை மீண்டும் மீண்டும் ஓதிய எங்கள் மகான் சதகதுல்லாஹ் அவர்களுக்கு நபிகள் மேல் காதல் அதிகரித்தது . அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்த அறபு மொழி ஆற்றல் அவர்களையும் எழுதும் படி சொன்னது .

“நபீகளின் புகழ் ” எனும் காதலால் உந்தப்பட்ட மாதிஹுர் ரஸூல் இமாம் சதகதுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் இப்னு அபீ பக்ர் றஹ்மதுல்லாஹ் அலைஹி எழுதிய இரண்டிப் பதத்துக்கும் மூன்றடிப் பாக்களைச் சேர்த்து ஐந்தடிப் பதமாக அமைத்ததுடன் 21 பைத்துக்களுடன் மேலும் ஐந்தடிப் பதங்கள் கொண்ட எட்டு பைத்துக்களும் சேர்த்து எழுதினார்கள். அத்துடன் “மீம்” என்ற எழுத்துக்கு மட்டும் ஏனைய எழுத்துக்களுக்குப் போல் 29 பைத்துக்களை எழுதாமல் ஐயடிகள் கொண்ட ஒரு பைத்தைக் கூடுதலாக எழுதி முப்பது பைத்தாக்கினார்கள். மொத்தமாக அவர்கள் எழுதிய பைத்துக்கள் 1496 ஆகும். இவை 2992 கவிதை அடிகளாகும். எனவே, முஹம்மத் பின் அபீ பக்ர் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களின் கவிதை அடிகள் 1218 இமாம் சதகதுல்லாஹ் அவர்கள் எழுதிய 2992 அடிகளும் சேர்ந்து மொத்தம் 4210 கவிதையடிகளாகும். அறபு மொழியில் 29 எழுத்துக்களுக்கும் பைத்துக்கள் எழுதப்பட்டிருப்பதாலும் 29 என்பது ஒற்றைப்பட உள்ள எண்ணாகையாலும் “ஒற்றைப்படையானது” என்ற பொருளில் இதற்கு “வித்ரிய்யஹ் ” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் கவிதை நயமும் பொருட் செறிவும்கொண்டுள்ளது.

கவிதைகளில் நபீ புகழ் ஓதும் இக்காப்பியம் போல் நீண்டதோர் காப்பியம் இதுவரை தோன்றவில்லை என்பது அறிஞர்களின் முடிவாகும். இக்காப்பியத்தில் நபிகளின் “முஃஜிஸாத் ” அற்புதங்கள், நபிகளின் அகமியங்கள் நடந்தயுத்தங்கள், சஹாபாக்களின் மாண்புகள், நபிகள் தமதும்மத்தின் மீது கொண்டிருந்த கருணைகள், நபியன்பின் முக்கியத்துவங்கள் , சஹாபாக்களின் வீரச்செயல்கள் நிறைந்துள்ளன . அத்துடன் அவர்கள் அல்லாஹ்வுடன் செய்த முனாஜாத்துக்களும் உள்ளன . இதில் மகானவர்கள் தன்னை ஒரு பெரும் பாவிபோல் கருதி தான் பெரும்
குற்றமிழைத்தவனென்றும் தன்னை மன்னித்து நபிகளுடன் சேர்த்து வைக்க வேண்டுமென்று அல்லாஹ்விடம் கேட்கிறார்கள் . குற்றவாளிகளின் இழி நிலையை தமதாக்கிக்கொள்கிறார்கள். பாவிகளுக்கு கைகொடுக்கும் நாயகமே இந்தப்பாவிக்கும் கைகொடுங்களென்று நபிகளிடம்கேட்கிறார்கள் . அந்த உத்தமர் தன்னை தாழ்வாக்க் கருதி தன்னை இழிமைப்படுத்திக்கொள்வதை என்னென்று சொல்வேன். மாணிக்கம் மலத்தில் கிடந்தாலும் அது மாணிக்கம்தான்.
மகான் சதகதுல்லாஹ் அப்பா அவர்கள் பாவிகளையும் அவர்களது பாவங்களையும் தாமாகவும் தாம் செய்ததாகவும்சொல்லியிருப்பது தன்னை , தனது நப்ஸை இழிவுபடுத்துதற்கேயாகும் . அத்துடன் பெரும் பாவிகளுக்கும் அல்லாஹ்வின் மன்னிப்பும் நபிகள் நாயகத்தின் அன்பும் உண்டென்று காட்டுவதற்காகவுமேயாகும் . இதை விளங்காத சிலர், இறை ஞான வழியைப் புரியாத பலர் அவர்களைக் கீழ்த்தரமானவர் என்பதும் புனித வித்ரிய்யஹ்வைத் தரம் குறைத்துப்பேசுவதும் அவமதிப்பதும் ஆன்மிக குற்றங்களாகும் . இதனால் தண்டனை கிடைக்கும். இதற்குத் தண்டனை மௌத்தாகும்போது கலிமா இல்லாமல் மரணிக்கும் நிலை ஏற்படுவதாகும் . இத்தகையவர் ” ஸூஉல் காதிமஹ் ” கெட்ட முடிவைக்கொண்டு சோதிக்கப்படுவார் . நஊதுபில்லாஹ்! 

மக்பூல் வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை எழுதிய இமாம்கள் இருவரும் நபிகள்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பல முறை கண்டுள்ளார்கள் .கனவிலும் நனவிலும் அது நிகழ்ந்துள்ளது. ஒரு நாள் மக்காவில் சதகதுல்லாஹ்அப்பா நிற்கும்போது ஒரு கனவு கண்டார்கள் .மதீனாவில் இருந்து சிலர் ஒரு ” சுன்தூக் ” ( சன்தூக் ) கில் ஒரு ஜனாஸாவை வைத்து மக்காவுக்குக்கொண்டு வந்து ஜனாஸா பெட்டியுடன் கஃபாவைத் தவாபு செய்கின்றனர். அப்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனாஸாப் பெட்டியிலிருந்து வெளிவருகின்றார்கள் . அவர்களுக்கு வுழூச்செய்வதற்கு ஒருவர் தண்ணீர் கொணர்ந்து கொடுக்கிறார் . இதைப்பார்த்த சதகதுல்லாஹ் அப்பா அவர்களும் ஒரு கேத்தலில் “ஸம்ஸம் ” நீர்கொண்டு அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு வுழு எடுக்கக்கொடுக்கிறார்கள். கனவுகளைந்துவிட்டது.இக்கனவில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வுழூச்செய்வதற்கு முதலில் நீர் கொடுத்தது மாதிஹுர் றஸூல் முஹம்மத் இப்னு அபீபக்ர் பஃதாதீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களென்றும், இரண்டாவது நீர் கொடுத்தது திஹுர் றஸூல் சதகதுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களென்றும்அவ்விருவரும் கொடுத்த நீரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்றுக் கொண்டார்களென்றும் அதேபோல் நாம் வெளிப்படுத்திய வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை நபிகள் ஏற்றுக்கொண்டார்களென்றும் சதகதுல்லாஹ் அப்பா அவர்களே விளக்கம் சொன்னார்களாம் .


அவர்களது வித்ரிய்யஹ் ஷரீபஹ்வில் சொல்லப்பட்டுள்ளபடி நபீகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பல முறைகள் சதகதுல்லாஹ் அப்பா அவர்கள் கண்டுள்ளார்கள் .எனவே, மகான் சதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களின் கறாமத்துக்களும், அறிவு ஞானங்களும் அனந்தம். அவர்களது புகழ் இன்றும் உலகெங்கும் நிறைந்துள்ளது . இறுதியில் மகானவர்கள் ஹிஜ்ரி 1115 ம்ஆண்டு ஸபர் பிறை 5 வியாழன் இரவு தங்களின் 73ம் வயதில் தாறுல் பனாவை விட்டும் தாறுல் பகாவை அடைந்தார்கள் .இவர்களது ஜனாஸா கீழக்கரை ஜாமிஆ மஸ்ஜிதின் முன்னுள்ளது .இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் 

செவ்வாய், 18 நவம்பர், 2014

பாபரி மஸ்ஜித் வழக்கு - விநாயக முருகன்

அன்புள்ள விமு
உங்கள் முந்தைய பதிவில் 1988 க்கு பிறகுதான் டிவியில் மகாபாரதம் ஒளிப்பரப்பிய பிறகே அயோத்தி பிரச்சினை வெடித்தது போல எழுதி இருந்தீர்கள். அதற்கு முன்பு பிரச்சினையே இல்லையா? நான் முதிரா இளம் பருவத்தில் இருப்பதால் எனது சந்தேகங்களுக்கு பதில் அளித்து எனது வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைக்கவும்.
அன்புடன் செல்வம்
அன்புள்ள செல்வம்
இல்லையென்று சொல்லவில்லை. உண்மையில் அது சுதந்திரத்துக்கு முன்பே எழுப்பப்பட்ட பிரச்சினை. இப்போது ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கு சில தரவுகளை தேடும்போது சில தகவல்கள் கிடைத்தன.
1528ல் தனது பாபர் தனது தளபதி மீர்பாகியை வைத்து மசூதியை கட்டுகிறார்.
1885ல் பைசாபாத்தில் ஒரு வழக்கு பதியப்படுகிறது. எண் 61/280/1885ஆகப் பதியப்பட்ட இந்த வழக்கை மஹாந்த் ரகுபர் தாஸ் என்பவர் தாக்கல் செய்தார். 21 அடி கிழ மேலாகவும், 17 அடி தென்வடலாகவும் அமைந்த ராமர் பாதம் பதிந்த ராம சபுத்ரா எனும் மேடை தான் ராமர் பிறந்த இடமென்றும் வெப்பம் மற்றும் குளிரால் அங்கு ராமரை வணங்க முடியவில்லை என்றும் அதனால் அந்த மேடைக்கு மேலாக ஒரு ராமர் கோயிலை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டிருந்தார்.
அப்போது பைசாபாத்தின் உதவி நீதிபதியாக இருந்தவர் பண்டிட் ஹரி கிருஷ்ணன். அவர் பிப்ரவரி 24, 1885ல் அந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறார். கோயில் கட்ட அனுமதி மறுத்து தீர்ப்பளிகிறார். அந்த தீர்ப்பில் இப்படி சொல்கிறார்.
கோயில் கட்ட அனுமதியளிப்பது நாம் கொண்டிருக்கக் கூடிய பொதுவான கொள்கைக்கு எதிரானதாகும். அவ்வாறு கோயில் கட்ட நாம் அனுமதித்தால் இந்துக்கள் கோயிலில் மணியடிப்பார்கள்; சங்கு ஊதுவார்கள். அது இங்கு நடந்து செல்லும் இஸ்லாமியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும். இதில் இரு சமுதாயமும் அடித்துக் கொண்டு கலவரம் ஏற்பட்டு, அதில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாக நேரிடும். அதனால் ராமர் கோயில் கட்ட அனுமதி என்பது கலவரத்திற்குப் போடும் அஸ்திவாரம் ஆகும். தவிர அந்த இடம் ரகுபர் தாஸிற்குச் சொந்தமானது அல்ல என்றும் தீர்ப்பில் சொல்கிறார்.
அத எதிர்த்து ரகுபர்தாஸ் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார் . வழக்கு எண் 27/1886ஆகப் பதியப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு நீதிபதி எஃப்.இ.ஏ. சேமியர், பாபரி மஸ்ஜித் இடத்திற்கு நேரடி வருகையளித்துப் பார்வையிடுகிறார்கள். பார்வையிட்ட பிறகு மார்ச் 18, 1886ல் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்யும் நீதிபதியின் இப்படி தீர்ப்பு சொல்கிறார்.
"இந்துக்கள் புனிதமாகக் கருதும் இடத்தில் பள்ளி கட்டப்பட்டிருப்பது மிகவும் துரதிஷ்டமானது. ஆனால் இது 356 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு. இதற்கு இப்போது பரிகாரம் காண முடியாது. காரணம், இது மிகவும் காலம் கடந்தது''
ரகுபர் தாஸ் அதை எதிர்த்து ஆவுத் நீதி ஆணையரிடம் இரண்டாம் மேல் முறையீடு செய்கிறார். ஆவுத் நீதிபதி டபுள்யூ. யங்க் (W.Young) இந்த இரண்டாம் மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்து நவம்பர் 1, 1886 அன்று தீர்ப்பளிக்கின்றார். அவர் அளித்த தீர்ப்பிலும் நீதிபதி எஃப்.இ.ஏ. சேமியர் போன்றே சில கருத்துக்களைப் பதிவு செய்கிறார்.
"சபுத்ரா நிலம் தனக்குச் சொந்தமானது என்று மனுதாரர் உரிமை கொண்டாடுகிறார். ஆனால் ஆவணங்களின்படி மனுதாரருக்கு இந்த நிலத்தின் மீது எந்த உரிமையும் இல்லை. ஏற்கனவே வழக்கை விசாரித்த நீதிபதிகள் சரியான விதத்திலேயே மனுதாரரின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்திருக்கின்றனர்'' என தீர்ப்பு சொல்கிறார்.
அதெல்லாம் வெள்ளையர் காலத்தில் நடந்த விஷயம். பிறகு சுதந்திரம் கிடைக்கும்வரை பொறுமையாக காத்திருந்தார்கள். டிசம்பர் 22-23, 1949 அன்று நள்ளிரவில் யாரோ சில மர்ம ஆசாமிகள் மசூதியின் வளாகத்திற்குள் ராமர், லட்சுமணன்,சீதை மூவரது சிலைகள் கொண்டு வந்து வைக்கப்படுகின்றன. மீண்டும் பிரச்சினை வெடிக்கிறது.
சிலைகளை அகற்றும்படி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தும், அப்போதைய பைசாபாத் மாவட்ட அதிகாரி, துணை ஆணையர் கே.கே. நய்யார், "பெரும்பான்மை சமுதாயத்தின் நம்பிக்கை இதன் பின்னணியில் இருக்கின்றது. அதைக் குறைத்து மதிப்பிட முடியாது' என்று மேலிட உத்தரவை உதாசீனப்படுத்தினார்;
யார் அந்த மேலிடம்? பிரதமர் ஜவஹர்லால் நேருதான்.  துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல், கவர்னர் ஜெனரல் சி. ராஜகோபாலாச்சாரி, உ.பி. முதலமைச்சர் கோவிந்த வல்லப பந்த், தனது நண்பர் கே.ஜி. மஷ்ருவாலா ஆகியோருக்கு கடிதங்கள் எழுதி தள்ளுகிறார்.
டிசம்பர் 26, 1949 அன்று பிரதமர் நேரு, உ.பி. முதல்வர் கோவிந்த வல்லப பந்துக்கு ஒரு தந்தி அனுப்பினார்.
சிலைகளைப் பள்ளியில் கொண்டு வைத்தது பெரும் தீய விளைவுகளை ஏற்படுத்துகின்ற மிகக் கெட்ட முன் மாதிரியாகும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
மார்ச் 5, 1950ல் மஷ்ருவாலாவுக்கு எழுதிய கடிதத்தில், "பைசாபாத் மாவட்ட அதிகாரி முறை தவறி, கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டிருக்கின்றார். முதலமைச்சர் இச்செயலை பல்வேறு கட்டங்களில் கண்டித்தாலும் உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டார்' என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் நடந்த சம்பவங்களை படிக்கும்போது இந்தியாவில் பிரதமர் பதவி என்பது அன்றே ஒரு டம்மி போஸ்ட் என்று தெரிகிறது.
ஏப்ரல் 17, 1950 அன்று நேரு, உ.பி. முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடும் வரிகளை படிக்கவும்.
" உ.பி. எனக்கு ஒரு வெளிநாடாகத் தோன்றுகிறது. இதற்கு முன்பு காங்கிரஸின் தூண்களாகத் திகழ்ந்தவர்களின் சிந்தனைகளிலேயே மதவாதம் மிக ஆழமாக ஊடுருவி விட்டதை நான் காண்கிறேன். மதவாதம் என்பது உணர்வு பெற்று எழ முடியாத அளவுக்கு உடலை வெகுவாகப் பாதித்துக் கொண்டிருக்கின்ற பாரிச வாயு! வாத நோய்! இது ஒரு விதத்தில் அரசியல் ஆதாயம். இந்த நோய் விவகாரத்தில் நாம் மிகவும் மெத்தனமாக இருக்கின்றோம்"
நேருவுக்கு எந்தளவு ஆதங்கம் இருந்திருந்தால் இப்படி எழுதியிருப்பார்.
பிறகு நடந்த சம்பவங்களை வரிசையாக பார்க்கலாம்.
ஜனவரி 16, 1950 அன்று கோபால் சிங் விஷாரத் என்பவர் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் "1949ல் பள்ளிவாசலில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றக் கூடாது' என்று ஓர் உத்தரவு கோருகின்றார்.
டிசம்பர் 5, 1950 அன்று மஹாந்த் பரமஹன்ஸா ராமச்சந்திர தாஸ் என்பவர், பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு, தொடர்ந்து பூஜை செய்ய பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் ஓர் உத்தரவைக் கேட்கின்றார்.
டிசம்பர் 17, 1950 அன்று சர்ச்சைக்குரிய பகுதியை அரசாங்க ரிசீவரிடமிருந்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிர்மோஹி அகாரா என்ற அமைப்பு பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் கோரியது.
டிசம்பர் 18, 1961 அன்று உத்தர பிரதேச சுன்னத் ஜமாஅத் மத்திய வக்ஃபு வாரியம் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில், பள்ளிவாசல் தனக்குரியது என்பதற்கான விளம்புகைப் பரிகாரம் மற்றும் அனுபவ பாத்தியதை (Declaration & Possession) கோரி வழக்கு தொடுத்தது.
மேலே கூறப்பட்ட நான்கு வழக்குகளும் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுப் பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.
1982ல் வி.ஹெச்.பி. ராமர் கோயில் இயக்கத்தைத் தொடங்கியது.
1989ம் ஆண்டு ஜூன் மாதம் ஹிமாச்சல் பிரதேசம், பாலாம்பூரில் கூடிய தனது தேசிய செயற்குழுவில், இந்துத்வா தான் தனது அரசியல் லட்சியக் கொள்கை என்றும், ராம ஜென்ம பூமி இயக்கத்தில் பங்கு கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.
பிறகு 1992 ல் இடிக்கிறார்கள். அன்றைக்கு நேருவால் எப்படி ஒன்றும் செய்ய இயலாமல் போனதோ அதுவே நரசிம்மராவுக்கு நடந்தது.
மஹாந்த் பரமஹன்ஸா ராமச்சந்திர தாஸ் என்பவர்தான் நள்ளிரவில் மூன்று சிலைகளையும் கொண்டு சென்று மசூதிக்குள் வைத்தவர்.
டிசம்பர் 22, 1991ல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அதை அவரே ஒப்புக்கொண்டுவிட்டார். இப்போது அவரும் உயிரோடு இல்லை. ராமரை கேட்கலாம் என்றால் அவரும் இல்லை. பாபரை எழுப்பி கேட்கலாம் என்றால் அவரும் இல்லை. கேட்டவர்களும் உயிரோடு இல்லை. ஆனால் வரலாற்றில் உண்மைக்கென்று ஓர் இடம் எப்போதும் இருக்கும். எவ்வளவு வருடங்கள் ஆனாலும் அதை சிலர் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பார்கள்
அன்புடன்
விமு

வியாழன், 16 அக்டோபர், 2014

ஆய கலைகள் 64

ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . அவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்வோம்.
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்)
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

திங்கள், 6 அக்டோபர், 2014

வார்த்தைகள்

ஓஷோ தன் சீடர்களுக்கு எழுதிய கடிதங்களில்
ஒன்றை உங்களுக்காக தருகிறேன் ...
அன்பே ,
வார்த்தை அது குறிக்கும் பொருளாகாது .
கடவுள் என்ற வார்த்தை கடவுளல்ல,
ஆனால் மனம் வார்த்தைகளை,
வார்த்தைகளை, மேலும் வார்த்தைகளைச்
சேர்த்துக் கொண்டே போகிறது
பிறகு இந்த வார்த்தைகளே தடையாக ஆகிவிடுகிறது
உனக்குள் நான் சொல்வதை கவனமாக உணர்ந்து பார் .
நீ வார்த்தையில்லாமல் எதையாவது பார்க்க முடிகிறதா ?
நீ வார்த்தையில்லாமல் எதையாவது உணர முடிகிறதா ?
ஒரு கணமாவது நீ வார்த்தையில்லாமல்
வாழ முடியுமா ?
ஆக,
நான் சொல்வதை முயற்சித்து பார்
எதாவது ஒரு பொருளை பார்
எந்த சிந்தனையையும் நினைக்காதே ஆனால் பார் .
எந்த கருத்தையும் எண்ணாதே
ஆனால் வெறுமனே பார் .
பிறகு நீ உன்னத உணர்வு தியானத்தில் இருப்பாய் .
வார்த்தைகள் இல்லாமல் வாழ்ந்து பார் .
தியானத்தின் உண்மையான இயல்பை உணர்வாய் .
இந்த உலகில் நிறைய தத்துவவாதிகள் தியானத்தின் அசல்
பொருளை திரித்து தந்து கொண்டு உள்ளனர் .
தியானம் என்கிற தன்மையை தவறான பொருளில் தந்து
அதன் உண்மை இயல்பை சாகடிக்கின்றனர் .
அவர்களாகவே புத்தம் புது விளக்கத்தை தருகின்றனர்
ஆகையால் நீ விழித்திரு ..
வார்த்தைகள் இல்லாமல் வாழ்வதே தியானத்தில் வாழ்வது .
---ஓஷோ ---